அறிவியல் தொழில் நுட்பம் வளர்ச்சி அடையும் அதே அளவிற்கு, மோசடியும் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டுள்ளது. நாடு முழுவதும் புதுப்புது ஆப் மூலமாக விதவிதமான கொள்ளையிலும் ஈடுபட்டு வருவதால், மக்களிடையே இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய அவசரத் தேவைக்காக "கூகுள்' ஆப் மூலமாக லைக் நியூ கிரெடிட், கோல்ட் மணி, பெஸ்ட் ரிப்பீஸ், சாம்பேஷ், ஹாம் கேஷ், ஒப்பன் கிரெடிட், லோன்ப்ரோ என பலவகையான ஆப்கள் மூலமாக கடன் பெறுகின்றனர் .
இதற்கான விண்ணப்பத்தை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும்போது, நம்மிடமிருந்து ஒரு செல்பி கேட்கும். அதேபோல கேலரிக்கும் ஓ.கே. கேட்கும். இப்படி அந்த லோன் ஆப்புக்குத் தேவையான ஒவ்வொன்றுக்குமே ஓ.கே. கொடுப்பதன் மூலமாக, நம்முடைய புகைப்படங்கள், தொடர்பு எண்கள் மற்றும் முக்கியமான நம்முடைய தரவுகளை நமக்கே தெரியாமல் நாம் அவர்களிடம் கொடுத்துவிடுகிறோம்.
குறிப்பாக, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பின்னும் லோன் ஆப் மோசடிக்காரர்கள், கடன் பெற்றவர்களின் செல்போன்களை ஹேக் செய்து, போனில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்து, ஆபாச புகைப்படங்களாகச் சித்தரித்து, மொபைலில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்புகின்றனராம். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடும் அப்பாவிகளை மிரட்டிப் பணத்தையும் பறிக்கிறார்களாம்.
இந்த வகையில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக சென்னையில் மோசடியில் இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை கமிஷனர் உத்தரவின் பேரில், சென்னை சி.சி.பி. பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அவர்கள் தனிப்படை அமைத்து, லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடி வந்தனர். குறிப்பாக, ப்ளே ஸ்டோரில் உள்ள லோன் ஆப் செயலிகளை ஆராய்ந்தும், லோன் ஆப் மோசடிதாரர்கள் அனுப்பிய மெசேஜ் மற்றும் செல்போன் கால்களை ஆய்வு செய்தும், 200-க்கும் மேற்பட்ட ஈமெயில் முகவரிகள், வங்கிக் கணக்குகள், ஆயிரத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் எண்கள் சேகரிக்கப்பட்டு, காவல்துறையினர் ஒரு தரவுத் தளத்தையே உருவாக்கினர்.
இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டது. அங்கு சென்ற சென்னை போலீசார், அங்குள்ள போலீஸ் உதவியுடன் செல்போன் சிக்னல்களை வைத்து லோன் ஆப் கலெக்சன் ஏஜென்டான ஜங்கல் குல்ரிஹா பகுதியைச் சேர்ந்த தீபக்குமார் பாண்டே என்பவரை கைது செய்தனர். இவர் 50 நபர்களைக் கொண்ட குழுவை வைத்துக்கொண்டு நிஷா, ஜித்தந்தேர், பிரகாஷ், சர்மா, ஆகிய 4 ஏஜன்டுகள் மூலம் மோசடி செய்து வந்துள்ளார். இவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக சி.சி.பி. இன்ஸ்பெக்டர் கலையரசன் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், "லோன் ஆப் மட்டும் இல்லாமல் ஏ.டி.எம். கார்டு மேல் உள்ள எண்களைக் கேட்பது, அதற்கான ஓ.டி.பி.யை கேட்பது, சிம்கார்ட் மேலே உள்ள 15 எண்களைக் கேட்பது மூலமாகவும் தகவல் சேகரித்து மோசடி செய்கிறார்கள்.. இதன் மூலமாக உங்கள் சிம் போலவே போலி சிம் தயார் செய்து கொண்டு, உங்களது வங்கிக் கணக்கில் இருந்துவரும் ஓ.டி.பி.யை வைத்து வங்கியில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். அதேபோல ஈ.பி. பில் ஓ.டி.பி., முகநூல் ஆகியவற்றை ஹேக் செய்தும், உயரதிகாரிகள் பேரிலும் பணம் பறித்து வருகிறார் கள். அதேபோல் வாட்ஸ்-ஆப் மூலமாக லிங்க்கை அனுப்பி, "விமானநிலையத்தில் இருந்து பேசுகிறோம். உங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வந் துள்ளன. நீங்கள் அதை பெறுவதற்கு 3 லட்சம் பணம் கட்டவேண்டும்' என்று அமேசான் மற்றும் பல நிறுவனங்களின் பெயரைச் சொல்லியும் மோசடிப் பேர்வழிகள் ஏமாற்றலாம்.
ஆகையால் மிக முக்கியமாக மக்கள் மூன்று விசயங்களில் மிக கவனமாக இருந்தாலே, இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பலாம். ஒன்று, ஆர்.பி.ஐ. அங்கீகாரம் கொடுக்கப்பட்ட கூகுள் பே, போன் பே, பே டி.எம். போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தவேண்டும். உங்களுக்குத் தெரியாத நபர்களிடம் இருந்தோ அல்லது ஏதாவது நிறுவனத்தின் பெயரிலோ லிங்க், அல்லது எஸ்.எம்.எஸ். எதுவாக இருந்தாலும் அதை ஓப்பன் செய்யக்கூடாது. ஓ.டி.பி.க்கள் ஏதாவது வந்தால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது. இதுபோன்ற சம்பவம் ஏதாவது நடந்தால் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் தொடர்பு எண்ணான 1930-க்கு தொடர்பு கொண்டால், உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கை முடக்கி நடவடிக்கை எடுக்கப்படும்''” என்றார் அழுத்தமாக.
ஆன்லைன் மோசடிப் பேர்வழி களிடம் சிக்காமல் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.