""ஹலோ தலைவரே, அ.தி.முக..வின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் தி.மு.க. தலைமைக்கு எதிரா ஒட்டப்பட்ட போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பையடுத்து, தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரடியா கோவையில் போராட்டக் களமிறங்கி ஒரு பூகம்பத்தை உருவாக்கியிருக்காரே?''’
""கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை, நம்ம நக்கீரன் அம்பலப்படுத்திய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்கு முன்னாடி அ.தி.மு.க.வின் செல்வாக்கு- பாலியல் கொடூரம் அம்பலத்துக்குப் பிறகு அ.தி.மு.க.வின் செல்வாக்குன்னு இரண்டு கட்டமா பார்க்கணும்.''
""உண்மைதாங்க தலைவரே, கொங்குமண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி தமிழக முதல்வரா இருந்தாலும், கோவையைப் பொறுத்தவரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான் சூப்பர் முதல்வரா செயல்படுவாரு. உள்ளாட்சித் துறைக்கு அவர் அமைச்சர் என்பதால், கொங்கு மண்டல உள்ளாட்சித் தேர்தலிலும், சூலூர் இடைத்தேர்தலிலும் அவரின் பவரை எதிர்த்து தி.மு.க.வால் பெரிதாக சோபிக்க முடியலை. இதில் சமுதாய ரீதியா தி.மு.க. நிர்வாகிகள் சிலரே வேலுமணித் தரப்பை அட்ஜஸ்ட் பண்ணிட்டு, எதிர்ப்பு அரசியலைக் கையிலெடுக்கத் தயங்குவதாகவும் அறிவாலயம் வரைக்கும் புகார் குவிந்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. அடித்த போஸ்டரால் அங்கே புதுவித அரசியல் சூழலை உருவாக்கியிருக்கு.''
""ஆமாம்பா... கடந்த 26-ந் தேதி கோவை மாநகர் முழுக்க அமைச்சர் வேலுமணி தரப்பு தி.மு.க.வுக்கு எதிரான அட்டாக் போஸ்டர்களை ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்துச்சு. அதில், எடப்பாடி படத்தைப் போட்டு தன்னம்பிக்கைத் தலைமையான்னும், ஸ்டாலின், துரைமுருகன் படத்தைப் போட்டு துண்டுச் சீட்டு தலைமையான்னும் தி.மு.க.வை இழிவுபடுத்துவது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. சில போஸ்டர்களில் ஸ்டாலினை, இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியாகவும் சித்தரிச்சிருந்தாங்க. ஆனால் போஸ்டரை யார் அடிச்சதுங்கிற விபரம் அதில் இல்லை. இதைப் பார்த்துக் கொதிச்சிப் போன தி.மு.க. நிர்வாகிகள் சிலர் உடனடியாக அந்தப் போஸ்டர்களை கிழித்தெறிய, அவர்கள் மீது அ.தி.மு.க. தரப்பு புகார் கொடுத்தது. உடனே போலீஸ் கர்மசிரத்தையாகக் களமிறங்கி, தி.மு.க.வைச் சேர்ந்த ஏழெட்டு பேரை, பெயிலில் வரமுடியாத செக்ஷனில் கைது செய்தது. இதன் பிறகுதான் ட்விஸ்ட்.''
""என்ன ட்விஸ்ட்?''
""அ.தி.மு.க. தரப்பின் அட்டாக் போஸ்டரையும், போலீஸின் கைது நடவடிக்கையையும் கண்டிச்சி ட்வீட் பண்ணிய உதயநிதி, மறுநாளே கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்னு அறிவிச்சாரு. கோவையைச் சேர்ந்த தி.மு.க.வின் 4 மாவட்ட நிர்வாகிகளும் அந்தக் குறுகிய கால அவகாசத்துக்குள்ளே விறுவிறுன்னு போராட்ட ஏற்பாடுகளில் இறங்க, அன்று மாலையே கோவையில் ஆஜராயிட்டார் உதயநிதி. உளவுத்துறை மூலம் மேலிடத்திற்குத் தகவல் போக, அரெஸ்ட்டான தி.மு.க.வினரை ஸ்டேஷனிலேயே ஜாமீனில் விட்டுட்டாங்க. மறுநாள் காலையில் உதயநிதி தலைமையிலான கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் தடை விதிக்க, 4 மா.செ.க்களும் தடையை மீறி போராட்டத்தை நடத்துவோம்னு அறிவிச்சாங்க. போலீஸ் பின்வாங்கிடிச்சி. அறிவிக்கப் பட்டது போலவே தெற்கு தாலுகா காவல் நிலையம் அருகே ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் எழுச்சியோடு திரண்டுட்டாங்க.''
