வேலூர் மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகளில் 43 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது. இதனால் மேயர், துணைமேயர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகளிடம் பலமில்லாத நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த சுஜாதா அனந்தகுமார் மேயராகவும், சுனில் துணைமேயராகவும் தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்கள். மாநகராட்சியில் காட்பாடி, சத்துவாச்சாரி, வேலூர், சேண்பாக்கம் என நான்கு மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலமும் தலா 15 கவுன்சிலர்களைக் கொண்டது. இந்த 4 மண்டலங்களுக்கான தலைவர் பதவியினைப் பிடிக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.

vellore

காட்பாடி மண்டலத்தில் தி.மு.க.விடம் 13 கவுன்சிலர்களும், அ.தி.மு.க., சுயேட்சை தலா ஒரு கவுன்சிலர் என உள்ளனர். மேயர் வேட்பாளர் போட்டியிலிருந்த புஷ்பலதா வன்னியராஜாவுக்கு மண்டல தலைவர் பதவி தர விரும்புகிறது அமைச்சர் தரப்பு. அதற்கடுத்ததாக விமலா சீனுவாசன், அன்பு போன்றவர்கள் மண்டல தலைவருக்கான கோதாவில் உள்ளார்கள்.

இரண்டாவது மண்டலமான சத்துவாச்சாரியில் கட்சியின் சீனியரான ஆர்.பி.ஏழுமலை, இப்போதே "நான்தான் மண்டல தலைவர். எனக்கு யாரும் போட்டியே கிடையாது'' என்கிறார். 25-வது வார்டு கவுன்சிலரும், பகுதிச்செயலாளருமான கணேஷ் ஷங்கர், எம்.பி. ஆதரவில் கவுன்சிலர் சுதாகர் போன்றோர் வரிசைகட்டி நிற்கின்றனர்.

மூன்றாவது மண்டலத்தில் மேயர் வேட்பாளர் பட்டியலில் இருந்த யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த தவமணி எதிர்பார்க்கிறார். 36-வது வார்டு கவுன்சிலர் யூசூப்கான் கேட்கிறார். நான்காவது மண்டலமான சேண்பாக்கத்தில் கழக சீனியரான அயூப்கான் தன் மனைவி ஆபிதாகானமுக்கு மண்டலத் தலைவர் பதவி தாருங்கள் எனக் கேட்கிறார். அமைச்சர் துரைமுருகனின் கார் ஓட்டுநர் கவுன்சிலர் வெங்கடேசன், கவுன்சிலர் சண்முகம் போன்றவர்கள் பட்டியலின சமுதாயத்துக்கான பிரதிநிதித்துவப்படி கேட்கிறார்கள்.

இதுகுறித்து மாநகர தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "மாநகரத்தில் முதலியார்கள், வன்னியர்கள், பட்டியலினம், இஸ்லாமியர்கள் வலிமையாக உள்ளார்கள். முதல் மண்டலமான காட்பாடி மண்டலத் தலைவர் யார் என்பதை நீங்கள் முடிவெடுங்கள் என அமைச்சர் துரைமுருகன் சாய்ஸாக விட்டுள்ளனர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வும், மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ.வும். மேயர் வேட்பாளர் போட்டியில் இருந்த புஷ்பலதா வன்னியராஜாவை சாதியைக் காரணம்காட்டி மேயர் பதவிக்கான போட்டியிலிருந்து நீக்கினர். அவரிடம் மண்டலத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளச்சொல்லி அமைச்சர் தரப்பு சொல்கிறது, மனவருத்தத்தில் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் வேண்டாம் என முடிவெடுத்தால் விமலா சீனுவாசன், அன்பு போன்றவர்களைப் பரிசீலிப்பார்.

Advertisment

vellore

இரண்டாவது மண்டலமான சத்துவாச்சாரியில் கவுன்சிலர் ஆர்.பி.ஏழுமலை, மண்டல தலைவர் பதவி வேண்டும் எனக் கேட்கிறார். வயதானதால் கட்சிப் பணி செய்வதில்லை, இளைஞரணியில் உள்ள அவரது மகனும் கட்சி வேலை பெரிதாகச் செய்வதில்லை. இதனால் கவுன்சிலர் சீட் கூட தரவில்லை. அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நிர்வாகிகள் முன்னால் ‘"எங்க நாயக்கர் சாதிய புறக்கணிக்கிறார்களா? எனக்கு சீட் தரலன்னா, நான் விஷம் குடிச்சி தற்கொலை செய்துக்குவன்'’ என மிரட்டி தனக்கும், தன் மச்சான் சக்கரவர்த்திக்கும் சீட் வாங்கி வெற்றிபெற்றார்கள். இப்போது மண்டலத் தலைவர் பதவி எனக்குதான் என மறைமுகமாகக் குறிப்பிட்டு நகரெங்கும் பேனர் வைத்துள்ளது ஏழுமலை தரப்பு. அதைப் பார்த்த கட்சி சாராத பலர், இவரை மண்டல தலைவராக்காதீங்கன்னு முறையிடறாங்க.

2006-2011-ல் சத்துவாச்சாரி சேர்மனாக ஏழுமலையின் மனைவி ஜெயலட்சுமி இருந்தபோது, நகராட்சிக்குச் சொந்தமான பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றார். நகராட்சி பெயரில் பில் புக் தயார் செய்து வரிவசூல் செய்து மோசடி செய்தது குறித்து விசாரணையும் நடந்து. நகராட்சிப் பகுதியிலிருந்த பொறம்போக்கு இடங்களை வளைத்துப்போட்டு போலி டாக்குமெண்ட் தயார் செய்து பிளாட் போட்டு விற்பனை செய்தவர். மாமூல் வசூலில் கொடிகட்டிப் பறந்தவர். இவரால் உங்க கட்சிப் பெயர் கெட்டுப்போனது பத்தாதா என பலரும் கேட்கிறார்கள். அதனால் மா.செ.வும், மாநகரச் செயலாளரும் தயங்குகிறார்கள்.

இஸ்லாமிய சமுதாய முக்கி யஸ்தர்கள், அமைப்பினர் எங்கள் சமுதாயத்துக்கு ஒரு மண்டலக்குழு தலைவர் பதவியைத் தாங்க எனக் கேட்டு, மூன்றாவது மண்டலத்திலுள்ள கவுன்சிலர் யூசுப்கானை முன்னிறுத்து கிறார்கள். அந்த மண்டலத்தில் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த தவமணி இருக்கிறார். அவருக்குத் தந்தால் யூசுப்கானுக்கு தரமுடியாத நிலை. நான்காவது மண்டலத்திலுள்ள கவுன்சிலர் அயூப்கான் மனைவி ஆபிதாவை மண்டலத் தலைவ ராக்குகிறோம் என்றால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

அதேபோல் பட்டியலினத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களில் ஒருவரை மண்டலத் தலைவராக்க 4-வது வார்டில் மட்டுமே வாய்ப்புள்ளது. அதனால் மூன்றாவது வார்டில் இஸ்லாமியருக்கும், நான்காவது வார்டில் பட்டியலினத்தவ ருக்கும் தரலாம் எனவும் யோசிக்கப்படு கிறது. மண்டலக்குழு தலைவர் பதவி தரமுடியாத சமுதாயத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கு கல்விக்குழு, நிதிக்குழு தலைவர் பதவியைத் தரலாம் என ஆலோசிக்கப்படுகிறது, எதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை'' என்கிறார்கள்.

Advertisment