"எங்கப்பா செருப்பு தைக்கிறவரு, அதைச் சொல்லிச் சொல்லியே என்னை மேல வரவிடாம மிதிச்சாய்ங்க... எல்லா வலியையும் சேர்த்து பேய் மாதிரி படிச்சேன். இன்னைக்கு நான் உனக்கு பிரின்சிபல். இப்போ அவுங்க எல்லோரும் எனக்கு வணக்கம் வைக்கிறாய்ங்க...'' -"பரியேறும் பெருமாள்' படத்தில் சட்டக்கல்லூரி முதல்வர் பாத்திரம் பேசும் இந்த வசனம், வேறு காரணமேயில்லாமல் பிறப்பால் மட்டுமே ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, சமூகநீதியைத் தேடி, கல்வி மூலமாக வாழ்க்கையை உயர்த்திக்கொண்ட ஒவ்வொரு மனதின் வெற்றிக்குரல்.

"வன்மம் தவிர்த்து வா ஒன்றாக அமர்ந்து டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்... என்ன வித்தியாசம்? அதை களையலாம்' என்று அழைக்கிறான் இயக்குநர் மாரி செல்வராஜின் "பரியன்' என்கிற "பரியேறும் பெருமாள்'. இதற்காகவே மாரியை மலர் கொடுத்து வரவேற்கலாம்.

periyarum

ஒடுக்கப்பட்ட சாதிக்காரர்கள் அதிகம் வசிக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் B.A., B.L., திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கதிர் படிக்கும் அதே வகுப்புத் தோழி ஜோ (எ) ஜோதி மகாலக்ஷ்மியாக ஆனந்தி. இருவரும் நட்பாகப் பழகி, அவர்களின் அன்பு அடுத்தகட்டத்திற்குச் செல்ல முற்படும் சமயத்தில் கதிர் எதிர்கொள்ளும் சாதி ஆணவத்தாக்குதல், கல்லூரி மாணவர்களிடையே ஆழமாக ஊன்றியிருக்கும் சமூக அரசியல் பிளவுகள், இதனால் முதல் தலைமுறையாக பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் அடையும் உளவியல் வலி, எதிர்கொள்ளும் விதம் என இதுவரை தமிழ் சினிமா பேசாத பல பொருள்களை பேசியிருக்கிறது "பரியேறும் பெருமாள்'.

அடர்த்தியான விஷயங்கள் இருந்தாலும் காட்சிப்படுத்துதலில் அழகு, இயல்பான நகைச்சுவை, சுவாரசியமான வாழ்வியல் என ஒரு திரைப்படமாகவும் திருப்தியளிப்பது பரியேறும் பெருமாளின் வெற்றி. பரியனின் தேவதைகளாக வரும் டீச்சர்கள், ஆனந்தி பாத்திரம், சாதி ஆதிக்கம் செய்யும் சட்டக் கல்லூரிச் சூழலிலும் சாதியைப் பொருட்டாகக் கருதாத நண்பன் ஆனந்த்தாக வரும் யோகிபாபு என மாரி செல்வராஜின் பாத்திரங்கள் மனதில் நிறைகின்றனர்.

""இதுக்கு காசெல்லாம் வேணாம். நம்ம குலசாமிக்கு செய்ற கடமையா இதை செய்றேன். ஏதாவது தப்பாப்போனா மட்டும் இதைவச்சு என்னை வெளிய எடுத்து விடு'' -ஆணவக் கொலை செய்யப்போகும் ஒருவர் சொல்லும் இந்த வார்த்தைகள் தர்க்கங்களே இல்லாத, வெளியே வரத் தயாராக இல்லாத, காரணத்தை யோசிக்காமல் கெட்டி தட்டிப்போன சாதிய மனங்களின் பிரதிபலிப்பாக நம்மை அதிர வைக்கின்றன. அந்தப் பாத்திரத்தில் நடித்துள்ள கராத்தே வெங்கடேசனின் நடிப்பு மிகச்சிறப்பு. ""என்னை போலீஸ் அடிச்சதை ஊருக்குள்ள சொல்லாத. இவன் நமக்காகப் பேசுவான்னு நம்புற நம்ம மக்களுக்கு நம்பிக்கை போயிரும். அப்புறம் ஒருத்தனும் பேசவே துணிய மாட்டாய்ங்க'' -ஆர்.கே.ஆர்.ராஜா பாத்திரம் பேசும் இந்த வார்த்தைகள், தன் மக்களுக்காக துணிவை வளர்த்துக்கொண்டு ஆபத்தை எதிர்கொள்ளும் ஒவ்வோர் உண்மையான போராளியின் மன ஓட்டமாக நம்மை நெகிழவைக்கிறது.

ரயில் தண்டவாளக் காட்சி தருமபுரி இளவரசனுக்கு அஞ்சலி. கல்லூரி முதல்வர் பாத்திரம் அம்பேத்கரின் வழித்தோன்றல். படம் முடியும் விதம், திரைப்படக் கலையை சமூகத்திற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதன் உச்சம். ஒவ்வொரு கொலையும் மரணமும் மறுநாள் நாம் செய்தியாகப் படிக்கும்போது எப்படி மாறிப்போகிறது என்பதைக் காட்டியது புத்திசாலித்தனம்.

பரியனாக நடித்திருக்கும் கதிர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனுடைய கோபத்தையும், அவமானத்தையும், ஏமாற்றத்தையும், எதிர்த்து நிற்கும் திமிரையும் தேவையான இடத்தில் தேவைக்கேற்ப காட்டி தனக்குக் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளார். ஆனந்தி, காட்சிக்குக் காட்சி கள்ளமில்லா நடிப்பில் அழகாய் மிளிர்ந்துள்ளார். இத்தனைநாள் பார்த்த யோகிபாபு, இதில் புதிதாக இருக்கிறார். கல்லூரி முதல்வராக "பூ' ராமு, ஆனந்தியின் தந்தையாக மாரிமுத்து இருவரும் இருவேறு சமூகங்களின் சரியான அடையாளங்களாக பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனதின் அடையாளமாக "கருப்பி' நாயின் பாத்திரப் படைப்பு திரைமொழியின் சாத்தியங்களை உணர்த்தியுள்ளது. பரியனின் தந்தையாக கிராமிய கலைக் குழுவில் பெண் வேடமணிபவர் பாத்திரம், இதுவரை நாம் அடைந்திராத அதிர்வை அளிக்கிறது. அந்தப் பாத்திரம் பரியனின் சக கல்லூரி மாணவர்களாலேயே அவமானப்படுத்தப்படும் அந்தக் காட்சி, நகரவாசிகள் காணாத, உணராத சாதிய வன்மத்தையும் ஆணாதிக்கத்தையும் உணர்த்துகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரியனின் வலியையும் கோபத்தையும் உரத்த குரலில் பேசுகிறது. திருநெல்வேலி சட்டக் கல்லூரியில், புளியங்குளத்தில், அந்த ரயில் தண்டவாளத்தில் என அத்தனை இடங்களிலும் நாமும் நேரில் நின்று பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.

பல நூற்றாண்டு வலியை வெறும் சத்தமாக, யுத்தமாகச் சொல்லாமல் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாகப் பேசியிருக்கிறான் பரியேறும் பெருமாள். ஒரு முக்கியமான திரைப்படத்தை தயாரித்திருக்கிறார் பா.ரஞ்சித்.

-வசந்த்