""ரொம்ப காலத்துக்கு அப்புறம் கோவையில் தி.மு.க.வின் எழுச்சின்னு உடன்பிறப்புகளே சொல்றாங்களே?''
""உண்மைதாங்க தலைவரே, காவல்துறையின் தடையைப் பத்திக் கவலைப்படாம பெரும் கூட்டம்கூட, ஏரியாவே மூச்சுத் திணறுச்சு. ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை ஏற்ற உதயநிதி, வேலுமணியின் ஆட்டம் இனியும் செல்லாது. அவரது அதிகாரத்துக்கு நாங்கள் சாவுமணி அடிப்போம்ன்னு ஆரம்பிச்சி, எடப்பாடியையும் வேலுமணியையும் வெளுத்து வாங்கிட்டாரு. ஊழல்களைப் பட்டியலிட்டு சொன்னதோடு, தைரியம் இருந்தா, பெயர் போட்டு போஸ்டர் அடிச்சிப் பாருங்கன்னு சவாலாக பேச, அது தி.மு.க தொண்டர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கு. வேலுமணியும் அவரது தரப்பும் தங்கள் கண்ட்ரோலில் இருக்கும் கோவையில் தி.மு.க.வால் துரும்பைக்கூட நகர்த்த முடியாதுன்னு நினைச்சிக்கிட்டிருந்த நிலையில், இப்படியொரு ஆர்ப்பாட்டத்தை எதிர்பார்க்கலை. ஆனாலும், ஆளுந்தரப்பு சும்மா இருக்குமா? அதுவும் வேலுமணிக்கு ஈஷா சாமியார் ஜக்கி மூலமா டெல்லி வரைக்கும் செல்வாக்கு இருக்குது. அதனால் தி.மு.க போராட்டம் நடத்திய மறுநாளே, அதாவது 28-ந் தேதி, கோவை தி.மு.க.வின் 4 மா.செ.க்களில் ஒருவரான பையா என்கிற கிருஷ்ணனைக் குறிவைத்து, வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டு நடந்தது.''
""அமைச்சர்களுக்கு தனிப்பட்ட செல்வாக்கு டெல்லியில் இருந்தாலும் எடப்பாடி அரசு மீது பா.ஜ.க. தரப்பு கடும் கோபத்தில் இருக்குதாமே?''
""தி.மு.க.வுக்கு கிடைக்கிற அனுமதிகூட பா.ஜ.க.வுக்கு கிடைக்கிறதில்லைங்கிறதுதான் அவங்க கடுப்புக்கு காரணம். கவர்னருக்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த போராட்டம், கோவையில் உதயநிதி நடத்திய போராட்டம், மனுஸ்மிருதியை கொளுத்த வேண்டும்னு திருமா வளவன் நடத்திய போராட்டம்ன்னு அனைத்துக்கும் அனுமதி கொடுத்த எடப்பாடி அரசு, நாங்க நடத்த நினைக்கும் போராட்டங்களை மட்டும் முடக்கி, கைது நடவடிக்கையில் இறங்குதுன்னு இங்குள்ள பா.ஜ.க.வினர், குஷ்பு கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி டெல்லிக்கு புகார் அனுப்பியிருக்காங்க. ஆனால் ஆளும்கட்சித் தரப்போ, பா.ஜ.க.வைப் போராட அனுமதிச்சிருந்தா, அதன் யோக்கியதை தெரிஞ்சிருக்கும். அந்தக் கட்சியால் எந்த போராட்டத்துக்கும் கூட்டம் கூட்ட முடியாது. கூட்டம் கூடாத போராட்டத்துக்குப் போயி குஷ்பு அசிங்கப்படக் கூடாதுன்னுதான், ஒரு திரைக்கதை போல பக்காவா ஸ்கிரிப்ட் பண்ணி, வழியிலேயே அவரைக் கைது செய்து, ரிசார்ட்டில் தங்க வச்சி, சாயந்தரம் வீட்டுக்கு அனுப்பிவச்சோம். இது தெரியாமல் ஆ…ஊ…ன்னா நம்ம மேலயே புகார் அனுப்பறாங்க. எப்பதான் தமிழ்நாட்டு அரசியலைக் கத்துக்கப் போறாங்கன்னு அ.தி.மு.க தரப்பு சிரிக்கிதாம்.''
"தே.மு.தி.க. மூன்றாவது அணிக்கு ரூட் போடுற மாதிரி தெரியுதே?''
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியை உறுதிசெஞ்சுக்க நினைச்ச தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தங்கள் மகன் விஜய பிரபாகரனை ஓ.பி.எஸ்.சோடும் எடப்பாடியோடும் பேச்சுவார்த்தைக்கு அனுப்ப நினைச்சார். ஆனால் அப்பாயின்மெண்ட் கேட்டும் அவங்க ரெண்டுபேருமே இதோ அதோன்னு இழுத்தடிக்கிறாங்களாம். இதன்மூலம் அ.தி.மு.க.வின் மன நிலையைப் புரிஞ்சிக்கிட்ட அவர், பா.ஜ.க.வின் முடிவுக்காக வெயிட் பண்றாராம். டெல்லியும் தங்களைக் கைவிட்டு விட்டால் தே.மு.தி.க தலைமையில் மூன்றாவது அணியை கட்டமைக்க லாமான்னு அவர் மாநில நிர்வாகிகளிடம் தீவிரமா விவாதிச்சிக்கிட்டு இருக்காராம்.''
""இந்தமுறையும் சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடப் போகுதுன்னு அவங்க தரப்பிலிருந்தே டாக் அடிபடுதேப்பா?''
""அ.தி.மு.க.வோடு பா.ம.க. பகிரங்கமாகவே முரண்பட ஆரம்பிச்சிருக்கு. பா.ம.க. சீனியர்களோ, வரும் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடனும்ங்கிற முடிவுக்கு, டாக்டர் ராமதாஸ் வந்துட்டார்னு சொல்றாங்க. அதனால்தான் வன்னியர் சமூகத்திற்கான 20 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தைக் கையிலெடுத்து அவர் போராட நினைக்கிறாராம். மேலும், எடப்பாடி அரசைப் பல வகையிலும் அவர் கடுமையா விமர்சிக்கவும் ஆரம்பிச்சிட்டார். இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை எந்த வடி வத்தில் நடத்துறதுன்னு விவாதிக்க, பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டுப் பொதுக்குழுவை நவம்பரில் இணைய வழியில் நடத்தவும் அவர் தயாராயிட்டார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி தரக்கூடிய சில அதிரடி முடிவுகளையும் பா.ம.க. அறிவிக்கப் போகுதாம்.''
""தேர்தல் வியூகங்களை இப்பவே தி.மு.க. தீவிரமாக வகுக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, வரும் சட்ட மன்றத் தேர்தலில் எடப்பாடி உட்பட அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிச்சே தீரனும்னு ஸ்டாலின் நினைக்கிறாராம். ஆனால், ஆளுந்தரப்பின் மிதமிஞ்சிய பணபலமும் அதிகாரமும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்கூட ஜெயிக்க வச்சிடும்ங்கிறதையும் புரிஞ்சு வச்சிருக்காரு. அதனால் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில், செல்வாக்கும் பொருளாதார பலமும் கொண்ட வேட்பாளர்களைக் களமிறக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். அந்த வகையில் எடப்பாடிக்கு எதிராக அவரது தொகுதியில், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபுவை நிறுத்த லாம்னு ஸ்டாலின்கிட்ட கனிமொழி எம்பி. சொல்லியிருக் காராம். எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு வேளாளர் வாக்குகள் ஆதரவா இருக்கக்கூடிய நிலையில், சேலம் மாவட்டத் தின் செல்வாக்கு மிக்க சமூகமான வன்னியர்களின் வாக்கு வங்கி, வீரபாண்டியார் குடும் பத்துக்குக் கைகொடுக்கும் என்பதுதான் தேர்தல் கணக்கு. அதோடு, வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை ஸ்டாலின் ஒதுக்குகிறார்னு கிளம்பும் புகைச் சலும் அடங்கும்ங்கிறதால இதுபற்றி அறிவாலயம் ஆலோ சிக்குதாம்.''
""தி.மு.கவுடனான விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி பற்றி சமூக வலைத்தளங்களில் பல வகையான தகவல்கள் வருதே?''
""இரண்டு கட்சிகளின் சமூக வலைத்தள செயல்பாட்டாளர்களும் அவங்கவங்க சொந்த விருப்பங்களை எழுதிக்கிட்டிருக்காங்க. மனுதர்மம் தொடர்பான சர்ச்சையில் திருமாவுக்கு ஆதரவா ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டாரு. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருமாவும் கருத்து தெரிவிச்சாரு. அதேநேரத்தில், சிறுத்தைகளைத் திமு.க. கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டுட்டு, அதுக்கு பதிலா பா.ம.க.வைக் கொண்டு வந்துடனும்னு தி.மு.க.விலேயே இருக்கும் சிலர் முயற்சி செஞ்சாங்க. எனினும், சிறுத்தைகளின் தோழமை உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கனும்ன்னு ஸ்டாலின் உறுதியா இருந்தார். இதைத் தொடர்ந்துதான் முதன்முதலாக சிறுத்தைகளுடனான தேர்தல் உறவு பற்றி, முதற்கட்டமா பேசப்பட்டிருக்குதாம். அந்த வகையில் சிறுத்தைகளுக்கு 10 சீட்டுன்னும், அதில் ஐந்து தொகுதி களில் தனி சின்னத் திலும், 5 தொகுதி களில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டி யிடுவதா பேசப்பட்டிருக்குதாம்.''
""சசிகலா ரிலீஸ்?''
""அவரோட ரிலீஸ்ங்கிறது வானிலை அறிக்கை மாதிரி ஆயிடிச்சி. சிறையில் இருக்கும் ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை, ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கட்டவேண்டும் என்பது விதியாம். சசிகலாவோ டெல்லி சிக்னல் கிடைத்ததும், அபராதத் தொகையைக் கட்டுவதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறார். இன்னும் சிக்னல் கிடைக்காத நிலையில், சசிகலாவின் ரிலீஸ், ஜனவரி வாக்கில்தான் இருக்கும்ன்னு மன்னார்குடித் தரப்பே சொல்லுது.''
""நானும் சசிகலா தரப்பு சம்பந்தமான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பார்வையாளரான சி.டி.ரவியை அணுகும் முயற்சியில் சசிகலா தரப்பு களமிறங்கி யிருக்கு. ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி பெற்றவரான ரவியோ, தனிப்பட்ட லாபங்களை விட கட்சியின் எதிர்கால அரசியலுக்கு சசியின் விடுதலை பயன்படுமான்னு தொலை நோக்கு பார்வை யோடு சிந்திக்கிறாராம். அதை தாமதமாகப் புரிந்துகொண்ட மன்னார்குடி தரப்பு, ரவி மூலமா ரிலீஸ் நடவடிக்கையை வேகப்படுத்த நினைக்குது. இது தொடர்பாக ரவியை டி.டி.வி.தினகரன் விரைவில் சந்திக்கலாம்.''
___________________
இறுதிச்சுற்று!
டைரக்டருக்கு மிரட்டல்?
முத்தையா முரளிதரன் பற்றிய "800' படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என சீனியர் பாரதிராஜா தொடங்கி சீமான் வரை திரையுலகைச் சார்ந்த பலரும் கண்டித்திருந்தனர். விஜய்சேதுபதி அதிலிருந்து விலகிய நிலையில், 800க்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக தன் உயிருக்கு மிரட்டல் விடப்படுகிறது என முதல்வர் வரை தெரிவித்திருக்கிறார், தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய்சேதுபதியை அறிமுகம் செய்த இயக்குநர் சீனுராமசாமி. விஜய்சேதுபதி தரப்பிலோ அவரை மிரட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள். இழுத்தடிக்கப்படும் "மாமனிதன்' படம், ரிலீசாகாத "இடம்-பொருள்-ஏவல்' உள்ளிட்ட விவகாரங்களும் இந்த பஞ்சாயத்தில் உள்ளது என்கிறார்கள் திரையுலகினர்.