""தமிழர்களின் உணர்வோடும், அரசியலோடும் நெருக்கமாக இருந்த பெயர் வீரப்பன். வீரப்பன் கொல்லப்பட்டபோது அதிகார வர்க்கத்திலுள்ள சிலரும், ஆட்சியில் இருந்த சிலரும் மட்டுமே மகிழ்ச்சியடைந்தனர். தமிழக மக்களிடத்தில் அப்பொழுது வெளிப்பட்ட உணர்வு, எழுத்தில் வெளிப்படுத்திவிட முடியாதவை. வீரப்பனைக் கொன்றதற்காக, தொடர்புடைய காவல்துறையினருக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகளும், பதவி உயர்வும் பதக்கங்களும், சொகுசு வீடுகளும் குறித்த மக்களின் கருத்தை எந்த ஊடகமும் வெளிக்கொணரவில்லை. அப்போது அதற்கான துணிச்சலும் எவருக்குமில்லை.
அன்று அனைத்தையும் பார்த்து பேசாமலிருந்த மக்கள் "கூச முனிசாமி வீரப்பன்' ஆவண -கதையாக்கத் தொடரை பார்க்கத் தொடங்கிவிட்டனர். தகவல் தொடர்பற்ற, கணக்கில் கண்டுகொள்ளப்படாமல் கிடந்த நிலப்பரப்பிலிருந்து வீரப்பன் என ஒருவர் எவ்வாறு உருவானார்? எதனால் அவருடைய வாழ்வு காட்டினுள்ளேயே முடிந்துபோனது? தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அவரால் விளைந்த நல்லவை, கெட்டவை என்னென்ன என்பதெல்லாம் எளிய மனிதருக்கும் விளங்கும்படியான திரை வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட வீரப்பன் எனும் தமிழனின் வாழ்க்கை குறித்த தகவல்கள் அனைத்தும் அரசின் பார்வையிலேயே மக்களிடத்தில் சேர்க்கப்பட்டன. அவைகளில் உள்ள உண்மைத் தன்மை குறித்து அக்கறையே கொள்ளாமல் வீரப்பன் கதை எனக் கூறி அனைத்து மொழிகளிலுமே திரைப்படங்களும், இணையத் தொடர்களும் உருவாக்கப்பட்டன. அவைகள் அனைத்தையும் கண்டவர்கள் இந்த இணையத்தொடரை கண்டதும், வீரப்பன் குறித்த தங்களின் எண்ணத்தில் நிரந்தர மாற்றத்தை அடைவார்கள்.
இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்ட முந்தைய படங்களுக்கும் "கூச முனிசாமி வீரப்பன்' தொடருக்குமான வேறுபாட்டை வீரப்பனே நம் கண்முன் அமர்ந்து, உண்மையை உடைக் கிறார். காலம் பல நேரத்தில் உண்மைகளை ஒளித்து வைத்துவிடுகின்றது. அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறி சில நேரங்களில் உண்மை வெளிப்படும்போது மாற்றி எழுதப்படும் வரலாறு, மீண்டும் தன் உண்மைப் பாதைக்குச் சென்றுவிடுகிறது.
படத்தைப் பார்த்து மூன்று நாட்களாகியும் இது குறித்து எழுதும் மனநிலையை இழந்திருந்தேன். இரக்கமற்றவனாக சித்தரிக்கப் பட்டிருந்த அந்த மனித னுக்குள் ஏற்பட்ட வலிகளும், இழப்புகளும் நம்மையும் ஏங்க வைக்கின்றன. யானைகளைக் கொன்று, காட்டை அழித்து பெரும் பணக்காரனாகி பெருவாழ்வு வாழ்ந்து பறக்க வேண்டுமெனும் எண்ணமெல்லாம் அவருக்கு இருந்திருக்கவில்லை. காவல்துறையின் தவறான அணுகு முறைதான் வீரப்பனின் வாழ்க்கையைத் தடம் புரள வைத்துள்ளது எனும் உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
புனையப்பட்ட கற்பனைக் காட்சிகளுடன் கூடிய கோடி, கோடி பணம் செலவழித்து காண்பிக்கப்படும் ஒரு வணிகத் திரைப்படத்தில் இல்லாத விறுவிறுப்பும், கவனமும் முதல் தொகுதியாக வெளியாகியுள்ள இந்த ஆறு தொடரிலும் விரவிக் கிடக்கின்றன. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்த மனிதர், இத்தொடர் மூலம் மீண்டும் பேசப்படுவார்.
