'நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் குடும்பத்துடன் இரவு நேர தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த வளையப்பட்டியில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய கிராம எல்லைகளில் இருந்து மொத்தம் 820 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு உத்தேசித்திருப்பதோடு, நிலம் எடுக்கும் பகுதிகள் குறித்த வரைபடம் மற்றும் அது ஏற்படுத்த இருக்கும் பொருளாதாரத் தாக்கம் குறித்த அறிக்கையும் தயாரித்துள்ளது.

ff

இந்தத் தொழிற்பேட்டை அமைவதால் நீர்வளம், நிலவளம் மட்டுமின்றி, விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள், ஏரியா விவசாயிகள். இதற்காக அதிகாரிகளிடம் மனு அளிக்கும் இயக்கம், பழனி முருகன் காலடியில் வளையப்பட்டி மண் காணிக்கை செலுத்தும் போராட்டம், நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம், நாமக்கல் மலைக்கோட்டையில் ஏறி முழக்கமிடுதல் என பல்வேறு வடிவங்களில் அவர்கள் சிப்காட்டை எதிர்த்துப் போராடி வந்தனர். மே 10ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தையும் இரவு பகலாக நடத்திவருகின்றனர்.

Advertisment

இது தொடர்பாக விவசாய முன்னேற்றக்கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் நம்மிடம், "தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டுமே தவிர, நாமக்கல் போன்ற வளர்ச்சி அடைந்த மாவட்டத்திற்கு இத்திட்டம் தேவை இல்லை. இந்த மாவட்டத்தில் விவசாயம், கோழிப்பண்ணைகள், லாரி பாடி பில்டிங், ரிக் லாரி கட்டுமானத் தொழில், செங்கல் உற்பத்தி, காகித ஆலை, பி.வி.சி. பைப் ஆலை, கனரக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு, விசைத்தறி, கொசு வலை உற்பத்தி என 1500க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

ff

சிப்காட் தொழிற்பேட்டைக்காக 330 விவசாயிகளுக்குச் சொந்தமான 420 ஏக்கர் விளைநிலமும், 400 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் என மொத்தம் 820 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகச் சொல்கின்ற னர். இந்த நிலங்களை எடுத்தால் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோவிந்தப் பிள்ளை ஏரி, 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள தாய்மான் குட்டை ஆகிய நீர்நிலைகள் முற்றிலும் பறிபோகும் அபாயம் இருக்கிறது. மேலும், வளையப்பட்டி, என்.புதுப்பட்டி யில் உள்ள 4 குளங்களும், தடுப்பணைகளும் காணாமல் போய்விடும். சிப்காட் அமையவுள்ள பகுதியில் இருக்கும் கஸ்தூரி மலையில் இருந்து வழிந்தோடும் மழை நீரால், அடிவாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்புகின்றன. தொழிற்பேட்டைக்கு நிலம் எடுக்கும்போது இந்த நீர்நிலைகள் காணாமல் போவதோடு, நிலத்தடி நீரும், விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும்.ff

நிலம் எடுப்பது குறித்து வருவாய்த் துறையினர் அரசுக்கு அனுப்பியுள்ள வரைபடத்தில், விளைச்சல் தரக்கூடிய நிலங்களைத் தரிசு நிலம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த திட்டத்தால் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய கிராமங்களில் விவசாயிகளுக்குச் சொந்தமான 8000 கால்நடைகள், 200 கிணறுகள், தென்னை, கொய்யா, மா, வாழை ஆகிய மரங்களும் அழிந்து போய்விடும். வளையப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம்தான் நான்கு கிராமங்களுக்கும் குடிநீர் சப்ளை நடக்கிறது. அந்தக் கிணறுகளும் இத்திட்டத்தால் மூடப்பட்டு விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிப்காட் மூலம் எத்தனை தொழிற்கூடங்கள், என்ன மாதிரியான தொழில்கள் வருகின்றன என்ற விவரமும் சொல்லப்படவில்லை. தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவை நேரில் சந்தித்து எங்கள் எதிர்ப்பைச் சொன்னபோது, இப்பகுதியில் தோல் தொழிற்சாலை வருவதாகச் சொன்னார். ஒருவேளை, தோல் தொழிற் சாலைகள் அமைக்கப்படு மெனில், சுற்றுச்சூழல் மேலும் பாதிக்கப்படும்.

