சாத்தான்குளம் வணிகர்களான தந்தையும் மகனும் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த விவகாரம் பெரிதான நிலையில், ""என்னையும் அடித்துக் காயப்படுத்தியது அந்த எஸ்.ஐ.க்களே.! எனக்கு சிகிச்சை கொடுங்கள்'' என கோவில்பட்டி சிறைச் சாலையிலிருந்த விசாரணைக் கைதி ராஜாசிங் கூக்குரலிட, கோவில்பட்டி மருத்துவமணைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
""என்னை, என்னுடைய நண்பர்களை அடித்துக் காயப்படுத்தியதுபோல் ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அடித்து காயப்படுத்தியிருக்கின்றார்கள். கோவில்பட்டி சிறைக்கு கொண்டு வரப்பட்டபோது அவர்களே என்னிடம் கூறியுள்ளனர். அவர்கள் காயத்துடன்தான் சிறைக்கு வந்தனர். அதற்கு நான் சாட்சி'' என நீதிபதி ஹேமாவிடம் ஒப்புதல் வாக்குமூலம் தந்த நிலையில், நீதிமன்ற உத்தரவால் எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதிதாக எப்.ஐ.ஆர். ஒன்று பதிவாகியுள்ளது அதே சாத்தான்குள காவல் நிலையத்தில்.!
குற்ற வரிசை எண்323/2020ன் படி 294பி, 341, 342, 324, 330, 448, 427, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் மீது ஜூலை 10 அன்றே வழக்குப் பதிவானபோதும், ஜூலை 14 இரவில்தான் இந்தத் தகவல் காவல் துறை வட்டத்தில் கசிந்தது.
சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியரால் பதிவு செய்யப்பட்ட அந்த எப்ஐஆர், ""10-07-2020 அன்று நான் பணியிலிருந்த போது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்திலிருந்து வந்த பதிவு தபாலின் அடிப்படையில், சித்தான் கோவில் தெரு, மேற்கு பனைக்குளம், சாத்தான்குளத்தினை சேர்ந்த சூசை மகன் ராஜாசிங்கின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் இந்த வழக்கினை பதிவு செய்கிறேன்'' என ஆரம்பிக்கிறது.
தெற்கு பேய்க்குளத்தை சேர்ந்த ராஜாசிங், ஆட்டோ டிரைவரான ஜெயக்குமார் கடந்த மே மாதம் 18-ந்தேதி இரவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் இருப்பவர். மே 18 அன்று, சாத்தான்குளம் ஸ்பெஷல் டீம் போலீசார் தன்னையும் முத்துகிருஷ்ணன், நவீன், மத்தியாஸ் ஆகியோரையும் கைது செய்து, சில இடங்களையும் அடையாளம் காட்டச் சொன்ன பிறகு, ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக ஸ்டேஷனில் நடந்த சித்திரவதைகளை விவரித்துள்ளார். பேய்க் குளத்தைச் சேர்ந்த மகராஜா, தசரதன் மற்றும் மீரான்குளத்தை சேர்ந்த அழகுஜார்ஜ், சங்கரவேலு ஆகியோரையும் ஸ்டேஷனில் வைத்து வெளுத்துள்ளனர்.
""அப்பொழுது மணி அதிகாலை 5லிருந்து 5.30 இருக்கும். ஜெயக்குமார் கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் சீருடை அணியாத போலீசார் ஒருவரும் எங்களை விசாரித்து லாக்கப்பிற்கு வெளியே உட்கார வைத்திருந்தனர். அப்போது வந்த எஸ்.ஐ. ரகுகணேஷ் ஒவ்வொருத்தராக கூப்பிட்டு அடிக்க ஆரம்பித்து சோர்வடைந்து சென்று விட்டார். அதன்பின் 5 ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் பசங்களுடன் வந்த எஸ்.ஐ. ரகுகணேஷ் எங்களில் 4 பேரை தட்டார்மடம் காவல்நிலையம் கொண்டு சென்று அடிக்க ஆரம்பித்தார்கள்.
அழகுஜார்ஜை சுவற்றில் தள்ளி இரண்டு ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் பசங்க திமிறாமல் அழுத்தி பிடித்துக் கொள்ள, ரகுகணேஷ் லத்தி உடையுமளவிற்கு அடிக்க ஆரம்பித்தார். அழகுஜார்ஜ் மயக்கம் வருவதாக கூறிய நிலையில் அவருக்கு டீ வாங்கிக் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு கை கால்களில் வீக்கம் அதிகமாக காணப்பட, சுவற்றில் அடித்துக் கொண்டே ""குதி! அப்பொழுது வீக்கம் சரியாகும்'' என்றார்கள். பின் என்னையும் ஏனையோரையும் பின்புற புட்டத்தில் அடிக்க ஆரம்பித்த எஸ்.ஐ. ரகுகணேஷ் மதிய வேளையில் அங்கிருந்து புறப்பட்டார். பிறகு, இரவில் சாத்தான்குளம் ஸ்டேஷனுக்கு கொண்டுவந்து, அதிகாலையில் அடிக்க ஆரம்பித் தார்கள். காலையில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் அவர் பங்குக்கு அடித்தார்.
