"ஹலோ தலைவரே... தனது அமைச்சரவையை விரிவாக்கும் முடிவுக்கு பிரதமர் மோடி வந்திருக்கார்.''”
"ஆமாம்பா, இது தொடர்பாக 30-ந் தேதி மாலைகூட, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி பிரதமர் மோடி ஆலோசனை செய்திருக்காரேப்பா.''”
"உண்மைதாங்க தலைவரே, பரவலா அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையை விரிவுபடுத்த நினைக்கிறார் மோடி. அந்த வகையில் 27 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம்ன்னு சொல்லப்படுது. அதில் இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு இருக்குமாம். அதேபோல் சிலருக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுது. உ.பி.க்கு பிப்ரவரியில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அங்கிருக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் ஆர்.எஸ்.எஸ். தரப்புக்கும் இடையில் உரசல் வர, சமீபத்தில் சமாதானப் படலம் நடந்து முடிஞ்சிருக்கு. இந்த நிலையில், தேர்தலை எதிர்கொள்ள வசதியாக அங்குள்ள ஒருவரையும் கேபினட் அமைச்சராக்க நினைக்கிறாராம் மோடி.''”
"தமிழ்நாட்டில் யார் யாருக்கு அதிலே ஜாக்பாட் அடிக்கப்போகுது.''”
"அப்படி ஒன்றும் இருப்பது போல் தெரியவில்லை. முதலில் தன் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுக்கிட்டு இருந்தார் ஓ.பிஎஸ்., பார்க்கலாம்ன்னு டெல்லித் தரப்பும் சொன்னது. அதை சுட்டிக்காட்டிதான், உங்க மகனுக்கு முதல்வர் பதவிக்கு நிகரான கேபினட் பதவி ஒன்றியத்தில் கிடைக்கப்போகுது. அதுக்கு நான் குறுக்கே வரமாட்டேன்னு சொன்னதால்தான் எடப்பாடிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார் ஓ.பி.எஸ். ஆனால் தங்கள் கூட்டணியின் தோல்விக்கு சரியான திட்டமிடல் இல்லைங்கிற கோபம் அ.தி.மு.க. மீது பா.ஜ.க.வுக்கு இருக்கு. அதோட, இனி அந்தக் கட்சியால் எந்தப் பயனும் இல்லைங்கிற எண்ணமும் பா.ஜ.க.வுக்கு வந்துடுச்சு. மேலும் ரவீந்திரநாத் மீது உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் திருப்தியாக இல்லையாம். இது அரசல் புரசலாக ஓ.பி.எஸ். காதுக்கு வர, அவர் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம்.''”
"தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் சீனியரான ப.சிதம்பரம் சந்திச்சிருக்காரே.''”
"ஆமாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினை, தன் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் போய் சந்தித்தார் ப.சி. கோட்டைக்குப் போன அவருக்கு, முதல்வர் அறைக்கு எப்படிப் போகணும்னு தெரியலையாம். இந்தத் தகவல் ஸ்டாலினுக்குப் போக, அவரது உதவியாளர்கள் ஓடிவந்து, அவர்கள் இருவரையும் லிஃப்ட் வழியாக ஸ்டாலின் அறைக்கு அழைச்சிக்கிட்டுப் போயிருக்காங்க. தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், விரைவில் நடக்கவிருப்பதால், அதில் ஒரு இடத்தை காங்கிரஸ் எதிர்பார்க்குதாம். அதைச் சொல்லத்தான் ப.சி. வந்தாராம். அக்கட்சியின் சீனியரான குலாம் நபி ஆசாத், இந்த சீட்டைக் குறிவைக்க, அந்த சீட்டைக் கட்சித் தலைமையோ காங்கிரஸின் தேர்தல் வியூக வகுப்பாளரான ப்ரவீன் சக்கரவர்த்திக்கு கொடுக்க நினைக்கிறதாம். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கிடைக்கலாம்னும் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் ஸ்டாலினோ, இந்தமுறை காங்கிரசுக்கு சீட் ஒதுக்க வாய்ப்பில்லைன்னு ப.சி.யிடம் நாசூக்காகத் தெரிவித்துவிட்டாராம்.''”
"நாம் பேசிக்கிட்ட மாதிரியே புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டிருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, டி.ஜி.பி. திரிபாதி ஓய்வுபெறுவது குறித்தும், அடுத்த டி.ஜி.பி. யாக யார் வருவாங்கங்கிறது குறித்தும், நாம் ஏற்கனவே பேசிக்கிட்டோம். அப்ப சைலேந்திர பாபுவோடு கரன்சின்ஹா, சஞ்சய் அரோரா உள்ளிட்ட அதிகாரிகளும் தமிழக அரசின் பரிந்துரைப் பட்டியலில் இருப்பது பற்றியும், இந்த விவகாரத் தில் சிலர் மூக்கு நுழைத்து காய் நகர்த்துவது பற்றியும் கூட நாம் செய்தி பரி மாறிக்கிட்டோம். இப்போது ஒருவழியாக சைலேந்திர பாபு தேர்வு செய்யப்பட்டு, 30-ந் தேதி டி.ஜி.பி.யாகப் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஜெ.வின் நம்பிக்கைக் குரிய அதிகாரியாக இருந்த தேவாரத்தின் டீமில் இருந்தவர் சைலேந்திரபாபு. அவருக்கு எதிரான புகார்களும் ஐ.பி.எஸ் வட்டாரத்திலிருந்தே வந்தது. சைலேந்திரபாபுக்கு அடுத்ததா, கரன்சின்ஹா பெயரும் ஆலோசிக்கப்பட்டிருக்கு. அதேநேரத்தில், பப்ளிக் மத்தியில் சைலேந்திர பாபுக்கு இருக்கிற இமேஜும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி என்பதும் அவருக்கு கூடுதல் பலமா அமைஞ்சிடிச்சி. ஜெ. ஆட்சியில் கலைஞரே களத்தில் இறங்கிப் போராடியபோது கைது நடவடிக்கை பரபரப்பு ஏற்பட்ட சமயத்தில், ஸ்பாட்டுக்கே வந்து கலைஞரிடம் பேசி, உத்தரவாதம் தந்தவர் சைலேந்திரபாபுங்கிறதை, முதல்வரின் மருமகன் சபரீசன் சொல்லியிருக்காரு. உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதமும் ‘ சைலேந்திரபாபுவைத் தவிர்த் துட்டு, கரன்சின்ஹாவை செலக்ட் செய்தால் ஒரு வட இந்திய அதிகாரிக்காகத் தமிழ் அதிகாரி புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனம் எழும்னு எடுத்துச் சொல்லியிருக்காரு. எல்லாவற்றையும் அலசிப் பார்த்து சைலேந்திரபாபுவை டிக் பண்ணிவிட்டது ஸ்டாலின் அரசு. அம்மா காலத்து அதிகாரின்னு அ.தி.மு.க. மாஜி மந்திரிகளும் நம்பிக்கையோடு இருக்காங்களாம்.''”
"வாரியத் தலைவர் பதவிக்கு போட்டிகள் அதிகரிக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, கலைஞர் தலைமையிலான 2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 17 தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்தனர். ஜெ.’ஆட்சியில் இந்த நல வாரியங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் இவற்றுக்கு புத்துணர்வு கொடுக்கும் முயற்சியை மேற் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். முதல் கட்டமாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக பொன்.குமாரையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலவாரியத்தின் தலைவராக காங்கிரஸ் சீனியரான பீட்டர் அல்ஃபோன்சையும் அவர் நியமித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து மற்ற வாரியங்களின் தலைவர் பதவிகளை கைப்பற்ற தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் முண்டியடிக்க ஆரம்பித்துவிட்டன. தி.மு.க.வில் எம்.எல்.ஏ. சீட் கிடைக்காதவர் களும், சீட் கிடைத்தும் அ.தி.மு.க.வின் பணபலத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தோற்றவங்களும் வாரியப் பதவியைக் குறி வைக்கிறாங்க. சிபாரிசு கடிதங்கள் சி.எம். அலுவலகத்தில் குவியுதாம்.''”
"பொது போக்குவரத்து தொடங்கிய தால், மகளிர் மத்தியில் ஸ்டாலினுக்கான செல்வாக்கு பல மடங்கா ஆகியிருக்கே?''” “
"ஆமாங்க தலைவரே, பொது போக்குவரத்து தொடங்கியதால் ஏறத்தாழ தமிழகம் முழுக்க அரசுப் பேருந்துகள் ஓடத் தொடங்கிவிட்டன. அதிலும் மகளிர்க்கான இலவச பேருந்துகள் ஓடத் தொடங்கியதைப் பார்த்த ஊரகப் பகுதி பெண்கள், அவற்றில் அந்த இலவசப் பயணத்தை அனுபவித்தபடியே ஸ்டாலினை மனப்பூர்வமாக வாழ்த்தறாங்களாம். மகளிர் பேருந்துகளுக்கு அவங்க ஸ்டாலின் பேருந்துன்னு செல்லமாப் பெயரையும் வச்சிருக்காங்களாம். இது பற்றியெல்லாம் உளவுத்துறையினர், மேலிடத்திற்கு உற்சாகமாக ரிப்போர்ட் அனுப்பி வச்சிருக்காங்க. இந்த சூழலில், மகளிர் பேருந்துகளுக்கு, ’மகளிர்க்கான முதல்வர் ஸ்டாலினின் இலவச பேருந்துன்னு பெயர் சூட்டணும்ங்கிற கோரிக்கை, பெண்கள் மத்தியிலேயே எழத்தொடங்கி இருக்கு. காமராஜரின் மதிய உணவுத்திட்டம், எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், கலைஞரின் காப்பீட்டு திட்டம், அம்மா உணவகம் என்பது போல், இந்தத் திட்டம் ஸ்டாலின் பெயரில் நிலை பெறணும்னு சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டறாங்க.''”
"மாஜி உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது மேலும் ஒரு அதிரடிப் புகார் எழுந்திருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, அவர் அமைச்சராக இருந்தபோது வீட்டு வசதித்துறை அதிகாரிகள் மூலம் தமிழகம் முழுக்க எங்கெங்கே அரசு நிலங்கள் இருக்கு, எதெது வீட்டுவசதி வாரியத்தின் கீழ் உபயோகம் இல்லாமல் போடப்பட்டி ருக்குன்னு முழுசா கணக்கு எடுத்திருந் தாராம். அப்படிப்பட்ட நிலங்களை எல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமான சில நண்பர்கள் பெயர்களில் ஏகத்துக்கும் ஆக்கிரமிச்சிட்டாராம். இதற்கு முந்தைய கொரோனா அலை நேரத்திலேயே பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைச்சிருக்காங்க. இந்த மெஹா ஊழல் விவகாரத்தை தி.மு.க. தரப்பு, கிண்டிக் கிளறிக்கிட்டு இருக்குது. அதனால் வேலுமணி தரப்பு இப்ப வெடவெடப்பில் இருக்குதாம்.''”
"காவல்துறை அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட விலை உயர்ந்த கார்களில் பல, துறையினரின் கண்களில் கூடப் படறதில்லைன்னு சொல்லப் படுதே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே, தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலருக்கும் 2-க்கும் மேற்பட்ட கார்கள் ஓடிக்கொண்டி ருக்கின்றன. அதேநேரம், கார் அல்லது ஜீப் இல்லாமல் தவிக்கும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்குள்ள ஒரு நடிகரின் அப்பா, போலீஸ் அதிகாரியாக இருந்தார். அவர் துறைக்குச் சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இனோவா கார்களை அவர் எடுத்துக்கொண்டார். அந்த கார்கள் எல்லாம் மகன் நடிக்கும் படங்களில் சூட்டிங்கிற்காகப் பயன்படுத்தப் பட்டதாம். அந்த அதிகாரி ஓய்வு பெற்றதற்கு பிறகும், அந்த கார்கள் டிபார்ட்மெண்டுக்கு திரும்பி வந்தமாதிரி தெரிய வில்லையாம். இதேபோல் 60-க்கும் மேற்பட்ட கார்களை ஸ்வாஹா பண்ணிவிட்டார்களாம். இந்த லட்சணத்தில், அந்த கார்களின் பெயரில் எரிபொருள் செலவையும் அரசுக் கணக்கில் எழுதிக்கொண்டே இருக்கிறார் களாம்.''”
"நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன். பாலியல் விவகாரத்தில் சிக்கிய மாஜி அ.தி.மு.க. மந்திரி மணிகண்டனுக்கு, கிளைச் சிறையில் ஏ.சி வசதியுடன் கூடிய சொகுசு அறை கொடுக்கப்பட்டதா புகார் கிளம்ப, அப்படி எதுவும் நடக்கலைன்னு துறை அமைச்சரான ரகுபதி அறிவிச்சார். ஆனால் சிறைத்துறை வட்டாத்திலோ, முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தி, சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் சிங்கிடம், மணிகண்டனுக்காகப் பேச, அதன் அடிப்படையிலேயே, அதிகாரிக்கான ஏ.சி. அறையிலேயே அவர் தங்கவைக் கப்பட்டு, ஏகபோகமாக உபசரிக்கப் பட்டார். பிரச்சினை வெளியே வந்ததால் மன்மத மணிகண்டன், புழலுக்கு அனுப்பப்பட்டார். இப்ப அங்கும் அவர் அதிகாரிகளின் உபசரிப்பால் சொகுசாவே இருக்கார்னு சொல்லுது.''”
______________
இறுதிச்சுற்று!
"அம்மாவின் மறு உருவமே!' -மதுரையில் பரபரப்பு!
மதுரை, திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் சுஜாதா என்ற ஹர்ஷினி. இவர் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளருமாவார். "அ.தி.மு.க.வை ஒற்றைத் தலைமை வழிநடத்த ஒன்றரை கோடி தொண்டர்களின் துயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடமிருந்து காப்பாற்ற வரும் "அம்மாவின் மறு உருவமே சின்னம்மா' என்ற வாசகத்துடன், மதுரை மாவட்டம் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். இது அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-அண்ணல்