இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான "800'-ல் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எட்டு திசை களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. டைரக்டர்கள் பாராதிராஜா, சேரன், சீனு ராமசாமி ஆகியோர் இனத்துரோகியின் வரலாற்றுப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்றனர்.
கி.வீரமணி, டாக்டர்.ராமதாஸ், தொல்.திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்கள், விஜய் சேதுபதி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் சரத்குமார், ராதிகா, குஷ்பு போன்ற சினிமா பிரபலங்கள் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இன்னும் சில சினிமா பிரபலங்களும் வி.சே.வுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருந்தாலும் அரசியல் நிலவரம் அவர்களை அச்சுறுத்தியது.
அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் வி.சே.வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து மோதல்கள் நடந்தன. ‘கொடுங்கோலன் ராஜபக்சேவின் பினாமியான சுபாஷ்கரன் அல்லிராஜா, விஜய்யை வைத்து "கத்தி'’சினிமாவை ஆரம்பித்த போது, ஆவேசமானவர்கள் அடங்கிப் போனார்கள். இப்போது விஜய் சேதுபதியைக் குறி வைத்திருக்கிறார்கள்’என பலரது ஃபேஸ்புக்குகளில் பளிச்சிட்டது.
இதையெல்லாம் பார்த்து குழம்பிப் போனார் விஜய் சேதுபதி காரணம். படத்தை தயாரிக்கும் மும்பையைச் சேர்ந்த ‘டார்’(DAR MEDIA)மீடியா நிறுவனம் வி.சே.வுக்கு 11 சி சம்பளம் பேசி, பெரு மளவுத் தொகையை அட்வான்சாக கொடுத்திருந் தது. தனது படங்கள் சிலவற்றின் நட்டத்தினை ஏற்றுக் கொண்ட வகையிலும் சொந்தப் படமான "லாபம்' படத்தில் போட்ட பணம் முடங்கியுள்ளதால் ரொம்பவே சிரமத்தில் இருந்தார் வி.சே. இந்த நேரம் "800' பட சம்பளம் பெரிய உதவியாக இருக்கும் என நினைத்துதான் வி.சே.வுக்கு குழப்பம்.
தயாரிப்பு நிறுவனமான டார் மீடியாவின் தலைமையகம் மும்பை என்றாலும், அதன் சி.இ.ஓ.வான ஆச்சார்யாவுக்கு பூர்வீகம் ஸ்ரீரங்கம் என்பதால், திருச்சியில் கோலோச்சும் ஆளும் கட்சி பவர் புள்ளி மூலம் வி.சே.வை சமாதானப்படுத்தி னார் ஆச்சார்யா. மெகா ஸ்டார்களின் படங்களை மொத்தமாக விலை பேசும் பிஸ்னசையும் ஆரம்பித்துள்ளார் அந்த பவர் புள்ளி. அதனால், திரைத்துறைக்குள்ளும் கெத்து காட்டுகிறார்.
ஒரு வருடத்திற்கு முன்பே 800 படத்தின் வேலைகள் ஆரம்பித்த போது முத்தையா முரளி தரனும் விஜய் சேதுபதியும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளார்கள். இப்போது தன்னைக் குறிவைத்து பந்து எறியப்படுவதால், ஒரு முடிவுக்கு வந்தார் வி.சே. துபாயில் நடக்கும் ஐ.பி.எல். மேட்சில், சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருக்கும் முத்தையா முரளிதரனைத் தொடர்பு கொண்டு, தனக்கு எதிராக கிளம்பிருக்கும் தமிழக நிலவரத்தை விளக்கியுள்ளார் வி.சே.
அதன்பின்தான் முத்தையா முரளிதரனிடமிருந்து உருக்கமான அறிக்கை வெளியானது. ""ஐ.பி.எல். மேட்ச் முழுவதுமாக முடிந்த பின், நேரில் வந்து உங்களை சந்திக்கிறேன், மிக அவசரம் எனில் உடனே சென்னைக்கு கிளம்பி வந்து இருவரும் மீடியாவை சந்திப்போம்’’ என்றிருக்கிறார் முத்தையா. இப்போதைக்கு வேண்டாம்'' என மறுத்திருக்கிறார் வி.சே.
இந்த நிலையில் ராஜஸ்தானில் நடந்து கொண்டிருந்த "அனெபல் சுப்ரமணியம்' படத்தின் ஷூட்டிங் பிரேக்கில் கடந்த வாரம் சென்னை திரும்பினார் வி.சே. தனக்கு நெருக்கமானவர்களிடம் இங்கிருக்கும் நிலவரத்தை தெரிந்து கொண்டு, "800' படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, பிரச்சனைக்கு இடைவேளை விடலாம் என்ற முடிவுக்கு வந்து, மீண்டும் முத்தையாவை தொடர்பு கொண்டார்.
