கொரோனாவால் வேலைகளை இழந்து, தொழில்களை இழந்து அடுத்த வேளை உணவுக்காக பலரும் துன்பப்பட்டுக்கொண்டுள்ளார்கள். கடந்த ஓராண்டாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் முழு ஆண்டுக்கட்டணம் கேட்கிறார்கள் என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் பெற் றோர்களை நெருக்காதீர்கள், தவணை முறையில் கட்டணத்தை பெற்றுக்கொள்ளுங் கள் என்றது. யூ.ஜி.சி கல்வி கட்டணம் பெறுவதில் நெருக்கடியை தராதீர்கள் என அறிவுறுத்தியது. பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் 75 சதவிகித கல்விக் கட்டணமே வாங்குகின்றன. சில கல்லூரிகள் மக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தாருங்கள் என வாங்குகின்றன. ஆனால் பிரபலமான பல தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இந்த கொடிய சூழ்நிலையிலும் முழு கட்டணத்தை கேட்டு மிரட்டுவதோடு, எக்ஸாம் எழுத முடியாது என மிரட்டுகிறார்கள் என்கிற புகார்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி நம்மிடம் பேசிய ஒரு பொறியியல் மாணவன், "தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் முக்கியமானவர் அந்த அமைச்சர். வடதமிழ்நாட்டில் அவருக்கு சில பொறியியல் கல்லூரியில் உள்ளன. கடந்த வாரம் மாணவ - மாணவிகளிடம், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மூலம், 2020-2021ஆம் ஆண்டுக்கான கல்விக்கட்டணம் முழுவதும் கட்டவேண்டும்; இல்லையேல் தேர்வு எழுத அனுமதிக்க முடியாதுன்னு சொன்னாங்க. ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் நான் எங்கப்பா வோடு போனேன், என்னைப் போல் பலரும் பெற்றோர்களோடு வந்திருந்தாங்க. கொரோனாவால் வாழவே வழியில்லை, இப்போது முழு பீஸ் கட்ட முடியாது, ஏற்கனவே 50 சதவிகித பீஸ் கட்டிட்டோம், மீதியுள்ளதில் இப்போது கொஞ்சம் கட்டிவிடுகிறோம், மீதி அடுத்தாண்டு கட்டுகிறோம், தேர்வு எழுத வைங்க என கெஞ்சிக் கேட்டப்ப, மரியாதை இல்லாம பேசிட்டு, காலேஜ் பீஸ், எக்ஸாம் பீஸ் கட்ட சலான் தந்தாங்க. பணம் கட்டிட்டு ரசீதை கொண்டுவந்து கல்லூரியில் தந்தப்ப, பேலன்ஸ் பீஸ் கட்டினால்தான் தேர்வு கட்டணத்தை பல்கலைக் கழகத்துக்கு அனுப்புவோம்; இல்லன்னா அனுப்பமாட்டோம்னு பிளாக்மெயில் செய்கிறார்கள்'' என்றார்.
அதேபோல் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் கோர்ஸ் கம்ப்ளீட் டிகிரி சர்டிபிகேட் வழங்க கல்வி கட்டணத்தோடு 3500 ரூபாயைத் தனியாக அந்த கல்லூரி வசூலித்துள்ளது. அதைவிடக் கொள்ளை, இந்த கல்வியாண்டில் ஒரு மாதம் மட்டுமே கல்லூரி திறந்து மாணவ-மாணவிகள் வகுப்புக்கு சென்றனர். ஆனால் 6 மாதத்துக்கான பேருந்து கட்டணம், மெஸ் பீஸ் கட்டியே ஆகவேண்டும் என வாங்கியுள்ளார்கள். இது குறித்து சில பெற்றோர்கள் துணிந்து கேள்வி எழுப்பி "புகார் தருவோம்' என்றதற்கு, "இந்த காலேஜ் யாருதுன்னு தெரியுமில்ல?, நீங்க எங்க போய் சொன்னாலும் எங்களை ஒண்ணும் செய்ய முடியாது, எங்களை பகைச்சிக் கிட்டா உங்க பசங்க எங்கயும் டிகிரி வாங்க முடியாது ஜாக்கிரதை' என நேரடியாகவே மிரட்டியுள்ளார்கள். இதனால் சில பெற்றோர்கள் பணம் கட்ட இப்போ வழியில்லை, படிச்சது போதும் என்று தங்களது பிள்ளைகளை நின்றுவிடு எனச்சொல்ல... சக மாணவ-மாணவிகளிடம் நிலைமையைக் கூறி அழுதுள் ளார்கள்.
பெற்றோர்களிடம் "உங்க பசங்களுக்கு பாடம் நடத்தற பேராசிரியர்களுக்கு, ஸ்டாப் களுக்கு சம்பளம் தர்றதுக்கு, நீங்க பீஸ் கட்டினால்தானே நாங்க தர முடியும்' என்றுள்ளார்கள். அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களோ, "மாசம் 30 ஆயிரம் சம்பளம், இப்போ 5 ஆயிரம் தான் தர்றாங்க. காலேஜ்தான் தொறக்கலையே உங்களுக்கு எதுக்கு முழு சம்பளம்னு கேட்கறாங்க. இத்தனைக்கும் தினமும் ஆன்லைன் க்ளாஸ் எடுக்கறோம்'' எனப் புலம்புகி றார்கள்.
"அமைச்சரின் கல்லூரி யில் மட்டுமல்ல... பெரும் பாலான பள்ளி, பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தரவேண்டுமென மாணவ- மாணவிகளை மிரட்டி முழு பீஸ் வாங்குகிறார்கள். ஆசிரியர் களுக்கு 25 சதவிதம் வரையே சம்பளம் தருகிறார்கள்'' என்கிறார்கள் தனியார் பள்ளி, கல்லூரியில் பணியாற்று பவர்கள்.
"கல்வித் தந்தைகள், வாழவைக்கும் வள்ளல்கள் என பிரபலப்படுத்திக்கொள்பவர்கள் இப்படியா வாழ்க்கையோடு விளையாடுவார்கள்' என நொந்துப்போய் புலம்புகிறார் கள் பாதிக்கப்பட்டவர்கள்.