எனக்கு ரத்தம் பீறீட்டு வந்தது. சார்.! ஏற்கனவே என்னை ரொம்ப அடிச்சிட்டாங்க..! என்னைய விட்டுடுங்கன்னு கெஞ்சினேன். இருந்தாலும் விடலை. பகல் நேரத்தில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் என்னுடைய ஜட்டியை கழட்ட சொல்லி, வெளுக்க ஆரம்பித்தார். அடி தாங்காமல் பெஞ்சிலிருந்து சரிந்த நிலையில், ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் பசங்க என்னைப் பிடித்துக் கொள்ள... மீண்டும் அடித்து நொறுக்கப்பட்டேன். என்னுடைய நிலைமைதான் ஏனையோருக்கும்! ஐஸ்கட்டிகளை கொடுத்து வீக்கமுள்ள இடங்களில் வைத்துக் கொள்ளச் செய்தவர்கள், மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று ஓ.பி போட்டு வாங்கிவர வைத்தார்கள். அதன்பின், பின்புறம் சதை பிய்ந்து தொங்கிய நிலையில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டேன். வேறொரு புது வழக்கும் என் மீது போடப்பட்டதால் அதே காயத்தோட கோவில்பட்டி சிறைக்கு மாற்றப் பட்டேன்.
இந்த சூழலில்தான் கோவில்பட்டி சிறைச்சாலையில் மதியவேளை சாப்பாட்டின் போது ஜெயராஜும், பென்னிக்ஸும் நடக்க முடியாமல் இருக்க, அவர்களை விசாரித்தேன். அவர்கள் கடையை அடைக்க லேட்டான போது நடைபெற்ற வாக்குவாதத்தால் ஸ்டேஷனிற்கு வரவழைத்து, பெஞ்சில் படுக்க வைத்து எங்களை போலவே அடித்து சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டது தெரிந்தது. அத்துடன் அவர்களிருவரும் அடிபட்ட காயத்தை காண்பிக்கும் போது, நானும் என்னுடைய டிரஸ்சை அவிழ்த்து என்னுடைய காயத்தை காண்பித்தேன். அங்கிருந்த டாக்டரிடம் கூறுமாறு அவர்களிடம் நான்தான் சொன்னேன். அதன்பிறகு அவர்களிருவரின் காயத்திற்கு மருந்து வைத்து 4வது அறைக்கு வெளிப்புறம் காற்றோட்டமாக படுக்க வைத்தார்கள்'' என்று பலவற்றைப் பதிவு செய்துள்ளது அந்த எஃப்.ஐ.ஆர்.
சி.பி.ஐ. விசாரணையில் இது திருப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
-நாகேந்திரன்
___________________
சி.பி.ஐ. கஸ்டடியில் உண்மையை கக்கிய காக்கி!
விசாரணையை வேகப்படுத்தியிருக்கும் சி.பி.ஐ.யினர் தங்களது கேள்வி சாட்சிகளை ஆவணமாக்கும் வேகத்துடன் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் ஐவரையும் ஐந்து நாள் தங்களது கஸ்டடியில் விசாரிக்க வேண்டுமென அனுமதி கோரி மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது சி.பி.ஐ.
ஜூலை 14 அன்று நீதிபதி ஹேமந்தகுமாரிடம் சி.பி.ஐ மனு விசாரணைக்கு வந்தபோது, ""கஸ்டடி விசாரணையில் எங்களது வழக்கறிஞரும் உடனிருக்க வேண்டும்'' என போலீஸ் தரப்பு வேண்டுகோள் வைத்தது. ஜூலை 16 மாலை 5.30க்கு ஆஜர்படுத்த வேண்டும் என கஸ்டடிக்கு அனுமதித்தது உயர்நீதிமன்றம். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணையை துவக்கிய சிபிஐ டீம், காவலர் முத்துராஜை மட்டும் சாத்தான் குளம் கொண்டு சென்றது.
ஜூலை 14 இரவு 9.50க்கு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சென்ற சிபிஐ டீமிடம், ""இந்த பெஞ்சில்தான் ஜெயராஜ் படுக்க வைக்கப்பட்டும், இந்த டேபிளில் பென்னிக்ஸ் கை, கால்கள் கட்டப்பட்டு குப்புறப்படுக்க வைக்கப்பட்டும் அடிக்கப்பட்டனர்'' என கைகாட்டி ஒப்புதல் வாக்கு மூலத்தை முத்துராஜ் கொடுத்த நிலையில், அது அத்தனையும் வீடியோவாக பதிவு செய்யப் பட்டது. பின்னர் காவல் நிலையத்தை சுற்றிக்காட்டிய முத்துராஜை, பென்னிக்ஸின் ஏ.பி.ஜே. மொபைல் கடைக்கு சி.பி.ஐ. அழைத்து வந்தபோது, அங்கேயும் சில அடையாளங்களையும், தடயங்களையும் காண்பித்திருக்கின்றார் முத்துராஜ். இரவு 11.40 மணியளவில் அங்கிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார் காவலர் முத்துராஜ். தங்களுக்கு கிடைத்த இரண்டு நாள் அவகாசத்தை வீணாக்காமல் ஆவணங்களை திரட்டியது சிபிஐ டீம்.
இதனிடையே தனிப்பிரிவு காவலர்கள் விழித்துக் கொண்டிருந்தால் இப்பிரச்சனை எழுந்திருக்காது என, மாவட்டத்தில் தனிப் பிரிவு காவலர்கள் 17 நபரை மாற்றம் செய்த தூத்துக்குடி எஸ்.பி ஜெயகுமார், ""இதேபோல் தொடர்ந்து மூன் றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் விரைவில் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள்'' என ஷாக் கொடுத் திருக்கிறார். முத்துராஜ் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மறுநாள் ஸ்டேஷன் எழுத்தர் பியூலாவிடம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ.
-நாகேந்திரன்
_____________
சாத்தான்குளம் இன்னொரு தூத்துக்குடியா?
சி.பி.சி.ஐ.டியின் ஐ.ஜி. சங்கர் தூத்துக்குடியில் முகாமிட்டு, எஸ்.பி. விஜயகுமார், டி.எஸ்.பி. அனில்குமார் ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட குழுவாகப் பிரிந்து சென்று விசாரணையை தீவிரப்படுத்தியதை யடுத்தே 24 மணி நேரத்திற்குள்ளாக இன்ஸ் ஸ்ரீதர், எஸ்.ஐ. பால கிருஷ்ணன், ரகுகணேஷ் போலீசார் என்று 5 பேர்கள் மீது 302 கொலை வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி களை வளைத்தனர். ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதன்பிறகு, சி.பி.ஐ. டீம் களமிறங்கியது.
சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச் மெண்ட்டின் ஏ.டி.ஏஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 பேர்களைக் கொண்ட சி.பி.ஐ. குழு களமிறங்கி, பல கோணங்களிலும் விசாரணை நடத்துகிறது.
வழக்கின் போக்கு குறித்து தூத்துக்குடியின் குற்றவியல் வழக்குகளின் வழக்கறிஞரான அதிசயகுமாரிடம் பேசினோம்.
""இன்வெஸ்டிகேஷனை ஓரளவு கம்ப்ளீட் பண்ணி, டாக்கு மெண்ட்களையும் கலெக்ட் பண்ணியுள்ள சி.பி.சி.ஐ.டி டீம், சம்பந் தப்பட்ட 10 போலீசாரையும் கைது செய்துள்ளது. அவர்களை சி.பி.ஐ. டெலிட் பண்ண முடியாது. ஆனா விசாரணை யினடிப்படையில் புதுசா யாரையும் வழக்கில் சி.பி.ஐ. அடி ஷனலா அட்டாச் பண்ணலாம். சம்பவத்தில் ஈடுபட்ட (FRIENDS OF POLICE) இன்னும் பலர் இருக்கின்றனர். இறப்புக்கு இவர்களும் காரணம்னு சி.பி.ஐ சொல்லணும். அப்போதுதான் சி.பி.ஐயின் தனித் தன்மை வெளிப்படும்.
ஆவணங்கள் பெறப்பட்ட வாக்குமூலங்கள், 161 மற்றும் 164 ஸ்டேட்மெண்ட்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க கால அவகாசம் பிடிக்கும். அவற்றைப் படித்து, செக் பண்ணி ஒரு முடிவுக்குவர சி.பி.ஐ.க்கு கொஞ்சம் டைம் எடுக்கும். பணிகளை விரைவாக முடித்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாக வேண்டும். தவறினால் குற்றவாளிகள் அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு இஷ்யூவில் மக்களுக்கு சி.பி.ஐ. மேல நம்பிக்கையில்லாமப் போனது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யணும்னு உயர்நீதி மன்றமே உத்தரவு போட்டும் அறிக்கை தாக்கல் செய்யப்படல. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும் சி.பி.ஐ.க்கு முன்னேற்றமில்ல.
அதனால், சாத்தான்குளம் வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நெருக்கடியான கட்டாயத்திலிருக்கிறது சி.பி.ஐ.'' என்றார்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்