திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந் திரன். இவரது மகள் ஜானகி. இதேபோல், லால் குடி அருகே அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் லால்குடி நீதி மன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி. வக்கீல் பிரபுவின் அலுவலகம், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ளது. இந்த அலுவலகத்திற்கு ஜானகி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதன்மூலம் ஜானகிக்கும், பிரபுவிற்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஜானகி திருமணம் ஆகாமலேயே தவறான உறவால் கர்ப்பமடைந்தார். ஏழு மாத கர்ப்பமாக இருந்த ஜானகி, கருவைக் கலைக்க வக்கீல் பிரபு மற்றும் அவரது மனைவி சண்முகவள்ளி ஆகியோரை அணுகினார். குழந்தை பிறந்ததும் அதனை விற்று விடலாம் என்று முடிவு செய்தனர்.
இந்நிலையில், ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து குழந்தையை பிரபுவிடம் ஒப்படைத்தார். பிரபு, குழந்தையை லால்குடி அருகே மணக்கால் சூசையாபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் மூலம், ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஒருவரிடம் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் குழந்தை யை ஒரு லட்சத் துக்கு மட்டுமே விற்பனை செய்த தாகவும், அதில் 20 ஆயிரம் ரூபாயை கமிஷனாக பிரபு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்து, மீத முள்ள 80 ஆயிரத்தை ஜானகியிடம் கொடுத் துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட ஜானகி, உல்லாச வாழ்க்கை வாழ்ந் துள்ளார். இதற் கிடையே, குழந்தையை 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பிரபு, சண்முகவள்ளி ஆகியோர் விற்றது ஜானகிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகி, குழந்தை விற்ற தகவலை போலீஸிடம் தெரிவிக்காமல், குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும், அதன்பின் காணாமல் போய்விட்டதாகவும், அந்த குழந்தையைக் கண்டுபிடித்துத் தரக்கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்தார்.
இது தொடர்பாக லால்குடி டி.எஸ்.பி. அஜய்தங்கம் விசாரணை நடத்தினார். இவ்விவகாரத்தில் புகாரளித்த ஜானகி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், ஜானகியின் விருப்பத்தின் பேரிலேயே குழந்தையை பிரபுவும் சண்முகவள்ளியும் சேர்ந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்றதாகத் தெரிய வந்தது. அதேபோல், குழந்தை காணாமல் போனதாக ஜானகி நாடகமாடியதும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர் பாக வழக்குப் பதிவு செய்த லால்குடி போலீசார், ஜானகி, வக்கீல் பிரபு, அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி, ஆகாஷ் ஆகியோரை கைது செய்து, லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கடுத்ததாக, விற்கப்பட்ட குழந்தை யாரிடம் உள்ளது என்றும், குழந்தை விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், டெல்லி யைச் சேர்ந்த குழந்தை விற்பனை கும்பலுக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்ததால், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று, 3 நாட்கள் விசாரணை நடத்தினர். பின்னர், டெல்லி போலீஸ் உதவியுடன், அங்கே பதுங்கியிருந்த டெல்லியைச் சேர்ந்த குழந்தை விற்பனைக் கும்பல் தலைவன் கோபிநாத் என்கிற கோபி கிருஷ்ணனை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், குழந்தையை கர்நாடக மாநிலம், உத்யம்பாக் போலீஸ் சரகம், ஜன்னமா நகரைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சத்துக்கு விற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, கர்நாடகா வந்த தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டனர். மேலும், இவ்வழக் கில் தொடர்புடைய மணக்கால் சூசையபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், திருச்சியைச் சேர்ந்த புரோக்கர் கவிதா, ஈரோடு மாவட்டம், கருத்துரை கிரா மத்தைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி சண்முகப்பிரியா உள்ளிட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தையை, தனிப்படை போலீசார் கடந்த 20ஆம் தேதி திருச்சிக்கு கொண்டுவந்தனர். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அக்குழந்தையை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினரிடம் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஒப்படைத்தார். இவ் விவகாரத்தில் சிறப்பாகப் பணியாற்றிய லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் தனிப்படையினரைப் பாராட்டினார்.
சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் செய்து, டெல்லியில் நிலவும் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சமயபுரத்தைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தனிப்படை போலீசாரை வாழ்த்தினார்கள். சமயபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாருக்கு பாராட்டுத் தெரிவித்து சுவரொட்டிகளும் ஒட்டப் பட்டுள்ளன!