"கல்விக் கட்டணத்தை செலுத் தாத மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியில் அனுப்புவது, மிரட்டுவது போன்ற செயல்கள் எது நடைபெற்றாலும் கடுமையான தண்டனை உண்டு" என தமிழ்நாடு அரசு அறிவித் திருப்பினும் அதை செவிடன் காதில் ஊதிய சங்காக கருதுகின்றன பல தனியார் கல்வி அமைப்புகள். கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவி ஒருவரை கல்லூரி நிர்வாகம் மோசமான வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்த, கல்லூரியின் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார் நெல்லை மாவட்டம் கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்த ஷர்லி பிரமில்டா எனும் மாணவி.
"+2வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல வாங்கியிருந்ததால எந்தவித கட்டணமும் இல்லாமல் சேரன்மகாதேவி திடியூரிலுள்ள தங்களது கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம் என கோவில்பட்டியைச் சேர்ந்த போதகர் ஒருவர் மூலம் கேட்டார்கள் கல்லூரி நிர்வாகத்தினர். பெரிய கல்லூரி என்கிறார்கள், பீஸ் வேண்டாம் என்கிறார்கள் என யோசனை இருந்தாலும் அந்த கல்லூரியிலுள்ள கார்த்திகா எனும் ஆசிரியை நம்பிக்கை கொடுத்ததால் என்னுடைய மகளை பி.இ.(கம்ப்யூ.சயின்ஸ்) முதலாமாண்டு சேர்த்து விட்டேன். அங்கேயே இருக்கும் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிச்சிக்கிட்டிருந்தா. கடந்த பிப்ரவரி மாதத் தேர்வின்போது "காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் கட்டணும். உடனே புறப்பட்டு வாங்க' என கல்லூரி நிர் வாகம் தகவல் தர, நானும் இங்க வந்து, ‘"நானோ மாற்றுத் திறனாளி.! ஊழியம் செய்துவரும் காணிக்கை மூலமாகத்தான் குடும்பத்தை நடத்துறோம். நீங்கதான் எந்தவித பீஸும் வேண்டாம்னு சொல்லிச் சேர்த்தீங்க. இப்ப திடுமென பணம் கட்டச் சொன்னால் என்ன செய்வது?''’ என நிர்வாகத்திடம் முறையிட்டேன். ஆனால் அவங்களோ அதனை காதில் வாங்கவில்லை. வேறு வழியில்லாமல் "என்னுடைய பெண்ணை அழைத்து வந்த கார்த்திகா டீச்சர் மூலமாக பீஸை சீக்கிரம் கட்டுறேன்' என எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
அப்போதைக்கு பிரச்சனை முடிந்ததாக அஜாக்கிரதையாக இருந்து விட்டேன். இப்ப என்னுடைய மகள் விரக்தியில் காலேஜ் மாடியிலிருந்து குதித்து காலையும், இடுப்பையும் உடைச்சிக்கிட்டா. இனி அவளால் எழுந்து உட்காரக்கூட முடியாது என்கிறார்கள். போலீஸோ காலேஜோட சமாதானமா போங்க என மிரட்டிவரு கின்றது'' என்கிறார் மாடியிலிருந்து குதித்த மாணவி ஷர்லி பிரமில்டாவின் தந்தை முத்துக்குட்டி. ஓலைப்பாயில் சுருட்டி வைக்கப்பட்ட பொருள்போல, இடுப்பு எலும்பும், வலது குதிகால் எலும்பும் உடைபட்ட நிலையில் தாய் சரோஜாவின் அரவணைப்பில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி ஷர்லி பிரமில்டா, "27-04-2022 அன்று காலையில் 10:30 மணிக்கு பிரின்சிபால் அறைக்கு வரச் சொல்லியிருந்தாங்க. பிரின்சிபல் ரவிக்குமார், ஹாஸ்டல் வார்டன் ராஜு, பிரின்சிபாலின் பி.ஏ. சிவா மற்றும் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் படிக்கும் மணி அண்ணன் இருந்தாங்க. ‘"என்னடி? ஒருத்தனுக்காக இரண்டு பேர் அலையுறீங்களா? உனக்கும் மணிக்கும் என்னடி தொடர்பு..?'’ என எடுத்த எடுப்பிலேயே என்னிடம் ஒருமையில் கேள்விகளைக் கேட்டார் பிரின்சிபல்.
எங்க கரைச்சுத்திபுதூர் ஊருக்கு பக்கத்து ஊர்தான் மணி அண்ணன் ஊர்.. அதனால் தப்பா பேசாதீங்க சார்,... என நான் பதிலுக்கு பேச, அப்பொழுதுதான் என்னுடைய காலேஜ் பீஸ் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தார் பிரின்சிபாலின் பி.ஏ. சிவா. பின் இருவரும் மோசமான கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்ட ஆரம்பிச்சாங்க.. ஒருகட்டத்தில் "இப்படித்தான் பழகி பீஸ் கட்டப்போறியா..?' என வாய்கூசும் வார்த்தைகளைப் பேசினாங்க... பிறகு, "இனிமேல் இப்படி ஆண்களோடு பழகமாட்டேன்னு எழுதிக் கொடு' என்றார்கள். ஹாஸ்டலில் படிக்கும் நான் எப்படி வெளியே வரமுடியும்? எப்படி பழகமுடியும். நான் எழுதத் தயங்குவதைப் பார்த்து "நாங்கள் சொல்வது போல்தான் எழுதனும். இல்லையென்றால் டி.சி.யில் நடவடிக்கை சரியில்லாத பெண் என குறிப்பெழுதிவிடுவேன்' என மிரட்டினர். எழுதிக் கொடுத்துவிட்டு வேறுவழியில்லாமல் மாடியிலிருந்து குதித்துவிட்டேன்'' என்கிறார் வேதனையுடன்.
முதலில் ஷர்லி, திடியூர் பகுதியிலுள்ள சிறிய கிளினிக் ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென வற்புறுத்தப்பட்ட நிலையில், தாமதமாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு 20 கி.மீ தூரமுள்ள மருத்துவமனைக்கு ஆட்டோவிலேயே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மாணவி ஷர்லி பிரமில்டாவிற்காக சட்டப்போராட்டம் நடத்திவரும் மணிகண்டனோ, "இதுமாதிரி வருடந்தோறும் பல புகார்கள் இங்குண்டு. பல மாணவர்கள் நிர்வாகத்தினரின் டார்ச்சர் தாங்காமல் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிடுவர். ஷர்லி பிரமில்டா விவகாரத்தினைப் பொறுத்தவரை கல்லூரிக்காக சமாதானம் பேசத்தான் நினைக்கின்றது மாவட்ட நிர்வாகம். முறையாக வழக்குப் பதிவுசெய்து விசாரித்தால், மாணவர்களிடம் பேசினால் பல விவகாரங்கள் வெளிப்படலாம்'' என்கிறார் அவர்.
இதுகுறித்து கருத்தறிய கல்லூரித் தரப்பினைத் தொடர்புகொண்டோம். "அவரிடம் பேசுங்கள்... இவரிடம் பேசுங்கள்' என நம்மை சுற்றலில் விட்டதோடு சரி... பதிலில்லை.
படங்கள்: விவேக்