"நாம பலதடவ இந்த மலைகள பாத்துருப்போம்; கடந்து போயிருப்போம். சுற்றுலா போயிருப்போம். ஆனா காலுக்குக் கீழ அடர்த்தியா ஒரு பெரும் வாழ்க்கை இருந்திருக் கும், வலி இருந்துருக்கும். அங்கயே தங்கிருந்துருப்போம். ஆனா இத கவனிக்காம விட் டுட்டோமேனு தோணவைக்கும்' இந்தப் படம்.’

நக்கீரனுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இயக்குநர் லெனின் பாரதி மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி சொல்லியிருந்த வரிகள் இவை. இந்த வரிகளுக்கு நேர்மையான ஒரு படம், ஒரு வாழ்வு திரையில் நம்முன் விரிகிறது.

westernghats.jpg

Advertisment

எந்தவித பாசாங்கும் இல்லை, பூச்சும் இல்லை. படமெங்கும் விரவிக் கிடக்கும் நிஜம். சினிமாவிற்கென எந்த இடத்திலும் கலப்படம் செய்யப்படாத நிஜம்.

தீவிர அரசியல் பேசும் படங்கள் திரைமொழியில் சறுக்கு வதும், திரை மொழியில் நேர்த்தியாக இருக்கும் படங்கள் அதன் மைய அரசியலில் நீர்த்துப் போவதும் திரைப்படங் களில் சகஜம். ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலை பேசும் அரசியலும் திரைமொழியும் அசாத்திய மானது.

படம் அவர்களின் வாழ்வை, வலியை நம்மீது எந்த இடத்திலும் திணிக்கவில்லை. உன்னிப்பாக கவனித்தால், படத்தின் மிக முக்கியமான வசனங்கள்கூட க்ளோஸ்-அப் ஷாட்டுகளில், பேசுபவர்களின் அதீத முக பாவத்தோடு இருக்காது. பேச்சோடு பேச்சாக, காட்சியின் யதார்த்தத்தை திரைமொழியில்கூட மீறாமல், நம்மைக் கடந்துபோகும்.

Advertisment

சமகாலத்தில் ட்ரோன் ஷாட்டுகள் அதன் முழு அர்த்தத்துடன் பயன் படுத்தப்பட்டது மேற்குத் தொடர்ச்சி மலையில்தான்.

vijaysethupathiஅந்த டாப் ஆங்கிள் ஷாட்டுகள் இடம்பெறும் இரண்டு முக்கியமான இடங்களைப் பாருங்கள். வாழ்நாள் முழுக்க மூட்டை சுமந்த ஒரு கிழவன் வாய்ச் சவடாலுடன் மூட்டை தூக்கியபடி மலையிறங்கும் ஒரு காட்சி. அதில் இறக் கத்திலிருந்து மேலே ஏறிக்கொண்டே செல்லும் கேமிரா. பின்னணியில் இந்த வசனம் ஒலிக்கும். "ஏ சும்மா வாய்யா.. ஏதோ இந்த மலையவே நீதான் சுமந்த மாதிரி பேசுவியே.'

ஒரு காட்சியின் அடர்த்தி திரை மொழி யோடு நமக்குள் கடத்தப் படும் நொடி அலாதி யானது. அப்படியொரு நொடி இந்த நொடி.

இன்னொன்று... இறுதிக்காட்சி. உழைத்து கறுத்து, காலர் நைந்த சட்டை, கிழிந்த லுங்கியில் உறுதியாய் தெரிந்த அந்த உடல், பளபள வென இருக்கும் புது செக்யூரிட்டி சீருடையில் மெலிந்து நொடிந்துபோயிருக்கிறது. இது குறியீடு அல்ல. அரசியல். இதுதான் இந்த படத்தின் அரசியல்.

ஆசைஆசையாய் வாங்கி, வேட்டை யாடப்பட்ட நிலம். வேட்டையாடியவனே வேலை போட்டுக் கொடுக்கிறான். காவலாளி வேலை. இனி யாரிடமிருந்து காப்பது உழைத்தவனிடம் வேட்டையாடப்பட்ட அந்த நிலத்தை?

தொப்பியணிந்து அமரும் நொடியில் மேலே பறக்கும் கேமிரா அடுத்தடுத்த ஃப்ரேம் களில் போவது உயரம் மட்டுமல்ல... ஆழமும். வேட்டையாடப் பட்டிருப்பது ரங்கசாமியின் நிலம் மட்டுமல்ல; ரங்கசாமிகளின் நிலம்.

"இது மக்களின் படம்' என்றும் திரும்பத் திரும்ப சொன்னார் லெனின் பாரதி. மக்கள் இந்தப் படத்தை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டுவிட்டனர். தியேட்டர்கள், குடும் பங்களால் நிறைகின்றன.

-ஜெயச்சந்திர ஹாஷ்மி

_____________________

இயக்குநர் சுமந்த சுமை!

படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய்சேதுபதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் வெற்றிக்காக நன்றி சொல்லும் ஒரு கூட்டத்தை சிலநாட்களுக்கு முன் நடத்தினார். அதில் அவர் பேசும்போது, ""இந்தப் படத்திற்காக கிடைக்கும் எந்தப் பாராட்டும் எனக்குச் சொந்தமில்லை. அத்தனையும் இயக்குநர் லெனின் பாரதிக்குத் தான் சேரவேண்டும். அவரை அறிந்திருந்ததால் மட்டும்தான் நான் இந்த படத்தை தயாரித்தேன். ஆனால் படம் பார்த்துவிட்டு எனக்கு திருப்தி இல்லை. இதில் போட்ட பணத்தை திருப்பி எடுத்தால்கூட போதும் என்று நினைத்தேன். பின்பு எப்படியாவது ரிலீஸ் ஆனால் போதும் என்று நினைத்து ஒற்றை ரூபாய்கூட வாங்காமல் கொடுத்தேன். ஆனால் நீங்கள் எல்லாம் இந்தப் படத்தைக் கொண்டாடி, என் ரசனையை செருப்பால் அடித்துவிட்டீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் தொழிலாளர்கள் சுமந்த சுமையைவிட... லெனின் பாரதி அதிக சுமை சுமந்துள்ளார். அதை கடைசிவரை அவர் இறக்கி வைக்கவில்லை. அவருக்குத்தான் அத்தனை பாராட்டுகளும் சேரவேண்டும்''’ என்றார்.