நட்பு நடனம்!
தான் எடுக்கும் புது முயற்சிகளில் தனது நெருங்கிய வட்டாரத்தினரை படத்திற்குள் அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் தனுஷ். தான் தயாரித்த இரண்டாவது படமான "எதிர் நீச்சல்' படத்தில் நயன்தாராவை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்திருந்தார். தனுஷின் நட்புக்காக நடனமாடியதாக நயன்தாரா அப்போது தெரிவித்திருந்தார். இதையடுத்து தனுஷ் தற்போது மூன்றாவது முறையாக இயக்கிவரும் ‘"நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'’ படத்தில் பிரியங்கா மோகனை ஒரு பாடலுக்கு நடனமாட வைத்திருக்கிறார். "கேப்டன் மில்லர்' படத்தின்போது தனுஷுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளார். இப்படத்தில் தனது சகோதரி மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார்.
தொடர் முயற்சி!
"அயலான்' படத்தை பெரிதும் நம்பியிருந்த இயக்குநர் ரவிக்குமார், அந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகாததால் அடுத்து படம் எடுக்க சிரமப்படுகிறார். இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் பண்ண கமிட்டானார். இந்தப் படம் இப்போதைக்கு டேக் ஆஃப் ஆக வாய்ப்பில்லை. அந்த கேப்பில் வேறொரு ஹீரோவை வைத்து படமெடுக்க முயற்சித்த ரவிக்குமார், சூர்யாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கினார். அதுவும் அடுத்தகட்டத்திற்கு நகரவில்லை. இதனால் சற்று அப்செட்டில் இருந்த ரவிக்குமார், சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். அவரிடம் தனது நிலையைக் கூற, தனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொல்லி விஜய் சேதுபதி சொல்லியுள்ளார். இதனால் சற்று ஆறுதலடைந்த ரவிக்குமார் தற்போது துடிப்புடன் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதி வருகிறார்.
எஸ்.கே 25
அஜித் ரசிகர்களுக்கு "மங்காத்தா' படத்தை கொடுத்து தீனி போட்ட வெங்கட் பிரபு, அதே போல் விஜய் ரசிகர்களுக்கு தீனிபோடும் முயற்சியில் "தி கோட்'’படத்தை உருவாக்கி வருகிறார். செப்டம்பர் 5ல் படம் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு பட வெளியீட் டிற்கு பிறகு சிறிது பிரேக் விட்டுவிட்டு அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தைத் தொடங்க முடிவெடுத்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் லைனப்பில் அடுத்ததாக சுதா கொங்கரா படம் இருப்பதால் கால்ஷீட் பிரச்சனை வரும் என கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டது. ஆனால் சிவகார்த்திகேயன் தரப்போ, அதற்கு வாய்ப்பில்லை. அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என இரண்டு படங்களுக்கும் கால்ஷீட்டை பகிர்ந் திருந்தார். அதேபோல் சுதாகொங்கரா படத்துக்கும், வெங்கட் பிரபு படத்துக்கும் கால்ஷீட் ஒதுக்கவுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் வெங்கட் பிரபு படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகிறதென்றும், வழக்கம்போல் வெங்கட் பிரபு ஸ்டைலில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும்.
கவர்ச்சிக்கு விடுமுறை!
"தங்கலான்' படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இப்படம் தனக்கு மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த மாளவிகா மோகனன், நினைத்தது போலவே தனக்கு நடந்திருக்கிறது என்று நெகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்தியில் இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக வுள்ளதால் அங்கேயும் இதுபோன்ற வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதோடு அவர் இந்தியில் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த "யுத்ரா'’படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதால், "தங்கலான்' வெற்றி "யுத்ரா' படத்திற்கு பலம் சேர்க்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார். "தங்கலான்' படத்தை போலவே இந்தப் படத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ள மாளவிகா மோகனன், ஒரே மாதத்தில் தனது இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதனால் இந்த இரண்டு படங்களுமே அடுத்த இரண்டு மாதத்திற்கு தன்னை லைம்லைட்டில் இருக்க வைத்துவிடும் என்று தன்னுடைய கவர்ச்சி ஃபோட்டோ ஷூட்டுக்கு விடுமுறை அளித்துள்ளார்.
-கவிதாசன் ஜெ.