கடந்த வாரம், நெல்லையின் டவுண் பகுதியின் குடியிருப்புகளுக்கு வந்த ஆலய அறநிலையத்துறையின் உதவி ஆணையர், அதிகாரிகள் சுமார் 200 போலீசார் படையோடு வந்து "வீடுகளைக் காலி செய்யுங்கள். இல்லாவிட்டால் இடித்துத் தள்ளுவோம்'' என்று அதிகார கெத்தை வெளிப்படுத்தினர். இது திரளான மக்களைக் கொந்தளிப்பில் தள்ளியது. ரோடு மறியல், ஆர்ப்பாட்டம் என நெல்லை டவுண் ஏரியாவே அல்லோலகல்லோலப்பட்டது.
கண்ணீருடன் போராட்டத்தில் அமர்ந்திருந் தவர்... "ஒண்ணு... ரெண்டல்ல, 53 வருட எங்க குடியிருப்புகளோட போராட்டம்...'' என்று’ வேதனையை வெளிப்படுத்தினார்.
நெல்லை நகரின் முக்கிய மையமான டவுண் பகுதியிலுள்ள செங்குந்தர் நடுத்தெருவில் 1972-ன்போது அங்குள்ள செங்குந்தர் சமூகத்தின் ஏழை கைத்தறி நெசவளர்கள் குடியிருந்திருக்கி றார்கள். கைநெசவு மூலம் வாழ்க்கை பயணப்பட்ட நிலையில், அப்போதைய அந்த வார்டின் கவுன் சிலர், ஏழை கைத்தறி நெசவாளர்களின் வறிய நிலையைக் கருத்தில்கொண்டு அந்தத் தெருவிலுள்ள சர்க்கார் புறம்போக்கு நிலமான 25 சென்டில் 32 கைத்தறி நெசவாளக் குடும்பங்களுக்கும் 10 ல 16 சைஸில் வீடுபோன்று ஒட்டுச்சுவர் அமைத்து குடியிருப்பதற்கான ஏற்பாடுகளை உரிய அரசு அதிகாரிகள் (அப்போதைய நெல்லை நகராட்சி) மூலம் சான்றிதழ் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
அதன்படி 32 கைத்தறி நெசவாளக் குடும் பங்களும் புறாக்கூண்டுபோல ரூம் அமைத்துக் கொண்டு அதில் கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த கவுன்சிலரே அதீத முயற்சியில் 32 வீடுகளுக்கும் நகராட்சியில் தனித்தனியான சொத்துவரிக்கும் ஏற்பாடு செய்ய, தொடர்ந்து நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுவருகின்றனர்.
இந்த கைத்தறி நெசவாளர்கள் குடியிருப்பு அருகே அருள்மிகு திருஞானமூர்த்தி கோயில் உள்ளது. அந்தக் கோயிலின் அப்போதைய தர்மகர்த்தா நிர்வாகத்தினர், மேற்படி குடியிருப்பு களின் நிலம் தங்களது கோயிலுக்குச் சொந்தமானது என்று முனிசீப் கோர்ட்டில் 1981-ல் அசல் வழக்கு தாக்கல்செய்தனர். அதனைக் குடியிருப்புகளின் சார்பில் நெசவாளர் முத்தையா முதலியார் எதிர் வாதியாக மேற்கொண்டார். வழக்கு நிலுவையிலிருக்கும்போதே முத்தையா முதலியார் காலமாகி விட, பின் அதில் ஒருவர் கோர்ட் அனுமதிபடி பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இறுதியாக முன்சீப் கோர்ட்டில் 2004-ன்போது இந்த வழக்கில் வாதி மற்றும் பிரதிவாதி தரப்பு களிடம் சான்றாவணம், சாட்சியங்கள் இல்லை. ஆதாரங்கள் இல்லை என்று எக்ஸ் பார்ட்டி தீர்ப்பாகி வழக்கு தள்ளுபடியாகியிருக்கிறது.
இந்த நெசவாளர்களுக்கான வீட்டுமனைப் பட்டா கொடுக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், கோயில் தர்மகர்த்தாக்கள் குழு கலைக்கப்பட்டு ஆலயங்களுக்கு ஸ்பெஷல் ஆபீசர்கள் நிர்வாக அதிகாரிகளாக நியமிக்கப் பட்டனர். அதைப்போன்று திருஞானமூர்த்தி கோயிலுக்கு நியமனம் செய்யப்பட்ட ஸ்பெஷல் ஆபீஸர், மேற்படி இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்று அறநிலையத் துறை மூலம் மீண்டும் வழக்குப் போட்டு பின் அதனை மாவட்ட முன்சீப் கோர்ட்டிற்கு மாற்றியுள்ளார். அவ்வழக்கு விசாரணைக்கு வராமல் ஆண்டுக் கணக்கில் நிலுவையிலிருந்திருக்கிறது.
