அ.தி.மு.க.வின் பொதுக்குழு 23-ந் தேதி கூடுகிறது என்று அறிவிக்கப் பட்டதில் இருந்தே அக்கட்சிக்குள் நிறைய பரபரப்புகள். இதனால் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டியவைகளை முடிவு செய் வதற்காக, நடத்தப்பட்ட ஆலோ சனைக் கூட்டத்தில், ’"கட்சியில் ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும்'’ என்று எடப்பாடி ஆதர வாளர்கள் திடீரென வலியுறுத்த, அதனை ஓ.பி.எஸ். எதிர்க்க, கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோணங்களில் இந்த பஞ்சாயத்து இரு தரப்பிலும் எதிரொலித்தபடி இருக்கிறது. இதனால் "அ.தி.மு.க. மீண்டும் உடைகிறதா? இரட்டை இலை முடக்கப்படுமா? ஜெயிக்கப் போவது யார்?' என் றெல்லாம் விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதால் தமிழக அரசியலில் அ.தி.மு.க. பஞ்சாயத்துதான் ஹை-லைட். "இரட்டைத் தலைமைக்கு மாறாக ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை உருவானதன் மையப்புள்ளி எது? ஏன்? எதற்கு?' என்பது குறித்து பல உள் தகவல்கள் கிடைத்தன.
மோடியிடம் ஒற்றைத் தலைமைக்கு ஏங்கிய ஓ.பி.எஸ்!
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, டெல்லிக்கு திரும்பித் செல்லும்போது எடப்பாடியையும் பன்னீரையும் ஏர்போர்ட்டுக்கு வரவழைத்துப் பேசினார். அதில் தமிழக அரசியல் சூழல், தி.மு.க.வின் ஆட்சி நிர்வாகம் குறித்தெல்லாம் பேசி, தி.மு.க.வுக்கு எதிரான அரசியலை வேகப்படுத்த வேண்டும் என அட்வைஸ் செய்துவிட்டு அவர்களை கிளம்பச் சொன்னார் மோடி. எடப்பாடி கிளம்பிவிட, பன்னீர் மட்டும் மோடியிடம் தனியாக பேச விரும்பி, அதனை அவரிடம் சொல்ல, அதற்கு அனுமதி கிடைத்தது. மோடி, ஓ.பி.எஸ்., அண்ணாமலை, சி.டி.ரவி ஆகிய 4 பேர் மட்டும் 20 நிமிடம் பேசினர். அதில், "கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான்; ஆனா, எனக்கு எந்த மரியாதையும் அதிகாரமும் இல்லை. அ.தி.மு.க.வில் நான் இணைந்தபோது, "ஆட்சி அவரிடமும் (எடப்பாடி) கட்சி என்னிடமும் இருக்கும்' என சொல்லப்பட்டது. ஆனா, அப்படி எதுவும் நடக்கவில்லை. கட்சியில் நடப்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும்.
தி.மு.க.வை எதிர்க்கணும்னா அ.தி.மு.க. வலிமையாக இருக்கவேண்டும். வலிமையாக இருக்கணும்னா கட்சி ஒற்றைத் தலைமையில் இயங்கவேண்டும். அந்த ஒற்றைத் தலைமை என்னிடம் இருக்கவேண்டும். ஒற்றைத் தலைமையில் அ.தி.மு.க. இயங்கினால்தான் கட்சி வலிமையாக இருப்பதாக மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கை வரும். அதற்கு நீங்கள் உதவி செய்யுங்கள்'' என கேட்டுக்கொண்டார் ஓ.பி.எஸ். வலிமையாக உள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதுதான், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு லாபம் என மோடி ஏற்கனவே திட்டமிட்டிருப்பதால், ’"ஓ.கே. நான் பார்த்துக் கொள்கிறேன்'’ எனச் சொல்லி ஓ.பி.எஸ்.சை அனுப்பி வைத்தார் மோடி.
எடப்பாடி-குருமூர்த்தி திட்டம்!
