கைதிகளுக்கான அடிப்படை உரிமைகள்- நீதிமன்ற வழி காட்டுதல்களை கவனிக்காமல் ஜெயராஜ் - பென்னிக்ஸை குற்ற விசாரணை முறைச் சட்டம் (CrPC) மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக ரிமாண்ட் செய்த, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய புரபோஷனல் காங்கிரஸ் கமிட்டி பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘இருவரும் சாத்தான்குளம் போலீசாரால் ஜூன் 20-ம் தேதி காலை 11.45 மணிக்கு, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் வீட்டு வாசல் கதவருகே ஆஜர் படுத்தப்பட்டு, கோவில்பட்டியில் ரிமாண்ட் செய்ய போலீசார் வலியுறுத்தியுள்ளனர். அதனை ஏற்று இயந்திரத்தனமாக செயல்பட்ட மாஜிஸ்ட்ரேட் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு, குற்றுயிரான இருவரையும் இரவோடு இரவாக மாஜிஸ்ட்ரேட்டிடம் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி சிறைக்கு கொண்டு போனதாக தகவல் பரவி வந்த நிலையில், இந்த மனுவில், பகல் 11.45 மணிக்கு மாஜிஸ்ட்ரேட் ரிமாண்ட் செய்தார் என்றிருக்கிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் பிரகாஷ் அமர்வு பதிவு செய்த போலீஸ் குறிப்பில், மதியம் 2.30 மணிக்கு ரிமாண்ட் செய்ததாக உள்ளது.
அப்பா-மகன் இருவரும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சாத்தான்குளம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு எப்போது பரிசோதிக்கப்பட்டனர்? எப்போது மாஜிஸ்ட் ரேட்டிடம் ஆஜர் செய்யப்பட்டனர்? கோவில்பட்டி கிளைச்சிறையில் எப்போது அடைக்கப்பட்டனர்? என்ற கேள்விகள் எழுகின்றன.
ஜூலை 1 அன்று திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு விசாரணைக்கு வந்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் விண்ணிலா, "சம்பவத்தன்று ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் ஜூன் 20 காலை 7.30க்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தது இன்ஸ் பெக்டர் ஸ்ரீதர், போலீசாரான சாமத்துரை மற்றும் முத்துராஜ். சிறிது நேரத்தில் எஸ்.ஐ-க்கள் அங்கு வந்தாங்க. அப்பவே தெரியும் சகட்டு மேனிக்கு அடித்து உதைத்திருக்கின்றார்கள். இருவரும் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு, வியர்வை சொட்ட சொட்ட இருந்தார்கள். இருவருக்கும் ரத்த அழுத்தம் கூடியிருந்தது. 9.30 மணி வரை Non communicable disease Test எடுக்கப்பட்டது. அவர்களை அப்படியே விட்டால் உயிர் பிழைப்பது கடினம். அதனால் அங்கேயே தங்கி சிகிச்சை எடுக்கனும்னு கூற, இல்லையில்லை ரிமாண்டிற்கு அனுப்பனும்னு உடனே அனுப்ப சொன்னாங்க.
எனக்கு கோபம் வந்து, ""நான் டாக்டரா..? நீங்க டாக்டரா''ன்னு கேட்க, டேபிள் பக்கம் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர், ""அடுத்த மாசம் உனக்கு கல்யாணம்னு சொன்னாங்க.. நாங்க போலீஸ்ம்மா... ஒண்டியா நாகர்கோவிலிலிருந்து வந்து போறதை ஞாபகம் வச்சிக்கிட்டு, அவங்களை அனுப்பி வைன்னு'' சினிமா வில்லன் மாதிரி மிரட்ட ஆரம்பிச்சாரு. எஸ்.ஐ-க்களும் அழுத்தம் கொடுத்தாங்க. நான் பணியலை. அப்பத்தான் என்னுடைய உயரதிகாரியான டாக்டர் ஆத்திக்குமார் எனக்கு போன் செய்து, ""நல்லா இருக்காங்கன்னு ரிப்போர்ட் கொடுன்னு சொன்னார். வேற வழியில்லாமல் ரிப்போர்ட் கொடுத்து அனுப்பி வைச்சேன். அப்பக்கூட கொஞ்ச நேரம் அவங்களை உட்கார விடுங்க. பிரஷர் குறைந்ததும் கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன். அதையும் கேட்கலை'' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு, கையோடு கொண்டு வந்த ஒரு பக்க குறிப்பையும் கொடுத்துள்ளாராம்.
பகல் 11.30 மணிவாக்கில் மருத்துவமனை ஃபார்மாலிட்டிகள் முடிந்து, 11.45 அளவுக்கு சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியான சரவணன் முன்னிலையில் இருவரும் ஆஜர் படுத்தப்பட்டனர். கொரோனாவைக் காரணம் காட்டி, அருகிலுள்ள சிறைகளைத் தவிர்த்து 110 கி.மீ. தொலைவிலுள்ள கோவில்பட்டி சப் ஜெயிலுக்கு பகல் 2.30 மணிக்கு கொண்டு சென்று ரிமாண்டு செய்துள்ளனர்.
இருவரின் உடலிலும் காயங்கள் இருப்பதையும், மருத்துவமனை ஃபிட்னெஸ் சர்டிபிகேட் வேறு மாதிரி இருப்பதையும் கவனித்த கோவில்பட்டி ஜெயிலர், சாத்தான்குளம் போலீசாரிடம் இது என்ன கேஸ் என்று கேட்டிருக்கிறார். ""இவனுக போலீசையே அசால்ட் பண்ண வந்தவனுக'' என்று சொல்லியிருக் கிறார்கள் சாத்தான் குளம் போலீசார். ஏனெனில் சப் ஜெயில்களில் கைதி களின் குற்றத் தன் மைக்கேற்ப அவர் களை வகைப் படுத்தி செல்லில் அடைப்பார்கள்.. அத னால், தந்தையும், மகனும் பிற கைதிகளின் தொடர்பின்றி ஒதுக்கியே வைக்கப்பட்டனர். அடிப்படை உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டதும் அவர்களின் உயிரைப் பறிக்க காரணமாகிவிட்டது.
நாம் இதுகுறித்து கோவில்பட்டி சப் ஜெயிலின் கண்காணிப்பாளர் சங்கரைத் தொடர்பு கொண்டதில், பலமுறை ரிங் போன பிறகே மறுமுனையில் தொடர்பு கொண்டவர், சார் மீட்டிங் போயிருக்கிறார் எப்ப வருவார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டுப் போனைத் துண்டித்துக் கொண்டார்.
-பரமசிவன், நாகேந்திரன், ராம்கி
படங்கள் : ப.இராம்குமார்