"ஹலோ தலைவரே, ஒன்றிய உள்துறை அமைச்சரின் தமிழக விசிட் இங்குள்ள பா.ஜ.க.வினரை உசுப்பிவிடுவதாக அமைந்திருக்கிறது.''”
"ஆமாம்பா, அவர் நோக்கமே தூக்கத்தில் இருக்கும் மாநில நிர்வாகிகளைத் தட்டி எழுப்புவதுதானே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் சரியாக செயல்படுவதில்லைங்கிற ஆதங்கம் பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்கு இருக்கிறது. அதனால் அவர்களை முடுக்கிவிடவேண்டும் என்ற நோக்கத்தில்தான், தனது தமிழக விசிட்டை அமைத்துக்கொண்டார் அமித்ஷா. கூடவே, 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். இதில் வேலூர் மாவட்டப் பொதுக் கூட்டத்தில் மட்டும் அவர் கலந்துக்கிட்டார். அந்தக் கூட்டத்தில், பா.ஜ.க. ஆட்சியைப் பொற்கால ஆட்சின்னு புகழ்ந்துகொண்ட அவர், இங்கே இருக்கும் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சிக்கவும் தயங்கவில்லை.''”
"சென்னையில் அமித்ஷா, சில சந்திப்புகளையும் நடத்தியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, 10ஆம் தேதி இரவு சென்னை வந்த அமித்ஷா, கிண்டியிலுள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில்தான் ஹால்ட் அடித்தார். அப்போது முதற்கட்டமாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய அமித்ஷா, சற்று கோபத்தோடு "இங்குள்ள நிர்வாகிகள் அசட்டையாகவே இருக்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் எந்த முனைப் பையும் இதுவரை நீங்கள் காட்டவில்லை. வெறும் சோசியல் மீடியாக்களில் மட்டுமே நீங்கள் கட்சியை நடத்துகிறீர்கள். களத்தின் உண்மை நிலவரத்தை நீங்கள் யாரும் உணரவில்லை. இப்படியே இருந்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தோற்றுப்போவோம். எனவே, இதுதான் உங்களுக்கு நான் தரும் இறுதி எச்சரிக்கை. அடுத்தமுறை நான் உங்களைச் சந்திக்கும்போது, இப்படி நான் பேசுவதற்கு நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. செயல்பட முடியாதவர்கள், பொறுப்பிலிருந்து ராஜினாமா பண்ணிவிட்டு ஓடிவிடுங்கள்' என்று ஏகத்துக்கும் காட்டத்தைக் காட்டி, மாநில நிர்வாகிகளை ரொம்பவே மிரள வைத்திருக் கிறார்.''”
"சினிமா பிரபலங்களையும் தொழிலதிபர்களையும்கூட அமித்ஷா சந்தித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, சில முக்கிய பிரமுகர்களை சந்திப் பிற்கு அழைத்திருந்தார் அமித்ஷா. அவர்களுக்கு விருந்தும் கொடுத்த அவர், "பா.ஜ.க.வின் 9 ஆண்டுகால ஆட்சி பற்றி நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள் என்பதை, தயக்கமில்லாமல் மனம் திறந்து சொல்லுங்கள்' என்று வந்தவர் களிடம் அமித்ஷா கேட்டுக் கொண்டார். அப்போது வேல்ஸ் பல்கலைக்கழக உரிமையாளர் ஐசரிகணேஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், "தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துவிட்டன என்றும், தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தி மக்களிடம் அதிகமாக இருக்கிறது' என்றும் குற்றச் சாட்டுக்களை அடுக்கினர். மேலும் அவர்கள், "வருகிற தேர்தலில் பா.ஜ.க. சரியான கூட்டணியை அமைக்கு மானால், தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் குறையாமல் எளிதாக வெல்லலாம்'’என்று சொல்லியிருக்கிறார்கள். அங்கே ஜால்ரா சத்தம்தான் அதிகமாகக் கேட்டது என்றும் சொல்கிறார்கள்.''”
"அமித்ஷா முன்னிலையிலேயே சிலர் பா.ஜ.க.வை விமர்சித்ததாகவும் தகவல் வருதே?''”