மோடி-ஓ.பி.எஸ். சந்திப்பில் நடந்த ஏர்போர்ட் ரகசியத்தையறிந்து டென்ஷன் ஆனார் எடப்படி பழனிச்சாமி. ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து விவாதித்தார். எடப்பாடிக்காக களமிறங்கிய ஆடிட்டருக்கு, சிலபல பகீரத முயற்சியில் மோடியிடமும் அமித்ஷாவிடமும் பேசும் வாய்ப்புக் கிடைக்க, எடப்பாடிக்கு ஆதரவாக காய்களை நகர்த்தியிருக்கிறார். இது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட எடப்பாடிக்கு நெருக்கமான மூத்த தலைவர் ஒருவர், ‘"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவை சில புள்ளிவிபரங்களோடு டெல்லியிடம் விவரித்த ஆடிட்டர், ஒற்றைத் தலைமைக்குள் அ.தி.மு.க. வருவது அவசியம். அந்த தலைமை எடப்பாடி பழனிச்சாமியாக இருப்பதுதான் பா.ஜ.க.வுக்கு நல்லது. பழனிச்சாமிக்குத்தான் கட்சியில் 90 சதவீத ஆதரவு இருக்கிறது. இதை மறுத்துவிட முடியாது. அதேசமயம், அ.தி.மு.க.வை பலகீனமாக்கினால்தான் அது பா.ஜ.க.வுக்கு லாபம் என டெல்லிக்கு தெரிவிக்கிற தகவல்களில் உண்மையில்லை. காரணம், பா.ஜ.க.வுக்கு லாபம் கிடைக்கிற அளவுக்கு மக்களிடம் தமிழக பா.ஜ.க. போய்ச்சேரவில்லை. அதனால் அ.தி.மு.க.வின் பலகீனம் தி.மு.க.வுக்குத்தான் லாபம். இந்தச் சூழலில் ஒற்றைத் தலைமையில் எடப்பாடியிடம் அ.தி.மு.க. இருப்பதுதான் சரியாக இருக்கும்' என விவரிக்க, அதனை மோடியும் அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, அ.தி.மு.க. வின் சீனியர்களிடம் சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார் எடப்பாடி. அந்த பின்னணிகள்தான் அ.தி.மு.க.வில் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன” என்றார் அவர்.
அ.தி.மு.க. யார் வீட்டு சொத்துமல்ல!
"ராஜ்யசபா தேர்த லுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து அ.தி.மு.க.வில் நடந்த ஆலோசனையில், மாஜி அமைச்சர்களான கட்சியின் சீனியர்களுக்கு வாய்ப்பளித்தால் டெல்லியில் அரசியல் லாபியை செய்ய வசதியாக இருக்கும் என திட்டமிட்டு சி.வி.சண்முகத் துக்கும், ஜெயக்குமாருக்கும் சிபாரிசு செய்தார் எடப்பாடி. ஆனால், "ஒரு சீட்டை உங்கள் ஆதரவாளர்களுக்கு கொடுத்துவிடுங்கள்; மற்றொரு இடத்தை என் ஆதரவாளருக்கு வேண்டும்' என வலியுறுத்தினார் ஓ.பி.எஸ். 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் தங்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக ஓ.பி.எஸ். மீது, ஏற்கனவே காட்டமாக இருந்த சி.வி. சண்முகம், "ஆளுக்கு ஒரு சீட் என பங்கு போட்டுக்கொள்ள அ.தி.மு.க. யார் அப்பன் வீட்டு சொத்துமல்ல. கட்சிக்கு எது நல்லதோ அதற்கேற்ப தகுதியானவர்களை எம்.பி.யாக்குங் கள்' என்று கோபம் காட்டினார். அப்போதே நிறைய களேபரம் நடக்க... பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, ஓ.பி.எஸ். ஆதரவாளருக்காக ஒரு சீட்டை ஒதுக்கினர். இந்த ஆலோசனையில் காயம்பட்டிருந்த ஓ.பி.எஸ்., மே 26 -ந்தேதி சென்னை வந்த மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்து, அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஒற்றைத் தலைமை பிரச்சினையை வலியுறுத்தினார். இதனை அறிந்த எடப்பாடி, அதே ஒற்றைத் தலைமையை கைப்பற்ற ஆடிட்டர் மூலம், ஓ.பி.எஸ்.சுக்கான டெல்லி ஆதரவை கட் பண்ணவைத்தார்' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.
