ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதர்களைக் கடிப்பது போல, மணல் கொள்ளையில் புகுந்து பிறகு சவுடு மணலை வளைத்த மாஃபியாக்களின் ஆக்டோபஸ் கரங்கள், தற்போது எம்-சேண்ட் மணல் வர்த்தகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டன. இந்த மாஃபியாக்களை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறார்கள் அரசு அதிகாரிகள்.
வேளாண்மை மற்றும் சொந்த பயன்பாடுகளுக்காக சிறு கனிமங்களை வெட்டியெடுத்துப் பயன்படுத்துவதை முறைப் படுத்துவதற்காக தமிழ்நாடு சிறு கனிமங்கள் விதிகள் 1959-ல் வகுக்கப்பட்டன. அத்தகைய விதிகளின்படி இயங்கி வரும் தமிழகத்திலுள்ள கல்குவாரிகளுக்கு முறைப்படி லைசன்ஸ் வழங்கி அதன்மூலம் அரசிற்கு வருவாயை ஈட்டி வருகிறது தமிழக அரசின் கனிம வளத்துறை.
கல்குவாரிகள் மூலம் எம்-சேண்ட் மணலை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள் கல்குவாரி உரிமையாளர்கள். இவர்களைச் சந்தித்து 1 யூனிட் எம்-சேண்ட் மணலுக்கு 300 ரூபாய் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார்கள் மணல் மாஃபியாக்கள்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்மங்கியிடம் விசாரித்தபோது,”"தமிழகத்திலிருந்து அண்டைமாநிலங்களுக்கு எம்-சேண்ட் மணல் போகக்கூடாதுன்னு முந்தைய அரசு ஒரு ரூல் கொண்டு வந்திருந்தது. இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக் குப் போட்டிருந்தோம். கனிம வர்த்தகங்களை ஜி.எஸ்.டி.க் குள் கொண்டுவந்துவிட்ட தால் எந்த மாநிலத்திலிருந்தும் எந்த ஒரு மாநிலத்துக்கும் எம்-சேண்ட் கொண்டு போகலாம்னு தீர்ப்பு கொடுத்தது கோர்ட்.
கல்குவாரிகளை தமிழக அரசு ஏலம் விடுகிறது. அந்த டெண்டரில் கலந்துகொண்டு குவாரிகளை எடுக்கிறோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 குவாரிகள் இருக்கின்றன. இதில் ஓசூரில் மட்டும் 50 குவாரிகள். சமீபத்தில் குவாரிகளை தி.மு.க. அரசு டெண்டர் மூலம் ஏலம் விட்டதில் 1 குவாரி 5 கோடிக்கு ஏலம் போனது. ஆக, 1 கல்குவாரியின் மூலம் அரசுக்கு 5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இதுதவிர, குவாரியை நடத்த லைசன்ஸ் மற்றும் எம்-சேண்ட் மணலை எடுத்துச்செல்ல ட்ரான்ஷிட் பெர்மிட்டிற்கான ராயல்டி உள்பட அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களையும் நாங்கள் செலுத்த வேண்டும். இதுமட்டுமல்ல, க்ரஷர் பிளாண்ட் போடுவதற்கு தற்போதைய சூழலில் 15 கோடி ரூபாய் ஆகும். ஆக, அரசிடமிருந்து டெண்டர் எடுத்து 1 கல்குவாரி பிசினஸை நடத்த வேண்டுமானால் குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் தேவை. ஓசூரில் தயாரிக்கப்படும் எம்-சேண்ட் மணலில் 60 சதவீதம் தமிழகத்துக்கும் 30 சதவீதம் பெங்களூருக்கும் செல்கிறது. அந்த வகையில், பெங்களூருக்கு தினமும் சுமார் 250 முதல் 300 லாரி லோடு எம்-சேண்ட் போகிறது. ஒரு 1 யூனிட் எம்-சேண்ட் மணலுக்கு அரசுக்கு ராயல்டியாக ஜி.எஸ்.டி உள்பட 179 ரூபாய் என, 5 யூனிட் கொண்ட 1 லாரி லோடுக்கு ராயல்டி மட்டும் 895 ரூபாய் கட்டுகிறோம்.
