இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் எனச் சொல்லாமல் வெல்லலாம் எனக் கருதுகிறீர்களா?
ஏன் நடக்காது. 1989-ல் வி.பி.சிங் வருவார் எனச் சொல்லாமல்தான் எதிர்க்கட்சிகள் வென்று ஆட்சியை பிடித்தது. 1991-ல் பிரதமராக நரசிம்ம ராவ் வருவார் என யாரும் வாக்கு கேட்கவில்லை. 2004-2009-ல் மன்மோகன்சிங் பிரதமராக வருவார் என யாரும் வாக்கு கேட்கவில்லை. ஆனால் முதன்மையானவராக சோனியா காண்பிக்கப்பட் டார். இன்றைய காலகட்டத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதும், பா.ஜ.க. வீழ்வதும் உறுதி. அதேநேரத்தில் முதன்மையானவராக ராகுல்காந்தி தான் காட்டப்படுகிறார். காலம் யார் பிரதமராகக் கூடாது என்பதை தேர்தலுக்கு முன்பே கூறுகிறது. யார் வருவார் என்பதை தேர்தல் முடிந்து காட்டும்.
பா.ஜ.க. நிலை சரிகிறதோ?
அதில் என்ன சந்தேகம்? நிர்மலா சீதாராமன் கணவர், தமிழிசை சௌந்தராஜன் மகன், மோடி மனைவி என... தங்கள் குடும் பத்தினரின் வாக்கையே பெறமுடியாத அளவுக்கு சுருங்கி விட்டது.
தேர்தலில் நிற்காததற்கு நிர்மலா சீதாராமன் பணம் இல்லை என்கிறாரே!
சிரபுஞ்சியில் தண்ணீர் இல்லை. கடலில் மீன் இல்லை. கொடைக்கானலில் காற்று இல்லை. காந்தியிடம் அஹிம்சை இல்லை. அரிச்சந்திரனிடம் உண்மை இல்லை. கர்ணனிடம் கொடை இல்லை. கலைஞரிடம் தமிழ் இல்லை. தளபதியிடம் உழைப்பு இல்லை என்றால் நிர்மலா சீதாராமனிடம் பணம் இல்லை என்று ஒப்புக்கொள்வோம்.
தி.மு.க.காரனாக இல்லாமல், ஒரு இந்துவாக சொல்லுங்கள் மோடி அயோத்தியில் இராமர்கோவில் கும்பாபிஷேகம் செய்தது மகிழ்ச்சிக்குரியதா?
இல்லை. என் பேச்சுவழக்கில் ஒரு சொல். "இராமர் பூலோகம் வருவதாய் ஒரு வாய்ப்பு இருப்பின் மோடியின் கன்னத்தில் அறைவிட்டு இருப்பார்'' என்பதுதான். இராமர் சிலைக்கு பதிலாக தன் சிலையை வைக்கவில்லை என்கிற ஒரு குறையை தவிர, எல்லாவற்றிலும் மோடி மயம். பகுத்தறிவு பேசும் டாக்டர் கலைஞர் கூட கோவி லில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் ஆகம விதிகளை நன்கு பயின்றவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலையில் பள்ளிக்கூடம் நிறுவினார். அதைவிடுத்து இராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் ஒரு பக்கெட் தண்ணீர் ஊற்றினாலேயே அர்ச்சகர் ஆகிவிடலாம் என்று செயல்பட்ட மோடியின் கும்பாபிஷேகத்தை எந்த இந்து ஆஸ்திகனும் ஏற்கமாட்டான்.
தமிழகத்தில் தேர்தல் முடிவு எதை காட்டும்?
யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழைய விதி. பூனைக்கும் அடி சறுக்கும் என்பது புதிய விதி. எதிர்கால இந்திய ஆட்சி பீடத்தில் இந்தியா கூட்டணி வந்தாலும் சரி. பா.ஜ.க. கூட்டணி வந்தாலும் சரி, சேதாரம் என்னவோ எடப்பாடிக்கும். அ.தி.மு.க.வினருக்கும் தான்.
பா.ஜ.க. தேசிய பற்றாளர்களையே தேர்தலில் நிறுத்தியுள்ளதாமே?
ஆமாம். கங்கணா ரணாவத் மாதிரி ஆடைகளில் கூட பற்றில்லாதவர்களை நியமித்ததிலிருந்தே அவர்கள் தேசப்பற்று, தேசப்பண்பாடு புரிகிறது.
காங்கிரசை அழிக்கவே தி.மு.க.வை அண்ணா தொடங்கினார் என ராமதாஸ் கூறுகிறாரே?
காமராஜரை கொலை செய்ய முயன்று, அவர் படுக்கை மெத்தைக்கு தீ வைத்த சனசங்கத்துடன் அதாவது பாரதிய ஜனதாவுடன் சேரச் சொல்வது நியாயமா? த.மா.கா. என்பதும் காங்கிரஸ்தானே அவர்களுடன் சேரலாமா?