பொதுக்குழுவின் பின்னணி!
பா.ஜ.க. மேலிடத்தின் ஆதரவை பெற்ற நிலையில் அதனை கே.பி. முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களிடம் மட்டும் எடப்பாடி பகிர்ந்துகொள்ள, "இரட்டைத் தலைமையால்தான் அ.தி.மு.க. பலகீனமாக இருக்கிறதாக தொண்டர்கள் நினைக்கிறாங்க. அதனால், தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என்றும், நாங்கதான் வலிமையான எதிர்க்கட்சி என்றும் அண்ணாமலை சொல்லிக்கிட்டிருக்கார். அதனால, பா.ஜ.க. அரசியலையும் ஒழிக்க வேண்டும். அதனால், ஒற்றைத் தலைமையை அ.தி.மு.க.வில் கொண்டுவருவதுதான் சரி. பா.ஜ.க. தலைமையின் ஆதரவை வைத்தே பா.ஜ.க. அரசியலை ஒழிப்பதோடு, ஓ.பி.எஸ்.சையும் ஓரங்கட்டி விடலாம்' என விவாதித்துக்கொண்டனர். அதனால், "இனியும் பொறுக்க வேண்டாம் ; பொதுக்குழுவைக் கூட்டி முடிவை எடுத்து விடுவோம். பொதுக்குழுவிலும், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்களிடமும் 99 சதவீதம் நமக்குத்தான் ஆதரவு. இந்த பெரும்பான்மையை வைத்து எதையும் சாதிக்க முடியும். அதனால், ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் வகையில் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்க சட்டத் திருத்தம் செய்யலாம்' என்றும் ஆலோசித்தனர்.
மேலும், இரட்டைத் தலைமைக்காக திருத்தப்பட்ட அ.தி.மு.க.வின் சட்டவிதிகளில் ஏதேனும் சிக்கல் எழுமா என்றும் ஆராய்ந்தனர். இந்த சூழ்ச்சியை அறியாமல், பொதுக்குழுவை கூட்டுவதற்கு சம்மதித்தார் ஓ.பி.எஸ். அதற்காக இருவரும் கூட்டாக பொதுக்குழு தேதியை (ஜூன் 23) அறிவித்தனர். இதனையடுத்து, "பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்' என சொல்லி கட்சியின் சீனியர்கள் மற்றும் மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டினார் எடப்பாடி. அந்த கூட்டத்தில்தான், எடப்பாடியின் சூழ்ச்சியை அறிந்துள்ளார் ஓ.பி.எஸ். அதாவது, அங்குதான் ஒற்றைத் தலைமை பிரச்சனையை தனது ஆதரவாளர்கள் மூலம் கிளப்பினார் எடப்பாடி.
ஓ.பி.எஸ்.சை கைவிட்ட பா.ஜ.க!