அந்த வகையில் 1 நாளைக்கு சராசரியாக பெங்களுக்கு 300 லாரி லோடு செல்வதால் அரசுக்கு 2 லட்சத்து 68 ஆயிரத்து 500 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மாதம் 80,55,000 ரூபாய். இப்படிப் பட்ட சூழலில்தான் தற்போது ஓசூரில் குதித்துள்ள 5 பேர் கொண்ட ஒரு குரூப் எங்களை நேரடியாக அணுகி, தமிழகம் முழுவதும் நடக்கும் எம்-சேண்ட் பிசினஸை கண்காணிக்கும் பொறுப்பை மேலிடம் எங்களிடம் ஒப்படைச்சிருக்கு.
அதனால், பெங்களூருக்கு அனுப்பும் எம்-சேண்டில் ஒரு யூனிட்டிற்கு 300 ரூபாய் என 1 லாரி லோடுக்கு 1,500 ரூபாய் எங்களுக்குத் தரவேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலிடம்னா யார்? என கேட்டதற்கு முக்கியஸ்தர்களின் பெயர்களைச் சொன்னார்கள். உங்க பெயர்கள் என்ன என்றதற்கு கோவிந்தராஜ், ராஜப்பா, கலைச்செல்வன் எனச் சொன்னார்கள். மற்ற 2 பேர் தங்களின் பெயரைச் சொல்லவில்லை.
"நாங்கள் எதற்காக உங்களுக்கு 300 ரூபாய் தரவேண்டும்? சட்டப்படி டெண்டர் எடுத்து விதிகளின்படி பிசினஸ் செய்துகொண்டிருக்கிறோம். இல்லீகல் பிசினஸ் நாங்கள் நடத்தவில்லை' என மறுத்துவிட்டோம். "கேட்பதை தரவில்லையெனில், உங்களால் இந்த தொழிலை நடத்த முடியாது. ஓவர்லோடு என சொல்லி உங்கள் லாரிகளை அதி காரிகளை வைத்து ஓசூர் எல்லையிலேயே மடக்கி விடுவோம்' என அந்த மாஃபியாக்கள் மிரட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களிடம் நாங்கள் ஆலோசித்தபோது, "சட்டத்துக்குப் புறம்பாக எதையும் நாம் செய்யாத நிலையில் யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட வேண்டாம். அதையும் மீறி மிரட்டலோ வற்புறுத்தலோ வந்தால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பிவிட்டு ஸ்டிரைக் நடத்து வோம்' என முடிவு செய்திருக்கிறோம்.
ஒரு நாளைக்கு 300 லோடு எனில் 4,50,000 ரூபாய் மாஃபியாக்கள் கேட்கிறார்கள். மாதம் 1 கோடியே 35 லட்சம் ரூபாய். ராயல்டி மூலம் அரசாங்கத்துக்கு கிடைப்பதே 80 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், மாஃபியாக்கள் எதிர்பார்ப்பது 1 கோடியே 35 லட்சம். அதாவது, அரசாங்கத்தின் வருவாயை விட 54 லட்சத்து 45,000 ரூபாய் கூடுதல்.
ஆக, 1 கல்குவாரி ப்ளாண்டை உருவாக்க சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியதிருக்கிறது. இதற்காக சொத்துக்களை விற்றும், வங்கிகளில் கடன் வாங்கியும்தான் இந்த பிசினஸில் இறங்கியிருக் கிறோம். ஆனால், ஒரு பைசா முதலீடு இல்லாமலும் வியர்வை சிந்தாமலும் மாதத்துக்கு 1 கோடியே 35 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்க இந்த மாஃபியாக்கள் திட்டமிட்டு மிரட்டுகிறார்கள்''’என்று சுட்டிக்காட்டினார் மிக அழுத்தமாக.
மாமூல் தர கல்குவாரி உரிமையாளர்கள் மறுத்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டியையும், மாவட்ட சுரங்கத்துறை துணை இயக்குநர் வேடியப்ப னையும் சந்தித்து, கல்குவாரி உரிமையாளர்களிட மிருந்து யூனிட்டுக்கு 300 ரூபாய் வசூலித்துத்தரச் சொல்லி வலியுறுத்தியுள்ளது கோவிந்தராஜ் குரூப். ஆனால், அதிகாரிகள் இதற்கு மறுத்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே முகாமிட்டு அதிகாரிகளை டார்ச்சர் செய்து வரு கிறார்கள். தற்போது இந்த விவகாரம் துறையின் அமைச்சர் துரைமுருகனின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டிருக்கிறது''’ என்கிறார்கள். இது குறித்து கோவிந்த ராஜை தொடர்புகொண்டு கேட்டபோது, "நாங்கள் யாரிடமும் பணம் கேட்கவில்லை. தவறான தக வல்''’ என்றதோடு தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.
எம்-சேண்டைப் போலவே கீழடியில் களிமண்ணிலும் கூட முறைகேடு நடைபெறு கிறது. சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதிகள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தப் பகுதியிலுள்ள நிலத்தில் (புல எண்கள் 15/1ஏ மற்றும் 15/4ஏ) குவித்து வைக்கப்பட்டுள்ள ஆற்றுமணல் மற்றும் களிமண்களை விவசாயப் பயன்பாட்டிற்கு எனச் சொல்லி செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்ல மாவட்ட சுரங்கத்துறை துணை இயக்குநர் சட்டநாதன்சங்கர் அனுமதி வழங்கியிருக்கிறார். விவசாயப் பயன்பாட்டுக்கு எனச் சொல்லிவிட்டு வியாபார நோக்கத்தோடு முறைகேடு நடந்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு. இதனை எடுத்துச்செல்லும்போது அரசுக்கு சீனியரேஜ் தொகை செலுத்த வேண்டும். அந்த வகையில், 565 லோடு லாரிகளுக்கு மட்டும் சீனியரேஜ் தொகையை கட்ட வைத்துவிட்டு, எவ்வித நடைச்சீட்டும் வழங்காமல் 5000 லோடு லாரிகளுக்கு அனுமதி தந்துள்ளார் சட்டநாதன் சங்கர். இதற்காக, பெரும் பணமுதலைகளிடமிருந்து கனமான ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியுள்ளன. இதுகுறித்து சௌந்தர ராஜன் என்பவர் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளார். ஆனால், நோ ஆக்ஷன்!.
மணல், கிரானைட்ஸ், கிராவல், எம்-சேண்ட் உள்ளிட்ட கனிமவளத் தொழிலை சட்டப்படி முறைப்படுத்தினால் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இரண்டே வருடத்தில் அரசாங்கத்தின் கடனை அடைத்து விடமுடியும். ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிற அரசுகள் இந்த கனிமவளத் தொழில்களை முறைப்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை.
_________
இறுதிச் சுற்று!
பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலங் களின் கவர்னருமான இல.கணேசனின் அண்ணன் கோபாலனின் சதாபிஷேக விழா சென்னையில் நவ.3-ஆம் தேதி விமரிசையாக நடந்தது. கோடம்பாக்கம் பத்மராம் மண்டப வளாகத்தில் நடந்த இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டா லின், தெலுங்கானா கவர்னர் தமிழிசை, நடிகர் ரஜினிகாந்த், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பலரும் கலந்துகொண்டு கோபாலனை வாழ்த்தினார்கள். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முதல் நாளே சென்னை வந்திருந்தார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. விழாவிற்கு வந்த மம்தாவுக்கு, தமிழகத்தின் பாரம்பரிய இசையான செண்டை மேளம் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சதாபிஷேக விழாவில் அரசியல் மாச்சர்யங்களை ஓரங்கட்டிவிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டது விழாவின் சிறப்பு!
-இளையர்