காலம் முழுதும் காட்டில் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப் பட்ட வீரப்பனுக்கும், அரசு, அதிகாரம், ஆயுதக் கருவிகளுக்கும் இடையே நிகழ்ந்த ஈவு இரக்கமற்ற செயல்களால் இந்த அப்பாவி மக்கள் எவ்வாறெல் லாம் அச்சுறுத்தப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டு, இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வதை செய்யப் பட்டார்கள்... அழித்தொழிக்கப் பட்டார்கள் என்பதை இந்த மக்களும் எதிர்காலத் தலைமுறைகளும் காணும் விதமாக இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து ஒரு திரைக்கலைஞனாக சமூகப் பொறுப்புள்ள மனிதனாக மனம் நிறைவளிக்கிறது.
தான் செய்த தவறுகளுக்காக வருந்தும் வீரப்பனையும், தன் தந்தையின் செயல் மூலம் பாதிப் புக்குள்ளான சில மனிதர்கள் குறித்து அவரின் மகள் வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாட்டினையும், கொல்லப்பட்ட தன் தந்தை குறித்து அப் பொழுது ஒருவயது கைக்குழந்தையாக இருந்து இன்று ஒரு பெண்ணாக அவர் தெரிவிக்கும் கருத்துக் களையும் எவரும் எளிதில் கடந்துவிட முடியாது.
இந்த இணையத் தொடர் மற்ற தொடர் களைப் போன்று பார்த்தபின், நாம் மறந்துபோகும் படத் தொடரல்ல. இனி வரும் காலத்தில் வீரப்பன் போன்றவர்கள் உரு வாகாமல் இருக்க அரசு அதிகாரத்தில் உள்ளவர் களும், அரசியல்வாதி களும், காவல்துறையில் உள்ளவர்களும், ஊட கத்துறையினரும் கண்டு உணர்ந்து செயல்பட வேண்டிய படைப்பாக உள்ளதை நீங்கள் காணும்போது உணரலாம். எனவே இப்படிப்பட்டவர்கள்தான் இத் தொடரை தவறாமல் காணவேண்டும்.
இந்தப் படைப்பு உருவாகக் காரணமாக இருந்த அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களும், அவரது குழுமமும் நம்மால் பாராட்டப்பட வேண்டியவர்கள். எத்தனையோ அச்சுறுத்தல்களையும், அடக்குமுறைகளையும் கடந்து பதுக்கி வைத்த வீரப்பனின் நேர்காணல்தான் இப்படைப்பின் விதையாக உள்ளது. திரை உருவாக்கத்தில் பங்குபெற்ற அத் தனை தொழில் நுட்ப படைப்பா ளர்களும் போற்றுத லுக்குரியவர்கள்.
வீரப்பன் கொல்லப்பட்ட போது மறைந்த எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் என் னிடம் சொன்னது தான் இப்பொழுது எனக்கு நினைவுக்கு வருகிறது. "காடு என்பதை ஆட்சி, அதிகாரத்திலுள்ள வர்களால் காப்பாற்ற முடியாது. வீரப்பன் எனும் வீரனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரிடமே காடுகளை காப் பாற்றும் பொறுப்பு வழங்கியிருந்தால் நம் காடும், வன உயிரினங்களும் காப்பாற்றப்பட்டி ருக்கும்' எனக் கூறியது மிகையானது அல்ல!
எல்லாமும் அவரவர் வெறிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதனால் பாதிப்புக்குள்ளான அப்பாவி மக்களுக்கு இதைக் காணும் ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும், அவர்களின் வாழ்வுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையினை வழங்கினால் அதுவே இப்படைப்பு பெற்றுத் தரும் பெரும் வெற்றி என கருதுகிறேன்.
முதல் தொகுதி ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் இரண்டாம் தொகுதியைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.''
(விமர்சனங்கள் தொடரும்...)