நக்கீரன் தொட்ட எதையும் விட்டதில்லை. எவரும் நெருங்க முடியாத வீரப்பன் தொடங்கி, எத்தனை பெரிய அதிகார மையமாக விளங்கிய காஞ்சிமடம் வரை புலனாய்வுப் பார்வையுடன் உள்ளே சென்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்தும் அதே உறுதியுடன் தொடரச்சியான புலனாய்வு மூலமாக நக்கீரன் பத்திரிகையிலும் யூ-டியூப் சேனலிலும் செய்திகளை வழங்கி வருகிறோம்.
இந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர் நமது முதன்மைச் செய்தியாளர் தம்பி தாமோதரன் பிரகாஷ். பலமுறை கள்ளக்குறிச்சிக்கும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரிடமும் நேரில் சென்று செய்திகளை சேகரித்ததுடன், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களிடமும் தேடித் தேடி செய்திகளை சேகரித்து வழங்கி வந்தார். நக்கீரன் வெளியிட்ட செய்திகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இந்த வழக்கில் உண்மையைக் கொண்டுவர நக்கீரனால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கையை வாசகர்களிடமும் பொதுமக்களிடமும் ஏற்படுத்தியது.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பள்ளி நிர்வாகத்தினர் நக்கீரனைக் குறி வைத்துக் காத்திருந்தனர். கடந்த திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 19) தம்பி பிரகாஷும் வீடியோகிராபர் தம்பி அஜித்தும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீண்டும் செயல்படுவதற்கேற்ற வகையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை அறிந்து, நேரில் சென்று படம் பிடிக்க முயன்றபோது, பள்ளி நிர்வாகத்திற்குத் தொடர்புடைய 5 பேர், தம்பி பிரகாஷ் ஓட்டிச் சென்ற காரை சுற்றி வளைத்துக் கொண்டு தாக்கியுள்ளனர். தம்பி பிரகாஷ் தனது காரை விரைந்து ஓட்டிச்சென்ற நிலையில், பைக்கில் அவர்கள் துரத்தி வந்து, தலைவாசல் காவல் நிலையம் அருகே கடுமையாக இருவர் மீதும் தாக்குதலை நடத்தி, செல்போனை பறித்துச் சென்றதுடன், தம்பி அஜீத்தையும் வெறிகொண்டு தாக்கி பல்லை உடைத்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு, A.D.G.P.தாமரைக் கண்ணன், I.G. சுதாகர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு செய்தியைத் தெரிவித்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 5 தடிமாடுகளும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். தாக்குதல் தலைவன் சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் தம்பி அருள்சுபாஷ். அவனைத் தேடி வருகின்றனர்.
நக்கீரனைத் தாக்கிவிட்டால் மற்ற அனைத்து பத்திரிகையாளர்களும் பயந்துவிடுவார்கள் என்பதே அந்த கும்பலின் திட்டம். நக்கீரன் ஒருபோதும் பயப்படப் போவதில்லை. துணிவே எங்கள் ஆயுதம். உயிரைக் கொடுத்தேனும் உண்மையைக் கொண்டு வருவதில் உறுதியாக நிற்போம்.
நக்கீரன் தம்பிகள் மீதான தாக்குதல் பற்றி புகார் தெரிவித்ததுடன் உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறோம். அனைத்து பத்திரிகையாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
நக்கீரனுக்குத் துணையாக நின்று, தாக்கு தலைக் கண்டித்து, கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர் சங்கத்தினர், பொதுநல அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள், பத்தி ரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
பல ஊர்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உணர்வை வெளிப்படுத்திய பத்திரிகை சகோதரர்களுக்கும் நன்றி.
நக்கீரனின் துணிச்சலான பயணம் எப்போதும் போல தொடரும்!
நக்கீரன்கோபால்