தே உரிமைப்போர்தான். கடந்த டிசம்பரில் கிட்டத் தட்ட இதே நேரம், குடியுரிமைச் சட்டமசோதாவுக்கு எதிராக, அணி திரண்டவர்களால் திகைத்துப் போய் நின்றது இந்திய தலைநகரம். இப்போது விவசாயிகள் குளிரில் போராட்ட அனல் மூட்டியிருக்கிறார்கள். டெல்லியில் மூன்றா வது வாரமாகத் தொடரும் போராட்டத்தால் மத்திய அரசு திக்குமுக்காடினாலும், விவசாயிகளைவிட கார்ப்பரேட்டுகள் நலனையே பெரிதாக நினைக்கிறது.

கொரோனா காலத்தில் நாடாளு மன்றத்தில் அவசரஅவசரமாக நிறைவேற்றிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாதென மத்திய அரசு அடம் பிடித்த நிலையில், டில்லியில் போராடும் விவசாய சங்கங்கள் டிசம்பர் 8-ஆம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தன. அவர்களின் அழைப்புக்கு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெரும் ஆதரவு கிடைத்தது. தன்னை விவசாயி எனச் சொல்லும் எடப்பாடி, தமிழகத்தில் பந்த்துக்கு ஆதரவளிக்காத தோடு, மத்திய அரசின் வேளாண் சட்டங் கள் நல்லது என விளம்பரமும் செய்தார்.

delhi

போராட்டத்தில் முன்களத்தில் இருக்கும் ஹரியானா, பஞ்சாப் மாநிலங் களில் வேலைநிறுத்தப் போராட்டம் முழு வெற்றிபெற்றதோடு, தெலங்கானா, ராஜஸ்தான், டில்லி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் என வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் பந்த்தின் தாக்கத்தைக் காணமுடிந்தது.

Advertisment

தமிழகமெங்கும் தி.மு.க., காங் கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டன. சென்னையில் மட்டும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் 27 இடங்களில் போராட்டங்களை நடத்தின. சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடு வோம் என்றார். இப்போராட்டத்தில் தமிழகமெங்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நிவர், புரெவி புயல் தாக்கத்தில் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட் டிருந்த நிலையிலும் 8-ஆம் தேதி நடந்த பந்த்துக்கு ஆதரவாக, திருத் துறைப்பூண்டியில் 232 டிராக்டர்களு டன், 2500 விவசாயிகள் அணிவகுத்து வந்தனர். 4 மணி நேரத்துக்கு நீண்ட இந்த அணிவகுப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

டில்லி விவசாயிகள் போராட்டத் துக்கு 200 ரயில் டிக்கெட்டுகளைப் பதிவுசெய்து டில்லி செல்லமுயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணுவை தமிழக அரசு வீட்டுக்காவலில் வைத்தது. எனினும் போலீஸ் காவலுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு திருச்சி விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற அய்யாக்கண்ணுவை, கரோல்பாக் காவல் நிலையத்தில் போலீசார் பிடித்துவைத்தனர்.

Advertisment

அய்யாக்கண்ணு பிடித்துவைக்கப் பட்டபோதும், அவ்வமைப்பைச் சேர்ந்த தமிழக விவசாயிகள் 30 பேர் டெல்லி சென்று போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக அவ்வமைப் பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

delhi

டிசம்பர் 9-ஆம் தேதி ராகுல் காந்தி, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத் தினர். விவசாயிகளுக்காக இந்தச் சட் டம் இயற்றப்பட்டிருந்தால் ஏன் விவ சாயிகள் வீதியியிலிறங்கிப் போராடு கிறார்கள் என ஊடகங்களிடம் பேசும் போது ராகுல்காந்தி கேள்வியெழுப்பினார். அரியானாவின் திக்ரி எல்லையில், அகில இந்திய விவசாய சங்கங்களின் அரியானா மாநில மையத் தலைவர்களின் போராட்டக் கூடாரம் அமைக்கப்பட்டு, போராட்டத்துக்கு பல்வேறு இடங்களிலிருந்து கலந்துகொள்ள வருபவர்களை வரவேற்கின்றனர்.

போராட்டக் களத்துக்குச் செல்லும் பாதையெங்கும் உள்ள சுற்றுப்புற கிராம மக்கள், போராட்டக்காரர்களுக்கு உருளைக்கிழங்கு, காலிபிளவர், பட்டாணி போன்றவற்றை மூட்டை மூட்டையாகத் தந்து உதவும் காட்சிகளைக் காணமுடிகின்றது.

உணவுப்பொருள் மட்டுமின்றி பால், நீர், சமைத்த உணவுகள் என பலவும் சுற்றுவட்டாரங்களில் இருந்து போராட்டத்துக்கு உதவும் தன்னார்வலர்களால் கொண்டு வரப்பட்டு போராட்டக்காரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தாங்கள் பெற்ற பல்வேறு விருதுகளையும் குடியரசுத் தலைவரிடம் திருப்பித் தர முன்வந்த 30 விளையாட்டு வீரர்கள் தடுத்து திருப்பியனுப்பப்பட்டனர்.

போராட்டக்காரர்களுக்கு விளையாட்டு வீரர்கள் சலவை செய்பவர்களாக மாறிய ஆச்சரியமும் நடந்துவருகிறது. பஞ்சாப்பைச் சேர்ந்த கபடி வீரரான நிஷாந்த் சிங், “""சுத்தமான ஆடைக்காக, மீண்டும் போராட்டக்காரர்கள் ஊருக்குச் சென்று திரும்புவதைப் பார்த்துதான் இந்த யோசனையை நடைமுறைப்படுத்தினோம். நாங்கள் 12 பேர் முறை வைத்து சலவை செய்கிறோம். காலை எட்டு மணி தொடங்கி, இரவு ஏழு மணி வரை சலவை செய்துதருகிறோம். எந்த இடத்தில் போராடுகிறார்கள் எனக் குறித்துக்கொண்டு, அவர்களது தொடர்பு எண்ணையும் பெற்றுக்கொண்டு உலர்ந்த ஆடைகளைக் கொண்டுபோய் அளித்துவருகிறோம்'' என்கிறார். விவசாயிகள் நமது உணவுக்காகவும் சேர்த்தே போராடுகிறார்கள் என்ற உணர்வு பலதரப்பினரிடமும் பரவ, இது மக்கள் போராட்டமாக மாறியது.

குறைந்தபட்ச ஆதாரவிலை தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கிறோம் என்று அரசு கூறியது. டிசம்பர் 11-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா, ""நாங்கள் மத்திய அரசு முன்மொழியும் திருத்தங்களை ஏற்பதாக இல்லை. சட்டங்களை முற்றாக ரத்துசெய்யவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை'' என திட்டவட்டமாகக் கூறினார்.

போராட்டத்தின் அடுத்தகட்டமாக, ஜெய்ப்பூரிலிருந்து தில்லி வரும் சாலையை ராஜஸ்தான் விவசாயிகள் முடக்கத் திட்டமிட்டுள்ளனர். போராட்டத்துக்கு வலுச்சேர்க்க பஞ்சாபிலிருந்து மேலும் 1200 டிராக்டர்களில் 50,000 விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.

டிசம்பர் 12-ஆம் தேதி நாடுமுழுவதுமுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் போராட்டத்தை அறிவித்தனர். டிசம்பர் 14-அன்று பா.ஜ.க. சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிடுவது எனவும் திட்டமிடப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி விவசாய சங்கங்கள் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. இந்நிலையில் பாரத் கிசான் சங்கம் புதிய இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்தது. “வேளாண் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி உருவாக்கப்படும் மாற்றுச் சந்தைகளால் விவசாயச் சந்தை முழுமையாகச் சிதைந்துவிடும். எனவே இச்சட்டத்தை ரத்துசெய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்'' என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம் முடிவில் உறுதிகாட்டும் போராட் டக்காரர்களை எதுவும் செய்யமுடியாத நிலையில், 3 வேளாண் சட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் தொடர் பாக நாடுதழுவிய பிரச்சாரத்தை முன்னெடுக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம் பரம், 700 கிராமங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் என இந்த பிரச்சாரத்தை பிரம்மாண்டமாகத் திட்டமிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினர், பல்வேறு குற்றச்சாட்டின்கீழ் கைதானவர்களை விடுவிக்கக் கோரி கோஷமிடுவதாகவும், சமூக விரோதிகள் விவசாயிகளின் போராட்டத்தைச் சீர்குலைக்கத் திட்டமிடுவதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

ஆனால் விவசாயிகளோ, ""சட்டத்துக்குப் புறம்பான எதையும் நாங்கள் போராட்டத்தில் அனுமதிப்பதில்லை. சமூக விரோதிகளை திட்டமிட்டு நுழைத்து, போராட்டத்தைச் சீர்குலைக்கும் எண்ணம் பா.ஜ.க.வுக்கு இருக்கிறதோ என்றே நாங்கள் சந்தேகப்படு கிறோம்'' என்கி றார்கள். மேலும் எங்கள் கோரிக் கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை யென்றால் பஞ்சா பில் நடத்தியதுபோல் விரைவில் ரயில் மறியல் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்துள்ளனர். இதுவரை டெல்லி கடுங்குளிருக்கு, போராட்டத்தில் கலந்து கொண்ட 15 விவசாயிகள் பலியாகியுள்ள னர். “இந்தச் சட்டங்களைத் திரும்பப்பெற இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்யவேண்டுமென இந்த அரசு எதிர்பார்க்கிறது’’ என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

கிடக்கிறவன் கிடக்க கிழவனைக் கொண்டுபோய் மனையில் வை என்ற கதையாக, கோடிக்கணக்காக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைக்காகப் போராடிக்கொண்டிருக்க, உச்சநீதிமன்றத் தில் வழக்கு இருக்கும் நிலையில் பிரத்யேக அனுமதி வாங்கி, பிரதமர் மோடி டிசம்பர் 10-ஆம் தேதி புதிய பாராளுமன்றக் கட்டடத்துக்காக பூமி பூஜையில் இறங்கியது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததையும் மிஞ்சிவிட்டது.

-க.சுப்பிரமணியன்

எல்லாம் கார்ப்பரேட் மயம்!

மத்திய அரசு முன்வைத்து, விவசாயிகள் நிராகரித்த சமரசத் திட்டத்தின் அம்சங்கள்:

• குறைந்தபட்ச ஆதாரவிலை தொடரும் என எழுத்துப்பூர்வ உறுதி.

• பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள சிவில் நீதிமன்றங்களை நாட விவசாயி களுக்கு அனுமதி.

• மண்டிகளுக்கு வெளியே விற்பனை செய்வதற்கான தனியார் வணிகர்களைப் பதிவுசெய்ய மாநில அரசுகளுக்கு அனுமதி.

• ஒப்பந்த நிலத்தில் கட்டப்பட்ட கட்டுமானத் தை ஒப்பந்ததாரர் உரிமை கோரமுடியாது.

• விவசாயிகளின் நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ தடை. நிலத்திற்கு ஒப்பந்ததாரர் உரிமை கோரமுடியாது.

இத்தனையும் அறிவித்தாலும், கார்ப்ப ரேட்டுகள் கையில் சென்றால் எந்த சட்டமும் பலன் தராது என்கிறார்கள் விவசாயிகள் உறுதியாக.