பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா, மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி திருவிழா, மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா நெருக்கடியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த இந்த விழா, இப்போது தடபுடலாக நடந்திருக்கிறது.

இந்த விழாவிற்காக நாடுமுழுவதுமிருந்து லட்சக்கணக்கான திருநங்கையர்கள், கூவாகத்தில் வந்து குவிந்தனர். அவர்கள் மீதான மதிப்புணர்வை அதிகப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அவர்களுக்கிடையே அழகிப் போட்டி மற்றும் நடனப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மிக முக்கியமானது மிஸ் கூவாகம் அழகிப் போட்டி ஆகும்.

kk

Advertisment

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடந்தது. 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். சென்னை யைச் சேர்ந்த சாதனா, இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது, மூன்றாவது இடத்தை முறையே சென்னையைச் சேர்ந்த மதுமிதாவும், திருச்சியைச் சேர்ந்த எல்சாவும் கைப்பற்றினர்.

அதேபோல் பதினெட்டாம் தேதி அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடந்த அழகிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த மெஹந்தி வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் திருச்சியை சேர்ந்த ரியானாவும் மூன்றாவது இடத்தில் சேலத்தைச் சேர்ந்த சாக்ஷி ஸ்வீட்டியும் வந்தனர்.

முதலிடத்தில் வந்த மெஹந்தி, விமானப் பயிற்சி முடித்துள்ளார். அவர் நம்மிடம், "முதல் முதலாக அழகிப் போட்டியில் பங்கேற்று, மிஸ் கூவாகம் ஆக வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. திருநங்கைகளின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு எங்களை ஒதுக்கி வைத்திருந்த பெற்றோர்கள் கூட அன்போடு அரவணைத்து வருகிறார்கள். இதுபோல் உறவுகளின் ஆதரவு இருந்தால், இன்னும் எங்களால் நிறைய சாதிக்க முடியும்''’என்றார் நம்பிக்கையோடு.

நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், சென்னை திருநங்கைகள் அமைப்பு ஆகியவை ஏற்றிருக்க, இதில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் திருச்சி சிவா, விழுப்புரம் ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் மற்றும் நடிகர் சூரி, நடிகை நளினி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

kk

Advertisment

விழாவில் பேசிய நடிகர் சூரி “"திருநங்கை களை ஒதுக்கிவைத்தது அந்த காலம். தற்போது அவர்கள் மிடுக்குடன் சொந்த உழைப்பில் முன்னேறி, மக்கள் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்று வருகிறார்கள். அவர்களில் பலர் ஆசிரியர் களாக, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாக, நீதித்துறை, காவல்துறை என்று பல்வேறு துறைகளிலும் இடம் பெற்று, கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள்''’என்றார் உற்சாகமாக.

19-ம் தேதி, மணப் பெண்களைப் போல தங்களை அலங்கரித்துக் கொண்ட திருநங்கைகள், தங்கள் சம்பிரதாயப்படி கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொண்டனர். மறுநாள் காலை, அரவானின் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. அதன்பிறகு திருநங்கைகள் தங்கள் அலங்காரங்களைக் கலைத்துக் கொண்டு, வெள்ளைச் சேலை உடுத்தி, அரவான் பலியான கதையைச் சொல்லி ஒப்பாரி வைத்து அழுதனர். அதன்பிறகு அவரவர் ஊர்களுக்குப் பிரிந்துசென்றனர்.

இதுகுறித்து திருநங்கை ரேகாவிடம் கேட்டபோது, "இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து இருந்த நாங்கள், இன்று ஒன்று சேர்ந்து இருப்பது, பல மடங்கு சந்தோ ஷத்தைக் கொடுத்துள்ளது'' என்றார்.

மகேஸ்வரியோ, "அடுத்த ஆண்டு மீண்டும் திருவிழாவிற்கு வருவோம். மற்றவர்களையும் சந்திப்போம். இப்போது கூவாகம் கிராம மக்கள் அனைவருக்கும் பிரியா விடை கொடுத்துப் பிரிந்து செல்கிறோம்''’என்றார்.

மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் தலைவர் சிந்து நம்மிடம், "இந்த விழாவிற்கு லட்சக்கணக்கில் திருநங்கையர் வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கான வசதியையும், கழிப்பறை, குளியலறை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அதே போல், இந்தத் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறையை அறிவிக்கவேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்'' என்றார் அழுத்தமாக.

திருநங்கையரின் உலகிற்கு உற்சாகம் பாய்ச்சியிருக்கிறது கூத்தாண்டவர் திருவிழா.

-எஸ்.பி.எஸ்.