-எடப்பாடி அரசின் எதேச்சதிகாரம்!
""வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதிவரை மக்கள் ஒன்றாகக்கூடி தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ மாவட்டத்தில் அனுமதி இல்லை'' இப்படி ஒரு வாய்மொழி உத்தரவினை அனைத்துக் காவல் நிலையத்திற்கும் தெரிவித்திருக்கின்றது மாவட்ட காவல்துறை. "இது எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கின்றது' என கொதிக்கின்றனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள்.
சி.பி.எம். கட்சியின் மா.செவான அர்ஜுனனோ... ""ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் சுட்டதில் 13 பேர் பலியாகினர். இதைக் கண்டித்து எங்கள் கட்சி சார்பில் ஜூன் 18-ல் தூத்துக்குடி -அண்ணா நகர் புதுக்கரை ரோட்டில் இருந்து பேரணியும், தொடர்ந்து சிதம்பரனார் பேருந்து நிலைய பகுதியில் பொதுக்கூட்டமும் நடத்த முடிவு செய்து போலீ சாரிடம் அனுமதி கேட்டோம். அனுமதி மறுத்ததால் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி கிடைத்து கூட்டம் நடத்தியும் வழக்கினை பதிவு செய்து காட்டுத் தர்பாரைக் கட்டவிழ்த் தது. கைது நடவடிக்கையை ஒருபுறம் வைத்துக்கொண்டே, மறுபுறம் ஜனநாயகக் குரல் வளையை நெரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மாவட்ட காவல்துறை. அவர் களைப் பொறுத்தவரை "நீங்கள் பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வேண்டாம். நிலை மையை நாங்களே கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்' என்கிற மிரட்டல் தொனியில் இறங்கிவிட்டனர். இருப்பினும் உரிமையை மீட்கப் போராடு வோம்'' என்கிறார்.
இந்தக் கொதிப்பு அடங்காத நிலையில்...
தூத்துக்குடி மாவட்டம் -தட்டப்பாறை அருகிலுள்ள வடக்கு சிலுக்கம்பட்டியில் அடுத்த அட்டகாசத்தை வெள்ளிக்கிழமை பட்டப்பகலில் ஆரம்பித்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் தனியார் நிறுவனங்கள் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து ஆறுமாத காலத்திற்கு மேலாகப் போராடி வருகின்றனர் அங்குள்ள மக்கள். வியாழக் கிழமையன்று காற்றாலை அமையப்போகும் இடத்தைப் பார்வையிட தனியார் நிறுவன ஆட்கள் அங்கு வந்தபோது, எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு கிளம்பியிருக்கின்றனர் மக்கள். மறுநாள் பிற்பகலில் டெம்போ டிராவலரில் வந்த தட்டப்பாறைப் போலீசார், காற்றாலை நிறுவனத்தின் வாகனங்களை சேதப்படுத்தியதாக கண்ணில்பட்டோரையெல்லாம் தாக்கி 10 பெண்கள் உட்பட 41 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததோடு மட்டுமில்லாமல், "கூடி நின்று பேசக்கூடாது' என கட்டளையிட்டுச் சென்றுள்ளனர்.
""சுதந்திரமாக பேசக்கூடாது என கட்டளையிட அவர்கள் யார்..? இதற்கு எதிர்வினை உண்டு என்பதை அவர்கள் கட்டாயம் ஒருநாள் அறிந்தே ஆகவேண்டும். இங்கு நடந்த மனிதப் பலிகளுக்கு எதிராக ஜூலை 3-ஆம் தேதி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதோ அதோ என காலம் கடத்துகின்றார்கள்'' என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி மத்திய மா.செயலாளரான அகமது இக்பால்.
இது குறித்துக் கருத்தறிய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவிடம் பேசினோம்... "" உண்மைதான். மக்களின் வாழ்க்கை என்று இயல்பு நிலைக்குத் திரும்புகிறதோ அன்றுவரை எங்களது இந்த நடவடிக்கை தொடரும். மக்களைப் பாதுக்காக்க வேண்டியது எங்களது கடமை. அதை விடுத்து ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடக்கும் வேளைகளில் அதற்கும் பந்தோபஸ்து கொடுக்க வேண்டிய சூழல் இருக்கு. அதனால் மக்களுக்கு முழு பந்தோபஸ்து கொடுக்க முடியலை. அதனால் தான் அனுமதி மறுக்கின்றேன். இதில் தப்பில்லையே..?'' என்றார் அவர்.
ஜாடிக்கேத்த மூடி மாதிரி எடப்பாடிக் கேத்த எஸ்.பி.தான். நல்ல சட்டம்தான்!
-நாகேந்திரன்
கண்ணைக் கட்டி... கையை முறுக்கி...
காவல்துறையின் சித்ரவதைக்குள்ளான மதுரை மாவட்டம் -திருமங்கலத்தை சேர்ந்த பரமனோ, ""கடந்த 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தூத்துக்குடி எஸ்.ஐ. ராஜமாணிக்கம் தலைமையில் டெம்போ டிராவலரில் வந்த 7 போலீஸ்காரங்க என்னுடைய வீட்டிற்கு வந்து, "நீதான் பரமனா..? வந்து வண்டியில் ஏறு' என பேசிக்கொண்டே என்னுடைய கையை திருகி பின்புறமாக வைத்துக் கட்டி கண்ணைக்கட்டி வண்டியில் ஏற்றி கூட்டிச் சென்றாங்க.! கொஞ்ச தூரம் சென்றதும் வண்டியை நிறுத்தினாங்க.! அமைதியாய் இருந்த அந்த இடத்தில் கண் கட்டையும், கைக்கட்டையும் அவிழ்த்துவிட்டவங்க, கையில் விலங்கை மாட்டிவிட்டு அடிக்க ஆரம்பிச்சாங்க. சிறிதுநேரம் அடித்து முடிந்தவுடன், "உன்னைய விட்டுர்றோம்... எங்க அந்த குருசாமி..?' (மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர்) என கேட்டு அடிக்க ஆரம்பிச்சாங்க. நடுக்காடு என்பதால் கேட்கக்கூட நாதியில்லை. அதன்பின் திருமங்கலத்திலுள்ள லாட்ஜுக்கு கூட்டிச்சென்று அடிச்சவங்க, "உன்னை பாவம்னு மன்னிச்சுட்டோம், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு' என அந்த எஸ்.ஐ.யின் போன் நம்பரைக் கொடுத்துட்டுப் போனாங்க. துப்பாக்கிச்சூடு நடந்ததை டி.வி.யில்தான் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். தூத்துக்குடி பக்கம் போனதே இல்லை'' என்கிறார்.