விவசாயத்தை பாதிக்கக் கூடிய இந்த திட்டத்தை கைவிடுமாறு தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி., முதல் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரை மனு கொடுத்துவிட்டோம். அந்த மனுக்கள் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாமக்கல் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட 330 விவசாயிகளும் சிப்காட் தேவை இல்லை என்றும், இதற்காக ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுத்தர மாட்டோம் என்றும் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதிக் கொடுத்துள்ளோம். எங்கள் எதிர்ப்பையும் மீறி, விளை நிலங்களைப் பறித்துக்கொள்வதில் தமிழக அரசும், அதிகாரிகளும் மும்முரமாகச் செயல்படு கின்றனர்'' என ஏகத்துக்கும் கொந்தளித்தார்.

சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் ராம்குமாரோ, "மாநிலம் முழுவதும் உள்ள 33 சிப்காட் தொழிற் பேட்டைகளில் 14 தொழிற்பேட்டைகள் மட்டுமே மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுள்ளன. மற்ற 19 சிப்காட் தொழிற்பேட்டைகள் என்.ஓ.சி. பெறவில்லை. அவற்றின் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்து வருவதாக சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளே கூறுகின்றனர். இந்தநிலையில், சிப்காட் மூலம் எங்கள் கிராமங்களையும் நாசமாக்க விட மாட்டோம். சிப்காட் திட் டத்திற்காக 1972ஆம் ஆண்டு முதல் இப்போது வரை தமிழ்நாடு முழுவதும் 42 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அவற்றில் 24 ஆயிரம் ஏக்கர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் வேட்டாம்பாடி, ராசாம்பாளை யம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் 100 ஏக்கர் நிலத்தை சிட்கோ திட்டத்திற்காக கையகப்படுத்திவிட்டு, அங்கும் இதுவரை தொழில் தொடங்காமல் உள்ளனர்.

தற்போது சிப்காட் திட் டத்துக்காக நிலம் கையகப் படுத்தப்படும் பகுதிகளில் ஆளுங்கட்சி வி.ஐ.பி.க்களுக்கு பல நூறு ஏக்கர் ரியல் எஸ்டேட் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக இந்த திட்டத்தை கொண்டு வருகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது. விவசாயிகள் சம்மதம் இல்லாமல் ஒரு சென்ட் நிலத்தைக்கூட கையகப்படுத்த மாட்டோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அந்த உறுதிமொழியை அவர் காப்பாற்ற வேண்டும்.'' என்கிறார் அழுத்தமாக.

நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட கொ.ம.தே.க. மாதேஸ்வரன், ஆரம்பத்தில் சிப்காட் எதிர்ப்புக் குழுவினருடன் இணைந்து கடுமையாக போராடி வந்தார். அவரிடம் பேசியபோது, "கட்சித் தலைமையின் உத்தரவின்பேரில், சிப்காட் திட்டத்தை எதிர்த்துப் போராடி வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டதால் எதிர்ப்புக் குழுவில் இருந்து விலகிவிட்டேன். ஆனால், சிப்காட் எதிர்ப்பு இயக்க விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பின் மூலம் எனக்கு பாதகமாகச் செயல்பட்டனர். அதனால் சிப்காட் திட்டத்தின் சாதக, பாதகம் குறித்து எதுவாக இருந் தாலும் ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகுதான் சொல்ல முடியும்'' என முடித்துக்கொண்டார்.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமாவிடம் கேட்டபோது, "சிப்காட் திட்டத்துக்காக நிலம் கையகப் படுத்துவது தொடர்பாக விவசாயி களிடம் நேரடியாகக் கருத்துகளைக் கேட்டுள்ளோம். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். நீர் நிலைகள் ஏதேனும் பாதிக்கப்படு கிறதா என்பது குறித்து சிப்காட் துறையிடம் புதிதாக ஆய்வறிக்கை கோரப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்கு எதிராக எந்த திட்டமும் செயல்படுத்தப்படமாட்டாது'' என் றார். தொழிற்பேட்டை வருவதன் மூலம் கணிச மான வேலைவாய்ப்புகளும், தொழில் வளமும் பெருகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம், அதைச் சுற்றியுள்ள பல ஆயிரக் கணக்கான விளை நிலங்கள் விரைவில் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது. எனினும், வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கான தொழிற்பேட்டைகளை அமைப்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.

மக்கள் நலனுக்கு எதிரான எந்தத் திட்டமும் மக்கள்நலத் திட்டமாகாது.

Advertisment