வாச்சாத்தி... என்ற பெயரை உச்சரித்தாலே வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை கொடூரம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தருமபுரி வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களும், அவர்களின் குடும்பத் தினரும் 30 ஆண்டு காலமாக தங்க ளுக்கான நீதி கேட்டுப் போராடியதில், கடந்த 29ஆம் தேதி வெள்ளியன்று, குற்றம் சாட்டப்பட்ட 215 அரசு ஊழியர்களுக்கும் தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

vass

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில் கடந்த 1992ஆம் ஆண்டில், சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகக்கூறி காவல்துறையினரும், வனத்துறையினரும், வருவாய் துறையினரும் இணைந்து இக்கிராம மக்கள்மீது கடும் தாக்குதல் நடத்தினர். அப்போது 18 பெண் களை அரசு அதிகாரிகள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தனர். இந்த கொடூர சம்பவத் தில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டுமென, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, கடந்த 1996ஆம் ஆண்டு சி.பி.ஐ. இவ்வழக்கை விசாரித்தது. இதையடுத்து, கடந்த 2011ஆம் ஆண்டில் தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 215 பேரும் குற்ற வாளிகள் எனத் தீர்ப்பளித்தது. இதில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் உட்பட வனத்துறையைச் சேர்ந்த 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டன. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து குற்றவாளி கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். பின்னர், இது தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதையடுத்து தான் தற்போது தனது தீர்ப்பின்மூலம் குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதிசெய்திருக்கிறார்.

Advertisment

தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசு வேலை அல்லது சுய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், இவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென்றும், அதில் ரூபாய் 5 லட்சத்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டுமென்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். தங்களுக்கு நேர்ந்த மிகக்கொடூரமான அரச வன்முறையின் வடுக்களுடன், துயரங்களைத் தாங்கி வாழ்ந்துவரும் நிலையில், வாச்சாத்தி கிராம மக்களுக்கு தற்போது வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு சற்றே ஆறுதல் அளிப்பதாக இருப்பதால், இத்தீர்ப்பை கிராம மக்கள் வரவேற்றுள்ளனர்.

vas

இந்த வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை நக்கீரன் தான் முதன்முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. வாச்சாத்தி கிராமத்தில் நடந்த கொடுமைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நல்லசிவன் ஓர் அறிக்கை வெளியிட் டார். அதற்கு அப்போ தைய அ.தி.மு.க. அமைச்சர் செங்கோட்டையன், “"அறியாத பிஞ்சிலே பழுத்த சிறுவரைப்போல் அறிக்கைவிடுகிறார் நல்லசிவன்'' என்று கேலி கிண்டல் செய்தார். இவர் நேர்மை யானவராக இருந்திருந்தால் எப்படி ஜெ.வுக்கும், சசிக்கும் சந்தனக் கட்டில் செய்து கொடுத்தி ருப்பார்?! செங்கோட்டையன் அன்று கிண்டல் செய்ததற்கு பதில் சொல்வதுபோல் தான் தற்போது தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்தத் தீர்ப்பின் உண்மைத்தன்மையை 18.08.1992ஆம் தேதி வெளிவந்த நக்கீரனில், "தமிழக போலீஸ் காட்டுமிராண்டித்தனம்! அந்த நாய்களை சுட்டுப் பொசுக்கணும்!'’என வெட்டவெளிச்சமாக எழுதினோம். அதன்பிறகு பி.யு.சி.எல்லில் இருந்து உண்மை அறியும் குழு வாச்சாத்திக்கு வந்தது. அதன் அறிக்கையில், நக்கீரனில் எழுதிய அதே செய்தி வந்திருந்தது. அதில், ஜூன் மாதம் 20ஆம் தேதி கலம்பட்டி காட்டிலிருந்த பாரஸ்ட் போலீசார், ஏழு பேரைப் பிடித்து வாச்சாத்தி கிராமத்துப் பக்கம் அழைத்து வந்தபோது, அந்த கிராமத்தில் இருந்த அப்பாவி பெருமாள் என்பவரைப் பிடித்து, "சந்தனக்கட்டைய எங்கே புதைத்து வச்சிருக்கீங்க?'' என அடித்து சித்ரவதை செய்ததில், பெருமாள் அலறியதைக் கண்டு வாச்சாத்தி ஊர் மக்கள் ஓடிவந்து, "இப்படி அநியாய மாக அடிக்கிறீங்களே!'' எனக் கேட்டதற்கு, அவர்களையும் சேர்த்து அடித்துள்ளனர்.

