தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியை நடிகர் விஜய் துவக்கியபோதே, அவரது கொள்கைகள் என்ன? அரசியல் நிலைப்பாடு என்ன? யாரை எதிர்த்து அரசியல் செய்வார்? என்றெல்லாம் கடும் விமர்சனங்கள் வலுவாக எழுந்தன. விக்கிரவாண்டியில் நடத்திய கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அதனை கர்ஜித்திருக்கிறார் விஜய்.
பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க.வின் கொள்கை எதிரி என்று பா.ஜ.க. வையும், மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள்; என்று தி.மு.க.வையும் நேரடியாக அட்டாக் செய்து தனது அரசியல் பாதை எது என்பதை ஆக்ரோஷமாகச் சொல்லியிருக்கிறார் விஜய்.
விஜய்யின் தாக்குதல் தமிழக அரசியலில் ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து தி.மு.க. தலைமை பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரிய வில்லை. விஜய்யின் தாக்குதல் குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்கப்பட்டபோது, "அவரது பேச்சை கேட்கவில்லை; முழுமை யாகக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்''’என மிகச் சாதாரணமாக கடந்து செல்கிறார் அவர்.
அதேசமயம், தி.மு.க.வைத் தாக்கிய வேகத் தை பா.ஜ.க.வை தாக்குவதில் காட்டவில்லை என்கிற விமர்சனமும் தி.மு.க. முகாம்களில் எதிரொலிக்கச் செய்கிறது. இது குறித்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளிடம் கேட்டபோது, "இன்றைய சூழலில் தமிழகத்தில் வலிமையான பலம் பொருந்திய கட்சி தி.மு.க.தான். ஆளும் கட்சியாகவும் இருப்பதால் அதன் பலம் மிருக பலமாக இருக்கிறது. அந்த வகையில் அதனை வீழ்த்த தனது சக்தியில் 80 சதவீதத்தை தி.மு.க. வுக்காக பயன்படுத்தியிருக்கிறார். அதேசமயம், தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் செல்வாக் கும் அப்படியொன்றுமில்லை. அதனால், பா.ஜ.க. வின் அடிப்படை அரசியலான மதவாதம், பிளவு வாதம் என்பதை முன்னிறுத்தி தாக்கி னாலே போதும் என திட்டமிட்டு 20 சதவீத தாக்குதலை பா.ஜ.க. பக்கம் திருப்பியிருக்கிறார்'' என்று விவரிக்கின்றனர் விஜய் கட்சி நிர்வாகிகள்.
இதுகுறித்து, அரசியல் வியூக வகுப்பாளர் கள் சிலரிடம் விவாதித்தபோது, "தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் அவர் தாக்கியிருப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. காரணம், மாநிலத்தில் தி.மு.க.வும், மத்தியில் பா.ஜ.க.வும் ஆளும் கட்சி களாக இருக்கின்றன. அவைகளைத் தாக்கினால் தான் ஓட்டு விழும். ஓட்டு அரசியலுக்காக அவர் கையாளும் யுக்தி இது. மற்றபடி கொள்கை சார்ந்து எந்தளவுக்கு தனது கட்சியை நீண்ட காலத்துக்கு அவர் வழிநடத்திச் செல்ல முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்'' என்கின்றனர். இதற்கிடையே, மாநாட்டில் பிர கடனப்படுத்தப்பட்ட முக்கியமான கொள்கை களில் தமிழக அரசியலுக்குப் புதிதாக ஏதேனும் இருக்கிறதா? என ஆராய்ந்தால் அப்படி யொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
மதவாத அரசியல் எதிர்ப்பு, லஞ்ச-ஊழல் எதிர்ப்பு, மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி, பிரதிநிதித்துவ இடஒதுக்கீடு, மகளிர் உரிமை, பெண் கல்வி, மகளிர்களுக்கு கட்சி யிலும் அதிகாரத்திலும் போதிய பிரதிநிதித் துவம், ஆளுநர் பதவிக்கு எதிர்ப்பு, இரு மொழிக் கொள்கை, அண்ணாவின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதெல்லாம் ஏற் கனவே தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் முன்னிறுத்துபவைதான். திராவிட கட்சிகளின் கொள்கைகளை மறுபிரசுரம் செய்திருப்பதைக் கடந்து புதிதாக ஏதுமில்லை. அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் கர்ஜிப்பவை தான். விஜய்யும் அதற்கு விதிவிலக்கல்ல!
இப்படி கொள்கை சார்ந்த விசயங்களை முன்னிலைப்படுத்தினால் மட்டுமே வாக்குகள் விழுந்துவிடுமா? வெற்றி கிடைத்திடுமா? என்கிற சந்தேகமும் விஜய்யிடம் ஆக்ரமித்திருந்தது. இதுகுறித்து கட்சி தலைமைக் கழக நிர்வாகி களிடம் விவாதித்திருக்கிறார் விஜய்.
