ஏம் புருஷந்தான்.....
"விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்குப் பதிப்பின் ஷூட்டிங் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் நடந்தபோதுதான் சமந்தாவிடம் தன் காதலை நாக சைதன்யா முதன்முதலில் வெளிப்படுத்தினார். இருவரும் திருமணம் செய்துகொண்டபிறகு... தொடர்ந்து இருவரும் சினிமாவில் பிஸியாக இருந்ததால்... தேனிலவுக்கு வெளிநாடு செல்ல முடியவில்லை. சமீபத்தில் தேனிலவுப் பயணமாக அமெரிக்கா சென்ற இந்த தம்பதி... தங்களின் காதல் தொடங்கிய இடமான சென்ட்ரல் பார்க்கில் நின்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
""என் புருஷன் அன்பானவர். கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால் அவரவர் தாங்கள் விரும்பிய தொழிலை தடையின்றிச் செய்யலாம். என்னை "சினிமாவில் நடிக்க வேண்டாம்' என என் கணவர் ஒருபோதும் சொன்னதில்லை'' என்று சொல்லியுள்ளார் சமந்தா.
கிரிக்கட்டர் ரோஹித் சர்மாவுடன் நெருக்கமாக இருந்து... அந்தக் காதல் கைகூடாததால்... சிற்றின்ப வாழ்க்கையில் எரிச்சலடைந்து... பேரின்ப வாழ்க்கையான ஆன்மிகத்தில் ஈடுபாடுகொண்டு... கன்னியாஸ்திரி ஆகி... சிவ பக்தையாக மாறி... "என் அங்கத்தில் லிங்கம் இருக்கிறது. சிவனுடன் கலந்த பரவச நிலையில் இருக்கிறேன். என்னை இனி "அன்னை சோஃபியா என்று அழையுங்கள்' எனச் சொல்லி ஆர்ப்பாட்ட ஆன்மிக (அரசியல்) சர்ச்சையை உண்டாக்கியவர் இங்கிலாந்தில் பிறந்து... இந்திய சினிமா நடிகையான சோஃபியா ஹயாத்.
2016-ல் நமது இதழில் வெளியான "லவ் லப்-டப்' தொடரில் இதுபற்றி விரிவாக எழுதியிருந்தோம்.
பேரின்ப வாழ்க்கையில் ஈடுபட்டு சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில்... சிற்றின்ப வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினார் சோஃபியா. எகிப்தியரான விளாட் எனும் இளைஞரின் காதல் வலையில் சிக்கி... கடந்த 2017 ஏப்ரலில்... அந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார்.
"ஏம் புருஷன் இன்டீரியர் டெகரேட் நிறுவனம் நடத்துறார். பெரிய பெரிய அரண்மனை பங்களாக்களுக்கு இவர்தான் உள் அலங்காரம் செய்கிறார். சொந்தமா பங்களா இருக்கு, கார் இருக்கு...'“ என பெருமிதப்பட்டார் சோஃபி.
திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு சரியாக ஒரு வருஷம் கழிந்த நிலையில்... இப்போது...
"அந்த ஆள் ஒரு அரக்கன். தேவதைபோல வேஷமிட்டு என் வாழ்க்கையில் நுழைந்த சாத்தான். அந்தாளுக்கு சொந்த பிசினஸ் கிடையாது. ஒரு கடையில வேலை பார்க்குறார். சொந்த வீடும் இல்ல. கடன்காரன். சம்பாத்தியம் இல்லாத ஆள். ஒருதடவ... வீட்ல இருந்த என்னோட நகைகளை திருட முயற்சித்தபோது... என்கிட்ட கையும் களவுமா மாட்டிக்கிட்டாரு. நான் அவருமேல வச்சிருந்த காதலால் அவரை மன்னிச்சேன். ஆனா... என்னோட சொத்துப் பத்திரங்களையும் திருடி தன்னோட பேருக்கு மாத்த முயற்சி செஞ்சாரு. நேர்மையில்லாத... நிஜமான காதலும் இல்லாத அவருகூட இனியும் நான் சேர்ந்து வாழணுமா?'’ என அதிரடியாக வெடித்திருக்கிறார் சோஃபி.
அர்ஜுனுக்கு ஜோடியாக ‘"மூன்றுபேர் மூன்றுகாதல், "ஜெய்ஹிந்த்-2' படங்களில் நடித்த சுர்வீன் சாவ்லா... பாலிவுட்டின் செக்ஸ் க்ரைம் த்ரில்லர் வகைப் படங்களான ‘ஹேட் ஸ்டோரி’ படங்களிலும் நடித்து பிரபலமானவர். தனது பாய்ஃப்ரெண்ட் அக்ஷய்யை 2015-ஆம் ஆண்டிலேயே திருமணம் செய்துகொண்டு... அத ரகசியமாக வைத்திருந்து... கடந்த வருஷக் கடைசியில் மேரேஜ் மேட்டரை லீக் பண்ணினார் சுர்வீன்.
இப்போ... தன் புருஷரைப்பற்றி என்ன சொல்றார்ன்னா...
""எனக்கு வாய்த்த புருஷர் மிக நல்லவர். என் சினிமா தொழிலில் நான் தொடர்ந்து சாதிக்க உதவிகரமா இருக்கிறார். நான் சினிமாவில் ஹீரோவுடன் லிப்-லாக் காட்சியில் நடித்தாலும், நிர்வாண காட்சியில் நடித்தாலும் எதிர்க்கமாட்டார். சினிமாவுக்காக அப்படி செய்வது நடிப்புதான் என புரிந்து வைத்துள்ளார். என்னையும் புரிந்துகொண்டுள்ளார். அதனால்தான் நான் அவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தேன்'' எனச் சொல்லியிருக்கிறார் சுர்.
கனடாவில் அடல்ட் படங்களில் நடித்துவந்த சன்னிலியோனும், அந்தப் படங்களை தயாரித்து வந்த டேனியலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தன் பூர்வீகமான இந்தியா திரும்பிய சன்னிலியோன் இப்போது பாலிவுட் படங்களில் பிஸி. தமிழில் "வடகறி' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியவர்... இப்போது "வீரமாதேவி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் தன் ஏழாம் ஆண்டு திருமணநாளையொட்டி... என்ன சொல்லியிருக்கார்ன்னா...
""என் புருஷன் அருமையான மனிதர். வாழ்க்கையில் உண்டாகும் சூழ்நிலை எந்த இடத்தில் வைத்தபோதும்... நாங்கள் மனமார நேசிக்கிறோம். தினமும் காதல் அதிகரித்தபடியே இருக்கிறது. வாழ்க்கை என்கிற வேடிக்கை பயணத்தில் ஒன்றாகவே பயணித்துக்கொண்டிருக்கிறோம்'' எனச் சொல்லியுள்ளார்’’
-ஆர்.டி.எ(க்)ஸ்