"சுத்தமான குடிநீரானது உலகத்திலுள்ள அனைவருக்குமான அடிப்படை மனித உரிமைன்னு ஐக்கிய நாடுகள் சபை அறிவிச்சது. அருப்புக் கோட்டையில் மாசத்துக்கு ஒரு தடவைதான் குடிநீர் சப்ளை பண்ணுது நகராட்சி. ஒரே ஒருநாள் விடற தண்ணிய வச்சு ஒரு மாசம் முழுக்க மக்கள் எப்படி வாழமுடியும்? தேர்தல் நேரத்துல இனிக்க இனிக்க வாக்குறுதி தர்றாங்க. ஆனா.. குடிநீர் விஷயத்துல அருப்புக்கோட்டை மக்களோட வாழ்க்கை எப்பவுமே கசப்பாத்தான் இருக்கு. அம்பது வருஷமா குடிநீரை வச்சுத்தான் அருப்புக்கோட்டைல அரசியல் ஓடிட்டிருக்கு''’என்று வேதனையோடு குறிப்பிட்டார் அருப்புக்கோட்டை நகராட்சியின் 16-வது வார்டு சி.பி.எம். கவுன்சிலரான தோழர் பாலசுப்பிரமணியம்.
மனிதனின் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் விஷயத்தில் அல்லாடுகிறார்களா அருப்புக்கோட்டை மக்கள்?
“அதுக்குப் பேரு வைகை குடிநீர் திட்டம். அருப்புக்கோட்டைக்கு பைப் லைன்ல வர்ற வைகை குடிநீரை வீட்டு உபயோகழு பயன்பாட்டுக்கு மட்டும் வச்சிக்கங்க. குடிநீராகப் பயன்படுத்த வேணாம்னு அருப்புக்கோட்டை நகராட்சியே நோட்டீஸ் மூலம் மக்களுக்கு தெரிவிச்சிருக்கு. இதைவிட கொடுமை என்ன இருக்கு?''’என்று கேட்டார் பெரியசாமி.
குடும்பத் தலைவியான தில்லைக்கனி, "வைகை ஆற்றுத் தண்ணிங்கிற பேர்ல அருப்புக் கோட்டைக்கு வர்றது குடிக்கவே முடியாத உப்புத் தண்ணி. மஞ்ச கலர்ல சகதியை கரைச்ச மாதிரி வரும். வெள்ளைச் சட்டைய அந்தத் தண்ணில முக்கி யெடுத்தா கலர்ச்சட்டை ஆயிரும். மக்கள் ஒண்ணு சேர்ந்து போராட்டம் எல்லாம் நடத்து னோம். வைகை தண்ணிய நிறுத்திட்டாங்க. அப்புறம் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்துல 45 நாளுக்கு ஒரு தடவைதான் தண்ணி விடறாங்க. 45 நாளைக்கு ஒருதடவை தண்ணி விட்டாங்கன்னா.. அதைப் பிடிச்சு சேமிச்சு வைக்கிறதுக்கு அவ்வளவு பெரிய பாத்திரத்துக்கு நாங்க எங்கே போறது? ஏதோ பத்து நாளைக்கு ஒருதடவை.. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தண்ணி விட்டா நல்லா யிருக்கும். நாங்க சேமிச்சு பாதுகாப்பா வச்சிக்குவோம். ஒன்றரை மாசம்னா தாங்காது. ரோட்டுல விக்கிற கார் தண்ணிய வாங்கிக் குடிச்சா உடம்புக்கு சேரல. தொண்டை வலிக்குது. இருமல் வருது. இதுக்கு வைத்தியம் பார்க்கிற செலவு வேற...''’என்று நொந்துகொண் டார்.
பூங்காளியம்மாள் "பைப்ல தண்ணி கலர் கலரா வருது. நல்ல தண்ணி குடம் 12 ருபாய்க்கு விக்குது. கூலி வேலை பார்க் கிறோம். நல்ல தண்ணிய விலைக்கு வாங்கி குடிக்கிற அளவுக்கு எங்க கிட்ட வசதி இல்லியே?''’என்றார் பரிதாபமாக.
