நெல்லை டவுன் நெல்லையப்பர் சுவாமி பெருவழிச் சாலையில் அரசுப் பொருட்காட்சித் திடலுக்கு எதிரே உள்ளது சி.எஸ்.ஐ அமைப்பின் அரசு உதவிபெறும் சாப்ஃடர் மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர் கள்தான் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் பலியாகி தமிழகத்தையே துயரமடையச் செய்திருக் கிறார்கள்.
இப்பள்ளி, 100 ஆண்டு காலம் பழமையான முதல் தனியார் பள்ளி. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்தப் பள்ளியின் சில பகுதிகளில், பள்ளி தொடங்கியபோதுள்ள புராதன கட்டடங்களும் உள்ளன. கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் ஈரமாகிப் பொருமிப்போய் நின்றிருக்கிறது. இந்நிலையில், டிசம்பர் 17-ஆம் தேதி காலை பள்ளி ஆரம்பித்தவுடன் உடற்பயிற்சி வகுப்பும் தொடங்கியிருக்கிறது. அதேசமயம் காலை 10:50 மணிவாக்கில் பள்ளியில் இடைவேளை விடப் பட்டது.
வழக்கம்போல், மாணவர்கள், பள்ளியின் பின்பக்கம் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார்கள். அந்தக் கழிப்பறையும் அதனை ஒட்டிய சுற்றுச்சுவரும் மழை காரணமாக ஈரம்பாய்ந்து பலமின்றி நின்றிருக்கிறது. அந்த நேரம் மாணவர்கள் முண்டியடித்து சிறுநீர் கழிக்க உள்ளே சென்றதும் சுவர்கள் பெயர்ந்து மாணவர்களின் மீது விழுந்து அமுக்கியிருக்கிறது. இதனால் பயந்து மாணவர்கள் பீதியில் அலறியிருக் கிறார்கள். இடிபாடுகளுக்கிடையே கதறிக் கொண்டிருந்த மாணவர்களை சக மாணவர்கள் இடிபாடுகளை அகற்றி காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் காவல் துறையினரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 8 மாணவர்களை மீட்டனர். இதில் பழவூரைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவன் சுதீஷ், தச்சநல்லூரைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் நரசிங்கநல்லூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் அன்பழகனின் உயிர் பிரிந்திருக்கிறது.
இந்நிலையில் விபத்து மற்றும் 3 மாணவர்கள் பலியானது அறிந்து மாணவர்கள் கொந்தளித்தனர். மொத்த மாணவர்களும் திரண்டு ஆவேசத்தில் பள்ளியிலுள்ள சில வாகனங்களைச் சேதப்படுத்தினர். பூந்தொட்டிகளை தூக்கிவீசினர். சுவரிடிந்த தகவலறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பள்ளிச் சாலையே பதைபதைப் பிலும் பதட்டச் சூழலிலுமிருந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிச் சாலையின் முன்னே மறியலில் ஈடுபட்டனர். நிலைமை கைமீறிச் செல்வதையறிந்த நிர்வாகம் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது.
மீனவர்கள் குறைதீர் கூட்டத்திலிருந்த மாவட்டக் கலெக்டர் விஷ்ணு தகவலறிந்து பள்ளிக்கு விரைந்தார். அதேசமயம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனும் சம்பவ இடத்திற்கு வர, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தியவர்கள் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர். சிகிச்சையிலிருந்த மாணவர்களைச் சந்தித்த கலெக்டர் விஷ்ணு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அங்கிருந்த மாணவர்களிடம் நாம் பேசியபோது, “"மழையில நனைஞ்ச சுவரு. நாங்க அந்தச் சுவரத் தொட்டாலே அது ஆடும். பல தடவ வகுப்பாசிரியர்கிட்டயும், தலைமைலயும் புகார் சொல்லியிருக்கிறோம். ஆனா அவங்க கவனிச்ச மாதிரி தெரியல. பள்ளி இடைவேளை நேரத்தில் பி.டி ஆசிரியர் சுவர் பக்கம் நின்னுக்கிட்டு அந்தப் பக்கமா மாணவர்களைப் போகவிடாம வேற பக்கம் போவச் சொல்றது வழக்கமாயிருச்சி. இன்னக்கி அத மாதிரி பி.டி. ஆசிரியர் நின்னாரான்னு தெரியல. ஆனா இடைவேளைல மாணவங்க கொஞ்சம் பேரு மொத்தமா உள்ள போனப்ப பெயர்ந்து விழுந்து அமுக்கிடுச்சி''’என்றார்கள் கண்ணீரும் கம்பலையுமாய்.
சஞ்சய், அபுபக்கர், அப்துல்லா, இசக்கிபிரகாஷ், பிரவீன் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் சிகிச்சையிலிருக்கின்றனர். "பள்ளியின் சுற்றுச்சுவர் சரியில்லை, குறிப்பாக கழிவறைப் பக்கம் மோசமாயிருக்கு' என்று ஏற்கனவே மாணவன் ஒருவன் பள்ளிக்கு பெட்டிசனும் அனுப்பியுள்ளான். அது கண்டுகொள்ளப்படவில்லை என்ற புகார் எழுகிறது. 2004-ல் கட்டப்பட்ட இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர், முறையான அடித்தளமில்லாமல் கட்டப்பட்டதுதான் விபத்திற்கு காரணம் என்றும், பள்ளியின் சில கட்டடங்கள் அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்டுள்ளது. அவை பள்ளி நிர்வாகம் மற்றும் அரசியல் புள்ளிகளின் செல்வாக்கால் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
பள்ளி நிர்வாகத்தின் சர்வ அலட்சி யம் மூன்று விலை மதிக்கமுடியாத மாண வர்களின் உயிரைக் காவு வாங்கியிருக் கிறது. பள்ளித் தாளாளர் செல்வகுமார், கட்டுமான ஒப்பந்ததாரர் ஜான்கென்னடி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாஃப்டர் பள்ளித் தலைமை யாசிரியை பெர்சிஸ் ஞானசெல்விக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெய்கணேஷ் மருத்துவமனைக்கே சென்று விசாரணை நடத்தி, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். உடல்நலம் தேறியதும் திருநெல்வேலி கொக்கிரகுளம் சிறையில் அவர் அடைக்கப்படுவார்
நெல்லை அரசு மருத்துவமனையில் மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அஞ்ச- செலுத்தினர்.
திருநெல்வேலி அசம்பாவிதத்தை யடுத்து, தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளிலுள்ள தரமற்ற, பயன்படாத கட்டடங்களை இடிக்க பள்ளிக் கல்வித்துறை அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பலி நடப்பதற்கு முன் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.