புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டது.
முதலில் ஏ.டி.எஸ்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரனை செய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது போலீஸ் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியதாகக் கூறப் பட்ட நிலையில், இந்த விசாரணைக்குழுவும் எங்களையே குற்றவாளிகளாக்கப் பார்க்கிறது. இதனை மாற்ற வேண்டுமென்று வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி போலீசார் உண்மை அறியும் சோதனை நடத்துவதற்கான அனுமதிக்குக் காத்திருக்கின்றனர். மற்றொரு புறம், வேங்கைவயல் பிரச்சனை என்ன ஆனதென்று பல்வேறு அமைப்புகளும் கேள்வியெழுப்பியபடி உள்ளன.
இந்நிலையில் தான், மனிதக்கழிவு கலந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை அகற்ற வேண்டுமென்று தண்ணீர்த்தொட்டி உடைப்புப் போராட்டத்திற்கு டைஃபி, சி.பி.எம். அமைப்புகள் அழைப்புவிடுத்து பேரணியாக செல்ல முற்பட, அவர்களைத் தடுத்துநிறுத்திய போலீசார், விசாரணைக்கு சாட்சியாக உள்ள தண்ணீர்த்தொட்டியை வழக்கு முடியும்வரை உடைக்கக்கூடாது என்று சமாதானம் கூறி அனுப்பினர். அதன்பிறகும் பலரும் தண்ணீர்த் தொட்டி யை உடைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துக் கொண் டிருக்கின்றனர். தற்போது அந்த தண்ணீர்த்தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படவில்லை. அருகிலேயே மற்றொரு தண்ணீர்த் தொட்டி கட்டும் பணி தீவிரமாக நடந்துவரு கிறது. "ஆதிதிராவிடர் மக்களுக்கெனத் தனியாக தண்ணீர்த்தொட்டி வேண்டாம், அனைவருக்கும் ஒரே தொட்டியிலிருந்து தண்ணீர் கொடு!' என்று சீமான் உள்பட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த தண்ணீர்த்தொட்டியில் யாரும் மேலேற முடியாதபடி தடுக்கப்பட்டிருந்த ஏணியில், கடந்த 13ஆம் தேதி திங்கட்கிழமை காலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞரணிச் செயலாளர் கா.முருகானந்தம், புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் அருள் ஒளி, சேலம் மாவட்ட மாணவரணி கவியரசன், சிவகங்கை நகர செயலாளர் அஜித் செல்வராஜ் ஆகி யோர், யாருக்கும் தெரியாமல் மேலே ஏறி, சம்மட்டியுடன் தண்ணீர்த்தொட்டி மீது நின்று முழக்கமிட்டதுடன், சம்மட்டியால் தண்ணீர்த் தொட்டியை உடைக்கவும் செய்தனர். சத்தம் கேட்டு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின் னர், நால்வரையும் கீழே இறங்கவைத்து கைது செய் தனர். வேங்கைவயல் மக்களோ, அவர்களைக் கைது செய்யக் கூடாது, வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதேவேளை, இறையூர் கிராம மக்களும் அங்கே திரள, "இதுபோல தான் யாருக்கும் தெரியாமல் மேலே ஏறி மனிதக்கழிவைக் கலந்துள்ளனர். வழக்கின் முக்கிய சாட்சியான தண்ணீர்த்தொட்டியை உடைத்து, தடயங்களை அழிக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்''’என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிச்சயம் வழக்குப்பதிவு செய்வோமென போலீசார் கூறியபோதும், முதல் தகவல் அறிக்கையைக் காட்டும்வரை காத்திருப்போம் என்று உறுதியாகக் கூறிவிட்டனர். இந்நிலையில் அந்த நால்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த பரபரப்பு குறைவதற்குள், ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 3 பள்ளி மாணவர்களை சம்பந்தப்படுத்தி, மனிதக்கழிவு கலந்தவர்கள் என்பதுபோல், பெரியார் அம்பேத்கர் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சுவரொட்டியை ஒட்டி பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர். அதைப் பார்த்து 14ஆம் தேதி, இறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, உள்ளே செல்ல முயன்றபோது, நுழைவாயில் கதவுகளை இழுத்து மூடித் தடுத்ததால், நுழைவாயில் முற்றுகைப் போராட்டத்தில் இறையூர் மக்கள் ஈடுபட்டனர். பின்னர், அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் ஆட்சியரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக் கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோ ரிடம்.. "வேங்கைவயல் பிரச்சனையில் உண்மைக் குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும். வெளியூர் ஆட்கள் வேங்கைவயலுக்குள் வந்து ஒற்றுமையை சீர்குலைப்பதைத் தடுக்க 144 தடையுத்தரவை அமல்படுத்த வேண்டும். 3 பள்ளி மாணவர்களைக் குறிப்பிட்டு துண்டறிக்கை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் பெயர்களோடு துண்டறிக்கை வெளியிட்டவர்களைக் கைது செய்ய டி.எஸ்.பி. யிடம் கூறிய மாவட்ட ஆட்சியர், மற்ற கோரிக்கைகளிலும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதால் போராட் டம் கைவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரேனும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை இதில் கோர்த்துவிட்டு வழக்கை முடித்துவிடக் கூடாதென்று இறையூர் மக்கள் கருத்து தெரிவித்தனர்.