ரியலூரில் கட்டி முடிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் மாவட்ட அலுவலகம், திறப்பு விழா காணாமல் பூட்டியே கிடக்கிறது.

2011-ல் ஜெயலலிதாவின் ஆட்சியில் இருந்த நேரத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. அலுவலகம் வைத்திருப்பது போல், அ.தி.மு.க.வுக்கும் அலுவலகம் அமைக்கவேண்டும் என்று, அப்போதிருந்த மா.செ.க்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக இடம் வாங்கி, அலுவலகக் கட்டிடங்களை அ.தி.மு.க.வினர் கட்டத் தொடங்கினர்.

அதன்படி அரியலூரிலும் தஞ்சை பைபாஸ் சாலை அருகில், அப்போதைய மா.செ. துரை மணிவேல் கட்டடம் கட்டுவதற்கு ஒரு இடத்தை விலைக்கு வாங்கினார். இந்த நிலையில் இவரது பதவி பறிக்கப்பட, அடுத்து மா.செ.வாக நியமிக்கப்பட்டார் ஆண்டிமடம் கவிதா ராஜேந்திரன். இவர், கட்சி அலுவலகக் கட்டிடத்துக்காக பூமி பூஜை போட்ட நிலையில், இவரது மா.செ. பதவியும் பறிக்கப்பட்டது.

Advertisment

add

இவருக்குப் பிறகு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் அரியலூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் சில நாட்கள் மட்டுமே இருந்தார். அவரிடம் இருந்த மா.செ. பதவியும் மாற்றப்பட்டது. பிறகு முன்னாள் அமைச்சரும் இப்போதைய ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கத்தின் ஆலோசனையின் பேரில், அவரது ஆதர வாளரான தாமரைக்குளம் ராஜேந்திரன் மா.செ.வாக நியமிக்கப்பட்டார்.

இவர் காலத்தில் கட்சிக் கட்டிடப் பணிகள் பெருமளவு முடிக்கப் பட்டது. எனினும் ஃபினிஷிங் வேலைகள் மட்டுமே உள்ள நிலை யில், இந்தக் கட்டிடப் பணியை அப்படியே போட்டுவைத்துவிட்டார் மா.செ.

இதற்கிடையில் மா.செ. தாமரை ராஜேந்திரன் அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீண்டும் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் கட்சியின் மா.செ.வாக அவரே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

இனியாவது அவர் கட்சிக் கட்டிடத்தைக் கட்டி முடித்து, திறப்பு விழாவை நடத்துவாரா? என்கிற ஏக்கத்தில் இருக்கிறார்கள் அங்குள்ள அ.தி.மு.க.வினர்.

ஏன் இப்படி கிடப்பில் இருக்கிறது கட்டிடம்? என அ.தி.மு.க.வினரிடமே நாம் விசாரித்தோம்.

"அந்தக் கட்டிடப் பணியைத் தொட்ட பலரும் பாதியிலேயே பதவியைப் பறி கொடுத்து விட்டதால், நிர்வாகிகள் பலரும் அந்தக் கட்டித்தின் அருகில் போகவே பயப்படுகிறார்கள். அந்த பயம் இப்போதைய மா.செ. தாமரை ராஜேந்திரனுக்கும் இருக்கிறது.

Advertisment

add

மேலும், இந்தக் கட்டிடத்திற்கான இடம், ஜெவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. அவர் தற்போது இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். இருவருக்கும் ஆதரவானவராக இல்லை. இப்படியொரு சிக்கலும் இருக்கிறது. இந்த நிலையில் மா.செ. ராஜேந்திரனை மாற்றவேண்டும் என்று சிலர் கட்சி மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை, ராஜேந்திரனுக்கு எதிராக அண்மையில் நடந்த மா.செ. தேர்தலின்போது, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு கொடுத்தார்,

சுந்தரேசபுரத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.கே.பழனிவேல். இவர் ஆராய்ச்சிப் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவர். பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்தவர். வசதி வாய்ப்பிலும் பலமானவர். எனினும், மா.செ.பதவி அவருக்குத் தரப்படவில்லை. அவரைப் போன்றவர்கள் பதவிக்கு வந்தால் கட்சிக் கட்டிடம் நிச்சயம் திறப்பு விழா காணும்''’என்றார்கள் பலரும் நம்பிக்கையாக.

நம்மிடம் பேசிய இன்னொரு அ.தி.மு.க. பிரமுகர் "இப்போது உடையார் சமூகத்தைச் சேர்ந்த தாமரை ராஜேந்திரன் மா.செ.வாக இருந்து வருகிறார். ஆனால் இங்கே பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும் வன்னியரில் ஒருவர் மா.செ.வாக வேண்டும் என்ற குரலும் கட்சியில் பலமாக ஒலிக்கிறது. அதனடிப்படையில் வன்னியரான பழனிவேல், மா.செ.வாக ஆக்கப்பட்டால் கட்சிக்கு விடிவு காலம் பிறக்கும்''’என்றார் அழுத்தமாக.

இந்த நிலையில், திறக்கப்படாத கட்சிக் கட்டிடம் குறித்த கருத்தை அறிய அ.தி.மு.க. மா.செ. தாமரை ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டோம்.

அவர் கூறுகையில்...

"அரியலூரைப் போலவே மேலும் சில மாவட்டங்களில் கட்சி அலுவலகம் திறக்கப்படாமல் உள்ளது. கட்சித் தலைமை அறிவித்ததும் கட்டிடம் திறப்பு விழா செய்யப்படும். சுந்தரேசபுரம் பழனிவேல் என்பவர் 2018-ல்தான் கட்சியில் இணைந்தார். மாவட்டத்தில் அவருக்கு மக்கள் தொடர்பே பெரிதாக இல்லை. ஏற்கெனவே எம்.எல்.ஏ. சீட்டுக்கு என்னைப் பரிந்துரைக்கக் கேட்டார். தற்போது மாவட்டச் செயலாளர் பதவிக்கு அவர் மனு அளித்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பழனிவேல் குறித்து சில ஊடகங்களில் பரபரப்புக்காக மிகைப்படுத்தி வெளியிடுகின்றனர். மற்றபடி அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.வில் எந்த சலசலப்பும் இல்லை'' என்றார்.