கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ரவிக்குமார், அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு எதிரான மனு, சுப்ரீம் கோர்ட்டில் பதினாறாம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த பிணையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீமதியின் தாயார் செல்வி தொடுத்த அந்த வழக்கில் பல விறுவிறுப்பான காட்சிகள் ஏற்படப் போகிறது. அதில் நக்கீரன் சமீபத்தில் பதிவு செய்த மர்ம மரணமடைந்த மாணவி ஸ்ரீமதியின் தோழிகளின் சாட்சியம் முக்கிய இடம்பெறப் போகிறது.
அந்த சாட்சியத்தில், "ஸ்ரீமதி தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை. அவள் மரணத்திற்கு முன்பு சந்தோசமாக சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள். ஸ்ரீமதிக்கும் அவள் தாயாருக்கும் காதல் விவகாரத்தில் எந்த சண்டையும் இல்லை. ஸ்ரீமதி மரணமடைந்த பிறகு அவரது உடைமை களை போலீசுக்கு ஒப்படைக்காமல் தனியாக பள்ளி நிர்வாகம் எடுத்துச் சென்றது. ஸ்ரீமதியை மருத்துவமனைக்கு இறந்த உடலாக எடுத்து சென்ற வேன், கலவரம் நடந்த போது பள்ளிக்கு வெளியே உள்ள ஒரு சாலையில் எரித்துச் சாம்பலாக் கப்பட்டது. அத்துடன் ஸ்ரீமதியின் ஹாஸ்டல் பேக்கும் எரிக்கப்பட்டது' போன்ற பரபரப்பான விவரங்கள் வெளிவரும் என்கிறது’வழக்கறிஞர் வட்டாரங்கள்.
ரவிக்குமார் இதுபோல சாட்சியங்களை அழிப்பது புதிதல்ல. ஏற்கனவே 26.06.2004 அன்று நடந்த மாணவர் ராஜா கொலையில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார் மீது கொலையை மறைக்க முயற்சி செய்தார் என குற்றம் சாட்டப்பட்ட விவரம் நமக்குக் கிடைத்தது.
“அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த கோபிநாத் என்ற மாணவன் தன்னுடன் படித்த மேகத்தின் பெயர் கொண்ட ஒரு பெண்ணுக்கு பள்ளியின் வட பகுதியில் உள்ள ஒரு வகுப்பறையில் வைத்து முத்தம் கொடுக்க முயற்சித்த போது, ராஜா எனும் மாணவன் அதைப் பார்த்து விட்டான். தான் பார்த்ததை பள்ளி நிர்வாகம் மற்றும் தாளாளர் ரவிக்குமாரிட மும் சொல்லி விடுவேன் என்று கூறியதால், கோபிநாத் ராஜாவின் காலை இடறி கீழே தள்ளி அவன் மேல் ஏறி உட்கார்ந்து இரு கைகளாலும் ராஜாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து அவரது உடலை கழிவறைக்குள் போட்டுள்ளார்.”
அந்தப் பள்ளியின் நிர்வாகியான ரவிக்குமார், ஹாஸ்டல் வார்டன் ராம லிங்கம், காவலாளி முசிறி ராஜா ஆகியோர், கொலையுண்டவர் தங்கள் பள்ளி மாணவர் என்பது தெரிந்த பின்பும் “இறந்து போன வர் தங்கள் பள்ளி மாணவர் இல்லை’என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளனர்.
ராஜா மரணமடைந்த வழக்கில் முக்கிய புகார்தாரர், தாளாளர் ரவிக்குமா ரின் தாய் பார்வதியம்மாள். இவர் 15.06.2010 ஆம் ஆண்டு அளித்த சாட்சியத்தில், "எங்கள் பள்ளியின் வார்டன் முசிறி ராஜா என்பவர் பள்ளியின் பாத்ரூமில் ஒரு மாணவன் இறந்து கிடப்பதாகக் கூறினார். நான் காவல் துறைக்கு தகவல் கூறினேன். இந்த வழக்கில் இரண்டாவது எதிரி ரவிக்குமார் எனது மகன். ரவிக்குமாருக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் சின்ன சேலத்தில் சக்தி கார்ஸ் என்ற பெயரில் கார்களை வாங்கி விற்கும் தொழிலைச் செய்து வந்தார். ராஜா மரண சம்பவம் நடந்த பொழுது ரவிக்குமார் பள்ளிக்கு வரவில்லை''’என்றார்.