அந்த பிரச்சனை நடந்த அதே நாள் மாலையில் போலீசார் ஊரை முற்றுகை யிட்டு, ஊருக்குள் புகுந்து அனைவரையும் அடித்து நொறுக்கி ஊரையே நாசம் செய்துள்ளனர். 20ஆம் தேதி ஊருக்குள் புகுந்த போலீஸ், 25ஆம் தேதி வரை அங்கே டேரா போட்டுத் தங்கியுள்ளனர். இந்த 6 நாட்களில் நடந்ததுதான் ஒட்டு மொத்தக் கொடூரமும்!

vv

ஊருக்குள் புகுந்த போலீஸ் வேனில், கண்ணில்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவரையும் அள்ளித் தூக்கிப்போட்டுக் கொண்டுசென்றுள்ளனர். மீதமிருந்த ஐந்து பேரை போலீசாருக்கு சாப்பாடு செய்துதர வைத்துள் ளனர். அப்போது ஊரிலுள்ள ஆட்டை அடித்துச் சமைத்துச் சாப்பிட்டதோடு, வீடுகளிலிருந்த அனைத்து உடமைகளையும் அடித்து உடைத்து, அவர்களுக்குத் தேவையான நகை, பணம், பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஊரிலிருந்து போலீஸ் வேனில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆண்களும், பெண்களும் அரூர் பாரஸ்ட் அலுவலகத்தில் அடைத்து வைக்கப் பட்டனர். அப்படி அடைக்கப்பட்ட பெண்களை வைத்து ஊர் கவுண்டர் பெருமாளை ஒட்டுத் துணியில்லாமல் நிற்கவைத்து, பெண்களின் கையில் துடப்பத்தைக் கொடுத்து அடிக்க வைத்துள்ளனர். அப்படி அடிக்க மறுத்த பெண்களின் மார்பகத்திலே அடித்துள்ளனர். வன்புணர்வு செய்துள்ளனர். இதில் ஒரே பெண்ணை 5 பேர் வன்புணர்வு செய்த கொடுமை யும் அரங்கறியுள்ளது. அதோடு நிறுத்திக் கொள்ளாமல், சந்தனக்கட்டை புதைத்திருக்கும் இடத்தைக் காட்டு எனக்கூறி இளம் பெண்களைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றும் வன்புணர்வு செய்துள்ளனர். அந்த கொடுமை குறித்து அப்பெண்கள் கூறும்போது தான், "எங்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால் அந்த நாய்களை சுட்டுக் கொன்றிருப்போம்" எனப் பொங்கி யெழுந்தனர். இதில், 190 பேர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த மக்கள் சந்தனக்கட்டை களைக் கடத்தவில்லை என்பது தெரியும், அப்படியானால் யார் கடத்தியிருப்பார்கள் என்று நக்கீரன் விசாரணையில் இறங்கியதில், பாரஸ்ட் ஆபீசர்கள் தான் கடத்தியதும், கடத்தலுக்கு துணை போனதும் தெரியவந்தது.

vsa

அமைச்சர் செங்கோட்டை யனின் பினாமியான மொரப்பூர் எம்.எல்.ஏ. பாப்பிரெட்டிப்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய கிளை செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், நகர செயலாளர் மாணிக்கம், ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாள் மற்றும் சிலர் குரூப்பாக சந்தனக்கட்டை கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு கூலி வேலைக்காக சிலர் வாச்சாத்தி கிராமத்திலிருந்து சென்றுள்ளனர். ஆனால் இவர்களுக்கும், கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை முழுமையாக செய்ததே பாரஸ்ட் அதிகாரிகளும், அமைச்சருமே தவிர, இந்த அப்பாவிகள் இல்லை. சில சிறப்பு அதிகாரிகள் வந்தபோது இந்த மக்கள், கட்டைகளைப் புதைத்து வைத்த இடத்தை காட்டிக் கொடுத்துள்ளனர். அவ்வளவுதான். இந்த கோபத்தையும், போலீஸை எதிர்த்துக் கேட்டு தாக்கியதையும் மனதில் வைத்துதான் இவ்வளவு கொடூரங்களை அரங்கேற்றியுள்ளனர்.

வாச்சாத்தி வழக்கில் வாதாடிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோவிடம் கேட்டபோது, "30 ஆண்டுகாலப் போராட் டத்திற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கி றோம். இந்த போலீஸ் அடக்குமுறையை யும், அட்டூழியத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளோம். நான் மட்டுமில்லாமல், வழக்கறிஞர்கள் நல சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் பல இயக்கங்கள் சேர்ந்து போராடிய கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்கு காரணம். அந்த கிராம மக்களுக்கு அடிப்படை உரிமைகள் தெரியாமல் இருப்பதுதான் இது போன்ற பிரச்சனைக்கு காரணம். காலம் தாழ்த்திக் கிடைத்தாலும், சமூக நீதி வென்றுள்ளது'' என்றார். ஆம், 30 ஆண்டுகால நீதிக்கான போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது!