கில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழுவை 19-ந்தேதி ஈரோட்டில் கூட்டியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார். தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக 2007-ல் தனிக்கட்சி துவக்கி, கடந்த 15 ஆண்டுகாலமாக தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காகப் போராடி வருகிறார். கட்சியின் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துவரும் நிலையில்... சரத் குமாரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

sarathkumar

தீவிர அரசியலி-ருந்து சரத்குமாரும் அவரது கட்சியும் விலகிவிட்டதாக ஒரு தோற்றம் இருக்கிறதே?

பொதுவாக, அரசியலில் வெற்றி-தோல்வி சகஜமானது. ஆனால், இங்கு வெற்றி பெற்றால் தான் தீவிர அரசியலில் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது. அந்த கண்ணோட்டம் தவறானது. என்னைப் பொறுத்தவரை, பரபரப்பு அரசியலுக்கு இடமளிக்காமல் மக்களுக்கான அரசியல் பணிகளை முன்னெடுப்பதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தீவிரமாகத்தான் இயங்கி வருகிறது. இன்றைய இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் போதைப் பொருள் கலாச்சாரங்களுக்கு எதிராக வலிமையான போராட்டத்தை முதன்முதலில் நடத்தியதும், ஓங்கிக் குரல் கொடுத்து வருவதும், அதனை ஒரு இயக்கமாகவே முன்னெடுப்பதும் நானும் எனது கட்சியும்தான். ஜெயலலிதா ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது அதனை எதிர்த்து மதுரையில் மக்கள்திரள் முன்னிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முதன்முதலில் துவக்கியது நான்தான். அந்தத் தடை யை உடைப்போம் என உறுதி தந்து 5 அமைச்சர் களை மதுரைக்கு அனுப்பி வைத்து உண்ணாவிர தத்தை முடிக்க வைத்தார் ஜெயலலிதா. அந்த தாக் கம்தான் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வலிமையானதற்கு அடிப்படையாக இருந்தது. ஆக, விதை விதைப்பது நாங்கள். ஆனால், அறுவடை செய்வது மற்ற கட்சிகள். இப்படி பல சம்பவங்களை சொல்ல முடியும். தீவிர அரசிய-லிருந்து நாங்கள் விலகவில்லை; விலகவும் மாட்டோம்.

பொதுத்தேர்தல் தவிர மற்ற தேர்தல்களை நீங்கள் புறக்கணித்தே வந்திருக் கிறீர்கள். தொடர் தோல்விகள்தான் இதற்கு காரணமா?

அரசியலில் ஜனநாயகம் அழிந்து பணநாயகம் கோலோச்சுகிறது. தமிழ் நாட்டில் இது அதிகம். பிரதான கட்சி கள் மக்களையும் கரப்ட் ஆக்கி வைத் திருக்கின்றன. சாமானியர்களின் உரிமை களுக்காகவும் அவர்கள் அரசியல் அதிகாரம் பெற்றிடவும் போராடுகிற சமத்துவ மக்கள் கட்சி போன்ற கட்சிகள் தற்போதைய சிஸ்டத்தை எதிர்கொள்வது கடினம்தான். மக்கள் சேவை செய்ய நினைக்கும் ஒரு சாமானியனால் தேர்தலில் ஜெயிக்க முடியுமா? ஒரு எம்.எல்.ஏ. தொகுதியில் வெற்றிபெற குறைந்தது 25 கோடி, எம்.பி. தொகுதின்னா 200 கோடி தேவைப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் என்ன நடந்ததுன்னு பார்த்தோமே! சிஸ்டமே கரப்டாகி யுள்ள நிலையில்தான் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டியதிருக்கிறது.

Advertisment

sarathkumar

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர மக்கள் நினைக்கிறார்கள் என அடிக்கடி சொல்கிறீர்கள், அந்த மாற்றத்தைக் கொண்டுவர மக்கள் உண்மையாகவே நினைக் கிறார்களா?

மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதனை செயல்படுத்த அவர்களை பிரதான அரசியல் கட்சி கள் அனுமதிப்பதில்லை. புதிதாக வருகிறவர்கள் மக்களுக்கான அரசியலை தருவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும் வரவேண்டும். வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பதில் உறுதியாக மக்கள் இருந்தால் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிச்சயம் நடக்கும். அதற்கு அடையாளமாகத்தான் எங்களின் அரசியல் இருக்கிறது. இதுவரை எங்களை மக்கள் கவனிக்காமல் இருந்துவிட்டனர். இனி கவனிப்பார்கள். எங்களை நோக்கி அவர்களின் கவனம் திரும்பும்!

கமலின் மக்கள் நீதி மய்யத் தோடு கூட்டணி வைத்து பொதுத்தேர்தலை எதிர்கொண்ட நீங்கள், இடைத்தேர்தலில் அவர் களின் நிலைப்பாட்டை எதிர்த்து விலகி விட்ட சூழலில், மீண்டும் கூட்டணியாக இணைந்து பயணிக்க வாய்ப்பு உண்டா?

மக்களின் அரசியலுக்காக தனிக்கட்சியை நான் துவக்கிய போது, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அரசியலே கூடாது என்பதே எங்களின் கொள்கை. ஆனால், அரசியல் களத்தில் வெற்றி முக்கியமென் கிற எதார்த்தத்தை புரிந்துகொண்டு கூட்டணிக்குள் கைகோர்க்க வேண்டியதாயிற்று. சமத்துவ மக்கள் கட்சியைப் பொறுத்தவரை தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் கூட்டணி உருவாகவேண்டும். இதனை நான் மட்டும்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். காரணம், கூட்டணியாக இணைந்து மக்களை சந்தித்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற பிறகு, ஆட்சி அமைந்ததும் சிலர் கூட்டணி யிலிருந்து விலகி விடுகிறார்கள். இது மக்களுக்கு செய்யும் துரோகம்தானே! மக்களை ஏமாற்றும் செயல்தானே? அதனால், எல்லா கட்சிகளும் தனித்துப் போட்டியிட வேண்டும். தேர்தலுக்கு பிறகு கூட்டணி உருவாக வேண்டும். வெற்றிபெறும் இடங்களைப் பொறுத்து கூட்டணி உருவாவதும், வெற்றியின் விகிதாச்சாரங்களின் அடிப்படையில் கூட்டணி அமைச்சரவை அமைவதும்தான் உண்மையான தேர்தல் ஜனநாயகம். அப்போதுதான் மக்களுக்கான அரசாங்கம் உருவாகும்; ஊழல்கள் ஒழியும். அப்படிப்பட்ட ஜனநாயகம் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்! தனித்துப் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளுக்கே துணிச்சல் இல்லை.

உங்களின் தேர்தல் நிலைப்பாடு என்பது தேர்தல் காலத்தில்தான் தீர்மானிக்கப்படு கிறதா? நிலையான நிலைப்பாட்டில் உறுதி யாக இருக்கலாமே?

தனித்துப் போட்டியிட வேண்டுமென் பதுதான் சமத்துவ மக்கள் கட்சியின் நிலையான உறுதியான கொள்கை. ஆனால், தேர்தல் சிஸ்டம் இங்கு நிலையாகவும் இல்லை; ஆரோக்கியமாகவும் இல்லை. அதனால் தேர்தல் காலத்தில் சில முடிவு களை எடுக்க வேண்டியதாக உள்ளது. பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் கூட, எடுத்த எடுப்பிலேயே எந்த கட்சியுடன் கூட்டணி என்றுதான் கேள்வி வருகிறது. எத்தனை இடங்களில் போட்டியிடுவதாக இருக்கிறீர்கள்? என்று யாரும் கேட்பதில்லை. ஆக, சிஸ்டம் சரியில்லாததன் விளைவு இது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறீர்கள் என ஒவ்வொரு கட்சியிடமும் கேள்வி கேளுங்கள். சிஸ்டத்தில் மாற்றம் நடந்தே தீரும்.

Advertisment

sarathkumar

கட்சி ஆரம்பித்ததிலிருந்து தனித்துப் போட்டியிடுவதைக் கொள்கையாக வைத்திருக் கும் சீமானின் அரசியலை எப்படி பார்க்கி றீர்கள்?

தனித்துப் போட்டியிடு வதை வரவேற்கிறேன். ஆனால், அவரது கட்சியின் கொள்கையாக அவர் சொல்லி வருவதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், அவரது கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது? தமிழ்த்தேசியத்தை சீமான் உயர்த்திப் பிடிப்பதாக சொல் கிறார்கள். பல்வேறு இனம், மொழி, சாதி என்கிற கட்டமைப் பில் தமிழ்நாடு வலிமையாக இருப்பதால் தமிழ்த்தேசியம் என்பது எடுபடாது. மக்களிடம் எடுபடாத எந்த ஒரு விசயமும் கொள்கையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால தி.மு.க. ஆட்சியை எப்படி மதிப்பிடுவீர்கள்?

இடைத்தேர்தல் வெற்றியை மட்டுமே வைத்து தி.மு.க. அரசை மக்கள் அங்கீகரித்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது. இது முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியும். ஏனெனில், அவருடைய அமைச்சர்கள் மக்களையும் பத்திரிகை- ஊடகங்களையும் ஏமாற்றலாம். ஸ்டாலினை ஏமாற்றிவிட முடியாது. அதேசமயம், மக்களுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றியிருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், நிறைவேற்றப்பட்டதாக மக்கள் நினைக்கவில்லை. மக்களின் மனநிலைதான் என்னுடையதும்! அரசு நிர்வாகத்தை நடத்த மேலும் மேலும் கடன் வாங்குவதைத் தவிர்த்து, தமிழ்நாடு அரசின் மீதுள்ள 6 லட்சம் கோடி கடனை அடைப்பதில் தான் ஸ்டாலினின் ஆட்சியின் வெற்றி இருக்கிறது.

அ.தி.மு.க. தலைமைக்கான அதிகார மோத லில் புகுந்து பா.ஜ.க. குளிர் காய்கிறது. அ.தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வில் பிளவை உருவாக்கி அதனை பலகீனப்படுத்தி வருகிறது பா.ஜ.க. இந்த உண்மையை அக்கட்சியின் தலைவர்கள் உணரவேண்டும். பா.ஜ.க.வின் அரசியலுக்கு பலியாகாமல் ஒற்றுமையுடன் இருப்பது அக்கட்சிக்கு பலம். இல்லையெனில் எதிர்காலத்தில் அ.தி.மு.க.வை பா.ஜ.க. கபளீகரம் செய்துவிடும்.

பொதுக்குழுவில் அதிரடியான சில முடிவுகள் எடுக்கப்படவிருப்பதாக சொல்லப் படுகிறதே?

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு பொதுக்குழுவில் வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளோம். அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். என்ன மாதிரியான தீர்மானங்கிறது ரகசியம். தேர்தல் சிஸ்டத்தை எப்படி கொண்டு போனால் உண்மையான தேர்தல் ஜனநாயகம் வலுப்பெறும் என்பதை பதிவுசெய்யவிருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்.