கடந்த 19-ஆம் தேதி முத்தையாவிடமிருந்து இரண்டாவது அறிக்கை வெளியானது. "ஒரு கலைஞனின் எதிர்கால நெருக்கடிகளைக் கருதி இப்படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதியைக் கேட்டுக் கொள்கிறேன்'’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்ட முத்தையா, இந்த தடைகளையும் கடந்து இத்திரைப்படம் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கைக்கு உடனே ரியாக்ட் பண்ணிய வி.சே., தனது ட்விட்டரில் ‘நன்றி வணக்கம்’ என ஒற்றை வரியில் ஷட்டரை மூடிவிட்டார். ஆனால் அதே 19-ஆம் தேதி மாலை இலங்கை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வி.சே. பேட்டி கொடுத்த ஆடியோ ஒன்று சில வாட்ஸ்-அப் குரூப்புகளில் ரிலீஸ் ஆகி குழப்பியது. படத்தில் நடிப்பது உறுதி என விஜய்சேதுபதி பேசியிருந்த ஆடியோவின் அடிப்படையில் டி.வி. சேனல்களிலும் செய்திகள் வெளியாயின.
இது எப்படி நடந்தது என வி.சே.வின் பி.ஆர்.ஓ. யுவராஜிடம் கேட்ட போது, ""ஒரு வருசத்துக்கு முன்னால "சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு விருது வாங்க ஆஸ்திரேலியா போன போது கொடுத்த நேரடி பேட்டி அது'' என்றார். அப்போதும் 800 பற்றிய சர்ச்சை இருந்ததால், படத்தில் நடிப்பது உறுதி எனத் தெரிவித்திருந்தார் விஜய்சேதுபதி. அது, இப்போது வரை வளர்ந்து இந்தளவுக்கு சர்ச்சையையும் எதிர்ப்பையும் கிளப்பும் என அவர் எதிர்பார்க்கவில்லை.
அரசியல் தலைவர்கள்- தமிழுணர் வாளர்கள் தந்த நெருக்கடிக்கிடையில், முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் தனது விலகலை விஜய்சேதுபதி அறிவித்த இந்த நிலையில்தான், சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தான் ஒரு அநாகரீகப் பேர்வழி. இதனால் ரொம்பவே வேதனைப்பட்ட விஜய் சேதுபதி, ""எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?'' என தனது நட்பு வட்டத்திடம் வருந்தி யுள்ளார். இந்த வேதனையுடன், 19-ஆம் தேதி மாலை முதல்வர் எடப்பாடியின் இல்லத்திற்குச் சென்று அவரது தாயா ரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி. எடப்பாடியும் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அஞ்சலி செலுத்திவிட்டு வந்த வி.சே.விடம் மீடியாக்கள் மைக்கை நீட்டிய போது, ""நன்றி வணக்கம்னு ட்வீட் பண்ணினாலே எல்லாம் முடிஞ்சு போச்சு. இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை'' என வேதனை குறையாமல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
அநாகரீகப் பேர்வழியின் ஆபாச மிரட்டலுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, தே.மு.தி.க பிரேமலதா, சி.பி.எம்.மின் உ.வாசுகி உட்பட அரசியல் பிரபலங்களும் ராஜ்கிரண், டைரக்டர் அமீர் போன்ற சினிமா பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அந்த ட்விட் போட்டவன் மீது உடனே ஆக்ஷன் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
சோஷியல் மீடியாவில் இருக்கும் சில சமூகநீதிப் போராளிகளிடம் நாம் பேசிய போது, ""தங்களுக்கு எதிரான கருத்துள்ள அல்லது தங்களுக்குப் பிடிக்காத அரசியல், சினிமா, கிரிக்கெட் பிரபலங்களின் குடும்ப பெண்களைப் பற்றியோ, பெண் குழந்தைகளைப் பற்றியோ ஆபாசமான, அருவறுக்கத் தக்க கமெண்டுகளைப் போடுவதையே பிழைப்பாக வைத்திருக்கின்றன சில அரசியல் கட்சிகள். சில நாட்களுக்கு முன்பு சி.எஸ்.கே. கேப்டன் தோனியின் மகள் குறித்தும் இப்படித்தான் ஆபாசமாக பதிவிட்டார்கள். பெண் எம்.பிக்கள், பெண் எம்.எல்.ஏக்கள், மாற்றுக் கருத்து தெரிவிக்கும் ஆண்கள் என்றால் அவர்கள் வீட்டுப் பெண்கள் என வக்கிர மாக எழுதுவதே இந்தக் கும்பலின் வேலையாக உள்ளது.
இப்போது விஜய் சேதுபதியின் மகளை ஆபாசமாக மிரட்டியுள்ளது அந்தக் கும்பல். தமிழக போலீசில் இருக்கும் சைபர் க்ரைம் நினைத்தால், அவர்களை ஒடுக்கிவிடலாம். ஆனால் சைபர் க்ரைமோ ஜீரோ லெவல் திராணியுடன்தான் இருக்கிறது. முதல்வரால்கூட வி.சே.வுக்கு ஆறுதல்தான் தெரிவிக்க முடிகிறது. தனது இலாகாவான காவல்துறை மூலமாக அதிரடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை'' என ஆதங்கப்பட்டனர்.
தனிப்பட்ட தனது வேதனை தொழிலை பாதித்துவிடக் கூடாது என்பதால், தனது அடுத்தடுத்த படங்களின் வேலை களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் விஜய் சேதுபதி.
சுழல் பந்துவீச்சாளரின் வாழ்க்கைக் கதை, சினிமா நடிகரின் தொழிலை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் சேர்த்து சுழற்றி அடிக்கிறது. சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் இந்த வக்கிரத் தாக்குதல் எனும் சுழற்பந்து தனது எல்லையைக் கடந்து மிக ஆபத்தான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
-ஈ.பா.பரமேஷ்வரன்