ந்த பெட்ரோல் பங்க் திருவண்ணாமலை- ஆரணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அதன் அருகில் இருக்கும் புங்க மரத்தின் மறைவில் இரவு 7 மணிக்கு மழைக்காக ஒதுங்கிய அந்த சமூக சேவகரின் இருசக்கர வாகனத்தை நெருங்கினார் ஒரு பெண்மணி.

cc

""300 ரூபாய் தான் சார்'' என தயங்கி தயங்கி சொல்ல, என்ன சொல்கிறார் என புரிந்ததும் அதிர்ச்சியானார் சமூக சேவகர். அந்தப் பெண்மணியும் கலக்கத்துடன்தான் நின்றிருக்கிறார். உழைத்து உரமேறிய உடல். ஏன் இப்படி கேட்கிறார் என சமூக சேவகர் குழம்பி நிற்க, அந்தப் பெண்மணியோ அங்குள்ள ஒரு ரைஸ்மில் பெயரைச் சொல்லி, ""அங்கதான் வேலை செய்துக் கிட்டு இருந்தேன். கொரோனா பரவுதுன்னு சொல்லி பாதிப்பேரை நிறுத்திட்டாங்க. இப்போ எனக்கு வேறு வேலையும் இல்லை. கூலியா கிடைச்ச மிச்ச அரிசியில்தான் தினமும் கஞ்சி குடிக்கறோம். அதுக்கு வெங்காயம் வாங்ககூட காசில்லை. அதனாலதாங்கய்யா இப்படி... வயித்தை நிறைக்க மானத்தை அடமானம் வைக்க வேண்டியிருக்கு'' என கண்கள் கலங்கியுள்ளார்.

""உன் வீட்டுக்காரர் என்னமா செய்யறார்?''னு சமூக சேகவர் கேட்க, ""அவருக்கும் வேலையில்லை. இங்கதான் பக்கத்தல, சைக்கிள் வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்காரு. நான் போனதும் பசங்களுக்கு ஏதாவது வாங்கிக்கிட்டு வீட்டுக்கு போவோம்''னு அந்தப் பெண்மணி சொன்னதும், சமூக சேவகர் உடைந்தே போய் விட்டார். சாப்பிட ஏதாவது வாங்கிக்குங்க என பண உதவி செய்துவிட்டு, மழையில் நனைந்த படியே டூவீலரில் வீட்டுக்கு வந்திருக்கிறார். நம்மிடம் வேதனைக் குரலில் அவர் இதைச் சொன்னபோது, நெஞ்சு அடைத்தது.

Advertisment

கிராமம் ஒன்றில் கீற்று கொட்டகை போட்டு எளிமையாக முடிவெட்டும் தொழிலாளி அவர். கொரோனாவுக்கு பயந்து அவரது கடைக்கு ஷேவ் செய்யக்கூட யாரும் வருவதில்லை. திருமணம், இறுதி காரியம் போன்ற நிகழ்வுகளுக்கு நாதஸ் வரம், தவில் வாசிக்க போனால் வருமானம் வரும். இப்போது எந்த சுபநிகழ்ச்சியும் நடைபெறாததால் வருமானம் இல்லை. அவரின் மனைவி பச்சிளம் குழந்தையை வைத் துக்கொண்டு சாப்பாட்டுக்கே துயரப்பட்டுள்ளார். தாய்ப்பாலும் சுரக்கவில்லை என்பதை அறிந்து அரசு மருத்துவ அதி காரி ஒருவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய, தற்போது அந்த பச்சிளம் குழந்தைக்கு பால் கிடைக்கிறது.

cc

Advertisment

இப்படி தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர், நகரத்துக்கு நகரம் கொரோனா பாதிப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி, குடும்பத்தை காப்பாற்ற, குழந்தைகளுக்கு பொருள் வாங்க பெண்கள் தங்கள் உடலை விற்கும் நிலைக்கு சென்றுள்ளார்கள். உடல் உழைப்பை செலுத்த தயாராகயிருந்தும், வேலையில்லாமல் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ஆண்கள் என்கிற பகீர் தகவல்கள் நாள்தோறும் நம் காதுகளை அதிரவைக்கின்றன.

தமிழ்நாடு தொழிலாளர் யூனியன் அமைப்பின் பொதுச்செயலாளர் ரூபன் நம்மிடம், ""வேலூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்து வேலை செய்கிறார்கள். இதில் தற்போது 30 ஆயிரம் தொழிலாளர்களை முற்றிலும் வேலையை விட்டு நிறுத்திவிட்டன தொழிற்சாலைகள். அவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்தவித செட்டில் மெண்ட்டும் கிடையாது. இதுபற்றி லேபர் அலுவலகத்தில் முறையிடலாம் என்றால் கொரோனாவை காரணம் காட்டி அலுவலகம் மூடி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் தொழிலாளர்கள் எப்போது வேலைக்கு அழைப்பார்கள் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் தொழிற் சாலைகள், முழு ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை மார்ச் மாதம் அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து முதலாளிகள் சங்கம், இது பேரிடர் காலம். அதனால் அரசாங்கம் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறது. வழக்கு இழுபறியாக இருப்பதால், தொழிலாளர்கள் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்கொண்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

தொழிலாளர்களின் இஎஸ்ஐ நிதி சுமார் 90 ஆயிரம் கோடி உபரியாக அரசிடம் உள்ளது. அந்த தொகையில் இருந்தாவது தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டும் இன்று வரை மத்திய மோடி அரசாங்கம் செயல்படுத்தவில்லை. மைக்ரோ பைனான்ஸ், வட்டிக்காரர்களிடம் தொழிலாளர்கள், கடன் வாங்கிவிட்டு தற்போது வேலையும் இல்லாமல் கடனையும் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். வட்டிக்காரர்களும் பைனான்ஸ் நிறுவனத்தாரும் தொழிலாளர்களின் வீட்டுக்குள் வந்து, மிச்சமிருக்கும் அரைப் பவுன், ஒரு பவுன் நகையை வட்டிக்காக எடுத்துச் சென்ற அவலம் நடந்துவருகிறது'' என்றார்.

cc

தொழிலாளர்கள் நிலை பற்றி நம்மிடம் பேசிய ஏஐடியூசியின் மாநில துணை தலைவரும், சிபிஐ வேலூர் மாவட்ட துணை தலைவருமான தேவதாஸ், ""தமிழகத்தில் அதிக தொழிலாளர்கள் நிரம்பியுள்ள பகுதியென்றால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சென்னை, காஞ்சிபுரம் போன்றவைதான். இங்கு தான் கனரக தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் அதிகம். அதிக வெளி நாட்டு செலாவணி பெற்று தரும் மண்டலங்கள் இவை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வேலை செய்கிறார்கள். கொரோனா தொடங்கிய மார்ச் மாதம் இந்த நிறுவனங்கள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் மூடினாலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரச் சொன்னது அரசாங்கம், எந்த நிறுவனமும் தரல. தந்தாங்களான்னு சரிபார்க்கவும் எந்த அதிகாரியும் முன்வரவில்லை. தொழிலாளர்கள், தொழிலாளர் நலவாரியத்தில் முறையிடவும் வழியில்லாமல் பசியும் பட்டினியுமாக இருந்தனர்.

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் அதான் இலவச அரிசி தருகிறோமே என்றது. எங்கள் ஆய்வுப்படி 80 சதவித மக்களுக்கு கடந்த 2 மாதமாக அரசாங்கம் தருவதாக சொன்ன இலவச அரிசி, பருப்பு போன்றவை கிடைக்கவே யில்லை என்பதே நிஜம். அதே போல் மத்திய அரசு தொழிலாளர்களுக்கு தருவதாக சொன்ன 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப் பும் தரவில்லை என்பதே பெரும்பாலான மக்களின் குற்றச்சாட்டு. அரசாங்கம் தந்த ஆயிரம் ரூபாய் என்பது கேஸ் சிலிண்டர் வாங்கவும், வெறகு வாங்கவுமே சரியாகி விட்டது. பிறகு எப்படி குடும்பம் நடத்துவது? தற்போது மூடப்பட்ட தொழிற் சாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை திறக்கப்பட்டுள்ளன. அப்படி திறக்கப்பட்ட தொழிற்சாலைகளில் குறைந்த வேலையாட்கள் மட்டுமே வேண்டும் எனச்சொல்லி 50 சத வீதமான பணியாளர்களை மட்டுமே அழைக்கிறது. மீதி 50 சதவீதமான தொழிலாளர்களுக்கு வேலையில்லை.

நிறுத்தப்பட்ட 50 சதவீதத்தினர் யார் என்றால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களை நம்பித்தான் அந்த குடும்பமே உள்ளது. ஆனால் தொழிற்சாலை முதலாளிகள் ஈவு இரக்கம் இல்லாமல் அவர்களை வெளியே துரத்திவிட் டார்கள். இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்கள் தான். வேலைக்கு வரும் 50 சதவீத தொழிலாளர் களுக்கும் மாதத்தில் 10 முதல் 15 நாட்கள்தான் வேலை தருகிறார்கள், மீதி நாட்கள் வேலை கிடையாது. இந்த 10 நாள் சம்பளத்தை வைத்தே அவர்கள் அந்த மாதத்தை கடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்கள். ஏற்கனவே கூலி குறைவு என்கிற பிரச்சனை உள்ளது, இப்போது பத்து நாள் தான் வேலை என்பதால் சராசரியான வாழ்க்கை கூட வாழ முடியாமல் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என்பதே நிதர்சனம்.

இதனால்தான் எங்கள் கட்சி உட்பட எதிர் கட்சிகள் அனைத்தும், மத்திய அரசு ரூபாய் 7,500, மாநில அரசு ரூபாய் 5,000 நிதி என மொத்தம் ரூபாய் 12,500 ரூபாய் நிதி தரவேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டமும் செய்தோம். மத்திய, மாநில அரசுகள் அதனை இப்போது வரை காதில் வாங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்'' என்கிறார்.

பிச்சை எடுக்கும் அவலமும் பாலியல் தொழிலுக்கு ஆளாகும் துன்பமும் தொழிலாளர்களைத் தற்கொலைக்குத் தள்ளுகின்றன. தொழிலாளர்களின் கோர தற்கொலை உச்சம் பெரும்முன்பு அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- து. ராஜா