தமிழிசை விருகம்பாக்கம் மழை வெள்ளத்திற்கு வராததற்கு காரணம் நான் தெலுங்கானா, பாண்டி கவர்னர். நான் எப்படி வரமுடியும் என்கிறாரே?
ஏன் வந்தால் என்ன? வெங்கையா நாயுடு ஆந்திராக்காரர். ஆனால் அவர் மனைவி வைத்தியத்திற்காக கோட்டூர் புரத்தில் தங்கியிருந்த நேரம். 2014-ல் வெள்ளம். தனது சொந்த பணத் தில் 20 லட்சத்திற்கு பால், பிரட், பிஸ்கட், அரிசி வழங்கினார். விருகம்பாக்கத்தில் 30 ஆண்டு இருந்தேன் என்பது பெரிதல்ல, என்ன செய்தேன் என்பதுதான் பேசும்.
10.5% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தி.மு.க. துரோகம் செய்ததாக அன்புமணி கூறுகிறாரே?
வன்னியர் உள்ளிட்ட மிக, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு செய்தவர் கலைஞர். ஆனால் தேர்தல் வாக்குக்காக ஆட்சி முடியப்போகும் நேரத்தில் அவசரம் அவசரமாக அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தருவதுபோல அறிவித்தது. அ.தி.மு.க. தி.மு.க. ஆட்சிக்கு வந்துதான் 10.5% இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பித்தது. வழக்காடு மன்றத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞர்களை ராமதாஸ் அய்யா சொன்ன வழக்கறிஞர்களை வைத்துதான் வாதாடினோம். பா.ம.க. தன்னையும் சேர்த்துக் கொண்டது. பாடி டாப் பேஸ்மட்டம் வீக், வழக்கில் சரக்கு இல்லை என்று தோற்றது. ஆனாலும் முயன்றுகொண்டுதானிருக்கிறோம்.
மூன்றாம் மனிதரிடமா காலில் விழுந்தேன். மூத்தோரிடம்தானே காலில் நான் விழுந்தேன் என்கிறாரே எடப்பாடி.?
அதுசரி. அவரின் சின்னம்மா சசிகலா அவர்களின் கணவர் நடராஜன் சாவுக்கு இவர் ஏன் போகவில்லையாம். இன்றுவரை துக்கம் கேட்கப் போகாதது ஏன்? சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா என்ன மூன்றாம் நபரா? ஏன் இதுவரை எடப்பாடி கூட்டம் அவரைப் பார்க்கவே இல்லை.
நாங்கள் கூட்டணி தர்மத்திற்காக அரசியல் செய்திருப்போம். இப்போது கூட்டணி இல்லை. பா.ஜ.க. தவறு செய்தால் கண்டிப்போம் என்கிறாரே எடப்பாடி?
கூட்டணி இல்லாத சூழலில் எதிர்க்கட்சிகள் இல்லாத கடைசி நாளில் பா.ஜ.க., சி.ஏ.ஏ. சட்டத்தை திணித்ததை எடப்பாடி கண்டிப்பாரா? தேர்தல் ஆணையர் நியமனத்தில் 33% ஆளும் கட்சி என்பதை மாற்றி. 66% என மாற்றுவதற்கு வசதி யாக தலைமை நீதிபதியை தேர்தல் ஆணையர் நியமனக் குழுவிலிருந்து நீக்கியது தவறு என கண்டிக்கிறீர்களா? இனியாவது கண்டிப்பீர்களா?
தேர்தல் பத்திர விவகாரத்தால் பா.ஜ.க.வுக்கு கெட்ட பெயர் வந்ததாக நான் நினைக்க வில்லை. பணம் யார் கொடுத் தது. பணம் யார் வாங்கியது என்பது என்னால்தானே தெரியவருகிறது என்கிறாரே மோடி?
யார் கொடுத்தது. யார் வாங்கியது என்பது மோடியால் அல்ல, தலைமை நீதிபதியால் வெளி உலகுக்கு வந்தது. இப்படி ஒரு திருப்பம் வரும் என மோடியே நினைத்திருக்கமாட்டார். நன்றிகள் உச்சநீதிமன்ற வளாகத்தை நோக்கித்தான், மோடிக்கில்லை.
கச்சத்தீவு குறித்து மோடி வாய் திறந்திருக் கிறாரே?
2014 தேர்தலிலேயே மீட்பேன் என்றார். யார் தடுத்தார்கள். 2014-ல், மத்திய பா.ஜ.க. அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, "கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கையுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்''’என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போ தெல்லாம் சும்மா இருந்துவிட்டு 10 ஆண்டு கழித்து தேர்தல் வந்தவுடன் உதார் விடுகிறார்.
-கீரன்