மெரிக்கன் மிலிட்டரி வார்ம் ((AMERICAN MILITARY WARM)) எனப்படும் அமெரிக்க ராணுவ படைப்புழு அடையடையாய் பயிர்களைத் தாக்கி நாசம்செய்வதால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், கரிசல்குளம், குருவிகுளம் பிர்க்கா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதி வேளாண் மக்கள்.

தென்காசி மாவட்டத்தின் கரிசல்குளம் கிராமத்தில் மட்டும் சுமார் 3,100 ஏக்கர் விளைநிலங்களில் மக்காச்சோளம், சூரியகாந்தி மகசூல் தான் பிரதானம். 12 வருடங்களாக இவற்றை பயிரிட்டுவருகிறார்கள். எந்நேரம் எந்த நோய் தாக்கிப் பயிர்களை அழிக்குமோ என்கிற பதட்டத்தி லிருக்கிற அந்த விவசாயிகளிடம் பேசினோம்.

tt

"தென்காசி மாவட்டத்தின் கீழ்க்கோடி பகுதியான கரிசல்குளம், குருவிகுளம் மற்றும் திருவேங்கடம் ஏரியாக்களை ஒட்டிய அத்தனை நிலங்களும் வானம் பார்த்த பூமிதான். மற்ற பகுதிகளைப் போன்று பணப்பயிரோ, பருத்தியோ போடமுடியாது. தண்ணீர் வரத்திருக்கும் பகுதிகளுக்குத்தான் அந்தப் பாசன முறை சாத்தியம். வருடத்தில் இரண்டு முறை பொழிகிற கோடையின் தென்மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழைதான் எங்களுக்குப் பிரதானம். அதனால்தான் கோடைக்கு ஏற்ற பயிரான மக்காச்சோளம் பயிரிடுவது. கரிசல் பூமியான இந்தப் பகுதியில் கிணற்றுப் பாசனம் கைகொடுக்காது. கிணற்றில் போதிய தண்ணீரும் ஊறுவதில்லை. உப்புத் தண்ணீரும் மக்காச்சோளப் பயிர் மகசூலுக்கு ஒத்துவராது.

Advertisment

அதனால் காலத்தில் பெய்கிற மழைத் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்பதால் புரட்டாசி மாதத்திலேயே மக்காச்சோள விதைகளை ஊன்றிவிடுவோம். பின்னர் தொடர்ந்து பெய்கிற மழையை விளைநிலங்கள் உள்வாங்கிக் கொள்வதோடு கம்மாய்களில் மழை நீர் வந்துவிடும். மற்ற பயிர்களைப் போல அதிக நீர் தேவையில்லை. மக்காச்சோளப் பயிர்கள் உள்வாங்கும் முதல் தண்ணீரிலேயே முட்டுக்கால் வரை வளர்ந்துவிடும். பின்னால் தேவைப்படும் தண்ணீரை மகசூலுக்குப் பயன்படுத்துவோம். களை போன்ற ஊடு முளைப்புகளிருக்காது. மக்காச் சோளம் நல்ல விளைச்சல் என்றால் ஏக்கருக்கு 30 குவிண்டால் கிடைக்கும்.

கரிசல்குளத்தில் மட்டும் 3100 டன், பிர்க்காவில் மொத்தம் 25 ஆயிரம் டன் என்று மக்காச்சோளம் விளைகிறது. ஒட்டியுள்ள பிற பகுதிகள் சேர்த்து மொத்தம் 20 ஆயிரம் ஏக்கரில் இது பயிரிடப்படுகிறது. கரிசல்குளம், குருவிகுளம், பிர்க்காவில் உள்ளவர்களில் 80 சதவிகிதம் பேர் விவசாயிகளே. மக்காச்சோளம் மகசூல்தான் எங்களின் ஒட்டுமொத்த ஜீவாதாரம்.

சத்துமாவு தயாரிப்பு, கோழி, மாட்டுத்தீவனங்களுக்கு மக்காச் சோளம் ஊட்டச்சத்தாக இருப்ப தால், முன்பெல்லாம் வியாபாரி கள் குவிண்டால் ஒன்றுக்கு இரண்டாயிரம் விலையில் எங்களிடமிருந்து கொள்முதல் செய்தார்கள். சைடு டிஷ் உணவுக்காக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அந்த விற்பனையில் எங்களுக்கு ஓரளவு லாபமாகக் கிடைத்தது. சொல்லிக் கொள்ளும்படியான வருமானமில்லை, குடும்பப்பாடு கழிந்தது.

Advertisment

tt

ஆனால் மத்திய அரசு சில வருடங்களாக எத்தனால் தயாரிப்பிற்காக மக்காச்சோளத்தை எங்களிடமிருந்து குவிண்டால் ஒன்றுக்கு இரண் டாயிரத்து ஐநூறு வீதம் கொள்முதல் செய்தததால் எங்களுக்கு பயிர் செலவு போக ஓரளவு லாபம் கிடைத்தது. பிரச்சினை என்னான்னா இடைத் தரகர்களும், கம்பெனிக்காரர்களும் கொள்முதல் செய்வதால் அவர்களின் கமிசன் காரணமாக விலையில் எங்களுக்கு சற்று அடி விழுந்துவிடுகிறது. மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் எடுக்கப்பட்டு வெளியேறும் சக்கைகளைக் கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கப்பட்டுவிடுவதால் வாங்குபவர்களுக்கு இரட்டை லாபம். அவர்களைப் போன்று எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.

மத்திய அரசு நேரடியா எங்களிடமிருந்து கொள்முதல் பண்ணா லாபம் ஓரளவு கிடைக்கும். ஆனாலும் கெடைக்கிற இந்த விலை எங்களுக்கு ஓரளவு ஆறுதலைக் குடுத்தாலும் கரணம் தப்புனா மரணம்கிற மாதிரி மக்காச்சோளத்த தாக்குற அமெரிக்கன் மிலிட்டரி வார்ம்ன்ற புழுப்படை, ஒட்டுமொத்த மகசூலையும் விளைச்சலையும் சூறையாடி அழிச்சிரும்.

மக்காச்சோளச் செடியில கருது புடிச்சி பால் உண்டாவுற நேரத்தில இந்தப் புழுக்கள் ஒட்டிக்கிட்டு முட்டை போட்டு புழுக்களைப் பொறிச்சிடும். அடை அடையாய் புழுக்கள் உற்பத்தியாக, நல்லா விளைஞ்ச கருதுகள தின்னழிச்சு செடிகளையும் சீரழிச்சிரும். மொத்த மகசூலையும் சர்வ நாசமாக்கிரும். விட்டா கட்டுப்படுத்தவே முடியாது. இப்படி அடை அடையாய் ராணுவம் மாதிரி புழுக்கள் தாக்குற தால இது அமெரிக்கன் மிலிட்டரி வார்ம்னு விவசாய ஆபீஸர்க சொல்றாக.

இதுகள்ட்டயிருந்து பயிர்களக் காப்பாத்த ணும்னா கோராஜென்ற (ஈஞதஆஏஊச) மருந்துகள ரெண்டு மூணு தடவ தெளிக்கணும். அந்த மருந்துக வெளியில கெடைக்காது. மத்திய அரசிடமிருந்து மாநில அரசு மூலமாதான் எங்களுக்குக் கெடைச்சது. முன்பெல்லாம் மத்திய அரசு எங்களுக்கு பாதி மானிய விலைல குடுத்தது. இப்ப அந்த மானியத்தை நிறுத்திட்டாங்க. நாங்க முழு விலை குடுத்து வாங்க வேண்டியதாயிருக்கு. இதனால எங்களுக்கு உற்பத்திச் செலவும் அதிகமாயிட்டுது. மருந்தடிச்சு புழுக்களை ஒழிச்சாலும் ஏக்கருக்கு 5 குவிண்டால் மகசூல் நட்டமாயிரும்.

