உயிரோடு இருப் பவர் இறந்துபோனதாக சான்றளித்த வட்டாட்சியர். அதைப் பயன்படுத்தி நடந்த நில மோசடி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையில் இறங்கினோம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள மூக்கனூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ஜெயக்குமார். இவர்மீது சிவக்குமார் என்பவர் மோசடிப் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து சிவக்குமாரிடம் கேட்டோம்.
"திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த எனது தந்தை ராஜகோபால், குடும்பத்தோடு சங்கராபுரம் அருகேயுள்ள மூக்கனூர் கிராமத்திற்கு
விவசாயம் செய்யவந்தார். அங்கு 3 ஏக்கர் 40 சென்ட்நிலத்தை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்தார். 1994-ல், அதில் 2 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை விற்பனை செய்துவிட்டார். மீதி 70 சென்ட் நிலம் அப்படியே இருந்தது. அதன்பிறகு மீண்டும் குடும்பத்தோடு திருச்சி உறையூர் பகுதிக்கு சென்று விட்டோம். அவ்வப்போது அந்த 70 சென்ட் நிலத்தை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். தற்போது எனது தந்தைக்கு வாரிசான நான் உயிரோடிருக்கிறேன். மூக்கனூரிலுள்ள 70 சென்ட் நிலத்தை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார் பலருக்கு விற்பனை செய்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்து விசாரித்தபோது அதிர்ச்சியாகிவிட்டது.
தற்போது எனக்கு வயது 52. இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி, எனக்கு 59 வயதில் சாமுண்டீஸ்வரி என்ற மனைவி இருந்து இறந்து போனதாகவும், எங்களுக்கு 53 வயது கலைச்செல்வி, 52 வயது மஞ்சுளா என இரு மகள்கள் உள்ளதாகவும், நான் 19.11.1998-ல் இறந்துவிட்டதாகவும் கூறி, என் பெயரில் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறப்புச் சான்றிதழ் பெற் றுள்ளார். எனது வாரிசுகளாக சாமுண்டீஸ்வரி, கலைச்செல்வி, மஞ்சுளா ஆகிய மூவரின் பெயரில் வாரிசு சான்றிதழும் பெற்று, எனக்கு சேர வேண்டிய 70 சென்ட் நிலத்தை கலைச்செல்வி, மஞ்சுளா பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளனர் அப்படி பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்தை கலைச்செல்வி, தனது தங்கை மஞ்சுளா பெயருக்கு 20-12-2024ல், தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி, சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதை பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அந்த நிலத்தை தற்போது ஐந்து பேர்களுக்கு வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்துள்ளார் ஜெயக்குமார். கலைச்செல்வி, மஞ்சுளா இருவரும் யார் தெரியுமா? ஜெயக்குமாரின் உடன்பிறந்த சகோ தரிகள். எனது நிலத்தை தனது சகோதரிகள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் தயார் செய்து நிலத்தை அபகரித்துள்ளார். எனவே ஜெயக்குமார் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளேன்'' என்கிறார் சிவகுமார்.
உயிரோடு இருக்கும்போது சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 19-11-1998ல் சிவகுமார் இறந்துவிட்டதாக 2.8.2023-ல், இறப்புச்சான்று அளித்துள்ளனர். அதே போல் சிவகுமாரின் மனைவி சாமுண்டீஸ்வரி இறந்து போனதாகவும், இவர்களுக்கு ஜலகண் டன் மனைவி கலைச்செல்வி, ரெங்கநாதன் மனைவி மஞ்சுளா ஆகிய இருவரும் நேரடி வாரிசுதாரர்கள் என்றும், 70 சென்ட் நிலத்தை கலைச்செல்வி தனது தங்கை மஞ்சுளாவுக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாக ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி சகோதரிகள் பெயரில் போலி ஆவணம் தயாரித்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த மோசடி வெளியான தையடுத்து, சிவகுமாரையும், அவருக்கு ஆதர வானவர்களையும் ஜெயக்குமார் தரப்பு மிரட்டி வருவதாகவும் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து கருத்தறிய ஜெயக்குமாரை தொடர்புகொண்டால் ஸ்விட்ச் ஆஃப் என்றுவந்தது. ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டதாகக் கூறுகிறார்கள். இந்நிலையில் அவர் தரப்பில் இன்னொரு பிரச்சனையை கிளப்பியிருக்கிறார்கள். சிவகுமாரின் தந்தையை கல் உடைக்கும் வேலைக்காக மூக்கனூருக்கு ஜெயக்குமாரின் தந்தை அழைத்து வந்ததாகவும், அப்போது கிரஷர் மெஷின் லோன் வாங்குவதற்காக சிவகுமாரின் தந்தை பெயரில் ஜெயக்குமாரின் தந்தை நம்பிக்கையின் பேரில் நிலம் எழுதிவைத்து வங்கியில் கடன் பெற்றதாகவும், அப்படிப் பெற்ற நிலத்தை முறையாகத் திருப்பித்தராமல் வைத்துக்கொண்டது தான் அந்த 70 சென்ட் நிலமென்று சிவகுமார் மீதே மோசடிச் குற்றச்சாட்டை திசைதிருப்பு கிறார்கள்.
"முன்பு பட்டா மாற்றம் கடினமான வேலையாக இருந்தது, தற்போது ஒரு நிமிடப் பட்டா என்ற அடிப்படையில் விரைவாக மாற்றப்படுகிறது. இதன்படி கடந்த நாலு ஆண்டுகளில் 8 லட்சத்தி 40 ஆயிரத்து 913 பட்டாக்கள் மாற்றம் செய்துள்ளது. சிக்கலான பட்டாக்களுக்கு 80 நாட்களுக்குள் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு மேலும் கால தாமதமானால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார் நிலஅளவைத் துறை இயக்குனராக இருந்த மதுசூதனன் ரெட்டி.
"ஆனால் உண்மையில் பட்டா மாற்றம் செய்ய மாதங்கள், வருடங்கள் ஆகின்றன. நியாயமான முறையில் விண்ணப்பிப்பவர்களை கிடப்பில் போட்டுவிட்டு, மோசடியாளர் களுக்குத்தான் முதலில் செய்துகொடுக்கிறார் கள். சிவக்குமாரின் பெயரில் நடைபெற்றுள்ள மோசடியில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்கிறார் சமூகஆர்வலர் சரவணன்.
நடக்காத திருமணத்தையும், பிறக்காத குழந்தைகளையும், உயிருள்ள மனிதரை இறந்ததாகவும் காட்டி நடந்துள்ள மோசடி பகீர் கிளப்பியுள்ளது.