தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்தில் கொண்டு வருவதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு நடத்தப்பட்ட முதல் மாநாடு இது.
திராவிட மாடல் அரசின் கோட்பாடான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீடித்த நிலைத்த தன்மை, தலைமைத்துவம் ஆகியவை களை முன்னிறுத்தி இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் நடந்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், தொழில் நிறுவனங்களை சேர்ந்த தலைவர்கள், அவர்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான புகழ்பெற்ற நிறுவனங்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டன.
மாநாட்டைத் துவக்கிவைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தொழில் துறையில் மேன்மையும் தனித்த தொழில் வளமும் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிற்கு பல வழிகளில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் வேகமாக பயணிக்கும் தமிழ் நாட்டிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாக தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழி வகுக்கும். முன்னணி முதலீட்டாளர்கள், வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும்.
தமிழகத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தவே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறோம். முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான் என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் எனும் லட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் பரவ லான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ப திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. இதன்மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. தொழில் மயமாக்கல் வளர்ச்சியில் இந்த மாநாடு மகத்தான அத்தியாயமாக இருக்கப்போகிறது''’என்றார் மிகப் பெருமிதமாக.
"முதலீட்டாளர்கள் மாநாட்டில் இத்தனை லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை பெற்றோம் என்பதையும் கடந்து, படித்த இளைஞர்களுக்கு தரமான வேலை வாய்ப்பினை உருவாக்குவதே இந்த மாநாட்டின் நோக்கம்'' என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விவரித்துப் பேசினார்.
அதேபோல, தொழில் துறையில் தமிழ்நாடு பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், தங்களின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் இந்திய தொழி லகக் கூட்டமைப்பின் தலைவர் தினேஷ், டி.வி.எஸ். நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஜன் ஜிண்டால், கோத்ரேஜ் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் நிஷாபா, ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் அன்சூ கிம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனர் பவேஷ் அகர்வால் ஆகியோர் விரிவாகப் பேசினர்.
தொடக்கவிழாவான முதல்நாளில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப் பட்டன. குறிப்பாக, வின்பாஸ்ட் -16,000 கோடி, டாடா எலெக்ட்ரானிக்ஸ் - 12,082 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ -12,000 கோடி, ஹூண்டாய் -6,180 கோடி, டி.வி.எஸ்.-5000 கோடி, பர்ஸ்ட் சோலார் - 2,500 கோடி, பெகட்ரான் -1000 கோடி, கோத்ரெஜ் -515 கோடி, மிட்சுபிஷி -200 கோடி, குவால்கம் -177 கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதேபோல, தொழில்துறை தொடர்பான பல்வேறு கருத்தரங்கங்கள் மூலமாகவும் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநாட்டில் பேசிய தமிழக அரசின் தொழில்துறை செயலாளர் அருண்ராய் ஐ.ஏ.எஸ்., "இந்த மாநாடு 5.5 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்குடன் துவக்கப்பட்டது. முதல் நாளிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டிருக்கிறது. 100-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன''’என்கிறார் அழுத்தமாக.
மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் முதலீட்டு நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, மாநாட்டில் 7 கருத்தரங்கு மையங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன. இதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இஸ்ரோ தலைவர் சோமநாத், ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி உள்ளிட்ட வல்லுநர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மாநாட்டின் சிறப்பு அம்சமாக பார்க்கப்பட்டது.
அமெரிக்கா, சிங்கப்பூர், தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், மலேசியா, துபாய் உள்ளிட்ட 100 நாடுகளின் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இவர்கள் தங்களின் தொழில் நிறுவனங்கள் சார்ந்த காட்சி அரங்குகளை அமைத்திருந்தனர்.
தமிழக அரசின் தொழில் துறை சார்ந்த இரண்டு ஆவணங்கள் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டன. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான லட்சிய ஆவணம், தமிழ்நாடு அரசின் மேம்பட்ட மின்னணுக் கொள்கை-2024 ஆகிய இரண்டு ஆவணங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அதனைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல்.
மின்னணு உற்பத்தி துறையில் 2 லட்சம் பேரை தொழில் வல்லுநர்களாக உருவாக்கும் திட்டம் இந்த ஆவணத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மின்னணு உற்பத்தியில் செமிகண்டக்டர்களின் பங்களிப்பு 40 சதவீதமாக இருக்கும் என்றும் ஆவணத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டில் பேசிய பியூஷ்கோயல், "இந்தியா வளரவேண்டுமானால் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும் எனச் சொன்னார் பிரதமர் மோடி. அந்த வகையில், இந்தியாவின் வெற்றிக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்பும் தேவை. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அரசு நிர்ணயித்து அதில் பயணிப்பது தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவர உதவும். புதிய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரும்.
இளைஞர்களும் பெண்களும் தங்களுக்கான இலக்குகளை தீர்மானித்து அதனை அடைவதில் வெற்றி காண்பார்கள். இதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படும் போது இந்திய பொருளாதாரமும் வளர்ச்சியடையும்''’என்றார்,
தமிழக அரசின் ட்ரில்லியன் டாலர் பொருளாதார கருத்தரங்கத்தில் பேசிய நிதித்துறைச் செயலாளர் உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ்., "முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாகவும், அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கு உகந்த மாநிலமாகவும் தமிழகத்தை மாற்ற அரசு உறுதியேற்றிருக்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்ற தொலை நோக்குப் பார்வையுடன் இருக்கிறார் முதல்வர். அந்த இலக்கினை எட்டும் முகமாக, மின்னணு பொருள்கள் உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ், மின் வாகனங்கள், காலணி உற்பத்தி, ஜவுளிகள் ஆகிய துறைகளில் தனித்தனி கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்துறை மேம்படுவதற்கு அந்தந்த துறைகளில் ஈடுபடும் தொழில் முனைவோர்களுக்கு, குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளை சார்ந்தவர்களுக்கு கடன் உதவியை ஏற்பாடு செய்து தருவது மிக முக்கியம். இத்தகைய நடவடிக்கைகளில் முனைப்பாக இருக்கிறது தமிழக அரசு” என்கிறார்.
மத்திய அரசின் முன்னாள் பொருளா தார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பேசும்போது, ‘’தமிழகத்தில் கடந்த 6 மாதங் களாக தொழில் துறை மற்றும் முதலீடு களுக்கான சூழல்களும் செயல்பாடுகளும் மிகச் சிறப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதிக அளவிலான முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்படுவது எப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு. இது போன்ற சூழல்களால் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியம்தான். தமிழகத்தின் அதிக கடன் சுமையும், மின்சார வாரியத்தின் கடன்களும் எதிர் மறையான செய்திகளை நமக்குச் சொன் னாலும், வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியிருப்பது ஆரோக்கியமான சூழலைக் காட்டுகிறது''’என்றார்.
ஜப்பான் நாட்டிலிருந்து 18 நிறுவனங் கள் மாநாட்டில் கலந்துகொள்வதாக உறுதி தந்திருந்தன. ஆனால், சமீபத்தில் அந்நாட் டில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் சில நிறுவனங்கள் வர இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது.