ங்களை தனி மதமாக அறிவியுங்கள் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்தும் வெளிப்படுகிறது. கர்நாடகாவில் லிங்காயத்துக்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வள்ளலாரை பின்பற்றும் சுத்த சன்மார்க்கத்தினரும் தங்களை தனி மதமாக அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

vallalarvallalar

உருவ வழிபாட்டை மறுத்து, உயிர்கள் மீது கருணை கொள்ளவேண்டும் என்றும், பசியைப் போக்கி மனிதர்களுக்குள் சமத்துவத்தை காக்க வேண்டும் என்றும் போதித்து மறைந்தவர் வள்ளலார் ராமலிங்கம். சாதி -மதம் -சாஸ்திரங்களை எதிர்த்து நின்று வர்ணாசிரமக் கொடுமைகளை சாடி, தனக்கென்று தனி வழிபாட்டு முறைகளை வகுத்தவர் அவர்.

1865 ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை பலதரப்பு மக்கள் பின்பற்றுகிறார்கள். அவரைப் பின்பற்றுவோர் ஒளியை வணங்குகிறார்கள். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்கும் நோக்கத்தோடு மூடப்பழக்க வழக்கங்களை வெறுத்து ஒதுக்குகிறார்கள். திருமணம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளில் வீண் செலவுகளைத் தவிர்த்து மக்களுடைய பசியை போக்குவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ஜீவகாருண்ய மேன்மையை மக்களுக்கு உணர்த்தியவர் வள்ளலார்.

Advertisment

அவர் உருவாக்கிய சமரச சுத்த சன்மார்க்கம் புதிய தனி மார்க்கமாகும். அந்த மார்க்கத்தை தனி மதமாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஏபிகே கருணைச்சாலை என்ற அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் மிகப்பெரிய கருத்தரங்கை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த அமைப்பைச் சேர்ந்த ராமலெட்சுமியிடம் பேசினோம்...…

vallalar

Advertisment

""வள்ளலார் கண்ட சன்மார்க்கம் உலகில் உள்ள மற்ற எந்த மதத்தின் கருத்துகளையும் அடிப்படையாக கொண்டதல்ல. புதிய தனித்தன்மை கொண்டது. உலகில் எல்லா மத கருத்துக்களும் தனது மார்க்கத்துக்கு தடையானது. அவற்றை எக்காலத்திலும் தன்னைப் பின்பற்றுவோர் கடைப்பிடிக்கக்கூடாது. மனிதநேயம், ஜீவகாருண்யம், பசியைப் போக்குவது, குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும். அனைவரும் சமமாக வாழவேண்டும். இவற்றுக்கு தடையாக உள்ள சாதி, மதம், சடங்குகளை ஒதுக்கவேண்டும் என்று போதனை செய்தார். இத்தகைய தனித்துவம் வாய்ந்த மார்க்கத்தை தனி மதமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்''’என்றார்.

vallalarஇதே அமைப்பைச் சேர்ந்த குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியன் நம்மிடம் பேசும்போது...

""தனி சங்கம், தனி கொடி, விதிகள், கொள்கைகள், கட்டளைகள், வழிபாட்டுப் பாடல்கள், மகாமந்திரம், தனி உபதேசம், தனி உணவுமுறை, உடைகள், தகுதிகள், தனி வழிபாட்டு முறைகளை வகுத்தவர் வள்ளலார். இவருடைய அமைப்புகள் கடல்கடந்தும் உள்ளன. எனவேதான் தனி மதமாக அறிவிக்கவேண்டும் என்கிறோம்''’என்றார்.

ஆவினன்குடி அருட்பா மன்ற அமைப்பாளரும் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரியுமான இளங்கோவன் பேசும்போது...

""விக்கிரக வழிபாடு கூடாது என்பது வள்ளலாரின் கோட்பாடு. அதற்கு மாறாக சில ஆண்டுகளுக்கு முன் சபாநாத ஒளி என்ற சிவாச்சாரியார் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் லிங்க வழிபாட்டை நடத்தினார். அதோடு, "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை' என்ற வள்ளலாரின் தாரக மந்திரத்தை மாற்றி சமஸ்கிருத சுலோக முறைகளை அறிமுகப்படுத்தினார். இதைக்கண்ட வள்ளலாரின் சன்மார்க்கத்தினர் கொதித்தனர். நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து சபாநாத ஒளியை சபையைவிட்டு வெளியேற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. வள்ளலார் வழிபாட்டு முறையை மீண்டும் கொண்டுவந்தோம். எதிர்காலத்தில் இதுபோல வள்ளலார் வழிபாட்டு முறைக்கு ஆபத்து வந்துவிடாமல் இருக்கவே தனி மதமாக மாற்றவேண்டும் என்கிறோம். சன்மார்க்கம் தனி சமயமாக அறிவிக்கத் தேவையான அனைத்து தகுதியும் பெற்றுள்ளது’’ என்கிறார்.

இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் மனிதர்களை நெறிப்படுத்த பல புதிய சமயங்கள் தோன்றியுள்ளன. வள்ளலாரும் அவருடைய காலத்தில் நிலவிய சாதிப்பாகுபாடுகள், பசிக்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு தீர்வு காணும்வகையில் சுத்த சன்மார்க்கத்தை உருவாக்கினார். சமீபத்தில் கர்நாடகாவில் லிங்க வழிபாட்டு முறையை கடைப்பிடிக்கும் பிரிவினர் தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மாநாடுகளை கூட்டி கோரிக்கை விடுத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை அந்த மாநில முதல்வர் சித்தராமய்யா ஏற்றுக்கொண்டார். மாநில அரசு லிங்காயத்துகளை தனி மதமாக -சிறுபான்மை அந்தஸ்துடன் அங்கீகரித்தது.

அதைப்போல, சுத்த சன்மார்க்கத்தையும் தனி மதமாக அரசமைப்புச் சட்டப்படி அங்கீகரிக்க மத்திய -மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. அமைப்பாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும் உள்ள சுத்த சன்மார்க்கத்தினர் இந்தக் கோரிக்கைக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

-எஸ்.பி.சேகர்