‘அருப்புக்கோட்டையில் தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?’ தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி இயக்குநர் செல்வகுமாரிடம் கேட்டோம். “"தண்ணீர் சரியில்ல, கலர் மாறுதுன்னு தொடர்ந்து கம்ப்ளைன்ட் வந்ததுனால.. வைகை குடிநீர் திட்டம் மூலம் அருப்புக் கோட்டைக்கு வர்ற குடிநீரை தற்காலிகமா நிறுத்திட் டாங்க. தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம், தூத்துக்குடி வல்லநாடு பகுதில தாமிரபரணி ஆற்று படுகைல போர்வெல் போட்டு, குழாய்கள் மூலம் 239 கடலோர/கிராமப்புற குடி யிருப்புகளைக் கடந்துதான் அருப்புக்கோட்டைக்கு தண்ணீர் வருது. ஒவ்வொரு நாளும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் வருது. 15 வருஷத்துக்கு முன்னால போட்ட பழைய பைப் லைன்ங்கிறதுனால, பவர்கட் வரும்போது பிரஷர் தாங்காம உடைஞ்சிருது. இது பழைய ஸ்கீம். இப்ப புதுசா ஒரு ஸ்கீம் போட்டி ருக்காங்க. இந்த புது ஸ்கீம்ல அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர்.. இந்த மூணு முனிசி பாலிட்டிகளுக்கு மட்டும் தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வரும். அடுத்த மாசத்துல அனுமதி கிடைச்சிரும். அப்புறம் அருப்புக்கோட்டை நார்மல் ஆயிரும்''’ என்றார்.
அருப்புக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் "தாமிரபரணி ஆற்றுநீரை நீராதாரமாகக்கொண்டு, ரூ.444.71 கோடி மதிப்பீட்டிலான அருப்புக்கோட்டை உள்ளிட்ட மூன்று நகராட்சிகளுக்கான புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள், கடந்த ரெண்டு வருஷமா தொடர்ந்து நடந்துட்டு வருது. இப்ப முடிவடையுற ஸ்டேஜுக்கு வந்திருச்சு. வர்ற அக்டோபர்ல இந்த மூணு ஊருக்கும் புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படும். அப்புறம், வைகை குடிநீர் திட்டம் மூலம் அருப்புக்கோட்டைக்கு வர்ற குடிநீர் பகிர்மான குழாய்கள் கட்டங்குடி நீரேற்று நிலையத்துல இருந்து அருப்புக்கோட்டை நீரேற்று நிலையம் வரையுள்ள இந்த குழாய்கள் அடிக்கடி பழுதாயிருது. அதை நீக்கிட்டு, ரூ.6 கோடி செலவுல புதுசா இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்கியாச்சு. மேலும் ரூ.5 கோடி நிதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பிளான்ட் அமைக்கப்போறோம். ஒருசில மாதங்கள்ல அந்தப் பணியும் முடிஞ்சிரும். பிறகு, வைகை குடிநீர் திட்டம் மூலம் அருப்புக்கோட்டைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்''’என்கிறார்.
அருப்புக்கோட்டைக்கு குடிநீர்த் திட்டங்கள்தான் எத்தனை? அரசு நிதி ஒதுக்கி செலவிடும் கோடிகள்தான் எத்தனை? குடிநீர் பிரச்சனைக்கு தி.மு.க. ஆட்சியிலாவது நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடாதா என்னும் பரிதவிப்பில் இருக்கிறார்கள் அருப்புக்கோட்டைவாசிகள்!
_______________
கூட்டுக்குடிநீர் திட்டங்களைச் செயல்படுத்தி அருப்புக்கோட்டை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்துவிட அரசு முனைப்பு காட்டிவருகிறது. அதே நேரத்தில், அருப்புக்கோட்டை மக்களின் குடிநீர் தேவைக்கு வெளிமாவட்டத்தை ஏன் சார்ந்திருக்க வேண்டும்? பெரும் பரப்பளவுள்ள பெரியகுளம் கண்மாய், தும்பைக்குளம் கண்மாய், செவல் கண்மாய் ஆகிய மூன்று நீர்நிலைகள் அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ளனவே? சில கோடிகள் செலவழித்து தூர்வாரி, சீர்படுத்தினால் போதுமே? சீமைக்கருவேல மரங்களையும், கண்மாய்களில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை செடிகளையும் அகற்றிவிடலாமே? ஒரு மழை பெய்தாலே வருடம் முழுவதும் அருப்புக் கோட்டைக்கு குடிநீர் கிடைத்துவிடுமே? தாமிரபரணி ஆற்று நீரை அசுரத்தனமாக உறிஞ்சும் தனியார் நிறுவனங்கள் ம-ந்துள்ளனவே? எத்தனை காலத் துக்குத்தான் குடிநீர் தேவைக்காக வெளிமாவட் டத்திலுள்ள ஏதோ ஒரு ஊரை நம்பி வாழமுடியும்? என்ற யதார்த்தமான பேச்சையும் அருப்புக்கோட்டையில் கேட்க முடிந்தது.