"உண்மைதாங்க தலைவரே... சினிமா பிரபலங்கள் சிலர், அளவுக்கு மீறி மோடியையும் அமித்ஷாவையும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும் புகழ்ந்து தள்ளினாலும், ஒரு சிலர் தெளிவாகவே இருந்திருக்காங்க. குறிப்பாகச் சொல்ல ணும்னா, இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அங்கே பேசும்போது, "தமிழகத்தில் பா.ஜ.க. வளரவில்லை. எனவே, மக்கள் மனதில் பா.ஜ.க. இல்லை. தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான கட்சியாகத்தான் பா.ஜ.க.வை இங்கு பார்க்கிறார்கள். அதனால், நிறைய செயல்திட்டங்களை வகுத்தால்தான் பா.ஜ.க.வால் வெல்ல முடியும். அப்படியே இப்போது அவசரகதியில் செயல் திட்டங்களை வகுத்தாலும், அது வரும் தேர்தலுக்குக் கைகொடுக்குமா? என்பது சந்ந்தேகம்தான்'’ என்று தன் மனதில் பட்ட விமர்சனத்தை தயக்கமில்லாமல் அமித்ஷா முன்பாகவே படக்கென்று போட்டு உடைத்திருக்கிறார். இது அமித்ஷாவின் புருவங்களை நெளிய வைத்திருக்கிறது. அதே சமயம், தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற பாரிவேந்தர் பச்சமுத்து, கடந்த காலத்தை மறந்துவிட்டு, தி.மு.க. அரசை ஊழல் ஆட்சி என்று கடுமையாக விமர்சித்தார். இந்தத் தகவல் அறிவாலயத் தரப்பிற்கு சென்றதால், அவர் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர் பதவியைப் பறிக்கலாமா? என்கிற ஆலோசனை அங்கே நடக்கிறதாம்.''”
"அமித்ஷா தமிழகம் வந்த நேரத்தில் பா.ஜ.க. பிரமுகர்கள் சிலர் கைதாகி இருக்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, அமித்ஷா தமிழகத்தில் கால்வைத்த நேரத்தில், பா.ஜ.க. பிரமுகர்கள் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. ஏறத்தாழ 3 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி விவகாரத்தில் பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலாளர் கே.ஆர். வெங்கடேஷும் மேலும் இரு பா.ஜ.க. நிர்வாகிகளும் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒன்றிய பாஜ.க. அமைச்சர் முருகன் மூலம் பா.ஜ.க.வில் சேர்ந்த இந்த வெங்கடேஷ், அண்ணாமலை, சவேரா ஓட்டல் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் பலருக்கும் நெருங்கிய தோஸ்த்தாக ஆனாராம். இவரை விசாரித்தபோது, "நிலமோசடி விவகாரத்தில் நான் மட்டும் இல்லை. சவேரா கிருஷ்ணமூர்த்தி உட்பட எங்கள் கட்சிப் பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு உண்டு' என்று பகீர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம். இதனால் சம்பந்தப்பட்ட பிரமுகர்களை நோக்கியும் விசாரணை நீண்டுவருகிறது. இந்த வெங்கடேஷ், செம்மரக் கடத்தலிலும் கொடிகட்டிப் பறப்பவராம். இவர் மீது தமிழகம் தாண்டியும் வழக்குகள் இருக்கின்றன என்கிறார்கள் விசாரணைக் காக்கிகள்.''”
"“மறுபடியும் காங்கிரஸில் கலாட்டா ஆரம்பிச் சிடுச்சே?''”
"அண்மையில் டெல்லிக்குச் சென்ற தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரான செல்வப்பெருந்தகை, அங்கே கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்திருக்கிறார். அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிரான புகார்களை ஏகத்துக்கும் அடுக்கியதோடு, அவர் அமர்ந் திருக்கும் தலைவர் நாற்காலியில்,தன்னை அமர்த்துமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், நாமெல்லாம் ’ஒண்ணுக்குள் ஒண்ணு’ என்று அவர் கார்கேவிடம் சாதிரீதியாக நெருக்கம் காட்ட முயல, "இப்படிப்பட்ட அணுகுமுறை எல்லாம் என்னிடம் வேண்டாம்' என்று கார்கே, செல்வப் பெருந்தகையைக் கண்டித் தாராம். இதுதான் இப்போது சத்தியமூர்த்திபவனில் ஹாட் டாக்காக இருக்கிறது. இதற் கிடையே, தாம்பரத்தை அடுத்துள்ள படப்பையில் செல்வப்பெருந்தகை நட்சத்திர ஓட்டல் ஒன்றை பிரமாண்டமாகக் கட்டிவருகிறாராம். இதையறிந்த காங்கிரஸ் பிரமுகர்களும் தொண்டர்களும், எப்புர்றா என்று வாயைப் பிளக்கிறார்கள்.''”
"காங்கிரசில் இப்போதே தொகுதிப் பிரச்சினை ஆரம்பிச்சிடுச்சே?''”
