"ஹலோ தலைவரே, இப்போது பெய்த கனமழை நடிகர் விஜய்யை பலத்த அப்செட்டில் ஆழ்த்தியிருக்கிறது.''”

"ஆமாம்பா, வரும் 27ஆம் தேதி அவருடைய த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நேரத்தில் மழை பலமாக மிரட்டியிருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டுப் பணிகள் ஆரம்பித்ததில் இருந்தே விஜய் தரப்புக்கு தொடர்ந்து சிக்கல்களே அணி வகுத்து வருகிறது. ஆரம்பத்தில் இடப் பிரச் சினையில் அவர்களுக்கு நிறையவே குழப்பம் நீடித்தது. பின்னர் காவல்துறை அனுமதி பெறுவதில் பெரும் போராட்டம் ஏற்பட்டது. பின்னர் செப்டம்பர் 22-ல் மாநாடு நடக்கும் என்று அறிவித்துவிட்டு, அதை 23ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் மாநாட்டுத் தேதியை அக்டோபர் 27 என்று மாற்றி அறிவித்தார் விஜய். இந்த நிலையில், இப்போதைய கன மழையும் நடிகர் விஜய்க்கு பெரும் சோத னையை ஏற்படுத்தியிருக்கிறது. மாநாட்டுக்காக உளுந்தூர்பேட்டை பகுதியில் போடப்பட்டு வரும் மேடை மற்றும் பந்தல் பணிகள் இந்த மழையால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்திருக் கிறது. தொண்டர்கள் அமர்வதற்காக சரி செய்யப்பட்ட இடம் முழுதும் தற்போது சேறும் சகதியுமாக ஆனதால் விஜய் பெரிதும் அப்செட்டாகிவிட்டாராம். இதற்கு மேலும் மழை தொடர்ந்தால், மாநாட்டை நடத்தமுடியுமா? என்கிற பீதியில் விஜய் தவிக்கிறாராம். இதற்கிடையே மழை சற்று தணிந்திருப்பதால், மீண்டும் பந்தல் பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள். மாநாடு முடியும்வரை மழை வரக்கூடாது என்று பிரார்த்தித்து வருகிறதாம் விஜய் தரப்பு.”

"சங்கடம்தான். இந்த கன மழையிலும் சென்னை நிம்மதிப் பெருமூச்சு விட, முதல்வருக்குத் துணையாக இருந்தவர்கள் என்று இரண்டு அதிகாரிகளைக் கோட்டைத் தரப்பே பாராட்டுகிறதே?''”

Advertisment

rr

’"பொதுமக்களை ரொம்பவே மிரட்டி வந்த சென்னை கனமழையை, திறம்பட நிர்வகித்து ஏகபோக பாராட்டுக்களை முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் குவித்து வருகிறார்கள். இது தொடர்பான ஸ்பெஷல் ஸ்டோரி நம் நக்கீரனில் தனியாக வருகிறது. பவர் செண்டர்களான இந்த இருவருக் கும் பின்னால் இருந்தபடி, வெள்ள நிவாரணப் பணிகளில் வட இந்தியாவும், தென் இந்தியாவும் கைகோத்து சிறப்பாகக் களமிறங்கியதால்தான் சென்னை இப்போது நிம்மதிப்பெருமூச்சு விடுகிறது என்று சொல்கிறார்கள் கள நிலவரம் அறிந்த காவல்துறையினர். அவர்கள் ’வட இந்தியா’ என்று குறிப்பிடுவது வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேஷ் லக்கானியை. அதேபோல் இந்தத் துறையில் செய லாளராக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ். ஸை ’தென்னிந்தியா’ என்று சிம்பா லிக்காக குறிப்பிடுகிறார்கள். இந்த இருவரும் மழை நிவாரண நடவடிக்கை களுக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளைத் தீவிரமாகக் கண்காணித்து, தேவையான பகுதிகளில் உரிய பணிகள், துரிதமாக நடக்கச் செய்தார்களாம். கனமழையால் ஏற்பட்ட நீர் சென்னை மாநகருக்குள் எங்கும் தேங்காமல், விரைவில் வடியக் காரணம், முதல்வரின் உத்தரவுப்படி இவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கைகள்தான் என்று பலரும் பாராட்டுகிறார்கள்.''”

