மல்லுக்கட்டு பாலிடிக்ஸால் அல்லாடுகிறது மலைக்கோட்டை மாநகரம். திருச்சி மாவட்டச் செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்த வெல்லமண்டி நடராஜன், இதயநோய் பிரச்சனையினால் கட்சிப் பணிகளைப் பார்க்கச் சிரமமாக இருக்கிறதென முதல்வரிடம் முறையிட்டார். எடப்பாடியும் மறுபேச்சு பேசாமல் திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு எம்.பி. குமாரை மா.செ.வாக நியமித்தார்.
குமார் மாவட்டச் செயலாளரானதும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்க கட்சியினரை உற்சாகப்படுத்தினார். கட்சிக்காரர்களுக்கு டூவீலர், பணமுடிப்பு என பரிசுப்பொருட்களை அறிவிக்க கட்சிக்காரர்கள் எல்லாரும் எம்.பி.குமாரின் அலுவலகத்தையே சுற்றிவர ஆரம்பித்தார்கள்.
அடுத்த அதிரடியாக, ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் வளர்மதியில்லாமல் ஒரு பூங்கா திறப்பு விழாவிலும், வெல்லமண்டி இல்லாமல் எம்.பி. நிதி ஒதுக்கீடு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருக்கிறார் மா.செ. குமார்.
இதனை எதிர்பாராத இருவரும் முதல்வர், துணைமுதல்வரிடம்... "உங்களுக்கு இப்படி நடந்தால் எப்படி ஃபீல் பண்ணுவீங்க' என நேரடியாகவே புலம்ப... திருச்சி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரை அழைத்து அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கச்சொல்லி அறிவுரை கொடுத்திருக்கின்றனர்.
இதையடுத்து நடந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் என நான்கு நிகழ்வுகளில் மா.செ. குமார் கலந்துகொள்ளவே இல்லை. வெல்லமண்டி நெருக்கடியால் உளவுத்துறை, மா.செ.க்கு போன்செய்து விசாரிக்க, "நான் புதிதாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன்.… அதற்கு பொருட்கள் வாங்க அலைந்துகொண்டிருக்கிறேன். முதல்வரிடம் அனுமதி வாங்கிவிட்டேன்' என விளக்கம் தந்திருக்கிறார்.
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு மாற்றாக, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடியில் ரூ.77 கோடி செலவில் புதிய மார்க்கெட் உருவாகிக்கொண்டிருந்தது. திறப்புவிழாவுக்கு மார்க்கெட் ரெடியான நேரம் அது. காந்தி மார்க்கெட் வெங்காயமண்டி வியாபாரிகள் கள்ளிக்குடி மார்க்கெட்டுக்குப் போட்டியாக தஞ்சாவூர் சாலை பால்பண்ணையில் புதிய மார்க்கெட் திறப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்தனர். கலெக்டர், எம்.பி. குமார், அமைச்சர்கள் வெல்லமண்டி, வளர்மதி, மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அழைப்புவிடுத்தனர்.
அரசுக்கெதிராகத் தொடங்கும் மார்க்கெட் திறப்புவிழாவில் நாம் எப்படி கலந்துகொள்வதென எம்.பி.குமார், கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தவிர்த்துவிட்டனர். மாறாக வெல்லமண்டியும் வளர்மதியும் விழாவில் தடபுடலாகக் கலந்துகொண்டு அதிர்ச்சியடைய வைத்தனர்.
நிகழ்ச்சி முடிந்த சிலநாட்களிலேயே எம்.பி. குமாரிடம், “""அண்ணே, புதிய வெங்காயமண்டி விஷயத்தில் பிரச்சனைகளையெல்லாம் முடித்துவைத்து கடையைத் திறந்துவைக்க வெல்லமண்டி தரப்பு கணிசமாக கலெக்சன் பண்ணியிருக்குது. "எனக்கு ஒரு ரூவாகூட வரலேண்ணே' என புகார் வாசித்திருக்கிறார் அமைச்சர் வளர்மதி. விஷயம் கட்சிக்குள் பரபரப்பாகி, உளவுத்துறை நுழைந்து அமைச்சர் தரப்புக்கு யார் யார் பணம்கொடுத்தார்கள் என தலைமைக்கு டீடெய்ல் ரிப்போர்ட் அனுப்புவதில் போய் முடிந்தது.
இதனிடையே புதிய மார்க்கெட் திறப்புவிழா நடத்துவதில் அரசுத்தரப்பு மும்முரமாக இறங்கியது. இந்தக்கடைகளில் அமைச்சர்கள் இருவரும் தலா பத்துக்கடைகள் வாங்கி லாபகரமாக கைமாற்றியும் விட்டுவிட்டனர். மா.செ. குமார் விவரமாக, அவர் பெயரில் 15 கடைகள் வாங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்து முதல்வர் எடப்பாடி பார்வைக்கும் விஷயம் போகுமாறு செய்து நல்லபெயர் வாங்கிக்கொண்டார்.
அமைச்சர்கள், மா.செ. என எல்லோரும் கலந்துகொண்டு கள்ளிக்குடி மார்க்கெட் திறப்புவிழா நடைபெற்றாலும், எந்தக் கடைகளும் இதுவரை திறக்கவே இல்லை. காந்தி மார்க்கெட் பகுதியிலிருந்து வியாபாரிகள் இங்கே இடம்பெயராததே முக்கிய காரணம்.
அடுத்தபடியாக, தேர்தல் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருச்சி அ.தி.மு.க.வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் பழைய மா.செ. வெல்லமண்டி அலுவலகத்துக்கு வர, இது குறித்து மா.செ. குமாருக்கு எந்த தகவலும் சொல்லாமல் விட்டுவிட்டார். அத்துடன் கட்சியின் மாவட்ட தலைமை நிர்வாகிகளை அனுப்பாமல் தனக்கு வேண்டப்பட்டவர்களை கூட்டத்துக்கு அனுப்பியுள்ளார் நடராஜன்.
பழைய மா.செ.க்கும் புதிய மா.செ.வுக்குமான பனிப்போரில் கட்சிக்காரர்கள், யாருடைய ஆதரவாளர் யார் என தினம் தினம் தன்னிலை விளக்கம்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அமைச்சரென்ற முறையில் வெல்லமண்டியைப் பார்க்க கட்சிக்காரர்கள் போனால், "அமைச்சருடன் ஆலோசனை' என கட்சிக்காரர்கள் படத்தை முகநூலில் பதிவு பண்ணுவதற்கு ஆட்களை வைத்திருக்கிறார் என்றால், மா.செ. குமாரிடமும் இதே வேலையைப் பண்ணுவதற்கு தனி குரூப் இருக்கிறது.
இந்த அதிரிபுதிரி பாலிடிக்ஸில், திருச்சி மா.செ. குமார் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி திருச்சி அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் 25 பேரை ஐந்து நாள் சுற்றுப்பயணமாக டெல்லி, சிம்லா என விமானத்தில் தன் செலவில் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதையறிந்து ஷாக்கான அமைச்சர்தரப்பு டூர் போகாத மற்ற நிர்வாகிகளை அழைத்து கையில் பை, ஆயிர ரூபாய் பணம், சுவீட் கொடுத்ததுடன் ஊட்டி, குற்றாலம் டூர் புரோகிராம் போட்டிருக்கிறார்கள். இந்த ஏட்டிக்குப் போட்டி அரசியலால் தேர்தல் நேரத்தில் கட்சியின் வெற்றிக்கு குந்தகம் வருமோ என கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் திருச்சி ர.ர.க்கள்.
-ஜெ.டி.ஆர்.