அப்போது முன்வைக்கப்பட்ட திட்டம் தான், தி.மு.க. கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பது. அதாவது, தேர்தல் அரசிய லில் தி.மு.க.வுக்கு வலிமை சேர்ப்பதில் முக்கியப் பங்கு கூட்டணிதான். தற்போதைய சூழலில், தி.மு.க.விடம் மட்டுமே கூட்டணி வலுவாக இருக் கிறது. அந்த கூட்டணியை உடைப்பதன் மூலம் தான் தி.மு.க.வை பலமிழக்கச் செய்ய முடியும். கூட்டணியை உடைக்க என்ன செய்வது? எதைச் செய்தால் கூட் டணி உடையும்? என ஆராய்ந்த போது விஜய் யிடம் சொல்லப் பட்டது… அதிகாரத்தில் பங்கு; கூட்டணி ஆட்சி என்கிற அஸ்திரம்தான்.
கூட்டணியாக இணைந்து ஜெயிக்கிறோம்; ஆனால், ஆட்சியில் மட்டும் பங்கு இல்லையா? என்கிற குரல் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிட மிருந்து வருவதை உணர்ந்த விஜய், கூட்டணி ஆட்சியைப் பிரகடனப் படுத்தியிருக்கிறார். தமிழக அரசியலுக்கு இது புதிது.
கூட்டணி ஆட்சி குறித்து இப் போது அறிவித்திருக்கத் தேவை யில்லை என்று சொல்கிற தமிழக அரசியல் விமர்சகர்கள், தி.மு.க. கூட்டணியை பலமிழக்கச் செய் வதற்காக கூட்டணி ஆட்சி என்கிற குண்டை விஜய் வீசியிருப்பதைத் தாண்டி வேறு எந்த வியூகமும் அதில் இல்லை. இதனை தேர்தல் நெருக்கத்தில் செய்திருந்தால், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இப்போது சொல்லியிருப்பதால், தோழமைக் கட்சிகளை தக்கவைத் துக் கொள்ள தி.மு.க. இப்போதே திட்டமிடும். தோழமைக் கட்சிகளை எப்படி தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்கிற வியூகம் 60 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்ற ஸ்டாலினுக்குத் தெரியும்.
அந்த வகையில், தி.மு.க.விடம் சீட் பேரத்தை அதிகரித்துக்கொள் ளும் ஒரு வாய்ப்பினை கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துள்ளது விஜய்யின் முடிவு. அவர் வீசிய இந்த அஸ்திரத்தால், விஜய்க்கு லாபம் இருக்கிறதோ இல்லையோ தி.மு.க. வின் கூட்டணிக் கட்சி களுக்குத்தான் இருக் கிறது. கூட்டணி ஆட்சி என சொல்லிவிட்டால் மட்டுமே விஜய்யை நோக்கி தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் வந்து விடுமா... வராது. முதலில், தி.மு.க.விடம்தான் தனது பேரத்தை தோழமைக் கட்சிகள் துவக்கும். அதில் முரண்பட்டால் மட்டுமே விஜய்யை நோக்கி வருவதற்கு வாய்ப்பு உண்டு. அதேசமயம், அ.தி.மு.க.வும் இதே கான்செப்ட் டை கையிலெடுத்தால் விஜய்யின் அஸ்திரம் செயலிழந்தும் போகும்''’என்கிறார்கள்.
முதல் மாநாடு என்கிற அளவில் கூட் டத்தைத் திரட்டிக் காட்டியிருப்பதில் விஜய் வெற்றிபெற்றிருந்தாலும், கடந்த 6 மாதங்களாக அவர்கள் கட்டி எழுப்பிய ஹைப்புக்கேற்ப கூட்டம் கூடவில்லை என்கிற விமர்சனமும் இருக்கிறது. மேடைக்கு எதிரே 60 ஆயிரம் நாற்காலிகள்; வெளியே அதே அளவு கூட்டம் என்றாலும் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள் என்றே கூட்டத்தை மதிப்பிடுகின்றனர். ஆனால் கூட்டத்திற்கு ஆள் திரட்டி வர, ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஒருவாரம் முன்பே பணம் வழங்கப்பட்டுவிட்டது என்ற பேச்சும் நிலவியது. மேலும் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு க்யூஆர் கோடு மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டது. விஜய் கலந்துகொள்ளும் மாநாடு என்பதால் பிரமாண் டப்படுத்த முடிந்தது. அதற்கேற்ப கட்சித் தலை மையும் செலவுகளைப் பார்த்துக்கொண்டது.
மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பொதுக்கூட்டத்திற்கும் இதே ஹைப் கிடைக்குமா? கூட்டம் சேருமா? என்பதைச் சொல்லமுடியாது என்பது ஒருபுறமிருந்தாலும், பிரமாண்டமாக மாவட்ட பொதுக்கூட்டங்களை நடத்தும் அளவுக்கு த.வெ.க.வில் தலைவர்கள் இருக்கிறார்களா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.