"ஒற்றைத் தலைமையை பிரதமர் மோடியிடம் தனக்காக பேசி வைத்திருந்த நிலையில், எடப்பாடி தரப்பு எந்த பின்னணியில் இதையே கையிலெடுக்கிறது' என குழம்பிப் போனார் ஓ.பி.எஸ். அதனால் அந்த கூட்டத்தில், "இரட்டை தலைமையே தொடரவேண்டும்' என பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பிப்போன அவர், டெல்லியை தொடர்புகொள்ள, தொடர்பு கிடைக்கவில்லை. நீண்ட முயற்சிகளுக்கு பிறகு பா.ஜ.க. மேலிடத்தின் தொடர்பு கிடைக்க, "நீங்க ஒத்துழையுங்கள்; மற்றதை அப்புறம் பேசிக்கலாம்' என சொல்லி தொடர்பை துண்டித்துக்கொண்டது டெல்லி. இதனால் ஏகத்துக்கும் அப்-செட்டானார் ஓ.பி.எஸ். இதனையடுத்தே, தனது ஆதரவாளர்களுடன் தனி ஆலோசனை நடத்தினார். அதில், "எந்தச் சூழலிலும் காம்ப்ரமைஸ் ஆகிடக்கூடாது. இதில் காம்ப்ரமைஸானால் நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்' என தூபம் போடப்பட்டது. எடப்பாடியும் இதேபோல ஆலோசனை நடத்த அ.தி.மு.க.வுக்குள் மோதல்கள் வெடித்தபடி இருக்கின்றன.
மகனை மந்திரியாக்குங்கள்!
சட்டமன்றத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் யார் என்ற பஞ்சாயத்திலும், தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற பஞ்சாயத்திலும் எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். மல்லுக்கட்ட, சிலபல பேரங்களில் ஓ.பி.எஸ்.ஸை மடக்கினார் எடப்பாடி. அதேபாணியை இப்போதும் எடப்பாடி கையாள... ஓ.பி.எஸ்.ஸிடம் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தது. இதனை எடப்பாடி ஏற்காததால், தனது எதிர்ப்பினை வலிமையாக்கிவருகிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில்தான், செங்கோட்டையன், தம்பிதுரை இருவரையும் ஓ.பி.எஸ்.சிடம் தூது அனுப்பினார் எடப்பாடி.
ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த தூதுவர்கள், "பொதுக்குழு மட்டுமல்ல கட்சியின் எல்லா நிலைகளிலும் எடப்பாடிக்குத்தான் பெரும் பான்மை இருக்கிறது. எப்படி பிரச்சினை செய்தாலும் உங்களுக்கு லாபம் இல்லை. இதை உணர்ந்து ஒத்துழையுங்கள். உங்களுக்கான மரியாதை கிடைக்கும். அவைத் தலைவர் அல்லது உயர்மட்டக் குழுவின் தலைவர் பதவியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் உங்கள் மகனுக்கு வாய்ப்புத் தரப்படும். அடுத்த முறை பா.ஜ.க. ஆட்சியில் உங்க மகனுக்கு மந்திரி பதவிக்கு கட்சி சிபாரிசு செய்யும்' என சொல்லி யிருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ்.ஸோ, "எனக்கென்ன பிச்சை போடுறீங்களா? அம்மாவால் (ஜெ.) முன்னிறுத்தப்பட்டவன் நான். எடப்பாடியை விட கட்சியில் தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவன் நான்தான்'' என வெடித்த ஓ.பி.எஸ்., "நீங்க சொல்வது உண்மைன்னா, இந்த முறையே என் மகனுக்கு மந்திரி பதவியை வாங்கித் தாருங்கள். முடியாதுல்ல'' என எகிறியிருக்கிறார்.
அப்போது "உங்க மகன் ரவீந்திரநாத், மு.க.ஸ்டாலினை சந்தித்ததுமில்லாமல், தி.மு.க. ஆட்சியை பாராட்டவும் செய்திருக்கிறார். தி.மு.க. நமக்கு எதிரி. உங்க பையன் எப்படி பாராட்டலாம்? உங்க மகன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை? அம்மா இருந்திருந்தா இப்படி நடந்துக்க உங்களால முடியுமா?' என்றெல்லாம் ஓ.பி.எஸ்.ஸை கடிந்து கொண்டிருக்கிறார்கள் தூதுவர்கள்.
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியை, ஓ.பி.எஸ். சந்தித்தது கட்சி விரோத நடவடிக்கை என்று எடப்பாடி கமெண்ட் பண்ணியிருக்கிறார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் எடப்பாடி ஆதரவு சீனியர்கள் புகார் கொடுக்கவிருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றம் போனாலும் கவலை இல்லை, சந்திக்க தயார் என்கிற ரீதியில் தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டவிதிகள் யாருக்கு சாதகம்?
ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக அனைத்தும் அ.தி.மு.க.வில் நடந்துகொண்டிருக்க, மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை வளைக்க அவர்களை தொடர்புகொண்டு பேசிவருகிறார் ஓ.பி.எஸ். இதற்காக கோடிகளை இறக்கியிருக்கிறார் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத். இருப்பினும் அ.தி.மு.க.வில் மொத்தமுள்ள 75 மா.செ.க்களில் 70 பேர் எடப்பாடிக்கும், 5 பேர் ஓ.பி.எஸ்.ஸுக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல 66 எம்.எல்.ஏ. க்களில் 63 பேர் எடப்பாடிக்கு ஆதரவு. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,645 பேரில் சுமார் 250 பேர்தான் ஓ.பி.எஸ்.சை ஆதரிக்கிறார்கள். இதைத்தவிர, கட்சியின் முக்கிய அணிகள் எல்லாமே எடப்பாடிக்கே அதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து சட்ட ஆலோசனைகளை பெற்றிருக்கிறார் ஓ.பி.எஸ்.
"இரட்டை தலைமைக்கான அங்கீகாரத்தை பொதுக்குழு வழங்கியிருப்பதால், பொதுக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானம் எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டால்தான் செல்லுபடியாகும். சட்டப்படி நீங்கள் போராட லாம்' என்று பண்ருட்டியார் ஆலோசனை சொன்னதாக ஓ.பி.எஸ். தரப்பில் சொல்லப் படுகிறது.
ஆனால், "கடந்த வருடம், இரட்டைத் தலைமைக்கான அதிகாரம் குறித்து கட்சியின் சட்ட விதிகளில் 3 திருத்தங்களை செய்து செயற்குழுவில் நிறைவேற்றியிருக்கிறோம். அதற்கு பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்படவில்லை. அப்படியிருக்கும் நிலையில், பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் இருப்பதால் ஒற்றைத் தலைமையை பொதுக்குழுவின் ஆதரவில் நிறைவேற்ற முடியும். அரசியலமைப்பு சட்டங் களையே அடிக்கடி திருத்தம் செய்கிறபோது கட்சி விதிகளை திருத்த முடியாதா?' என்று சொல்லி வருகிறார் எடப்பாடி.
சின்னம் முடக்கப்படுமா?
"ஒற்றைத் தலைமையை உருவாக்கினால், தன் னைத்தான் பொதுச் செயலாளராக தேர்வு செய்ய வேண்டும்; இல்லையெனில் இரட்டை தலை மையே தொடர வேண்டும்' என போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பி.எஸ்., பொதுக்குழுவில் தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அ.தி.மு.க.வை உடைக்கவும் தயாராகிவருகிறார். இதற்கு சசிகலாவின் ஆதரவையும் கேட்டுள்ளார். ஆனால், "இவருக்கு பின்னால் அ.தி.மு.க.வினர் எந்தளவுக்கு திரளுவார்கள் என்பது கேள்விக் குறியே' என்கிறார்கள் மாநில நிர்வாகிகள். அதேசமயம், நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குப் போடவும் ஓ.பி.எஸ். தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு பிரச்சினை சென்றால், பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு யாரிடம் இருக்கிறது என்பதை வைத்தே ஆணையம் முடிவு செய்யும்.
சசிகலா தரப்பில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு வழக்கில், "மதுசூதனன் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கே கட்சி சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால் சின்னம் முடக்கப்பட எடப்பாடி விடமாட்டார்' என்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க.வில் ஏற் பட்டுள்ள பிரளயத்தால் இரட்டை இலை மீண்டும் முடக்கப்பட வேண்டும் என்கிற திட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சியில் விடுபட்டுப் போன பதவி களுக்கு திடீரென தேர்தலை அறிவித்துள்ளது தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டி லுள்ள மாநில தேர்தல் ஆணையம்.