கிட்டத்தட்ட 60 ஆண்டுகளைக் கடந்து விட்டது, 1956லிருந்து செயல்பட்டு வரும், சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம். இங்கு கைத்தறியில் நெய்யப்படும் வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்திற்கு உலகளவில் மவுசு அதிகம். வெண்பட்டு வேட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்ததிலும் இந்த சங்கத்தின் பங்கு அளப்பரியது. இத்தனை பெருமைகளும் காற்றில் பறக்குமளவுக்கு, இன்று ஊழல் புகார்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.
சங்கத்தின் நிர்வாகக்குழு தலைவரான அ.தி.மு.க. மாணவரணி நிர்வாகி சதீஸ்குமார், துணைத்தலைவரும் அ.தி.மு.க. பிரமுகருமான தியாகராஜன் மற்றும் சங்க ஊழியர்கள் கூட்டணி சேர்ந்து, ரூ.1.10 கோடிக்கு மேல் சரக்கு இருப்பில் கோல்மால் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேசமயம், முறைகேடுகள் தொடர்பாக மேலதிகாரிகளிடம் புகார் அளித்ததற்காக, சங்கத்தில் 35 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் நெசவாளர் அணியின் சேலம் மாநகரத் தலைவர் தேவராஜனை நீக்கம் செய்திருக்கிறது நிர்வாகக்குழு.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தேவராஜன், ""சங்கத்தின் நிர்வாகக்குழு தலைவர் சதீஸ்குமார், துணைத்தலைவர் தியாகராஜன் உள்ளிட்டவர்கள், வெண்பட்டு ரகங்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்துவிட்டு, அதற்கான பணத்தை செலுத்தாமல் மோசடி செய்து விட்டனர். இந்தத்தொகை மட்டுமே ரூ.1.10 கோடிக்கு மேல் இருக்கும். இவர்களில் ஜவுளி விற்பனைப் பிரிவு ஊழியர்களான சவுந்தரராஜன், சீனிவாசன், துளசிராமன் ஆகியோர் மொத்தமாக ரூ.55 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தணிக்கையில் தெரியவந்தது. இதன்பிறகே, இம்மூவரையும் ஜூன் மாதம் பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் ஐ.ஏ.எஸ்.
துளசிராமன் என்ற ஊழியரிடம் பல லட்சம் மதிப்பிலான வெண்பட்டு ஜவுளி ரகங்களைப் பெற்று, தனக்குத் தெரிந்த வாடிக்கையாளரிடம் விற்றுவிட்டார் நிர்வாகக்குழு தலைவர் சதீஸ்குமார். அதற்குரிய தொகையையும் செலுத்தாமல், சரக்கைப் பெற்றதற்கான இன்வாய்ஸிலும் கையெழுத்திடாமலும் போனதால் துளசிராமன் மீது பழிவிழுந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அதிகாரிகள் சரக்கு இருப்பை ஆய்வுசெய்ய வரும்போதெல்லாம் போலியான துணிகளை அடுக்கிவைத்து, கணக்குக் காட்டு வார்கள்.
குடும்பமே சேர்ந்து உழைத்தால் மட்டுமே ஒரு பட்டு நெசவாளருக்கு மாதம் ரூ.7,500 வருவாயாக கிடைக்கும். நெசவாளர்களின் வயிற்றில் அடித்து சுரண்டிப் பிழைப்பவர்கள் நல்லாவே இருக்க மாட்டார்கள்'' என்று கொதிக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சங்கத்தின் நிர்வாகக்குழு தலைவர் சதீஸ்குமாரிடம் விசாரித்தபோது, ""எனக்குமுன் என் அப்பா, இப்போது நான் என அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாகப் பொறுப்புக்கு வந்ததைப் பிடிக்காமல், இப்படிப்பட்ட புகார்களைச் சொல்கிறார்கள். சங்கத்திற்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பட்டுரகங்களை பெற்றுச்சென்று, நானே நேரடியாக ஒரு தனியார் பல்கலை நிர்வாகத்திடம் விற்பனை செய்தேன். அதில் கொஞ்சம் பணம் வர வேண்டியிருக்கிறது. என் பெயரில் தவணை தவறியதாகச் சொல்லப்படும் புகார்களில் உண்மையில்லை. சரக்கு இருப்பு தொடர்பான குற்றச்சாட்டு தி.மு.க. ஆட்சியின் போதும் இருந்ததுதான்'' என்று விளக்கமளித்தார்.
சங்கத்தின் துணைத்தலைவர் தியாகராஜ னோ, ""உங்களிடம் புகார்சொன்ன நபர் காங்கிரஸ்காரர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்க ளுக்கெதிராக ஊழல் புகாரைச் சொல்லிவருகிறார்'' என்றார்.
நிர்வாகக்குழுத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஊழியர்கள் முறைகேடு நடக்காதது போலவும், பின்னர் இதெல்லாம் சகஜம்தானே என்ற தொனியிலும் பேசினார்கள். இந்தக் கையாடல் புகார் குறித்து சங்கத்தின் நிர்வாக இயக்குனர் கோபிநாத்திடம் பேசினோம்.
""இந்தப் பொறுப்புக்கு 2019, செப்டம்பரில் தான் வந்தேன். அப்போதே சரக்கு இருப்பில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் வந்ததால், டிசம்பர் மாதமே முழுமையாக ஆய்வுசெய்து, சரக்கு இருப்பில் குறைவு மற்றும் கையாடல் நடந்திருப்பது தெரியவந்தது. ஸ்பெஷல் டிரைவ் மேற்கொண்டதால், மார்ச் வரை முதற்கட்டமாக ரூ.60 லட்சம் வசூலாகிவிட்டது. எல்லா முறைகேட்டிலும் நிர்வாகக்குழுத் தலைவருக்கும், துணைத்தலைவருக்கும் தொடர்பிருக்கிறது. ஒரு அதிகாரியாக என்னாலான நட வடிக்கையை முறையாக மேற் கொண்டிருக்கிறேன். இது தொடர்பான ரகசிய அறிக்கை யையும் துறை இயக்குனரிடம் சமர்ப்பித்துள்ளேன்'' என்றார்.
இறுதியாக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் கேட்டபோது, ""புகார் தொடர்பாக சிலரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். மேலும், கூட்டுறவு சங்க விதிகள் பிரிவு 81-ன்கீழ் விசாரணையும் நடக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 1,300 சொசைட்டிகள் இருப்பதால், நீங்கள் குறிப்பிடும் சொசைட்டியில் எவ்வளவு முறைகேடு நடந்தது என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். கைத்தறித்துறை இயக்குனர் கருணாகரன் ஐ.ஏ.எஸ். கைத்தறித்துறை உதவி இயக்குனர் ஜமால் முகமது இதுதொடர்பான விசாரணையை நடத்திவருகின்றனர்.
ஏழை நெசவாளர்களின் வயிற்றலடிக்கும் நிர்வாகிகளிடமிருந்து வெண்பட்டு சங்கம் மீட்கப்படுமா?
-இளையராஜா