"விருதுநகரில் காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. யாக இருப்பவர் மாணிக்கம்தாக்கூர். ராகுலுக்கு நெருக்கமான இவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தன் தொகுதியை வைகோ மகன் துரைவைகோவுக்கு விட்டுக்கொடுத்து விட்டு, சிவகங்கைத் தொகுதியில் நிற்க ஸ்கெட்ச் போட்டுவருகிறார். அதே நேரம், தற்போது, சிவகங்கையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிட்டிங் எம்.பி.யாக இருக்கிறார். மீண்டும் இதே தொகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் கார்த்தி உறுதியாக இருக்கிறாராம். ஆனால், கார்த்தி சிதம்பரத்தின் மீது ராகுல்காந்திக்கு நல்ல ஒப்பீனியன் இல்லை என்பதால் இந்த முறை ப.சிதம்பரம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், அவர் மகனான கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கிடைப்பது குதிரைக் கொம்பு என்கிறார்கள். இதனிடையே அறிவாலயத் தரப்பினரோ, ’சிவகங்கையை இனி காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்குற ஐடியாவெல்லாம் எங்களுக்கு இல்லை. விருதுநகர் வேண்டுமானால் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படலாம்’என்று கூறி, காங்கிரஸ் தரப்புக்கு ஷாக் கொடுக்கிறதாம்.''”
"சரிப்பா, விடுதலை சிறுத்தைகள் திருமா கூட, வர்ற தேர்தல்ல தொகுதி மாற விரும்பறதா டாக் அடிபடுதே?''”
"ஆமாங்க தலைவரே, சிதம்பரம் தொகுதியின் சிட்டிங் எம்.பி.யான திருமா வளவன், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது தனக்கு சாதகமானதாக இருக்காதுன்னு கருதுகிறாராம். அதனால், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் தொகுதியை அவர் குறி வைப்பதாக, சிறுத்தைகள் வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுது. இந்த தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக காங்கிரஸ் ஜெயக்குமார் இருந்து வருகிறார். வரும் தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் சீட் கொடுக்காது என்கிறார்கள். எனவே, இந்தத் தொகுதியை கூட்டணித் தலைமையிடம் கேட்டு நிர்பந்திக்காது என்றும் சொல்லப்படுகிறது. இது திருமாவுக்கு சாதகமான நிலை என் கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.''”
"கல்வித்துறையிலும் சலசலப்பு தெரியுதே?''”
"தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிளான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தற்போது தவிக்கிறார்களாம். இதற்குக் காரணம், சிறு தொடர்புப் பிழை என்கிறது கல்வித்துறை. தேசிய விளையாட்டு பெடரேசன் அனுப்பிய முக்கிய கடிதம் ஒன்றை, கல்வித்துறையில் கமிஷனராக இருந்த நந்தகுமார், கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதால்தான், இத்தனை பெரிய இழப்பு தமிழக மாணவர்களுக்கு என்கிறார்கள் விபரமறிந்த வர்கள். இதற்கிடையே இந்த விவகாரம் வெளியே வந்தபோது, கமிஷனர் நந்தகுமாரைக் காப் பாற்றுவதற்காக கீழே உள்ள அலுவலர் ஒருவரை பலிகடாவாக்கி, அவர்மீது நடவடிக்கை எடுத்து ஃபைலை மூடிவிட்டார் களாம். காரணம், ஐ.ஏ.எஸ். லாபியின் ’தலயாக இருக்கும் உதயமானவருக்கு மிக நெருக்கமானவராம் அந்த நந்தகுமார்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன். பலர் முன்னிலையில் தன்னை, தன் சாதிப்பெயரைக் குறிப்பிட்டுத் திட்டி அவமானப்படுத்து கிறார் என்று, ’ஜெனியூன் ஆபீசர்’ என்று பெயரெடுத்த, முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையரான ககன்தீப்சிங் பேடி மீது, தலைமைச் செயலாளர் இறையன்புவிடம் புகார் கொடுத்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார், அவருக்குக் கீழ், மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த மனீஷ் நரவானே என்கிற மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. மேலும் தான் வடமாநிலத்தில் உள்ள ஜைனக் கோயிலுக்குப் போனபோதும் கூட அப்படி அவர் திட்டியதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார் மனீஷ். இது தொடர் பான புகாரை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிரங்கமாகப் பதிவிட்டவர், பின்னர் சிலரின் தலையீட்டால் அதை நீக்கிவிட்டார். கோட்டை வட்டாரத்தைப் பரபரப்பாக்கி வரும், இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இடையில் வடமாநிலக் குழு, தமிழ்நாட்டுக் குழு என்று இரு குழுக்கள் இயங்கி வருவதாகவும், இவற்றுக்கிடையில் நடக்கும் உரசல்களின் வெளிப்பாட்டில் இதுவும் ஒன்று என்றும் கூறுகிறார்கள்.''