மாவட்ட கலெக்டர்கள் 9 பேர் உட்பட 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொத்தாக மாற்றியிருக்கிறது தி.மு.க. அரசு.
"நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றத்தில் சிக்கிய பலர், மீண்டும் மீண்டும் மாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், மாற்றப்பட வேண்டிய பலர், மாற்றப்படாமல் இருப்பதுதான் துரதிர்ஷ்டம்'' என்கின்றனர்.
இதுகுறித்து கோட்டையில் விசாரித்தபோது, "தற்போது மாற்றப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில், உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக மாற்றப்பட்டிருக்கிறார். சுற்றுலாத்துறை செயலாள ராக 2024-ல் இருந்தார் சமயமூர்த்தி. ஐந்தே மாதத்தில் அங்கிருந்து மனித வளத்துறைக்கு அவரை மாற்றினர். பிறகு அடுத்த ஆறே மாதத்தில் அதாவது கடந்த 2025 பிப்ரவரியில் மனித வளத் துறையிலிருந்து உயர்கல்வித் துறைக்கு மாற்றப்பட்டார்.
மனிதவளத் துறையிலிருந்து உயர்கல்விக்கு ஏன் மாற்றப்பட்டார்? உயர்கல்வித்துறையிலிருந்து நான்கே மாதத்தில் மீண்டும் மனித வளத்துறைக்கே ஏன் மாற்றப்பட்டார்? என்பது யாருக்கும் புரியவில்லை.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை ஆணையராக இருந்த பிரகாஷ், நான்கு மாதங்களுக்கு முன்புதான் (பிப்ரவரி, 2025) மனிதவளத்துறையின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதோ, தற்போது சி.எம்.டி.ஏ.வின் உறுப்பினர் செயலாளராக இவரை மாற்றியுள்ளனர்.
அதேபோல, தேசிய ஊரக திட்ட இயக்குநராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஸை, 2024 நவம்பர் மாதம் சுற்றுலா மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக இடமாற்றியிருந்தனர். ஆறே மாதத்தில் தற்போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார் ஷில்பா.
நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்தவர் எஸ்.நாகராஜன். 2024 ஜனவரியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனிதவளத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அடுத்த ஐந்து மாதத்தில் (ஜூன்) இங்கிருந்து நிதித்துறையின் செலவினப் பிரிவு செயலாளராக மாற்றப்பட்டார். தற்போது, வணிகவரித் துறை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார் நாகராஜன்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் எம்.டி.யாக இருந்த சு.பிரபாகரை, பிப்ரவரி 2025-ல் சி.எம்.டி.ஏ.வின் உறுப்பினர் செயலாளராக மாற்றினர். நான்கே மாதத்தில் தற்போது பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார் சு.பிரபாகர்.
இப்படி நிறைய மாற்றங்கள் இருக்கிறது. ஒரு பதவியில் நியமிக்கிறார்கள். பிறகு உடனே அங்கிருந்து மாற்றுகின்றனர். ஏன் நியமித்தார்கள்? ஏன் மாற்றப்பட்டார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. ஒரு அதிகாரி, ஒரு பதவியில் நியமிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 2 வருடங்க ளாவது நீடிக்க விட்டால்தான் அந்த துறை வளர்ச்சிபெறும். துறையின் வளர்ச்சிக்காக சிந்திக்கவும் முடியும். ஆனால், 4 மாதம், 5 மாதங்களில் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தால் துறை எப்படி வளர்ச்சிபெறும்? பல மாதங்களுக்கு முன்பு நடந்த மாற்றத்திலும் இதேதான் நடந்தது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் விசாரித்தபோது, "இந்த மாற்றங் களை சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே முயற்சித்து பெற்றார்களா? அல்லது முதல்வரிடம் பவர்ஃபுல்லாக இருக்கும் நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் முதல்வரின் முதல் செயலாளர் உமாநாத் ஆகியோரின் விருப்பத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார்களா? என்பதுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது. ஏனெனில், மாற்றப்பட வேண்டிய அதிகாரிகள் பலர் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி கிஞ்சித்தும் உதயச்சந்திரன், உமாநாத் இருவர் அணி யோசிப்பதில்லை.
அதாவது, அரசு பணியில் முக்கிய பதவி மற்றும் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள், அதிகபட்சம் 3 ஆண்டுகள் ஒரே பதவியில் இருக்கலாம். அதன்பிறகு மாற்றப்பட வேண்டும் என்பது அரசாணை. ஆனால், 3 ஆண்டுகள் கடந்தும் மாற்றப்படாமல் பல அதிகாரிகள் இருக்கிறார்கள். அரசாணை பற்றி கவலைப்படுவதில்லை.
குறிப்பாக, சென்னை துறைமுகக்கழக தலைவராக 2021, நவம்பர் முதல் தற்போதுவரை இருந்துவருகிறார் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ்! சில ஊழல் புகார்களால் இவரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலங்களாக இருக்கிறது. ஆனால், மாற்றப்படவில்லை.
அதேபோல 2021, டிசம்பர் முதல் தற்போது வரை பெங்களூர் ஸ்பேஸ் இயக்குநராக இருந்துவரும் சந்தியா வேணுகோபால், 2022, ஜூன் முதல் தற்போது வரை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்துவரும் சித்திக், ஜூன் 2022 முதல் என்.சி.டி.சி.யின் தலைவராக இருந்துவரும் பங்கஜ்குமார் பன்சால், 2021, ஜனவரியிலிருந்து நிதித் துறையின் சிறப்பு செயலாளராக இருந்து வரும் அருண் சுந்தர் தயாளன், ஆகஸ்ட் 2022 முதல் ஆதிதிராவிடர் நலத்துறையின் கமிஷனராக இருந்து வரும் டி.ஆனந்த், ஜூன் 2022 முதல் தாட்கோவின் நிர்வாக இயக்குநராக இருக்கும் கந்தசாமி, போக்குவரத்துறை செயலாளர் பனீந்தர்ரெட்டி உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 ஆண்டுகள் கடந்தும் ஒரே பதவியில் நீடித்து வருகிறார்கள். இவர்கள் மீது இருவர் அணியின் பார்வை விழுவதில்லை.
உதயச்சந்திரன், — உமாநாத்தின் அதி காரத்தில்தான் கோட்டை இருந்துவருகிறது. இவர்கள் இருவருக்கும் வேண்டப்பட்ட அதிகாரிகள் நல்ல பவர்ஃபுல் போஸ்டிங்கில் இருந்து வருகின்றனர். அவர்களை மாற்றவேண்டிய நிர்பந்தம் உருவானால், மீண்டும் ஒரு பவர்ஃபுல் போஸ்டிங்கிற்கே மாற்றப்படுவார்கள். அந்த வகையில், இந்த இருவர் அணியின் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே அதிகாரிகள் மாற்றம் நடக்கிறது. இது தி.மு.க. அரசின் நிர்வாகத் தைத்தான் கேள்விக்குறியாக்குகிறது'' என்கிறார்கள் அழுத்தமாக!