கடலூர் பாராளுமன்றத் தொகுதி, கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப் பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி என ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. கடந்த 2019 எம்.பி. தேர்தலின்போது தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். கட்சிக்கும் மக்களுக்கும் பெரிய அளவில் தொடர்பில்லாதவர். பணம் படைத்த தொழிலதிபர் என்பதற்காகவே இவருக்கு கட்சித் தலைமை சீட்டு கொடுத்த நிலையில், அ.தி.மு.க. மீதிருந்த அதிருப்தியும், தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளும் இவரை வெற்றிபெற வைத்தது.
இவரது தேர்தல் வாக்குறுதி கள்... கடலூர் கம்மியாம் பேட்டை பகுதியில் ரயில்வே மேம்பாலம். கடலூர் துறை முகம் சீர் செய்யப்படும். பண்ருட்டியில் முந்திரி தொழிற் சாலை ஏற்படுத்தப்படும். சென்னை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் துரிதப்படுத்தி முடிக்கப்படும். கூட்டுக் குடிநீர் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும். வெள்ளாறு, மணிமுத்தாறு பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப்படும். கடலூர் மாவட்டத் தில் மழைக்காலங்களில் அடிக்கடி புயல் பாதிப்பு ஏற்படுவதால் நிவாரணப் பணிகளுக் காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும் என ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்து வெற்றிபெற்றார் டி.ஆர். வி.எஸ்.ரமேஷ்.
வெற்றிபெற்ற பிறகு தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா என இத்தொகுதி மக்களிடம் கேட்டபோது, கடலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், "கடலூர் சில்வர் பீச்சை சீரமைக்கப் போவதாகவும், மீன்களைப் பதப்படுத்துவதற்கு நவீன முறையில் கட்டடம் கட்டப்படுமென்றும் பல்வேறு வாக்குறுதி களை அளித்தார். அனைத்தும் காற்றோடு போய்விட்டது. பல்வேறு அதிவிரைவு ரயில்கள் தலைநகரமான கடலூரில் நிற்பது இல்லை. இதற்காக பொது நல இயக்கங்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்த கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. வெற்றிபெற்ற பிறகு கடலூருக்குக்கூட அவர் வந்ததாகத் தெரியவில்லை. மக்களுக்கு கொஞ்சங்கூட தொடர்பே இல்லாத ஒருவரை எம்.பி.யாக வெற்றிபெற வைத்தது இத்தொகுதி மக்களின் துரதிர்ஷ்டம்'' என்கிறார் பாலகிருஷ்ணன். பண்ருட்டியைச் சேர்ந்த சமூக செயற்பாட் டாளர் பால முருகன், "பண்ருட்டி, கடலூர் பகுதிகளில் மா, பலா, வாழை என முக்கனிகளும் விளைகின்றன. இவற்றை பதப்படுத்தி, பலவகையான இனிப்பு வகைகளைத் தயாரித்து வெளிநாடுகளுக்குக்கூட ஏற்றுமதி செய்யலாம். அதற்கான ஒரு தொழிற்சாலையை பண்ருட்டி பகுதியில் உருவாக்கியிருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. தொழில் நகர மான பண்ருட்டி வழியாக 13 எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்கின்றன. ஒன்றுகூட இங்கே நிற்பதில்லை. வெளிமாநிலங்களுக்கு செல்லும் வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கிருந்து தொலைதூரப் பயணங்களுக்கு வழியின்றித் தவிக்கிறார்கள். இதே ஊரில் வசிக்கும் எம்பி.க்கு இதுகூடத் தெரியாதா?'' எனக் கேட்கிறார்.
நெய்வேலி மதியழகன், "நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தில் பல்வேறு சீர்கேடுகள் நடக்கின்றன. வெளி மாநிலத்திலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். இந்த மாவட்டத்து இளைஞர்களைப் புறக்கணிக்கிறார்கள். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தோர் பிரச்சனைகள் ஏராளம். இதற்காக போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள் நடக்கின்றன. எதைப் பற்றியும் கவலைப் படாதவராக இருக்கிறார் எம்.பி. அரசியல் கட்சிகள், வெறுமனே பணம் படைத்தவர் என்பதற்காக சீட்டு கொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் வெற்றிபெற்றால் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த மாட்டார்கள் என்பதற்கு இவரே உதாரணம்'' என்கிறார். குறிஞ்சிப்பாடி தொகுதி யைச் சேர்ந்த சௌரிராஜன், "எங்கள் பகுதியிலுள்ள பல்வேறு கிராமப் பள்ளிகளுக்கு உபகரணங்கள் வாங்க, புதிய கட்டடம் கட்ட, எம்.பி. நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்பதற்காக அவரை நேரில் சந்தித் தோம். அவரோ, "உங்கள் பகுதியிலுள்ள ஒன்றிய செய லாளரை போய்ப் பாருங்கள்' எனக்கூறி எங்களை அனுப்பி வைத்தார். இதன்மூலம் அவர் கையில் அதிகாரம் இல்லை எனத் தெரிய வருகிறது. மக்கள் பிரதி நிதியாக உள்ள எம்.பி.யிடம் தானே பொதுமக்கள் உரிமையோடு கேட்க முடியும்?'' என்கிறார்.
விருத்தாசலம் தொகுதியைச் சேர்ந்த சி.பி.ஐ. கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் அறிவழகி, "விருத்தா சலம் ரயில்வே ஜங்ஷன் 24 மணி நேரமும் பரபரப் பாக இருக்கும். இவ்வழியாக இரவு பகல் தினசரி பல ரயில்கள் சென்று வருகின்றன. அதேபோன்று சேலம் - கடலூர் மார்க்கமாகவும் ரயில்கள் சென்று வருகின்றன. அப்படி முக்கியத்துவம் வாய்ந்தது விழுப்புரம் ஜங்ஷன் பகுதி. இதை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு ஏகப்பட்ட கோடி நிதி ஒதுக் கீடு செய்துள்ளது. அதேபோன்று விருத்தாசலம் ஜங்ஷனையும் நவீன முறையில் விரிவாக்கம் செய்து மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட அதிமுக்கியம் வாய்ந்த பிரச்சினை களைக் கூட கண்டுகொள்ளாத, கவலைப்படாத ஒரு எம்.பி.யாக உள்ளார் ரமேஷ். அவர் மக்கள் பணி செய்கிறாரா? இல்லையா? என்பதைக்கூட கட்சித்தலைமை கண்டுகொள்ளவில்லை. ஓட்டு போட்ட மக்களுக்கு ஏன் இந்த நிலை?'' என்கிறார்.
திட்டக்குடி தொகுதியில் உள்ள கோடங்குடி யைச் சேர்ந்த அம்பிகா கூறுகையில், "ஒரு எம்.பி. என்றால் அரசு விழாக்களில் அவர் சார்ந்துள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். மக்கள் பிரச்சனைகளை, கோரிக்கைகளை, டெல்லி பாராளு மன்றத்தில் எதிரொலிப்பார்கள். இந்த எம்.பி. முகமே எங்களுக்கு மறந்து விட்டது. பத்திரிகை மீடியாக்களில்கூட இவர் முகம் வந்ததாகத் தெரியவில்லை. எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார், இதற்கு என்ன காரணம் என்பது தொகுதி மக்களுக்குத் தெரியாத ரகசியமாக உள்ளது. எம்.பி. நிதியில் செய்யப்பட்ட பணிகளின் விவரங்கள் கூட வெளியே தெரியவில்லை. இப்படி ஐந்தாண்டு காலம் மக்களுக்கு எந்த உபயோகமும் பயனும் இல்லாத தொகுதியாக அவல நிலையில் கிடைக்கிறது கடலூர் தொகுதி'' என்கிறார் ஆதங்கத்துடன்.
"வெற்றிபெற்ற பிறகு சில மாதங்கள் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தலைகாட்டினார் எம்.பி. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.பி.க்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்துவந்த மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் கொலை செய் யப்பட்டார். இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாக எம்.பி. ரமேஷ் உட்பட அவருக்கு நெருக்கமான ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது சம்பந்தமான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற் றது. கடலூரில் வழக்கு நடைபெற்றால் எங்களுக்கு உரிய நீதி கிடைக்காது, வேறு ஊருக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர்நீதிமன்றம் அந்த வழக் கை செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது முதல் தற்போது வரை அந்த வழக்கிற்காக செங்கல்பட்டுக்கு சென்று வருகிறார் எம்.பி. ரமேஷ். இதுதான் அவர் செய்த சாதனை'' என்கிறார் நெய் வேலியைச் சேர்ந்த செல்வம். தொகுதி மக்க ளில் நாம் சந்தித்த பெரும்பாலோர் மேற்படி கருத்துக்களையே எதிரொலித்தார்கள்.
இதுகுறித்து தொகுதி எம்.பி. ரமேஷ் என்ன சொல்கிறார் என அறிந்துகொள்ள அவரை நாம் தொடர்பு கொண்டோம். "வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ளேன். பிறகு உங்களைத் தொடர்பு கொள்கிறேன்'' என்று கூறினார். அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. மீண்டும் நாமே அவரைத் தொடர்பு கொண்டோம். அவரது பி.ஏ. நம்மிடம் விவரம் கேட்டுவிட்டு, "கட்சித் தலைமை பத்திரிகை ஊடகங்களுக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. எனவே அவரை இனிமேல் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எம்.பி. சொன்னார்'' எனக் கூறினார்.
மக்கள் பிரதிநிதியாக, எம்.பி.யாகத் தேர்வானவர், அவரது மக்கள்பணி குறித்துக்கூட பகிர்ந்துகொள்ளவோ, மக்களைச் சந் திக்கவோ முடியாத நிலையில் இருப்பதும், தொடர்பு கொள்ள வேண்டாமெனச் சொல்வதும், அவருக்காக வாக்களித்த மக்களின் கன்னத்தில் ஓங்கி அறைவதுபோல் உள்ளது!