ருளர் சமூக மக்களின் வாழ்க்கை இருட்டில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை என்பதையே, பெரியகாட்டுப்பாளையம் சம்பவம் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த வடிவேல் மற்றும் அவர் மனைவி சங்கீதா ஆகியோரை நாம் சந்தித்து, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி விசாரித்தபோது... "கடந்த 2015 நவம்பரில் ஏற்பட்ட புயல் மழையால், எங்கள் நன்னீர்க்குப்பம் கிராமமே தண்ணீரில் மூழ்கி பலத்த சேதமடைந்தது. அதனால் வாழ வழியின்றித் தவித்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த நாங்களும், எங்கள் உறவினர்களான முருகன், ராஜேந்திரன், செல்வமணி மனைவி சுமதி, நடராஜன் ஆகிய நான்கு குடும்பத்தினரும் எங்களுக்கு வாழ இடம் தருமாறு அரசிடம் மனு கொடுத்தோம். எங்களுக்கு, பண்ருட்டி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி பகுதியில் தொகுப்பு வீடுகளை அரசு கட்டிக் கொடுத்தது. அங்கே வருமானத்திற்கு வழியில்லாததால், நாங்கள், எங்கள் குழந்தைகள் விஜய ஹரிணி, விஜய ஹரிஹரனுடன் நாமக்கல்லில் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறோம். வருடத்தில் 9 மாதங்கள் செங்கல் சூளையில் இருப்போம். மழைக்காலம் நெருங்கும்போது எங்கள் ஊருக்கு வந்துவிடுவோம்.

hh

கடந்த 15ஆம் தேதி, பெரியகாட்டுப்பாளையம் வீட்டுக்கு வந்தோம். அப்போது ஊராட்சிமன்றத் தலைவரின் உறவினரான விக்கி என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து, "ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் உங்களிடம் செல்போனில் பேசவேண்டும் என்கிறார்' என்று செல்போனைக் கொடுத்தார்.

Advertisment

அப்போது லைனில் வந்த சேர்மன் சண் முகம், ’"யாருடா நீ? என்ன ஊரு? உனக்கு இங்கு என்னடா வேலை?'’ என கேட்டார்.

அதற்கு நான், "உங்கள் ஊரில் அரசு எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்கியிருக்கு. அதில் எட்டு ஆண்டுகளாகக் குடியிருந்து வரு கிறேன்' என்று கூறினேன்.

எங்கள் வீட்டில் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தைத் திறக்கப் போவதாகவும், அதனால் நாங்கள் காலிசெய்துவிட்டு ஓடவேண்டும் என்றும் மிரட்டியதோடு, வீட்டுக்கு வரும் குடிநீர் இணைப்பையும் துண்டித்தார். இதனால் காடம்புலியூர் காவல் நிலையத்திற்குச் சென்று, புகார் கூறினோம். உடனே ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகமும் பழனியும் காவல்நிலையம் வந்து, உதவி ஆய்வாளர்களிடம் பேசினார்கள்.

Advertisment

சிறிது நேரம் கழித்து எங்களை அழைத்த உதவி ஆய்வாளர், "இருவரும் சமாதானமாகச் செல்லுங்கள் என்று சொன்னதோடு, மேல் நடவடிக்கை வேண்டாம்' என்று எங்களை எழுதிக் கொடுக்கச் சொன்னார் எஸ்.ஐ. இதன்பிறகு நாங்கள் மாவட்ட எஸ்.பி. ராஜாராமை சந்தித்துப் புகார் அளித்தோம். அவர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லாவுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். எனவே எங்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்குவதோடு, நாங்கள் எங்கள் வீட்டில் வாழ, எங்களுக்கு உதவவேண்டும்''’என்றார்கள் கலக்கமாய்.

ff

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகத்தை சந்தித்து, இது நியாயமா? என்று கேட்ட போது... "வடிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் குடியிருக்க வில்லை. அதனால் அந்த வீட்டில் அங்கன் வாடியை நடத்த, வாடகைக்குக் கேட்டோம். அவர்கள் மறுத்து காவல்நிலையத்தில் புகாரளித்தனர். காவல்துறை அதிகாரிகளோ, இரு தரப்பினரும் சமாதானமாகச் செல்லும் படியும், மேல் நடவடிக்கை தேவையில்லை என்றும் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றனர். மற்றபடி அவர்களை யாரும் மிரட்டவோ, வீட்டை அபகரிக்கவோ முயற்சி செய்யவில்லை'' என்றார் நம்மிடம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் பழங்குடி இன மக்கள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு நம்மிடம், "பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர், இந்த அப்பாவி இருளர் இன மக்களின் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் கடுமையாக மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினரை சந்தித்தோம். காவல்துறை, ஊராட்சிமன்றத் தலைவருக்கு சாதகமாகவே நடந்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்தினருக்கு நீதிவேண்டி 23ஆம் தேதி கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்தோம்.

ffaf

இதன்பிறகுதான் 21ஆம் தேதி இரவு ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். பண்ருட்டி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில் சுமார் 180 பழங்குடி இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பட்டா என்ற பேப்பரை மட்டும்தான் கொடுத்துள்ளார்கள். அதற்கான இடம் எங்கே இருக்கிறது என்பதை அளவீடு செய்து அவர்களுக்கு ஒதுக்கவில்லை. காரணம், இருளர் சமூகத்தினரால் லஞ்சம் கொடுக்க முடியவில்லை. இந்த விவகாரத்திற்காக இருளர் இன மக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தில் குதிக்கத் தயாராகிவருகிறோம்''” என்றார் அழுத்தமாய்.

பண்ருட்டி அருகே உள்ளது எம். ஏரி பாளையம். இந்த கிராமத்தின் ஏரிக்கரை ஓரமாக சிறு குடிசையில் வாழ்ந்துவருகிறார் ராமராஜன். இவருக்கு இரண்டு மனைவிகள் 11 பிள்ளைகள். ராமராஜன் குடும்பத்திற்கு இன்றுவரை குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை எதுவும் இல்லாததால் அரசின் எந்த உதவி திட்டங்களும் கிடைக்கவில்லை. கூலி வேலைசெய்து வந்த ராமராஜனை சமீபத்தில் கட்டுவிரியன் பாம்பு கடித்து அதனால் உடல்நிலை மிகவும் சீர்கெட்டு வீட்டிலேயே அவர் முடங்கிக் கிடக்கிறார். பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர் பெரும் முயற்சி செய்து காடம்புலியூர் ராஜகணபதி நகரில் அரசு வீட்டு மனைப் பட்டா ஒன்று வாங்கிக் கொடுத் துள்ளனர். இந்த குடும்பத்திற்கு அரசு ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தினர்.

ஆட்சி மாறியும் இருளர் சமூக மக்களின் வாழ்வில் வெளிச்சம் நுழையாதது கொடுமை யானது.