தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து பத்து மாதங்களாகியும் தங்களின் கைகளுக்கு உண்மையான அதிகாரம் வரவில்லை என கொந்தளிக்கின்றனர் ஊராட்சிமன்றத் தலைவர்கள்.
அ.தி.மு.க. அரசு 2016-ல் பதவியேற்ற பிறகு மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் சாக்குப்போக்கு கூறி தள்ளிப்போட்டது. அப்போதைய காலகட்டங்களில் ஊராட்சி செயலாளர்கள் மூலம் அரசு அதிகாரிகளும் ஆளும்கட்சி பொறுப்பாளர்கள் ஊராட்சி திட்டப்பணிகளுக் கான ஒதுக்கீடுகளில் டெண்டர்களின் மூலம் கமிஷன் பணத்தை மூட்டை கட்டினார்கள். தலைவர்கள் பதவிக்கு வந்தபிறகும் அதேநிலை தொடர்கிறது.
தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி கடலூர் மாவட்டத்திலுள்ள பல ஊராட்சித் தலைவர்கள் கொந்தளித்ததோடு பரங்கிப் பேட்டை, புவனகிரி, விருத்தாசலம், காட்டுமன்னார் குடி ஆகிய ஒன்றியங்களிலுள்ள ஊராட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காட்டுமன்னார்குடியில் மறியலில் ஈடுபட்டனர். இப்படி மாவட்டம் முழுவதும் கொந்தளிப்பிலுள்ள ஊராட்சித் தலைவர்கள் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி கடலூரில் ஒன்றுகூடினார்கள். அங்கு நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். அரசு அலட்சியம் செய்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் தயாராகிவருகிறார்கள். அவர்களில் சிலரை நாம் சந்தித்தோம்.
காட்டுமான்னார்குடி ஒன்றியம் நாட்டார் மங்கலம் ஊராட்சித் தலைவியும் மாவட்டக் கூட்டமைப்பின் சிறப்புத் தலைவருமான சுதா மணிரத்னம் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் மூன் றாவது முறையாக தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் நம்மிடம், “""தமிழக அரசு ஒவ் வொரு ஊராட்சிக்கும் மூன்றுவிதமான வங்கிக் கணக்குகள் துவக்கியுள்ளது. முதல் கணக்கில் உடனடி செலவினங்களுக்காகவும், இரண்டாவது கணக்கில் ஊராட்சிப் பணியாளர்களுக்கான சம்பளம், மின்கட்டணம் செலுத்துவது போன்றவைக்காகவும், மூன்றாவது கணக்கில் சாலைவசதி, சாக்கடை வசதி, கிராம அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற டெண்டர்விட்டு செய்யும் பணிகளுக் காகவும் அரசு பணம் செலுத்தும். இப்படி அரசு செலுத்தும் பணத்தினை மற்ற பணிகளுக்கு மாற்றி எடுத்து செலவு செய்யக்கூடாது என்ற விதிமுறையுள்ளது. அதை மாற்றியமைக்கவேண்டும்.
அவசரத் தேவைக்கான பொதுநிதி கணக்கில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு சாதாரண ஊராட்சிக்கு 10000 அனுப்பியுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் மற்ற ஊராட்சிகளுக்கு இதைவிட கொஞ்சம் கூடுதலாக அனுப்பியுள்ளனர். கொரானா தடுப்புப் பணிகளுக்காக பிளீச்சிங் பவுடர் ஒரு மூட்டை 1700 ரூபாய், கொரானா பாதித்த பணிகளில் தடுப்பு வேலி அமைப்பது, அதில் பாதிக் கப்பட்டவர்களுக்கு உணவுத் தேவைகளை- மருத்துவத் தேவைகளை உடனுக்குடன் செய்துகொடுப்பது, குடிநீர்க் குழாய்கள் உடைப்பை சரிசெய்வது இப்படி பல்வேறு பணிகளுக்கு ஊராட்சித் தலைவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவுசெய்துள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு ஆறு மாதம் கழித்து பத்தாயிரம் ரூபாய் அரசு அளிக்கிறது. இதைவைத்து என்ன செய்துவிட முடியும்? மேலும் கிராமப்புற அடிப்படைத் தேவைகளுக்கு, திட்டங்களுக்கு அரசு இதுவரை போதிய நிதி ஒதுக்காத தால் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறிவருகிறோம்.
கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாததால் ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்கள் நியமித்து அவர்கள்மூலம் அரசு பணிகளைச் செய்து வந்தது. நாங்கள் பொறுப்பேற்ற பிறகும் அவர்கள் மூலம் பணிகளைத் தொடர்கிறார்கள். அந்த சிறப்பு அலுவலர்களை நீக்கவேண்டும். பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்கள் தலைவர்களை மதிப்பதில்லை. அதிகாரிகள் சொல்வதை மட்டுமே கேட்கிறார்கள். நாங்கள் வெற்றிபெற்று பத்துமாதம் சென்றும்கூட பல ஊராட்சிகளில் தலைவர்களிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கவில்லை செயலர்கள். எனவே ஊராட்சி செயலர்களை பணியிடைமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும்'' என்கிறார். மாவட்ட ஊராட்சிமன்ற கூட்டமைப்பு செயலாளரும் குமராட்சி ஊராட்சிமன்ற தலைவரான தமிழ்வாணன், ""பசுமைவீடு வழங்குதல், ஆழ்துளை கிணறு போடுதல் இப்படிப்பட்ட திட்டங்களை ஊராட்சி தலைவர்கள் மூலம் டெண்டர்விட்டு பணிகள் நடைபெறவேண்டும். பயனாளிகள் தேர்வுசெய்வதை ஊராட்சிகளில் தீர்மானம் வைத்தும் கிராம சபைகூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப் படையிலும் செய்யவேண்டும். ஆனால் அரசும் அதிகாரிகளும் அவர்கள் இஷ்டப்படி செயல்படுத்துகிறார்கள். இதற்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றித்தரவேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். அந்த செலவினங்களுக்கு தலைவர்களை கையெழுத்திடவைத்து பொறுப்பாளியாக்க முயல்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜல்ஜீவன் என்ற திட்டத்தின்படி அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தை ஊரகவளர்ச்சித் துறை அதிகாரிகளே டெண்டர்விட்டு பணிசெய்கிறார்கள். அரசு ஐந்தாண்டுத் திட்டம் என்ற பெயரில் கிராம ஊராட்சிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த 20 லட்சம் அளித்ததாக அறிவித்தது. அது அறிவிப்போடு நிற்கிறது. அந்த நிதியை ஒவ்வொரு ஊராட்சிக்கும் அளிக்கவேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக அதிகாரிகளும் ஊராட்சி செயலர்களும் தங்கள் இஷ்டப்படி ஊராட்சிகளை வழிநடத்தியதுபோல் இனிமேல் நடத்தவிடமாட்டோம். எங்களுக்கான அதிகாரத்தை நிலைநாட்டியே தீருவோம்'' என்கிறார் தமிழ்வாணன்.
-எஸ்.பி.எஸ்.