"இப்பவே அடுத்த டி.ஜி.பி. யார் என்பது குறித்த சர்ச்சை காவல்துறை யில் ஏற்பட்டிருக்கிறதே?''”

Advertisment

’"தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அடுத்த ஜூனில் ஓய்வுபெறவிருக்கிறார். அதனால் அவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்கிற விவாதம் இப்போதே காவல்துறை அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. சீனியா ரிட்டி பட்டியலில் சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர், ராஜீவ்குமார் மற்றும் அபய்குமார் சிங் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களில் சந்தீப்ராய் ரத்தோர் சோமர்செட் ஓட்டலில், 16 வழக்குகளில் தொடர்புடைய, பா.ஜ.க.வுக்கு நெருக்கமான வாராகி என்பவருடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற வீடியோ அண்மையில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜீவ்குமார் மீதும் பல புகார்கள் சுழன்றடிக்கிறது. எனவே இப்போதைய நிலவரப்படி சீமா அகர்வால், அபய்குமார் சிங் ஆகிய இரு வரில் ஒருவர் அந்தப் பதவியில் அமர் வதற்கான வாய்ப்புதான் பிரகாசமாக இருக்கிறதாம். இந்த இருவரும் பெரிய அளவிற்கு எந்த சர்ச்சையி லும் சிக்காதவர்கள். அடுத்த டி.ஜி.பி. என்று துறை சார்ந்தவர்களாலேயே எதிர்பார்க்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோருக்குக் குறுக்கே அந்த வில்லங்க வீடியோ உட்கார்ந்திருப்பது பரிதாபம்தான் என்கிறார்கள்.''”

"சரிப்பா, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்று சொல்லியிருக்கிறாரே எடப்பாடி?''”

"அக்டோபர் 17ஆம் தேதி அ.தி.மு.க.வுக்கு 53 வயது ஆகிறது. கட்சியின் பிறந்தநாளைக் கொண்டா டச் சொல்லியும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் எடப்பாடி. அதில், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க, எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்று குறிப்பிட்டிருப்பதுடன், கட்சியில் இருக்கும் உட்பகை குறித்தும் எச்சரித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கும் விசயம்தான் அ.தி.மு.க.வில் இப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்று அவர் குறிப்பிட்டிருப்ப தால், சசிகலா -ஓ.பி.எஸ் -தினகரனை உள்ளிட்டோரைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் மனநிலைக்கு அவர் வந்திருக் கிறாரோ என்று அ.தி.மு.க.வினர் தங்களுக்குள் விவாதித்து வருகிறார்கள். இன்னும் சிலரோ, மேற்கண்ட மூவரையும் கட்சியில் சேர்க்கத் துடிக்கும் சீனியர்களைத்தான், கட்சிக்குள் உட்பகை அதிகரித்து வருகிறது அவர் சித்தரிக்கிறார்னு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.''”

"லண்டன் சென்ற பா.ஜ.க. பிரமுகர் நவம்பரில் திரும்பு கிறார் என்றார்களே?''”

"அரசியல் படிப்பிற்காக லண்டன் சென்றிருக்கும் அந்த தமிழக பா.ஜ.க. நிர்வாகி, நவம் பர் 23ஆம் தேதி தமிழகம் திரும்புவதாக இருந்தது. அதனால் அவரை தடபுடலாக வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் தயாராகிவந்தனர். ஆனால் அந்த நிர்வாகி, திடீரென தனது தமிழக வருகையை 2 வாரத்திற்கு மேல் தள்ளிப்போட்டிருக் கிறாராம். இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் விசாரித்தபோது, "என் குடும்பத்தோடு கொஞ்சம் ரிலாக்ஸாக பிரிட்டனில் சுற்றுலா செல்லவிருக்கிறேன். அது முடிந்து டிசம்பர் மத்தியில்தான் வருவேன். அங்கே உடனே வந்து எதை சாதிக்கப்போகிறேன்' என்று சொல்லிவிட்டாராம்.''”

"திராவிடக் கட்சிகளை காங்கிரஸும் பின்பற்ற முனைகிறதே?''

ops

"2026-ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே களப்பணிகளை ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக, தேர்தல் பணி களில் தொய்வு ஏற்படாமல் இருக்க தி.மு.க.வும் அ.தி.மு.க.வும், இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளன. இதன்மூலம் பூத் கமிட்டிகளை அமைப்பது தொடங்கி, தங்கள் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வது வரை எளிதாக இருக்கும் என்று இக்கட்சிகள் நம்புகின்றன. இதைப் பார்த்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த திராவிடக்கட்சிகளின் பாணியில் காங்கிரசிலும் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டத் தலைவரை நியமிக்கத் திட்டமிட்டி ருக்கிறாராம். இது தொடர்பான எண்ணத்தையும், கோரிக்கை யையும் கட்சியின் தேசியத் தலைமையிடம் தெரிவித்திருக் கிறாராம். இதற்கு டெல்லியில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தால், காங்கிரசிலும் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டத் தலைவர் என நிர்வாகிகளின் எண்ணிக்கை உயரும் என்கிறார்கள்.''”

"நானும் என் காதுக்கு வந்த முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில், அ.தி.மு.க.வில் தங்களை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு டெல்லிக்குச் சென்ற ஓ.பி.எஸ்., ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்திக்க நேரம் கேட்டிருந்ந்தார். அவருக்கு நேரம் ஒதுக்காமல் புறக்கணித்த பா.ஜ.க. தலைமை, நீங்கள் உடனே எங்கள் கட்சியில் இணையுங்கள். இதற்கு சம்மதித்தால் உடனடியாக உங்களுக்கு பிரதமர் மோடியின் தரிசனமும் சில ஆஃபர்களும் கிடைக்கும் என்று சொன்னதாம். இதைக் கேட்டு ஷாக்கான ஓ.பி.எஸ்., பா.ஜ.க.வில் இணையும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை;.இனியும் இருக்கப்போவது இல்லை என்று ஆதங்கத்தோடு சொல்லிவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டாராம். டெல்லி பயணம் என்ன ஆனது என்று கேட்ட தன் சகாக்களிடம், சீ.... ச்சீ...… இந்தப் பழம் புளிக்கும் என்கிற பாணியில், உதடு பிதுக்கினாராம்.''

_____

இறுதிச்சுற்று!

தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த ரவுடிகளை வேட்டையாடும் விதமாக "ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்' கடந்த அக்டோபர் 10 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் சமூகவிரோத ரவுடிகளை ஒருங்கிணைப்பது, ஜாதி பின்புலம் கொண்ட சிலர் என்பதால் சாதியப் பின்னணி கொண்ட தலைவர்களிடம், "இருக்கும் இடத்தில் அமைதியாக வாலை சுருட்டிக்கொண்டு இருக்கவும், தலைவர்களின் குருபூஜையின்பொழுது எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க மாவட்டத்தை விட்டு வெளியேறவும்' என உத்தரவிட்டது காவல்துறை.

இதன் ஒருபகுதியாக மருதுசேனை அமைப்பின் தலைவர் ஆதிநாராயணனை சென்னையில் வைத்து கைது செய்தது காவல்துறை. தொடர்ச்சியாக "தேவேந்திர குல எழுச்சி இயக்க' தலைவர் கண்ணபிரான் நெல்லையில் கைது செய்யப்பட்டார். பின் தேவேந்திரகுல மக்கள் இயக்கம் அமைப்பின் மாநில தலைவர் குமுளி ராஜ்குமார் பரமக்குடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் அனைவர் மீதும் "சட்டவிரோத மாக ஆயுதம் வைத்திருந்தனர்' என வழக்குப் பதிவு செய்வதை வாடிக்கையாக்கியுள்ளது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைது சம்பவத்தால் வியாழக் கிழமை தென்மாவட்ட பகுதிகளில் பதட்டம் அதிகரித்தது.

-நாகேந்திரன்