ங்க ஊசியையும், மருந்தையும் நீங்களே வச்சிக்குங்க, எங்களுக்கு எதுவும் தேவையில்லை என்கின்றனர் பழங்குடியின மக்கள். அவர்களை அதிகாரிகள் கொஞ்சம் அதட்டினால், பதிலுக்கு அவர்களும் மிரட்டுகிறார்கள். இதனால் இவர்களை கொரோனாவில் இருந்து எப்படி காப்பாற்றுவது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் கொரோனா முன்களப் பணியாளர்கள்.

op

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாதகடப்பா என்கிற மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த நடுத்தர வயதுடைய ஒருவருக்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. நாட்டு வைத்தியம் செய்தும் குணமாகாததால் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, கொரோனா உள்ளதா என கண்டறிய பி.சி.ஆர். டெஸ்ட் செய்துள்ளனர். டெஸ்ட் தந்துவிட்டு ஊருக்கு வந்துள்ளார் அந்த நபர். இரண்டு தினங்களில் அவருக்கு கொரோனா என்பது உறுதியாகியுள்ளது.

சுகாதாரத்துறையினர் அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்க்க முயன்றுள்ளனர். இந்த தகவல் தெரிந்து அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். அந்த நபரின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் அழைத்துள்ள னர். அழைத்தவர்களை கடுமையான சொற்களில் வசைபாடியவர்கள், "மருத்துவம் பார்க்கறேன்னு கூப்பிட்டுப்போய் சாகடிக்கப் பார்க்கறிங்களா? நாங்க நல்லாத்தானே இருக்கோம்'' என பரிசோதனை செய்துகொள்ள மறுத்துள்ளனர். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையினர் பேசியும் ஒப்புக்கொள்ளவில்லை. செய்வதறியாது திரும்பிய அதிகாரிகள், அந்த ஊருக்குச் செல்லும் சாலையில் "இது தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்' என பேனர் கட்டியதோடு, வெளியாள் யாரும் ஊருக்குள் செல்லாதபடி சவுக்கு போட்டு தடுப்பு ஏற்படுத்தினர்.

Advertisment

opp

இங்கு மட்டுமல்ல நீலகிரி மாவட்டத் தில் தோடர், இருளர், குறும்பர், காட்டுநாயக் கர், கோத்தார் என பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட இவர்கள்... கூடலூர், பந்தலூர், முதுமலை உட்பட மலையிலேயே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மலையைவிட்டு வருவதில்லை என்பதால் இவர்களின் வாழ்விடங்களிலேயே சென்று கொரோனா தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனாலும் அது நிறைவேறவில்லை.

தமிழகத்தைப் போல், கர்நாடக மாநிலத்தில் வாழும் பழங்குடியினர், வனப்பகுதிகளை ஒட்டி வாழும் நாடோடிகள், ஆடு மேய்ப்பவர்கள் போன்றோர் தனித்து வாழ்வதால் கொரோனா முதல் அலையில் சிக்கவில்லை. இரண்டாவது அலையில் சாம்ராஜ் நகர் மாவட்டம், குடகு மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவல் ஏற்பட் டுள்ள பகுதிகளுக்கு சுகாதாரதுறை அதிகாரிகள் நேரில் சென்று சிகிச்சைக்கு அழைத்தபோது, எந்த நோய்க்கும் மருத்துவமனை வாசலை மிதித்த தில்லை. எப்படி குணமாக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் எனச் சொல்லி விரட்டியுள்ள னர். உத்தரகாண்ட் மாநிலத்திலும், உத்திரப்பிரதேச மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசி போட வந்த மருத்துவர்கள், செவிலியர்களை கற்கள் கொண்டு எறிந்து துரத்தியுள்ளனர் பழங்குடியின மக்கள்.

Advertisment

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கண்ணையாவிடம் பேசியபோது, "பழங்குடியின மக்கள் அதிகளவு கல்வியறிவு பெறவில்லை. காடு களில் வாழும் அவர்கள் பச்சிலை மருத்துவத்தையே அதிகம் நம்புகிறார்கள். அதனால் அவர்கள் தடுப்பூசியை கண்டு பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் நகரத்தில் படித்தவர்களிடமே கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் உள்ளது. பிளேக், சின்னம்மை, பெரியம்மை, மலேரியா, போலியோ, இன்புளுயென்சா, ஆஸ்துமா, சார்ஸ், எபோலா போன்ற மிகக்கொடிய நோய்களிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி போடவேண்டும் என கடந்த காலத்தில் அரசுகள் சொன்னதை மக்கள் ஏற்றுக்கொண்டதாலே அவற்றை ஒழிக்க முடிந்தது.

d

அப்படிப்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீது நம்பிக்கை வராமல் போனதுக்கு காரணமே, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தெளிவில்லாத திட்டங்கள்தான். 1920-களில் இந்தியா முழுவதும் பிளேக் நோய் பரவி லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். பிளேக் நோய் எலிகளால் பரவுவதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் மூலம் எலிகளை ஒழிக்க சட்டமியற்றினர். அப்போது பாலகங்காதர திலகர், எலிகள் விநாயகரின் வாகனம் அவற்றை கொல்லக்கூடாது என போராட்டம் நடத்தினார். விஞ்ஞானம் வளராத காலத்தில் பெரும்பான்மை மக்கள் அதனை நம்பினார்கள் என்றால், இன்றும் ஒருகூட்டம் அறிவியலை நம்பாமல் கொரோனா குறித்தும், தடுப்பூசி குறித்தும் தவறான தகவலை தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்ப, அது வேகமாக மக்களை சென்றடைகின்றது.

பொய்யை பரப்புகிறவர்களுக்கு ஊக்கம் தரும்விதமாக பா.ஜ.க. தலைவர்கள் பலர், மாட்டு மூத்திரம் குடித்தால், மாட்டு சாணத்தை உடம்பில் தேய்த்தால், காயத்திரி மந்திரம் ஜெபித்தால் கொரோனா வராது எனப் பேசுகிறார்கள். இவை தடுப்பூசி மீது மக்களுக்கு பயம் ஏற்பட காரணமானது. கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால், தடுப்பூசி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதனை அரசு மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களிடம் பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் வழியாக செய்ய வேண்டும், அப்போதுதான் இந்தநிலை மாறும்'' என்றார்.