சில வருடங்கள் நிலம்தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் எந்தவிதமான அசைவுகளும் தென்படாமல் போகவே, கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக இந்தக் குடியிருப்பிலுள்ள ஒரு வீடு வெள்ளத்தில் இடிந்து சரிந்திருக்கிறது. இப்படியான நேரத்திற் காகக் காத்திருந்த கோயில் அறநிலைய நிர்வாகத் தின் இணை ஆணையர், எந்தவிதமான அடிப்படை ஆதாரமுமின்றி, மேற்படி நிலம் தெப்பக்குள ஆக்கிரமிப்பில் உள்ளது. அதிலுள்ள 28 வீட்டுமனைகள் நீதிமன்ற உத்தரவின்படி வீடுகள் காலி செய்யப்பட்டு 08.11.2024-க்குள் திருக்கோயில் நிர்வாகம் வசம் சுவாதீனம் செய்துவிட்டு வெளியேறும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இப்படி ஒரு போர்டு வைத்து நீதிமன்ற ஆணை நம்பரைக் குறிப்பிடாமல் மொட்டையாக நீதிமன்ற உத்தரவு என்று தெரிவித்து வெளிப் படையாக எங்களை மிரட்டுகிறது பாருங்க''” என்றனர் அந்த மக்கள்.
ஆலய நிர்வாகத் தரப்பு, சம்பந்தப்பட்ட அந்த இடம் நீர்நிலைப் புறம்போக்கு என்று தெரிவித் ததால், அந்த மக்கள் அந்த இடம்தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை முறைப்படி வருவாய்த்துறை மூலமே பெற்றிருக்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி அவர்கள் கேட்டதில் மேற்படி நிலமானது 1910-ன்போதே கிராம அடங்கல் 16-ன் படி சர்வே எண் 1547-ன்படி அது நத்தம் புறம்போக்கு நிலம் என்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரால் (நிலம்) வழங்கப்பட்ட சான்றாவணம் கிடைத்திருக்கிறது. செங்குந்தர் நடுத்தெரு நிலம் சர்வே எண் 1547, சர்க்கார் புறம்போக்கு என்று வருவாய்த் துறையால் 04.04.2018ல் மின்னணு பட்டாவும் வழங்கப் பட்டுள்ளது.
"அந்த நிலத்தின் தன்மை சர்க்கார் புறம் போக்கு என்று வருவாய்த்துறையின் ஆவணங்கள் வெளிப்படுத்துகிறதே தவிர, எந்த ஒரு இடத்திலும் நிலம், நீர்நிலை வழிப்போக்கு இடம் என்று தெரிவிக்கப்படலை'' என்கின்றனர் ஆவணங்களைக் காட்டியவாறு.
இந்த நிலையில்தான் திருஞானமூர்த்தி திருக்கோயில் அதிகாரிகள் கடந்த வாரம் போலீசாருடன், செங்குந்தர் நடுத்தெருவின் குடியிருப்பு பகுதிக்கு வந்தவர்கள், அம்மக்களிடம் வீடுகளை உடனடியாகக் காலிசெய்யுங்கள் இல்லாவிட்டால் இடிப்போம் என்றிருக்கிறார்கள். போலீஸ் படைசூழ அதிகாரிகளின் முற்றுகை. குடியிருப்புவாசிகளோ தங்களுக்கான ஆவணம், வருவாய்த்துறை ஆவணங்களைக் காட்டி நீர் நிலையல்ல என்று அதிகாரிகளிடம் தெரிவிக்க, அதிகாரிகளோ காலிபண்ணுவதிலேயே குறி யாயிருந்தார்களே தவிர மக்களின் ஆவணங்களைக் கண்டுகொள்ளவேயில்லையாம். அவர்கள் தரப்பு உத்தரவைக் காட்டவேயில்லை.
விவகாரம், அதிகாரிகள், மக்களிடையே கடும் வாக்குவாதமாக, ஆவேசமான முன்னூறுக்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகள் ஆண்கள், பெண்கள் திரண்டுவந்து அந்தச் சாலையிலமர்ந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
"நீதிமன்றமே நீர் நிலையில்தானிருக்கு இடிப்பாயா, இடிப்பாயா!'
"வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே!'
என்பன போன்ற ஆவேசக் கோஷங்கள் கிளம்பி ஏரியாவைச் சூடாக்கியிருக்கிறது.
