கந்துவட்டிக் கொடுமை யின் உச்சமாக, திருவாரூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இச் சம்பவம் மக்களைப் பெரிதும் நடுங்க வைத்திருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கிராமம் சோனாப்பேட்டை. அங்கே விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மனைவி பெயர் இந்துமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
அதே ஊரைச் சேர்ந்த கந்துவட்டி ஆசாமியான காந்தி, கந்துவட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். அவரிடம் அவசரத்திற்குப் பணம் வாங்கிய பலரும், பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்களாம். தான் கொடுக்கும் பணத்திற்கு உத்தர வாதமாக நிலப் பத்திரங்களையோ, ரேஷன் கார்டுகளையோ, ஆதார் அட்டையையோ, ஏ.டி.எம். கார்டுகளையோ வாங்கி வைத்துக் கொள்வது காந்தியின் வழக்கமாம். பணம் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், வட்டிக்கு மேல் வட்டி போட்டு அடாவடி செய்து பணத்தை வசூலிப்பாராம் காந்தி.
அப்படி அவரிடம் சிக்கியவர்தான் இந்துமதி. அவரை அவர் வீட்டிற்கே வந்து, அவரது பிள்ளைகள், கணவன் ஆகியோர் கண்முன்னே, கதறக் கதற டிராக்டர் ஏற்றிக் கொலை செய்து அந்த ஏரியாவை நடுங்க வைத்திருக்கிறாராம் அந்த கொடூர வில்லன் காந்தி.
இது குறித்து இந்துமதியின் கணவர் சிவாஜியிடம் நாம் கேட்டபோது "வாங்கிய பணத்துக்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து பைசல் பண்ணிவிட்டோம். என்கிட்ட நிலத்த விற்காம வெளியில எதுக்கு வித்தீங்க, அப்படின்னா வட்டி இன்னும் இரண்டு லட்சம் தரணும்னு கேட்டு காந்தி மிரட்டினார். திடீர்னு டிராக்டர்ல வீட்டுக்குள்ள வந்து ஓரமா நின்ன மருமகன் காரை இடிச்சார். வீட்டுக்குள்ள இருந்து ஓடிவந்து ஏம்பா இப்படி செய்யுறன்னு இந்துமதி தடுக்க, காந்தி கோபமாயிட்டார். அதனால் அவர் காலைப் பிடிச்சிக்கிட்டு, என் மனைவிய விடுப்பான்னு கதறினேன். என் பிள்ளைகளும் கதறினாங்க. அப்படியிருந்தும், கொஞ்சம்கூட ஈவு இரக்கமே இல்லாம, எங்க கண்ணு முன்னாடியே என் மனைவி மேல் டிராக்டரை ஏற்றிக் கொன்னுட்டான் அந்தப் படுபாவி. இனிமே நாங்க எப்படி வாழப் போறோம்னு தெரியல''’என தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
இந்துமதியின் உறவினர்களோ, "கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு காந்தியிடம் நான்கு லட்சம் கடன் வாங்கினோம். அந்த கடனுக்காக நிலப் பத்திரத்தைக் கொடுத்திருந்தோம். ஒரு வருடம் கழித்து வட்டியும், முதலுமாகச் சேர்த்து, ஒன்பது லட்சம் கொடுத்து முடிச்சிட் டோம். இது உள்ளூர் பஞ்சாயத்துவரை போனது. பிரச்சினை முடிந்து, வாங்கிய கடனை திருப்பி கொடுத்த பிறகும் நிலத்துப் பத்திரத்தைக் கொடுக்காமல் மேலும் வட்டி கேட்டு, தொடர்ந்து பிரச்சினை செய்துவந்தார். இன்னும் இரண்டு லட்சம் தரவேண்டும், இல்லன்னா குடும்பத்தோடு எல்லோரையும் தீர்த்துடு வேன்னு ஒவ்வொருமுறையும் மிரட்டுவார். அதுமாதிரியே 30 ஆம் தேதி இருட்டுற நேரத்துல டிராக்டர்ல வேகமாக காந்தி வந்தார். எனக்குத் தரவேண்டிய பணத்தைக் கொடுங்க, இல்லன்னா உங்க நிலத்தை எழுதிக் கொடுங் கன்னு கண்டபடி வீட்டிலிருந்தவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டிக்கிட்டே வந்தவர், மருமகனின் கார் நிறுத்தியிருந்ததைப் பார்த்து, கடன் வாங்குற நாய்களுக்கு காரு ஒரு கேடு...என்றபடியே டிராக்டரால் அந்த காரை மடார் மடார்னு மோதி உடைத்தார்.
கார் உடைக்கிற சத்தம்கேட்டு இந்துமதி ஓடிவந்து, டிராக்டரை மறிச்சாங்க. கொஞ்சம் கூட பயமில்லாமல் காரோடு அவங்களையும் சேர்த்து ஏற்றிவிட்டு டிராக்டரோடு தப்பிச் சென்றுவிட்டார்'' என்கிறார்கள்.
இந்த கொலை குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தலை மறைவாக இருந்த காந்தி, பட்டுக் கோட்டை காவல் நிலையத்தில் ஆஜராக, அவரை நீடாமங்கலம் போலீசார் அழைத்துவந்து முதற்கட்ட விசாரணையை முடித்த பின் சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து சோனாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டபோது, "எங்க முகத்தையோ, பெயரையோ போட்டுடாதீங்க'’என பயந்தபடியே நம்மிடம் பேசினார்கள்.’
"காந்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாடி வரைக்கு ஏழ்மையாக இருந்தவர். மலேசியா விற்குப் போய்வந்த பிறகு கோடீஸ்வரராக இருக்கிறார். அது எப்படி என்பது மர்ம மாவே இருக்கு. கோடி ரூபாய் கேட்டாலும் ஒரே பேமண்டாகக் கொடுப்பார். ஒருவருடம் வரை அசலுக்கு வட்டிபோடுவார், வருடம் முடிந்ததும் வட்டியையும் அசலோடு சேர்த்துவிடுவார். இப்படி வட்டி மேல் வட்டி ஏறி, நிலங்களையும் இடங்களையும் அவரிடம் இழந்தவர்கள் ஏராளம். அவரால் பாதிக்கப்பட்டவங்க புகார் அளிக்கப் போனால் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டாங்க. இது காந்திக்கு தைரியத்தைக் கொடுத்துவிட்டது. கடன் கேட்டு அடாவடி செய்ததில் ஒரு பெண்ணின் கர்ப்பமே கலைந்துபோனது. அவங் களுக்கு இன்றுவரை குழந்தை இல்லை. இது குறித்தும் புகாராகி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊராட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் நாற்பது லட்சத்திற்கு மேல் கடன் வாங்கி யிருக்கார்போல. அவரையே அடிக்கப் போயிருக்கிறார் காந்தி. அரசியல் செல்வாக்கு கொண்ட அவருக்கும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அலுவலகத்தில் இருப்பவ ரின் சகோதரியான இந்துமதிக்கே இந்த நிலைமை என்றால் எங்க நிலமைய யோசித்துப் பாருங் கள்''’ என்றார்கள் பதட்டமாய்.
இப்படிப்பட்ட திகிலூட் டும் கந்துவட்டிக் கொடுமை களுக்கு தமிழக அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது?