பொதுச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் செயலே தீண்டாமை. இது பட்டியலினத் தீண்டாமை கிடையாது. ஒரே சாதிக்குள் தீண்டாமை மனப் பான்மையுடன் சாதியைவிட்டு ஒதுக்கும் கொடுஞ்செயல். அருப்புக்கோட்டையில் 148 பேரை தங்களது சமூகத்திலிருந்து விலக்கிவைப்பதாக தீர்மானமே நிறைவேற்றியிருக்கின்றனர். இறப்புக்குப்பின் மயான உரிமை மறுக்கப்பட, தெய்வானை என்பவரது உடலுக்கு உற்றார் உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், வருவாய்த்துறையும் காவல்துறையும் சமாதானக் கூட்டம் நடத்த வேண்டியதாயிற்று. சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகாமல் தடுத்திட, மயானத்தில் தெய்வானை உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரையிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. என்ன விவகாரம் இது?
அருப்புக்கோட்டையில் புளியம்பட்டி - திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபை உள்ளது. ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட ஏழு கோவில்கள் இச்சபைக்கு பாத்தியப்பட்டவை. வணிக வளாகங்கள், வீடுகள் போன்ற சொத்துக்களோடு, மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. பரிபாலன சபை தேர்தல், அறங்காவலர் தேர்தல் நடந்தபோது இரு பிரிவுகளாகப் பிரிந்து முட்டிக்கொண்டனர். விவகாரம் கோர்ட் வரையிலும் போயிருக்கிறது. இதற்குமுன் 9 வருடங்களாக சாலியர் பரிபாலன சபையின் தலைவராக இருந்த என்.ஏ.சுப்பிரமணியம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு களைக் கூறிவருவதாகச் சொல்லப்படும் புதிய நிர்வாகிகளான தலைவர் சுந்தரமகாலிங்கம், சோம சுந்தரம், யோகா சுந்தர ராஜன், ஆறுமுகம் உள் ளிட்டோரே, என்.ஏ. சுப்பிரமணியத்தின் மனைவி தெய்வானை இறப்பை சமுதாய அரசிய லாக்கி, மயான ரசீதுபோட மறுத்து, சமாதானக் கூட் டத்தில் காவல்துறையிடம் குட்டு வாங்கியுள்ளனர்.
தெய்வானை இறுதி ஊர்வலத்தின்போது சாலியர் சமுதாயத்தினர் குமுறலை வெளிப்படுத்தினர். நம்மிடம் கொதிப்புடன் பேசிய சண்முகசுந்தரம் "சாதியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர்களில் தெய்வானை அம்மாளின் பெயர் இல்லை. பிறகெதற்கு சமுதாய மயானத்தில் அவ ருடைய உடலை எரிப்பதற்கு ரசீது போட மறுத்தார்கள்? என்.ஏ.சுப்பிரமணியத்தின் மீதான முன்பகையை அவருடைய மனைவி இறப்பிலா காட்டுவது? இறந்தவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதுதானே மரபு? சமுதாய மக்களிடையே இணக்கமாக வாழ்ந்து மறைந்தவர் உடலை உதாசீனப்படுத்தி, அவமானப்படுத்திய பண்பற்ற செயலை, சமுதாய நிர்வாகிகளே முன்னின்று செய்ததை மன்னிக்கவே முடியாது''’என்றார் ஆவேசத்துடன்.
வஞ்சிவேந்தனோ, "அருப்புக்கோட்டையில் சாலியர் சமுதாயத்தினர் 5500 பேர் வரை இருக்கிறார்கள். 168 பேர் கையெழுத்து போட்டு 148 பேரை சமுதாயத்திலிருந்து விலக்கியது கொடுமையாக இருக்கிறது. இன்றைக்கு என்.ஏ.சுப்பிரமணியத்துக்கு ஏற்பட்ட நிலைமைதானே, மற்ற 147 பேர் குடும்பத்துக்கும் இனிமேல் ஏற்படும்? கொடிய எண்ணம்கொண்ட நிர்வாகிகளால் மொத்த சமுதாயமும் தலைகுனிந்து நிற்கிறது. மற்ற சமுதாயத்தினரை சாலியர் சமுதாயத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்தவர் என்.ஏ. சுப்பிரமணியம். பரிபாலன சபைக்கு வருமா னத்தை உருவாக்கித் தந்தவர். அவருடைய வீட்டு துக்கத்தின்போது மேலும் அவரை நோகடித்திருக்கிறார்கள். இப்படி நடந்தால், சமுதாயப் பணி செய்வதற்கு இனிவரும் தலைமுறையினர் எப்படி முன்வருவார் கள்?''’எனக் கேள்வி எழுப்பினார்.
இளம்பரிதி என்பவர் "சமாதானக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், "தெய்வானை உடலை எரிப்பதற்கு மயான ரசீது போட்டுத் தந்தால், அதை வைத்து என்.ஏ.சுப்பிரமணியம் தரப்பு பின்னாளில் எதுவும் பண்ணலாம். சமுதாயத் தேர்த லில் வெற்றி பெற்றும், கடந்த 3 வருடங் களாக நாங்கள் படும்பாடு எங்களுக்குத் தான் தெரியும்'’என்று வாதம் செய்தார்கள். அப்போது குறுக்கிட்ட அதிகாரிகள், "அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டு, நிர்வாகிகளின் வாயை அடைத்தார்கள். ஒருகட்டத்தில் கோப மான தாசில்தார், நிர்வாகிகளிடம் ‘"நீங்க ரொம்ப பேசுறீங்க. இதற்குமுன் தலைவ ராக இருந்திருக்கிறார் என்.ஏ .சுப்பிரமணியம். சமுதாய மயா னத்தில் அவருடைய மனைவி உடலை எரிப்பது அவர்களுடைய உரிமை'’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, தாசில்தாரே எழுத வேண்டியதை எழுதி டைப் செய்து, ‘"எல்லாரும் கையெழுத்து போடுங்க'’என்று கறாராகக் கூறி கையெழுத்து வாங்கினார். சமுதாயத்திலிருந்து விலக்கிவைக்கும் காட்டுமிராண்டித்தனமான செயலைச் செய்துவிட்டு, சமாதானக் கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகளின் பேச்சைக் கேட்காமல், நிர்வாகிகளால் எதிர்த்துப் பேச முடிகிறதென்றால், சட்ட நடவடிக்கை பாயும் என்ற பயமே அவர்களுக்கு இல்லாமல் போனதுதான். தொடர்ந்து தவறாக நடந்துவருவதால், நிர்வாகிகள் மீது எத்தனையோ முறை காவல்துறையிடம் புகாரளித்திருக்கிறோம். காவல் நிலையத்தில் மனுவுக்கு ரசீது போடுவதோடு சரி. இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. காவல்துறை இப்படி நடந்துகொள்வதால்தான், நிர்வாகிகள் தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள்''’என்றார் வேதனையுடன்.
அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகனிடம் பேசினோம். “"அந்த நிர்வாகிகள் என்னமோ, அவர்களே நிரந்தரத் தலைவர் மாதிரி, சமாதானக் கூட்டத்தில் பேசினார்கள். ஒருவரது இறப்பில் இதுபோல் நடந்துகொள்வது சரியல்ல என்பதை அழுத்தமாகச் சொன்னோம். நல்லபடியாக இரவோடு இரவாகப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து, மறுநாள் மாலை நல்லடக்கம் பண்ணும்வரை போலீஸ் பாதுகாப்பு கொடுத்தோம்'' என்று கூறியவரை இடைமறித்த நாம், "சமுதாய நிர்வாகிகள் மீதான புகார் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?''’எனக் கேட்க, "அருப்புக்கோட்டையில் எல்லா தரப்பிலும் இரண்டு, இரண்டு பார்ட்டிகளாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் சமுதாய முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, சமுதாயத்தின் பெயரில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார்கள். அந்தச் சொத்துக்காக, ஆளாளுக்கு பிரிந்துநின்று சண்டை போடுகிறார்கள். சமுதாயத்துக்கு சேவை செய்வதற்காக தேர்தலில் நிற்பவர்கள், நல்லது செய்தால் சரிதான். நல்லது செய்தால் ஓட்டு விழத்தானே செய்யும். சமுதாய விவகாரத்தைக் கையில் எடுப்பவர்கள் காவல்துறையைப் பாடாய்ப்படுத்திவிடுவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவசரம் காட்டாமல், அதைப் பண்ணுங்க.. இதைப் பண்ணுங்கன்னு அமைதியாக வழிநடத்திச் செல்வதுதான் சரியாக இருக்கும்''’என்றார்.
எழவு வீட்டிலும் பதற்றம்! அருப்புக் கோட்டையில் காவல்துறையின் கண்முன்னே, எதுவுமே சரியாக நடப்பதில்லை!