தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ரஜினி ரசிகர்களாலும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளாலும்... ரஜினியின் "காலா'’ பட பாடல்கள் வெளியீட்டு விழா.. ஒரு அரசியல் கூட்டம்போல நடந்து... எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த விழாவில் ரஜினி நேரடியாக அரசியல் பேசாவிட்டாலும் அவர் பாணியில்... சூசகமான அரசியல் பஞ்ச் இருந்தது.
இந்த விழாவில்... ரஜினியின் மருமகனும், "காலா'’படத்தின் தயாரிப்பாளருமான நடிகர் தனுஷ் பேசிய விதம்... ரஜினி ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போனது. அதிலும் ரஜினியே உன்னிப்பாகவும், வியப்பாகவும் தனுஷின் பேச்சைக் கவனித்து ரசித்தார்.
ஒரு பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார், அரசியலில் தாக்கம் உண்டாக்க தயாராகி வருகிற தலைவர்... என்பதைத் தாண்டி... ரஜினி என்கிற தனி மனிதனின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் விதமாக தனுஷின் பேச்சு இருந்தது என்பதுதான்... இந்த விழாவின் ஹைலைட்.
நாம் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய நல்ல விஷயங்களை... மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவது ஒரு நேர்மறை எண்ணத்தை எல்லாரிடத்திலும் உண்டாக்கும்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தபின்... "அவரை ஏற்பதும், ஏற்காததும் மக்கள் கையில் இருப்பது தெரிந்தும்...' ரஜினி குறித்து அவதூறாக சில அரசியல்வாதிகளும், சில சினிமா புள்ளிகளும் விமர்சித்து வருகிறார்கள். அதில் இருக்கும் கடுமையான வார்த்தைப் பிரயோகம்... ரஜினி ரசிகர்களை ஆத்திரப்பட வைப்பதால்... சமூக வலைப்பக்கங்களில்... கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறார்கள்.
ரஜினியைப் பொறுத்தவரை... தன்னை அர்த்தமில்லாமல் விமர்சிப்பவர்களுக்கு பதில் தர விரும்பவில்லை. அவற்றை... அவர்கள் பேசுவதை ‘இக்னோர்’ செய்தே வருகிறார். அதன் எதிரொலியாகத்தான் ரஜினி மக்கள் மன்ற தலைமையகம்... ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ஒன்றை சமீபத்தில் ஏற்படுத்தியதுடன்... "ரஜினி குறித்து விமர்சிப்பவர்களை... பதிலுக்கு விமர்சிக்க வேண்டாம்'’ எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில்தான்... ரஜினியின் மனநிலையையும், அவரிடம் தான் கற்றுக்கொண்ட தனிமனித குணாதிசயங்களையும்... ரஜினி ரசிகர்களிடம் பற்றவைத்திருக்கிறார் தனுஷ்.
""காலாவோட கடைசிநாள் ஷூட்டிங். பதினொன்று, பதினொன்றரை மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்னு சொன்னாங்க. கடைசிநாள் ஷூட்டிங் என்பதால் மரியாதை நிமித்தம், நான் அங்க போயிருந்தேன். ரெண்டரை மணி ஆச்சு. ஷூட்டிங் முடியல. நான் மெதுவா அவர் பக்கத்துல போய்... “"ரெண்டரை ஆயிடுச்சு... பரவால்லயா...'னு கேட்டேன். "ஏய்... என்னங்க நல்ல கதையா இருக்கே... இதாங்க நமக்கு எல்லாமே. அவங்கவங்க வாய்ப்புக் கிடைக்காம எவ்ளோ கஷ்டப்படுறாங்க...'’அப்படினு ஒரு முதல்பட நடிகர் மாதிரி என்கிட்ட சொன்னார்.
அதுல நான் அவர்கிட்ட தொழில் பக்திய கத்துக்கிட்டேன்.
வாழ்க்கைல பிரபலமாகுறதுக்கு ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு... கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, உழைச்சு, சாதிச்சு... முன்னுக்கு வந்து... உச்சத்துல நிக்கிறது. இன்னொண்ணு... அப்படி உச்சத்துல இருக்கவங்கள அட்டாக் பண்ணி பேசுறது. இந்த மாதிரி ரெண்டு வகை இருக்குங்க. அப்படி தொடர்ந்து நாற்பது வருஷமா உச்சத்துல இருக்கும்போது... கண்டினியஸா... அவரை வச்சு சம்பாதிச்சவங்க, அவர் வாழ வச்சவங்க. அவரு வாழ்க்கை கொடுத்தவங்களே... அவரை அப்படி இப்படி கொஞ்சம் அட்டாக்பண்ணி பேசும்போது... அமைதியா சிரிச்சிட்டே இருப்பாங்க சார். பழுத்த மரம்தான் கல்லடிபடும்னு சொல்வாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி... அவர்கிட்ட அந்த பொறுமையைக் கத்துக்கிட்டேன்.
ரஞ்சித்தான் "காலா'வோட டைரக்டர்னு முடிவானதுக்கு அப்புறம்... ரஞ்சித், தலைவர்கிட்ட கதை சொல்லப் போகும்போது... "புரொடியூஸர்கிட்ட சொல்லிடுங்க...'’அப்படினு சொல்லீருக்காரு.
இதுல ஒரு தயாரிப்பாளர எப்படி மதிக்கணும்ங்கிற பண்பை அவர்கிட்ட கத்துக்கிட்டேன்.
ரீஸண்ட்டா... "காலா' ஆடியோ விழாவுக்காக... இன்விடேஷன் கொடுக்கணும் எல்லாருக்கும். ஒரு சிலர் வருத்தப்படுற மாதிரி பேசீருக்காங்களே... அதுனால அவர்கிட்ட போய்க் கேட்டேன்.
"வருத்தப்படுற மாதிரி பேசீருக்காங்களே... அவங்கள கூப்பிடலாமா? என்ன?'’னு கேட்டேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே... "எல்லாரும் நம்ம நண்பர்கள். எல்லாரையும் கூப்பிடுங்க'’அப்படினு சொன்னாரு.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்...
அப்படிங்கிற திருக்குறளுக்கு தகுந்த மாதிரி... அவர்கிட்ட பெருந்தன்மையையும், மன்னிக்கிற குணத்தையும் கத்துக்கிட்டேன்.
முதல்ல வில்லன்... பிறகு குணச்சித்திர நடிகன்... அப்புறம் ஹீரோ... அப்புறம் ஸ்டார்... அப்புறம் ஸ்டைல் மன்னன்... அப்புறம் சூப்பர்ஸ்டார்... இன்று தலைவர்... நாளை... அது இறைவன் கையில். உங்களைப் போலவே நானும் காத்துக்கிட்டிருக்கேன்''’எனப் பேசினார் தனுஷ்.
"மாப்பு... அசத்திட்டியே... ஹாட்ஸ் ஆப்பு'’ என தனுஷின் பேச்சில் ரஜினி மகிழ்ந்துதான் இருப்பார்.
-ஆர்.டி.எ(க்)ஸ்