மாணவன் ராஜாவின் தந்தை ரவிச்சந்தி ரன், "குடும்பத்தில் நடைபெறும் ஒரு திருமணம் தொடர்பாக பள்ளியிலிருந்து விடுப்பு வாங்கி வருமாறு எனது மகனிடம் கூறியிருந்தேன். அதற்கு அவன் பள்ளியில் விடுப்பு தரவில்லை. நேரில் வந்து அழைத்துச் செல்லுமாறு கூறினான். என் மனைவி தொலைபேசி மூலம் என் பையன் எங்கே என்று கேட்டபோது என் மகன் ஸ்டடி கிளாசில் இருப்பதாக பள்ளி நிர்வாகம் கூறியது. பின்னர் பள்ளியில் யாரோ ஒரு மாணவன் இறந்து கிடப்பதாக பள்ளிக்கு விடுமுறை விடப் பட்டது. பள்ளியில் இருந்து ஒரு வேனை அனுப்பி என்னை அங்கு வருமாறு கூறினார்கள். பள்ளிக் குச் சென்று பார்த்தபோது என் மகன் இறந்து கிடந்தான். போலீசாரிடம் நான் புகார் எதுவும் எழுதிக் கொடுக்கவில்லை''” என்றிருக்கிறார்.
அந்த சமயத்தில் மாணவர் ராஜாவின் பாக்கெட்டில் இருந்து ஸ்ரீமதியிடம் கைப்பற்றி யது போல ஒரு தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். அதில் "பள்ளிக்கு லீவு விடவேண்டும். இல்லையென்றால் பதினைந்து இடங்களில் பாம் வெடிக்கும்; கொலை விழும்' என ராஜா எழுதியது போல இருந்துள்ளது. மகனை உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக விடுப்பு எடுத்து வருமாறு ரவிச்சந்திரன் சொன்ன சாட்சியமும், பள்ளிக்கு லீவு விடவேண்டும்' இல்லையேல் பாம் வெடிக்கும் என மறைந்த ராஜாவின் பாக்கெட்டில் இருந்து எடுத்த கடிதத்தில் இருந்த விசயமும் குற்ற நிகழ்வின் மோட்டிவோடு ஒத்துப்போனது. இந்தக் கடிதம் ராஜா எழுதியதுதான் என்று எஸ்.முரளி கிருஷ்ணன் என்ற தடய அறிவியல் துறை அதிகாரி அப்போது கோர்ட்டில் சாட்சியமளித்தார்.
ஸ்ரீமதியின் மரணத்தைப் போலவே முதலில் ராஜாவின் மரணத்தை தற்கொலை என கடிதம் தயார் செய்து, ராஜாவின் தந்தையாரை அந்தக் கடிதம் மூலம் தடுத்திருக்கிறார்கள். தாளாளர் ரவிக்குமாரின் தாயாரை வைத்து புகார் கொடுத்திருக்கிறார்கள். வெறும் பதினாலே வயதான பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கோபிநாத் என்ற மாணவனை குற்றவாளியாக காட்டுவதற்காக, பத்தொன்பது வயது என மோசடி செய்துள்ளார்கள். அதனால் யாருமே இல்லாத அனாதையான கோபிநாத் மூன்று மாதம் சிறையில் இருந்துள்ளார்.
ஆனால் ரவிக்குமார் அந்த வழக்கில் 01.07.2004 அன்று சிறைக்குச் சென்றார். அன்றைய தினமே அவரை நீதித்துறை நடுவர் கள்ளக்குறிச்சி மேஜிஸ்ட்ரேட் ஜாமீனில் விடுவித்து விட்டார்.
"இப்படி பல ‘செட்-அப்’ வேலைகளுடன் அன்று நடைபெற்ற ராஜாவின் வழக்கும், இப்போது கோர்ட்டுக்கு வரவிருக்கும் ஸ்ரீமதியின் வழக்கும் ஒரே மாதிரி ஒத்துப்போய் இருக்கிறது என்கிற வாதம் சுப்ரீம் கோர்ட்டில் ஒலிக்கப்போகிறது'' என்கிறார் வழக்கறிஞர் லூஸி.
-தாமோதரன் பிரகாஷ்