நேரம் செல்லச் செல்ல, நிலைமை வேறுதிசையில் பயணிக்க, பாதுகாப்பிலிருந்த போலீஸ் அதிகாரிகளோ, சூழலை ஸ்கேன் செய்தவர்கள், அறநிலைய அதிகாரிகளிடம், "உரிய ஆவணங்கள், உத்தரவிருந்தால் வெளியிடுங்கள், எதுவுமில்லாமல் ஒன்றும்செய்ய இயலாது. சூழ்நிலையோ சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகி ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது?'' என்று கேட்டதையடுத்தே, அதிகாரிகள் யோசனை செய்திருக்கிறார்கள். அதேசமயம் தகவல்பறந்து ஸ்பாட்டுக்கு வந்த நடுநிலையாளர்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், "உரிய ஆதாரமிருந்தால் அதோடு வாருங்கள். ஆவணமில்லாமல் நடவடிக்கை என்றால் விவகாரமாகிவிடும்'' என்று சுட்டிக் காட்டிய பிறகே அறநிலையத்துறை அதிகாரிகள் கிளம்பியிருக்கிறார்கள்.
ஸ்பாட்டிலிருந்த குடியிருப்புவாசியான ஈஸ்வரன், “"எனக்கு வயசு 43. நான் இங்கதான் பொறந்தேன். எங்க தாத்தா காலத்திலிருந்தே கைத்தறி நெசவாளர்களான நாங்க முன்னூறு பேர் இங்கதான் குடியிருக்கோம். 52 வருஷமாச்சு. இது நீர்நிலைப் பகுதியில்ல. சர்க்கார் புறம்போக்கு இடம்னு வருவாய்த்துறை ஆவணங்களக் காட்டியும் அறநிலைய அதிகாரிகள் ஏற்கவில்லை. அவுக ளோட உத்தரவையும் காட்டல. காலி பண்ணச் சொல்லி அனைவருக் கும் நோட்டீசும் அனுப்புனாக. குடியிருப்புகள காலி பண்ணணும்னா, பூட்டுப் போடணும்னா உரிய உத்தரவோட வருவாய்த்துறை அதிகாரிகளோட வரணும். ஆனா, அறநிலையத்துறை அதிகாரி கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவாய்த்துறைக்குத் தெரிவிக்காமல் போலீஸோட யும், வீடுகளோட மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பைத் துண்டிக்க ஊழியர்களோடயும் வந்தாங்க. புல்டோஸரால இடிப்போம்றாக. எங்களோட பிரச்சினையை இப்போதைய அரசுவரைக்கும் முறையிட்டும் நடவடிக்கையில்ல. கடைசியா பிரச்சினை முற்றினப்போ உயர்நீதி மன்றத்தில வழக்கு தாக்கல் பண்ணோம். உயர்நீதிமன்றமோ அனுமதியில்லாம நடவடிக்கை கூடாதுன்னு ஆறு மாசம் தடைபோட்டதோட, முதல்ல அது உங்க இடம்னு நிரூபித்துவிட்டு வாருங்கள் என்று அறநிலையத்துறை அதிகாரி களுக்கு உத்தரவிட்டிருக்காக. நாங்க கைத்தறி நெசவாளர்க, வசதிவாய்ப்பு இல்லாதாவங்க. அரசாங்கம்தான் எங்களுக்கு வாழ்வளிக்க ணும்''’என்றார் கண்களில் நீர்வடிய.
இதுகுறித்து அறநிலைத்துறையின் தரப்பு விளக்கமறியும் பொருட்டு திருஞான மூர்த்தி கோயிலின் அறநிலைய நிர்வாக அதிகாரியான ஆய்வாளர் தனலட்சுமியிடம் கேட்டபோது... “"அந்த இடம் தெப்பக்குளம் நீர்நிலை ஆக்கிரமிப்பிலிருக்கிறது. அதை அகற்றணும். நாங்கள் சட்டப்படிதான் செய்கிறோம். சட்டப்படி நடக்கிறோம். வழக்கு நீதிமன்றத்திலிருக்கிறது. எங்கள் தரப்பிலான ஆவணங்களை ஜே.சி. மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்''’ என்றவரிடம்...
"நீதிமன்ற உத்தரவு எண் குறிப்பி டாமல் பொத்தாம்பொதுவாக வைக்கப் பட்ட குடியிருப்புகளை காலி செய்யுங்கள்' என்ற அறநிலையத் துறையின் போர்டு பற்றிக் கேட்ட போது... "அது போராட்டத்துக்கு முதல் நாளே வச்சது'' என்று முடித்துக் கொண்டார்.
அரசு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையிலிருக்கிறார்கள் கைத்தறி நெசவாளர்கள்.
-ப.இராம்குமார்