மானாவாரிப்பகுதியில் நாங்க போடுற சூரியகாந்தி பயிர் மகசூல்லயும் புழு பூச்சிகளால சிக்கல்தான். சூரியகாந்தியில பூவுல வெளைகிற விதைக தான் எண்ணெய்க்கு முக்கியம். வெளைச்சல்ல பூக்கள் நல்லா விரிஞ்சி விதைக அதிகம் உண்டானாத்தான் குவிண்டாலுக்கு ஐந்தாயிரம் கிடைக்கும். சூரியகாந்தி பயிர் வெளைஞ்சி பூ நல்லா விரியப்போற 45-50 வது நாள்ல ஃபங்கஸ்ன்ற பூஞ்சாண நோய் தாக்கிரும். அப்ப பூக்கள் விரியாது. பயிர் கெட ஆரம்பிச்சுரும். விதைகள் பிடிக்காம போயிரும். ட்ரோன் மூலமா மருந்தடிச்சுத்தான் விளைச்சலைக் காப்பாத்தமுடியும்.. அரசாங்கம் கை கொடுத்தாத்தான் விவசாயி தப்பிக்க முடியும்''’என்கிறார்கள் இந்தப் பகுதி வேளாண் மக்கள்.

இதுகுறித்து கரிசல்குளம் பிர்க்கா விவசாயிகள் சங்கத் தலைவரான சந்தானம், “"மக்காச்சோளப் பயிர்களுக்கு படைப்புழுவுக்கு அடிக்கிற கோராஜென் மருந்து மார்க்கெட்ல 100 மில்லி ஆயிரம் ரூவா. அரசாங்கத்திலதான் கெடைக்கும். ஏக்கருக்கு 100 மில்லின்னு மூணுதடவ அடிக்கணும். அதுக்கே மூவாயிரம் செலவு. முன்பு, அரசு மானியத்தில 100 மில்லி மருந்த ஐநூறு ரூபாய்க்கு தந்தாக. அது எங்களுக்கு ரொம்ப உதவியாயிருந்துச்சு.

அதேமாதிரி மருந்தடிப்பு சாதனங்களும் எங்களுக்கு வாடகைக்கு தந்தாக. ரெண்டு வருஷமா அரசு குடுத்து வந்த மருந்துக, மானியத்த நிறுத்திருச்சு. ட்ரோன் போன்ற மருந்தடிப்பு உபகரணங்களும் கிடைக்கறதில்ல.

இதனால விவசாயச் செலவும் அதிகமாகுது. விளைஞ்ச பொருட்கள கூட்டுறவு சங்கத்தில வைச்சு 75% பெறுகிற கடனுக்கு 11% சதம் வட்டி + குடோன் வாடகை போடுறதும் அதிகம். எங்களுக்கு கடுமையான பாரமாயிருக்குற இந்த வட்டி, வாடகையைக் குறைக்கணும். அப்பதான் விவசாயிக தப்பிக்கமுடியும். கோரிக்கை மேல கோரிக்கை வைச்சிட்டு வர்றோம். அரசு காதில விழமாட்டேங்குது''’என்றார் வலியும் வேதனையுமாய்.

ஆலமநாயக்கர்பட்டி விவசாயியான கிருஷ்ணன், “"வரவுக்கும் செலவுக்குமே போராட்டம். என்னோட 40 ஏக்கர்ல பயிர் போட்டும் முதலை எடுக்கவே பாடுபட வேண்டியிருக்கு. சமயத்துல ஏக்கருக்கு முப்பதாயிரம் செலவு பண்ணியும் பத்தாயிரம் கெடைக்கிறதே பெரிசுதான். என் நெலமதான் இங்க உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு''’என்கிறார் மனமுடைந்து.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்