ரசுத்துறை மூலம் நலிந்தோர்க்கு உதவித்தொகை வழங்கும் திட்டங்களில் "எங்களுக்குப் போகவே உங்களுக்கு''’ என்கிற ரீதியில், சம்பந்தப்பட்ட துறையினர் நடந்துகொள்வது கண்கூடு. தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், சமூக நலத் துறையின் கீழ் செயல்படுத்தப் படும் திருமண நிதியுதவித் திட்டங்களில், ரூ.5000 லஞ்சம் கொடுத்தால்தான் விண்ணப்பமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அலுவலர்கள் வலியுறுத்திப் பணம் பெறுவதாகக் குமுறல்கள் எழுந்துள்ளன.

sattur

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் விரிவாக்க அலுவலராக சாந்தியும், ஊர்நல அலுவலர்களாக அருள்செல்வராணி மற்றும் விஜயநிர்மலா ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர். திருமண நிதியுதவிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிப் பெண்களுக்கு ரூ.50000 + 8 கிராம் தங்கமும், 10-வது வகுப்பு வரையிலும் படித்த பெண்களுக்கு ரூ.25000 + 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதனைப் பெறுவதற்கான கையூட்டாக ரூ.5000 வரை கறாராக வசூலித்துவிடுவதாக, சம்பந்தப்பட்ட பயனாளிகள் தரப்பி லிருந்து புகார் எழுந்துள்ள நிலையில், விரிவாக்க அலுவலர் சாந்தியிடம் பேசி னோம். "என் மீதான புகாருக்கு ஆதாரம் இருக்கா? மனசாட்சிக்கு பொதுவா வேலை பார்க்கிறேன். நேர்மையா செயல்படுறேன்'' என்று மறுத்தார்.

சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ் நம்மிடம், "ஆமா.. பப்ளிக்கிடமிருந்து கம்ப்ளைன்ட் வந்துக்கிட்டே இருக்கு''’ என்று கூற, அவருடைய கணவரும் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான கடற்கரைராஜ், "பயனாளிகளிடம் பணம் வாங்குறது ஊர்நல அலுவலர் அருள்செல்வராணி, ஆனா, விரிவாக்க அலுவலர் சாந்தி வாங்குறதா கிளப்பிவிடறாங்க. எனக்கு இவ்வளவு கொடுத்தே ஆகணும்னு சொல்லியே வாங்குறாங்களாம், அருள்செல்வ ராணி. சத்தம் போட்டிருக்கோம்'' என்றார்.

நாம் ஊர்நல அலுவலர் அருள்செல்வராணியை தொடர்புகொண்டோம். "விரிவாக்க அலுவலர் சாந்தியிடம் தான் திருமண நிதியுதவி திட்டத்துக்கான எல்லா பொறுப்பும் இருக்கு. ஊர்நல அலுவலரான நான் எப்படி பணம் வாங்க முடியும்? நான் இதுவரை அந்தமாதிரி வாங்கியதே இல்லை''’என்று முதலில் மறுத்துப் பேசியவர் சேர்மன் தரப்பில், "சாதி அடிப்படையில் என்னை அசிங்கப்படுத்து றாங்க. பொதுஇடத்திலும் மட்டமா பேசுறாங்க. யூனியன் ஆபீஸ்ல கொடிப்பணம் கேட்கிறாங்க. அதை எங்க சம்பளத்துக்கு ஏற்றமாதிரிதானே கேட்கணும்? கொடிப்பணம் ரூபாய் பத்தாயிரம்னு போட்டு, நாளைக்கே ரூபாய் ஐயாயிரம் கட்டணும்னா, பயனாளிகளிடம்தானே வாங்கமுடியும்?'' என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.

Advertisment

sss

‘கொடிப்பணம்’ குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் ராணுவவீரரும் சமூக ஆர்வலருமான கதிர்வேல், "முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக, ஒன்றிய அரசின் ராணுவத்துறை மூலம், கொடி நாள் (டிசம்பர் 7) நிதி வசூலிக்கப்படுகிறது. மக்களே முன்வந்து நிதி வழங்கவேண்டும் என்பதே விதி. ஒவ்வொரு மாவட்டத்திலும், முன்னாள் ராணுவத்தினர் நல அலுவலகங்கள் மூலம், அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு கொடிகளும் ரசீதுகளும் அனுப்பப்பட்டு, அதற்குரிய நிதி கோரப்படுகிறது. வருவாய், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் என அனைத்துத் துறையினருக்கும், இதனை மாவட்ட நிர்வாகம் பிரித்து அனுப்பி இலக்கு நிர்ணயிக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் இந்நிதி, மாநில அரசுகள் மூலம், ஒன்றிய அரசிடம் வழங்கப்படுகிறது. சான்றிதழ் தேவைகளுக்காகவும், நலத்திட்டங்களுக்காகவும், அரசுத்துறைகளை பொதுமக்கள் அணுகும்போது, அவர்களிடம் கொடியை வழங்கி நிதி வசூலிக்க வேண்டும். நடைமுறையிலோ, வாங்கிய பணத்துக்கு கொடியைத் தருவதில்லை. அரசு அலுவலர்கள் அவரவர் மனம்போல வசூலிக்கும் கொடிநாள் நிதிக்கு எந்தக் கணக்கும் வைத்துக்கொள்வதில்லை. தேசத்துக்காக தங்களை அர்ப்பணிக்கும் ராணுவத்தினர் நலனுக்காக வழங்கப்படும் கொடியை வைத்து, அரசு அலுவலகங்களில். பெரும் கொள்ளையே நடக்கிறது'' என்றார் வேதனையுடன்.

தமிழக அரசு, கொடி நாள் நிதி வசூலில் அரசுத்துறை அலுவலர்களின் செயல்பாட்டை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisment